ரஹீக் அல் மக்தூம் (முஹம்மத் நபி வரலாறு

Tuesday, February 24, 2015

[ரஹீக் 014]-மூன்றாம் கால கட்டம் - மக்காவிற்கு வெளியே இஸ்லாமிய அழைப்பு

தாயிஃப் நகரில்

நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு நபி (ஸல்) மக்காவிலிருந்து 60 மைல் தொலைவிலுள்ள தாயிஃபிற்குச் சென்றார்கள். (இது கி.பி. 619 மே மாதம் இறுதி அல்லது ஜுன் மாத ஆரம்பத்தில் ஆகும்). நபி (ஸல்) அவர்கள் தங்களது அடிமை ஜைது இப்னு ஹாரிஸாவுடன் கால்நடையாகச் சென்றார்கள். திரும்பும்போதும் கால்நடையாகவே திரும்பினார்கள். வழியிலிருந்த ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் இஸ்லாமிய அழைப்பு கொடுக்கப்பட்டும், அக்கூட்டத்தாரில் எவரும் இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

நபி (ஸல்) அவர்கள் தாயிஃபிற்குச் சென்றடைந்தபோது அங்கு வசித்து வந்த ஸகீஃப் கூட்டத்தாரின் தலைவர்களும் 'அம்ர் இப்னு உமைர் அஸ்ஸகபி' என்பவனின் பிள்ளைகளுமான 1) அப்து யாலில், 2) மஸ்ஊது, 3) ஹபீப் என்ற மூன்று சகோதரர்களிடம் சென்றார்கள். அவர்களிடம் இஸ்லாமைப் பரப்புவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரினார்கள். ஆனால், அவர்களில் ஒருவன் ''உன்னை அல்லாஹ் தூதராக அனுப்பியது உண்மையென்றால் நான் கஅபாவின் திரைகளைக் கிழித்து விடுவேன்'' என்று கூறினான். மற்றொருவன் ''அல்லாஹ்வுக்கு உன்னைத் தவிர நபியாக அனுப்ப வேறொருவர் கிடைக்கவில்லையா?'' என்று கேட்டான்.

மூன்றாமவன், ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உன்னிடம் ஒருபோதும் பேச மாட்டேன். நீ உண்மையில் தூதராக இருந்தால் உனது பேச்சை மறுப்பது எனக்கு மிக ஆபத்தானதாகும். நீ அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவராக இருந்தால் உன்னிடம் பேசுவதே எனக்குத் தகுதியல்ல'' என்று கூறினான். அப்போது நபி (ஸல்) ''இதுதான் உங்கள் முடிவாக இருந்தால் நமது இந்த சந்திப்பை (மக்களுக்கு வெளிப்படுத்தாமல்) மறைத்து விடுங்கள்'' என்று கூறினார்கள்.

நபி (ஸல்) தாயிஃபில் பத்து நாட்கள் தங்கி அங்குள்ள மற்ற எல்லா தலைவர்கள், பிரமுகர்களைச் சந்தித்து இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். ஆனால், அவர்களில் எவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாததுடன் தங்களது ஊரைவிட்டு உடனடியாக வெளியேறும்படியும் கூறி, நபி (ஸல்) அவர்கள் மீது வம்பர்களை ஏவிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் ஊரைவிட்டு வெளியே செல்ல முயன்றபோது அங்குள்ள வம்பர்களும் அடிமைகளும் ஒன்றுகூடி அவர்களை ஏசிப்பேசினர்.

இறுதியில் மக்களின் கூட்டம் அதிகமாகி அவர்கள் அனைவரும் இரு அணிகளாக நின்று கொண்டு, நபி (ஸல்) அவர்களின் மீது கற்களை எறிந்தனர். அதிகமான கற்களை நபி (ஸல்) அவர்களின் குதிகால் நரம்பை நோக்கி எறியவே அவர்களது பாதணிகளும் இரத்தக் கறைகளாயின. நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களது அடிமை ஜைது இப்னு ஹாரிஸா நபியவர்களைக் காப்பதற்காக தங்களையே கேடயமாக்கிக் கொண்டார்கள். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தாயிஃபிலிருந்து மூன்று மைல்கள் தொலைவிலுள்ள ரபிஆவுடைய மகன்களான உத்பா, ஷைபா என்ற இருவருக்குச் சொந்தமான தோட்டம் வரை நபி (ஸல்) அவர்களை அடித்துக் கொண்டே வந்தனர். நபி (ஸல்) அந்த தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள திராட்சை தோட்ட பந்தலின் நிழலில் அமர்ந்தார்கள். அப்போதுதான் மிகப் பிரபலமான அந்த பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். இதனால் நபி (ஸல்) அவர்களின் உள்ளம் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளினால் எவ்வளவு வேதனை அடைந்திருந்தது என்பதையும் தாயிஃப் மக்கள் இஸ்லாமை ஏற்காததினால் எவ்வளவு துக்கத்திற்கு ஆளானார்கள் என்பதையும் இந்த பிரார்த்தனையிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

இதோ நபி (ஸல்) கேட்ட பிரார்த்தனை:

''அல்லாஹ்வே! எனது ஆற்றல் குறைவையும் எனது திறமைக் குறைவையும் மனிதர்களிடம் நான் மதிப்பின்றி இருப்பதையும் உன்னிடமே முறையிடுகிறேன். கருணையாளர்களிலெல்லாம் மிகப்பெரிய கருணையாளனே! நீதான் எளியோர்களைக் காப்பவன். நீதான் என்னைக் காப்பவன். நீ என்னை யாரிடம் ஒப்படைக்கிறாய்? என்னைக் கண்டு முகம் கடுகடுக்கும் அந்நியனிடமா? அல்லது என்னுடைய காயத்தை நீ உரிமையாக்கிக் கொடுத்திடும் பகைவனிடமா? உனக்கு என்மீது கோபம் இல்லையானால் (இந்த கஷ்டங்களையெல்லாம்) நான் பொருட்படுத்தவே மாட்டேன். எனினும், நீ வழங்கும் சுகத்தையே நான் எதிர்பார்க்கிறேன். அதுவே எனக்கு மிக விசாலமானது. உனது திருமுகத்தின் ஒளியினால் இருள்கள் அனைத்தும் பிரகாசம் அடைந்தன. இம்மை மறுமையின் காரியங்கள் சீர்பெற்றன. அத்தகைய உனது திருமுகத்தின் ஒளியின் பொருட்டால் உனது கோபம் என்மீது இறங்குவதிலிருந்தும் அல்லது உனது அதிருப்தி என்மீது இறங்குவதிலிருந்தும் நான் பாதுகாவல் கோருகிறேன். அல்லாஹ்வே! நீயே பொருத்தத்திற்குரியவன். நீ பொருந்திக் கொள்ளும்வரை உன் கோபத்திலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன். அல்லாஹ்வே! பாவத்திலிருந்து தப்பிப்பதும், நன்மை செய்ய ஆற்றல் பெறுவதும் உனது அருள் இல்லாமல் முடியாது.''

நபி (ஸல்) அவர்களை இந்த நிலைமையில் பார்த்ததும் ரபிஆவின் மகன்களுக்கு இரக்கம் வந்தது. தங்களது கிறிஸ்துவ அடிமை அத்தாஸை அழைத்துத் ''திராட்சைக் குலையை அவருக்குச் சென்று கொடு'' என்று கூறினர். திராட்சைக் குலைகளை அத்தாஸ் நபி (ஸல்) அவர்களுக்கு முன் வைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் 'பிஸ்மில்லாஹ்' என்று கூறி சாப்பிட்டார்கள்.

இதைக் கண்ட அத்தாஸ் ''இந்தப் பேச்சு இவர் மக்கள் பேசும் பேச்சல்லவே, உங்களுக்கு இது எப்படித் தெரியும்?'' என்று கேட்டார். அதற்கு, ''உனக்கு எந்த ஊர்? உனது மார்க்கம் என்ன?'' என்று அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்க, அதற்கு அவர் ''நீனவாவைச் சேர்ந்த கிறிஸ்துவன் நான்'' என்றார். ''நல்லவரான யூனுஸ் இப்னு மத்தாவின் ஊரைச் சேர்ந்தவர்தானே?'' என்று நபி (ஸல்) அவரிடம் கேட்டதற்கு அவர் ஆச்சர்யத்துடன் 'யூனுஸ் இப்னு மத்தாவைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்'' என்றார். ''அவர் எனது சகோதரர் அவரும் ஓர் இறைத்தூதராக இருந்தார். நானும் இறைத்தூதர் தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறியவுடன், அத்தாஸ் நபி (ஸல்) அவர்களின் தலை, கை மற்றும் கால்களை முத்தமிட்டார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரபிஆவின் மகன்களில் ஒருவர் மற்றவரிடம் ''இதோ உனது அடிமையை அவர் குழப்பி விட்டார்'' என்று கூறினான். அத்தாஸ் திரும்பி வந்தவுடன் ''உனக்கு என்ன கேடு நேர்ந்தது?'' என்று அவ்விருவரும் இடித்துரைத்தனர். அதற்கு அத்தாஸ், ''எனது எஜமானர்களே! இவரை விடச் சிறந்த எவரும் இப்பூமியில் இல்லை. இவர் எனக்கு ஒரு விஷயத்தை மிக உறுதியாகக் கூறினார். அதனை இறைத்தூதரைத் தவிர வேறெவரும் அறிந்திருக்க முடியாது'' என்றார். அதற்கு அவ்விருவரும் ''அத்தாஸே! உனக்கென்ன கேடு. இவர் உம்மை உமது மார்க்கத்திலிருந்து திருப்பிவிடாமல் இருக்கட்டும். உமது மார்க்கம்தான் இவரின் மார்க்கத்தைவிட சிறந்தது'' என்று கூறினர். (இப்னு ஹிஷாம்)

நபி (ஸல்) அவர்கள் அந்தத் தோட்டத்திலிருந்து வெளியேறி மிகவும் கவலையுடன் உள்ளம் உடைந்தவர்களாக மக்கா நோக்கி திரும்பும் வழியில் 'கர்னுல் மனாஜில்' என்ற இடத்தை அடைந்தபோது அல்லாஹ் அவர்களிடம் ஜிப்ரீலையும், (மலைகளின் வானவர்) மலக்குல் ஜிபாலையும் அனுப்பினான். மலக்குல் ஜிபால் தாயிஃப்வாசிகளாகிய இம்மக்களை இரு மலைகளையும் ஒன்று சேர்த்து நசுக்கி அழித்துவிடவா''? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.

ஆயிஷா (ரழி) இச்சம்பவத்தின் விவரத்தைக் கூறுகின்றார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ''உஹுத் போரைவிடக் கடுமையான நாள் எதுவும் உங்களது வாழ்க்கையில் வந்துள்ளதா?'' என்று கேட்டேன். அதற்கு ''உனது கூட்டத்தாரின் மூலம் நான் பல துன்பங்களைச் சந்தித்துள்ளேன். அவற்றில் நான் சந்தித்த துன்பங்களில் மிகக் கடுமையானது 'யவ்முல் அகபா' என்ற தினத்தில் எனக்கு ஏற்பட்ட வேதனையே ஆகும். நான் அப்து யாலிலின் மகனிடம் என்னை அறிமுகப்படுத்தினேன். ஆனால், அவன் எனது அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் கவலையுடன் திரும்ப மக்காவை நோக்கி பயணமாகி 'கர்னுல் மனாஜில்' என்ற பெயருள்ள 'கர்னு ஸஆலிப்' என்ற இடத்தில் வந்து தங்கிய போதுதான் எனக்கு முழுமையான நினைவே திரும்பியது. நான் தலையைத் தூக்கிப் பார்த்தபோது என் தலைக்கு மேல் ஒரு மேகம் நிழலிட்டுக் கொண்டிருந்தது. அந்த மேகத்தில் ஜிப்ரீல் இருந்தார். அவர் என்னை அழைத்து 'நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் உங்களது கூட்டத்தாரிடம் பேசியதையும் அவர்கள் உங்களுக்குக் கூறிய பதிலையும் கேட்டுக் கொண்டான். இம்மக்கள் விஷயத்தில் நீங்கள் விரும்பியதை மலக்குல் ஜிபாலுக்கு ஏவ வேண்டும் என்பதற்காக அவரை உங்களிடம் அனுப்பி இருக்கின்றான்' என்று கூறினார். மலக்குல் ஜிபால் என்னை அழைத்து எனக்கு ஸலாம் கூறி ''முஹம்மதே! ஜிப்ரீல் கூறியவாறே அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளான். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? நீங்கள் விரும்பினால் இவர்களை இரண்டு மலைகளையும் கொண்டு நசுக்கி விடுகிறேன்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) ''அதை ஒருக்காலும் நான் விரும்ப மாட்டேன். மாறாக, அவர்களிலிருந்து அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு இணை வைக்காதவர்களை அவன் உருவாக்குவான் என்று நான் ஆதரவு வைக்கிறேன்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த பதிலின் மூலம் நபி (ஸல்) அவர்களின் தனித்தன்மை தெரியவருவதுடன், அவர்கள் எத்தகைய மகத்தான பண்புள்ளவர்கள் என்பதையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

ஏழு வானங்களுக்கு மேலிருந்து அல்லாஹ் அருளிய இம்மறைவான உதவியைப் பார்த்து நபி (ஸல்) அவர்களின் மனம் மிகவும் நிம்மதியடைந்தது. தொடர்ந்து மக்காவை நோக்கி பயணமாகும்போது 'நக்லா' என்ற பள்ளத்தாக்கில் சில நாட்கள் தங்கினார்கள். வாதி நக்லாவில் தங்குவதற்கு வசதியான தண்ணீரும் செழிப்புமுள்ள அஸ்ஸய்லுல் கபீர், ஜைமா என்ற இரு இடங்கள் இருந்தன. இவ்விரு இடங்களில் குறிப்பாக எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கினார்கள் என்பதற்கு சரியான ஆதாரம் நமக்குக் கிடைக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் இவ்விடத்தில் தங்கியிருக்கும்போது சில ஜின்களை அல்லாஹ் நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தான். (ஸஹீஹுல் புகாரி)

இந்த ஜின்களைப் பற்றி குர்ஆனில் இரண்டு இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஒன்று 'அஹ்காஃப்' எனும் அத்தியாயத்தில்:

''(நபியே!) இந்தக் குர்ஆனைக் கேட்கும் பொருட்டு, ஜின்களில் சிலரை நாம் உங்களிடம் வருமாறு செய்து, அவர்கள் வந்த சமயத்தில் (அவர்கள் தங்கள் மக்களை நோக்கி) ''நீங்கள் வாய்பொத்தி (இதனைக் கேட்டுக்கொண்டு) இருங்கள்'' என்று கூறினார்கள். (இது) ஓதி முடிவு பெறவே, தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.

(அவர்களை நோக்கி) ''எங்களுடைய இனத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது மூஸாவுக்குப் பின்னர் அருளப்பட்டிருக்கின்றது. அது, தனக்கு முன்னுள்ள வேதங்களையும் உண்மைப்படுத்துகின்றது. அது சத்தியத்திலும், நேரான வழியிலும் செலுத்துகின்றது. எங்களுடைய இனத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறி, அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுடைய பாவங்களை (அல்லாஹ்) மன்னித்தும் விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுவான்.'' (அல்குர்ஆன்46:29, 30, 31)

மற்றொன்று 'ஜின்' எனும் அத்தியாயத்தில்:

''(நபியே!) நீங்கள் கூறுங்கள்: ''வஹி மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக, ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியுற்று(த் தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களை நோக்கி) ''நிச்சயமாக, நாங்கள் மிக்க ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம் அது நேரான வழியை அறிவிக்கின்றது. ஆகவே, அதனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இனி) நாங்கள் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் இணையாக்க மாட்டோம்...'' (அல்குர்ஆன் 72:1-15)

ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து குர்ஆனை கேட்டுச் சென்றன. இதனை இந்த வசனங்கள் மூலம் அல்லாஹ் அறிவித்தப் பிறகு தான் நபி (ஸல்) அவர்கள் அறிந்து கொண்டார்கள். அதற்கு முன்பு இது அவர்களுக்குத் தெரியாது. இதுதான் ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்த முதல் முறையாகும் என்பது நமக்குத் தெரிய வருகிறது. மேலும், இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் பலமுறை வந்திருக்கிறார்கள் என்பதும் வேறு சில அறிவிப்புகளிலிருந்து தெரிய வருகிறது.

இது உண்மையில் அல்லாஹ்வின் மறைவான பொக்கிஷத்திலிருந்து அருளப்பட்ட மகத்தான உதவியாகும். தன்னைத் தவிர வேறு எவரும் அறிந்துகொள்ள முடியாத அவனுடைய படையைக் கொண்டு, அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு உதவி செய்தான். மேலும், இது தொடர்பாக இறங்கிய வசனங்களில் நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி வெற்றியடையும் என்ற நற்செய்திகளும் இருந்தன. இப்பிரபஞ்சத்தின் எந்தவொரு சக்தியும் அவர்களின் அழைப்புப் பணி வெற்றியடைவதை தடுத்திட முடியாது என்று அவ்வசனங்கள் மிக உறுதியாக அறிவித்தன.

''எவன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறவில்லையோ (அவனை நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான். தண்டனையில் இருந்து தப்ப) அவன் பூமியில் எங்கு ஓடியபோதிலும் அல்லாஹ்வை தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வை அன்றி, பாதுகாப்பவர் அவனுக்கு ஒருவருமில்லை. (அவனைப் புறக்கணிக்கும்) இத்தகையவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருப்பர்''

''நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், (பூமியிலிருந்து) ஓடி அவனை விட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையும் உறுதியாக அறிந்துகொண்டோம்.'' (அல்குர்ஆன் 72:12)

அல்லாஹ்வின் இந்த மாபெரும் உதவியாலும் மகத்தான நற்செய்திகளாலும் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்திலிருந்து கவலை நீங்கியது. துக்கம் அகன்றது. மக்காவிற்கு திரும்பச் சென்று இஸ்லாமைப் பரப்புவதிலும் நிரந்தரமான அல்லாஹ்வின் தூதுத்துவத்தை எடுத்துரைப்பதிலும் தனது முந்திய திட்டத்தையே புதிய உற்சாகத்துடனும், துணிவுடனும், வீரத்துடனும் செய்ய வேண்டும் என்று உறுதிகொண்டார்கள்.

அப்பொழுது ஜைது இப்னு ஹாரிஸா ''நபியே! குறைஷிகள் உங்களை மக்காவிலிருந்து வெளியேற்றி இருக்க, நீங்கள் இப்பொழுது எப்படி அங்கு செல்ல முடியும்?'' என்றார். அதற்கு ''ஜைதே! நீங்கள் பார்க்கும் இந்த துன்பங்களுக்கு ஒரு முடிவையும் நல்ல மகிழ்ச்சி தரும் மாற்றத்தையும் நிச்சயம் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான். நிச்சயமாக, அல்லாஹ் அவனது மார்க்கத்திற்கு உதவி செய்வான் அவனது நபிக்கு வெற்றியைத் தருவான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பிறகு தனது பயணத்தைத் தொடர்ந்து மக்கா அருகே வந்தவுடன் ''ரா குகையில் தங்கிக் கொண்டு குஜாஆ கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அக்னஸ் இப்னு ஷுரைக்கிடம் அவர் தனக்கு அடைக்கலம் தர வேண்டும்'' எனக் கூறி தூது அனுப்பினார்கள். ஆனால், ''தான் மக்காவாசிகளுடன் நட்பு கொண்டவராக இருப்பதால், அவர்கள் விரும்பாதவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது'' என்று அக்னஸ் கூறிவிட்டார். பிறகு சுஹைல் இப்னு அயிடம் நபி (ஸல்) அவர்கள் தூதனுப்பினார்கள். அதற்கு ''தான், ஆமிர் கிளையைச் சேர்ந்தவன். எனவே, கஅப் கிளையாருக்கு எதிராக என்னால் அடைக்கலம் கொடுக்க முடியாது'' என்று அவர் மறுத்துவிட்டார்

அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் முத்இமிடம் தூது அனுப்பினார்கள். முத்இம் ''ஆம்! நான் அடைக்கலம் தருவேன்'' என்று கூறி, தானும் ஆயுதங்களை அணிந்துகொண்டு தனது ஆண் பிள்ளைகள் மற்றும் கூட்டத்தாரையும் ஆயுதம் அணியச் செய்து, கஅபாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு நான்கு மூலைகளிலும் அவர்களை நிற்கவைத்து, ''நான் முஹம்மதிற்கு அடைக்கலம் கொடுத்து விட்டேன். அதனால்தான் உங்களை இங்கு அழைத்து வந்தேன்'' என்று அவர்களுக்கு அறிவித்தார்.

பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துவர ஒருவரை அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் ஜைது இப்னு ஹாரிஸாவுடன் மஸ்ஜிதுல் ஹராமிற்கு வந்தார்கள். முத்இம் தனது ஒட்டகத்தின் மீதேறி அமர்ந்துகொண்டு ''குறைஷிகளே! நான் முஹம்மதிற்கு அடைக்கலம் கொடுத்து விட்டேன். உங்களில் எவரும் முஹம்மதை பழிக்கக் கூடாது'' என்று அறிவிப்புச் செய்தார். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிட்டு, கஅபாவை வலம் வந்து, இரண்டு ரகஅத்துகள் தொழுதுவிட்டு தனது வீட்டிற்குச் சென்றார்கள். அது வரையிலும் முத்இமும் அவரது மக்களும் ஆயுதமேந்தி பாதுகாப்பிற்காக நபி (ஸல்) அவர்களைச் சுற்றி நின்று இருந்தனர்.

அபூஜஹ்ல் ''நீ அடைக்கலம் (மட்டும்) அளித்துள்ளாயா? அல்லது முஸ்லிமாகி விட்டாயா?'' என்று முத்இமிடம் கேட்டான். அதற்கு ''இல்லை. நான் அடைக்கலம்தான் அளித்துள்ளேன்'' என்று முத்இம் கூறவே, ''சரி! நீ அடைக்கலம் கொடுத்தவருக்கு நாங்களும் அடைக்கலம் கொடுக்கிறோம்'' என்று கூறினான். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

முத்இமின் இந்த செயலை நபி (ஸல்) நினைவு வைத்திருந்தார்கள். ''பத்ர் போரில் எதிரிகள் பலர் கைதிகளாக்கப்பட்டபோது, முத்இம் உயிருடன் இருந்து, இந்த துர்நாற்றம் பிடித்தவர்களின் உரிமைக்காக என்னிடம் பேசியிருந்தால் அவருக்காக இவர்கள் அனைவரையுமே நான் விடுதலை செய்திருப்பேன்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

கோத்திரங்களுக்கும் தனி நபர்களுக்கும் இஸ்லாமை அறிமுகப்படுத்துதல்

நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு துல்காயிதா மாதத்தில் (ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கம் கி.பி. 619ல்) நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குத் திரும்பினார்கள். பல கோத்திரங்களுக்கும் தனி நபர்களுக்கும் இஸ்லாமை மீண்டும் புதிதாக அறிமுகப்படுத்தினார்கள். ஹஜ்ஜுடைய காலம் நெருங்கியபோது மக்கள் அனைவரும் பல திசைகளிலிருந்து ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றுவதற்காக மக்காவிற்கு வந்த வண்ணமிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு கோத்திரத்திற்கும் சென்று அவர்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்தி, அதன்பக்கம் அழைப்புக் கொடுத்தார்கள். நபித்துவத்தின் நான்காவது ஆண்டிலிருந்து இப்படித்தான் அம்மக்களை இஸ்லாமின் பக்கம் அழைத்து வந்தார்கள். ஆனால், இந்த பத்தாவது ஆண்டு மேலும் ஒரு கோரிக்கையையும் அவர்களுக்கு முன் வைத்தார்கள். அதாவது, நான் அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்து வைப்பதற்கு எனக்கு இடம் கொடுத்து உதவி செய்து எதிரிகளிடமிருந்து எனக்கு பாதுகாப்பு அளியுங்கள் என்று அம்மக்களிடம் கேட்டுக்கொண்டார்கள்.

இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட கோத்திரத்தினர்

இமாம் ஜுஹ்ரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் பல கோத்திரத்தாரிடம் சென்று இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள். அவர்களின் பெயர்களாவன:

ஆமிர் இப்னு ஸஃஸஆ கிளையினர்: முஹாப்னு கஸ்ஃபஹ், ஃபஜாரா, கஸ்ஸான், முர்ரா, ஹனீஃபா, ஸுலைம், அப்ஸ், பனூ நஸ்ர், பனூ பக்கா, கிந்தா, கல்ப், ஹாரிஸ் இப்னு கஅப், உத்ரா, ஹழாமா ஆகிய கோத்திரத்தாருக்கு ஓரிறைக் கொள்கையை இதமாக எடுத்துரைத்தும் அவர்களில் எவரும் அழைப்பை ஏற்கவில்லை. (இப்னு ஸஅத்)

மேற்கண்ட அனைத்து கோத்திரத்தாரையும் ஒரே ஆண்டுக்குள் அல்லது ஒரே ஹஜ் காலத்திலேயே அழைத்திடவில்லை. நபித்துவத்தின் நான்காம் ஆண்டு மெல்ல மெல்லத் தொடங்கிய இந்த பகிரங்க அழைப்புப் பணி நபி (ஸல்) அவர்கள் மதீனா செல்லும்வரை நீடித்தது. எனவே, இன்ன கோத்திரத்தாரை இன்ன ஆண்டுதான் அழைத்தார்கள் என்று குறிப்பிட்டுக் கூறிட முடியாது. என்றாலும் பெரும்பாலான கோத்திரத்தாரை நபித்துவத்தின் பத்தாம் ஆண்டுதான் அழைத்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் அழைப்பை இந்த கோத்திரத்தார் எவ்வாறு எடுத்துக் கொண்டனர் என்பதைக் குறித்து இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுவதை சுருக்கமாகக் காண்போம்:

1) 'கல்ப்' கிளையினர்: நபி (ஸல்) அவர்கள் இவர்களின் உட்பிரிவான அப்துல்லாஹ் உடைய குடும்பத்தாரை, ''அப்துல்லாஹ்வின் மக்களே! அல்லாஹ் உங்கள் தந்தைக்கு எத்துணை அழகிய பெயரை வழங்கியிருக்கின்றான்'' என்றெல்லாம் நயமாக கூறி அழைத்துப் பார்த்தார்கள். எதற்கும் அவர்கள் அசையவில்லை.

2) 'ஹனீஃபா' கிளையினர்: இம்மக்களின் வீடு வீடாகச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அழைத்துப் பார்த்தார்கள். ஆனால், அவர்கள் அதை ஏற்காதது மட்டுமின்றி, நபி (ஸல்) அவர்களிடம் முரட்டுத்தனமாகவும் நடந்துகொண்டனர்.

3) 'ஆமிர் இப்னு ஸஃஸஆ' கிளையினர்: நபி (ஸல்) அவர்கள் இவர்களிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்தி அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். அவர்களில் பைஹரா இப்னு ஃபிராஸ் என்பவர் ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் இந்த குறைஷி வாலிபரை பிடித்து என்னிடம் வைத்துக் கொண்டால் இவர் மூலம் முழு அரபியர்களையும் நான் வெற்றி கொள்வேன்'' என்று கூறினார். மேலும், நபி (ஸல்) அவர்களை சந்தித்து, ''உங்களது மார்க்கத்தில் சேர்ந்து நாங்கள் உங்களிடம் ஒப்பந்தம் செய்து கொடுக்கிறோம். பிறகு உங்களுக்கு மாறு செய்யும் சமுதாயத்திற்கு எதிராக அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைத் தந்தால், உங்களுடைய மறைவுக்குப் பின் எங்களுக்கு அதிகாரம் கிடைக்குமா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கே உயரின. அவன் விரும்பிய கூட்டத்திற்கு அதைக் கொடுப்பான்'' என்று பதிலளித்தார்கள். அதற்கு பைஹரா ''உங்கள் முன்னிலையில் அரபியர்களுக்கு எதிராக நாங்கள் போரிட்டு அவர்களின் அம்புகளுக்கு எங்கள் கழுத்துக்களை இலக்காக்கிக் கொள்ள, அல்லாஹ் உங்களுக்கு வெற்றி கொடுத்தப்பின் நிர்வாக அதிகாரம் எங்களுக்கு இல்லாமல் மற்றவர்களுக்கா? இதெப்படி நேர்மையாகும்? அப்படிப்பட்ட உங்கள் மார்க்கம் எங்களுக்குத் தேவையில்லை'' என்று கூறிவிட்டான். அதற்குப்பின் அந்த கிளையினரும் இஸ்லாமை ஏற்க மறுத்துவிட்டனர். (இப்னு ஹிஷாம்)

ஆமிர் கிளையினர் ஹஜ்ஜை முடித்துக்கொண்டு தங்களது ஊருக்குத் திரும்பியபோது ஹஜ்ஜில் கலந்துகொள்ள இயலாத ஒரு முதியவரிடம் சென்று, ''அப்துல் முத்தலிபின் கிளையிலுள்ள குறைஷி வாலிபர் ஒருவர் எங்களிடம் தன்னை 'நபி' என்று அறிமுகப்படுத்தினார். அவருக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும் அவருக்கு உதவி செய்ய வேண்டும் அவரை நமது ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்று எங்களிடம் கூறினார்'' என்றார்கள். இதைக் கேட்ட அந்த வயோதிகர் ''கைவிட்டுப் போய்விட்டதே! அவரை விட்டுவிட்டீர்களே! எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் பொய் கூறமாட்டார்கள். நிச்சயம் அவர் கூறியது உண்மைதான். உங்களது அறிவு உங்களை விட்டு எங்கே போனது?'' என்று கடிந்துரைத்து மிகுந்த கைசேதத்தை வெளிப்படுத்தினார்.

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமை பல குலத்தாருக்கும் கோத்திரத்தாருக்கும் குழுக்களுக்கும் அறிமுகப்படுத்தியது போன்றே தனி நபர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்கள். அவர்களில் சிலரிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் நல்ல பதில்களை பெற்றார்கள். ஹஜ் முடிந்து சில காலங்களிலேயே அவர்களில் பலர் இஸ்லாமைத் தழுவினர். அவர்களில் சிலரை இங்கு பார்ப்போம்:

1) ஸுவைத் இப்னு ஸாமித்: இவர் மதீனாவாசிகளில் நுண்ணறிவு மிக்க பெரும் கவிஞராக விளங்கினார். இவர் வீரதீரம், கவியாற்றல், சிறப்பியல்பு, குடும்பப் பாரம்பரியம் ஆகிய சிறப்புகளால் இவரது சமுதாயம் இவரை 'அல்காமில்' (முழுமையானவர்) என்று அழைத்தனர். இவர் ஹஜ் அல்லது உம்ரா செய்வதற்காக மக்கா வந்தார். இஸ்லாமிய அழைப்புக்காக அவரிடம் நபி (ஸல்) அவர்கள் பேசியபோது அவர் ''உங்களிடம் இருப்பதும் என்னிடம் இருப்பதும் ஒன்றாகத்தான் இருக்கும்'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''உங்களிடம் என்ன இருக்கிறது?'' என்று கேட்டதற்கு ''நான் லுக்மான் (அலை) வழங்கிய ஞானபோதனைகளைக் கற்று வைத்துள்ளேன்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் ''எனக்கு அதை சொல்லிக் காட்டுங்கள்'' என்று கேட்கவே, அவர் அதை சொல்லிக் காண்பித்தார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ''நிச்சயமாக இது அழகிய பேச்சுதான். எனினும், என்னிடம் இருப்பதோ இதைவிட மிகச் சிறந்தது. அதுதான் அல்லாஹ் எனக்கு அருளிய குர்ஆன். அது ஒளிமிக்கது நேர்வழி காட்டக்கூடியது'' என்று கூறி, குர்ஆனை அவருக்கு ஓதி காண்பித்து, அவரை இஸ்லாமின் பக்கம் அழைத்தார்கள். குர்ஆன் அவரது உள்ளத்தைக் கவர்ந்தது. ''இது மிக அழகிய வசனங்கள் உடைய வேதமாக இருக்கிறதே'' என வருணித்து இஸ்லாமைத் தழுவினார். பிறகு மதீனா வந்த சில காலத்திலேயே புஆஸ் போருக்கு முன்பாக அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரத்தாடையில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டார். அநேகமாக நபித்துவத்தின் 11 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் இஸ்லாமை தழுவியிருக்கலாம்.

2) இயாஸ் இப்னு முஆத்: மதீனாவைச் சேர்ந்த இளைஞரான இவர் 'புஆஸ்' யுத்தத்திற்கு முன் நபித்துவத்தின் 11வது ஆண்டு அவ்ஸ் கிளையினர் கஸ்ரஜ் கிளையாருக்கு எதிராக மக்காவிலுள்ள குறைஷிகளிடம் நட்பு ஒப்பந்தம் செய்ய வந்தபோது இவரும் அவ்ஸ் கிளையாருடன் மக்கா வந்தார். மதீனாவில் அவ்ஸ் கஜ்ரஜுக்கிடையில் பகைமைத் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த சமயம் அது. அவ்ஸ் கிளையினர் கஸ்ரஜ்ஜை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால் குறைஷிகளின் நட்பை நாடி வந்தனர்.

இவர்களின் வருகையை அறிந்துகொண்ட. நபி (ஸல்), இவர்களிடம் சென்று ''நீங்கள் எதற்காக வந்துள்ளீர்களோ அதைவிடச் சிறந்த ஒன்றை அறிந்துகொள்ள உங்களுக்கு ஆர்வமுள்ளதா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ''அது என்ன?'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் ''நான் அல்லாஹ்வின் தூதராவேன். அவன் என்னை அவனது அடியார்களிடம் அனுப்பியுள்ளான். அவர்கள் அல்லாஹ்வை வணங்க வேண்டும் அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது அல்லாஹ் எனக்கு வேதத்தையும் இறக்கி வைத்திருக்கிறான்'' என்று கூறி இஸ்லாமின் ஏனைய விஷயங்களையும் நினைவூட்டி, குர்ஆனையும் ஓதிக் காண்பித்தார்கள்.

அப்போது இயாஸ் ''எனது கூட்டத்தாரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் வந்திருக்கும் நோக்கத்தை விட இதுதான் மிகச் சிறந்தது'' என்று கூறினார். உடனே அக்கூட்டத்தில் உள்ள அபுல் ஹைஸர் என்ற அனஸ் இப்னு ராஃபி, ஒருபிடி மண் எடுத்து இயாஸின் முகத்தில் வீசி எறிந்து, ''இதோ பார்! எங்களை விட்டுவிடு. சத்தியமாக நாங்கள் வேறொரு நோக்கத்திற்கு வந்திருக்கிறோம்'' என்று கூறினான். அதற்குப் பின் இயாஸ் வாய்மூடிக் கொள்ளவே நபி (ஸல்) அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்கள். அவ்ஸ் கிளையினர் குறைஷிகளுடன் நட்பு ஒப்பந்தம் செய்வதில் தோல்வி கண்டு மதீனா திரும்பினர். அடுத்த சில காலத்திலேயே, இயாஸ் இறந்துவிட்டார். அவர் மரணிக்கும்போது 'லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் முஸ்லிமாகவே இறந்தார் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. (இப்னு ஹிஷாம், முஸ்னது அஹ்மது)

3) அபூதர் கிஃபாரி: இவர் மதீனாவின் சுற்றுப்புறத்தில் வசித்து வந்தார். ஸுவைத், இயாஸ் ஆகியோரின் மூலம் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவச் செய்தி மதீனாவை அடைந்தபோது அபூதருக்கும் அந்த செய்தி எட்டியிருக்கலாம். பிறகு அதுவே இஸ்லாமில் வர ஆர்வம் ஏற்பட்டதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.

அபூ ஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களிடம் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், ''அபூதர் அவர்கள் இஸ்லாமைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டார்கள், நாங்கள் ''அறிவியுங்கள்'' என்றவுடன் இப்னு அப்பாஸ் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

அபூதர் அவர்கள் (என்னிடம்) சொன்னார்கள்: ''நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒருவனாக இருந்தேன். அப்போது தம்மை நபி என்று சொல்லிக்கொண்டு ஒரு மனிதர் மக்காவில் திரிகிறார் என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே, நான் என் சகோதரர் அனீஸிடம் ''நீ இந்த மனிதரிடம் போய் பேசி அவரைப் பற்றிய செய்தியைத் தெரிந்து வா'' என்று சொன்னேன். அவ்வாறே சென்று அவரைச் சந்தித்து திரும்பி வந்தார். நான், ''உன்னிடம் என்ன செய்தி இருக்கிறது?'' என்று கேட்டேன். ''நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கின்ற ஒரு மனிதராக நான் அவரைக் கண்டேன்'' என்றார். நான் அவரிடம் 'அவரைப் பற்றிய முழுமையான செய்தியை எனக்கு நீ தரவில்லை' என்று கூறினேன். பிறகு தோலினால் ஆன தண்ணீர் பையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்கா நோக்கிப் புறப்பட்டேன்.

அவரை நான் தேடி வந்திருப்பதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்பவில்லை. வேறு உணவு இல்லாததால் ஜம்ஜம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் தங்கியிருந்தேன். அப்போது அலீ (ரழி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டதும் ''ஆள் ஊருக்குப் புதியவர் போலத் தெரிகிறதே'' என்று கேட்டார்கள், நான், ''ஆம்!'' என்றேன். உடனே அவர்கள், ''அப்படியென்றால் நம் வீட்டிற்கு வாருங்கள் போகலாம்'' என்று சொன்னார்கள். நான் அவர்களுடன் சென்றேன். ஆனால், எதைப் பற்றியும் அவர்களிடம் நான் கேட்கவுமில்லை எதையும் அவர்களுக்குத் தெரிவிக்கவுமில்லை.

காலையானதும் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க கஅபாவிற்குச் சென்றேன். ஆனால், அங்கு ஒருவரும் அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ (ரழி) என்னைப் பார்த்தார்கள். ''தாங்கள் தங்க வேண்டியுள்ள வீட்டை அடையாளம் தெரிந்துகொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?'' என்று சாடையாகக் கேட்டார்கள். நான், ''இல்லை'' என்றேன். உடனே அலீ (ரழி) ''என்னுடன் வாருங்கள்'' என்று சொல்லிவிட்டு, ''விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு, ''நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாயிருந்தால் உங்களுக்கு அதை தெரிவிக்கிறேன்'' என்றேன். அதற்கு அவர்கள் ''அவ்வாறே செய்கிறேன்'' என்றார்கள்.

நான் அப்போது 'இங்கே தம்மை இறைத்தூதர் என்று கூறிக்கொண்டு ஒரு மனிதர் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. நான் என் சகோதரரை அவரிடம் பேசி வரும்படி அனுப்பினேன். போதிய விவரத்தை என்னிடம் அவர் கொண்டு வரவில்லை. ஆகவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பினேன்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ''நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். ஆகவே, என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்களும் நுழையுங்கள். போகும்போது உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகின்ற ஒருவனைக் கண்டால், செருப்பைச் சரிசெய்பவனைப் போல் சுவரோரமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் என்னைக் கடந்து போய்க் கொண்டிருங்கள்'' என்று சொன்னார்கள்.

இறுதியில் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, நானும் அவர்களுடன் உள்ளே சென்றேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் ''எனக்கு இஸ்லாமை எடுத்துரையுங்கள்'' என்று சொல்ல அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் அதே இடத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ''அபூதர்ரே! (நீங்கள் இஸ்லாமை ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்து வையுங்கள். தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்லுங்கள். நாங்கள் மேலோங்கி பெரும்பான்மையாகி விட்ட செய்தி உங்களுக்கு எட்டும்போது எங்களிடம் வாருங்கள்'' என்று சொன்னார்கள். அதற்கு நான் ''உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக்கிடையே உரக்கச் சொல்வேன்'' என்று சொல்லிவிட்டு இறையில்லத்திற்கு வந்தேன்.

குறைஷிகள் அங்கே கூடி இருந்தனர். நான், ''குறைஷி குலத்தாரே! 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை' என்று நான் சாட்சி கூறுகின்றேன். 'முஹம்மது அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் நான் சாட்சி கூறுகிறேன்'' என்றேன். உடனே ''மதம் மாறிய இவனை எழுந்து சென்று கவனியுங்கள்'' என்ற கட்டளை பறந்தது. அவர்கள் எழுந்து வந்தார்கள். உயிர் போவது போல் நான் கடுமையாகத் தாக்கப்பட்டேன். அப்போது அப்பாஸ் அவர்கள் என்னை அடையாளம் கண்டு என்மீது கவிழ்ந்து அடிபடாமல் பார்த்துக் கொண்டார்கள். பிறகு குறைஷிகளை நோக்கி ''உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வியாபாரத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?)'' என்று கேட்டவுடனே அவர்கள் என்னைவிட்டு விலகி விட்டார்கள்.

மறுநாள் காலை வந்தவுடன் நான் மீண்டும் கஅபா சென்று நேற்று சொன்னதைப் போலவே சொன்னேன். அவர்கள் ''மதம் மாறிய இவனை கவனியுங்கள்'' என்று சொன்னார்கள். நேற்று என்னைத் தாக்கியது போலவே இன்றும் தாக்கினார்கள். அப்பாஸ் (ரழி) அவர்கள் என்னைக் கண்டுகொண்டு என்மீது கவிழ்ந்து (அடிபடாதவாறு பார்த்துக்) கொண்டார்கள். நேற்று அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதைப் போலவே (இன்றும்) சொன்னார்கள்.''

(இதை அறிவித்த பிறகு) இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ''இது அபூதர் அவர்கள் இஸ்லாமை தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அபூதருக்கு கருணை காட்டுவானாக!'' என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரி)

4) துஃபைல் இப்னு அம்ர் தவ்ஸி: இவர் தவ்ஸ் கூட்டத் தலைவர். சிறந்த பண்புள்ளவராகவும், நுண்ணறிவாளராகவும், கவிஞராகவும் இருந்தார். இவருடைய கோத்திரம் யமன் நாட்டில் வசித்து வந்தது. இவர்களுக்கென தனி ஆட்சி அதிகாரம் இருந்தது. இவர் நபித்துவத்தின் 11 வது ஆண்டு மக்கா வந்தபோது மக்காவாசிகள் இவரை மிகுந்த உற்சாகம் பொங்க மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவர்கள் ''துஃபைலே! நீங்கள் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறீர்கள். இதோ இந்த மனிதர் இருக்கிறாரே எங்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்துவிட்டார். எங்களது ஒற்றுமையைக் குலைத்து எங்கள் காரியங்களைச் சின்னபின்னமாக்கி விட்டார். இவரது பேச்சு சூனியம் போன்றது. பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள், கணவன், மனைவி ஆகியோடையே பிரிவினையை உண்டாக்கிவிட்டார். எங்களுக்கு ஏற்பட்ட இந்நிலை உமக்கோ உமது கூட்டத்தினருக்கோ ஏற்பட்டுவிடக் கூடாது என்றுதான் நாங்கள் பயப்படுகிறோம். நீங்கள் அவரிடம் எதுவும் பேசவும் வேண்டாம். எதையும் கேட்கவும் வேண்டாம்'' என்று அவருக்கு அறிவுரைக் கூறினார்கள்.

துஃபைல் கூறுகிறார்: ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! தொடர்ந்து இவ்வாறே மக்காவாசிகள் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்ததால் நபி (ஸல்) அவர்களின் எந்தப் பேச்சையும் கேட்கக் கூடாது அவரிடம் அறவே பேசவும் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன். நபி (ஸல்) அவர்களின் பேச்சைக் கேட்டுவிடுவோமோ என்ற பயத்தில் பள்ளிக்குச் செல்லும்போது எனது காதில் துணியை வைத்து அடைத்துக் கொள்வேன்.

நான் ஒருமுறை பள்ளிக்குச் சென்றபோது கஅபா அருகே நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அருகில் நானும் சென்று நின்று கொண்டேன். அவர்களது சில பேச்சை நான் கேட்டே ஆகவேண்டுமென்று அல்லாஹ் நாடிவிட்டான் போலும். அவர்களிடமிருந்து மிக அழகிய பேச்சைக் கேட்ட நான், எனக்குள் ''எனது தாய் என்னை இழக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் திறமைமிக்க புத்திசாலியான கவிஞன். நல்லது எது? கெட்டது எது? என்று எனக்கு மிகத் தெளிவாகவே தெரியும். அப்படியிருக்க அவர் கூறுவதைக் கேட்காமல் இருக்க எது என்னைத் தடை செய்ய முடியும்? அவர் நன்மையைக் கூறினால் நான் ஏற்றுக் கொள்வேன். அவர் கெட்டதைக் கூறினால் நான் விட்டுவிடுவேன்'' என்று மனதிற்குள் சமாதானம் கூறிக் கொண்டேன்.

சிறிது நேரத்திற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்கு சென்றவுடன் நானும் அவர்களது வீட்டிற்குச் சென்றேன். நான் இந்த ஊருக்கு வந்தது, மக்கள் என்னிடம் எச்சரித்தது, காதில் துணியை வைத்து அடைத்துக் கொண்டது, பிறகு குர்ஆன் ஓதியதைக் கேட்டது என அனைத்துச் செய்திகளையும் விரிவாகக் கூறி, உங்கள் மார்க்கத்தைப் பற்றி எனக்கு எடுத்துக் கூறுங்கள். மேலும், நீங்கள் எனக்கு இஸ்லாமைப் பற்றி விளக்குங்கள் எனக் கூறினேன். அவர்கள் எனக்கு இஸ்லாமைப் பற்றி விளக்கி குர்ஆனையும் ஓதிக் காட்டினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டியதை விட அழகானதையோ, நீதமானதையோ நான் கேட்டதில்லை. உடனே நான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன். மேலும், ''நபியே எனக்கு எனது கூட்டம் கட்டுப்படுவார்கள். நான் அவர்களிடம் சென்று அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைப்பேன். எனவே, அல்லாஹ் எனக்கு ஒரு அத்தாட்சியைத் தரவேண்டும் என துஆ செய்யுங்கள்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் எனக்காக பிரார்த்தனையும் செய்தார்கள். பிறகு நான் மக்காவிலிருந்து புறப்பட்டேன்.

நான் எனது கூட்டத்தாருக்கு அருகாமையில் சென்றபோது, அல்லாஹ் எனது முகத்தில் விளக்கைப் போன்று ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தினான். நான் ''அல்லாஹ்வே! எனக்கு வேறு ஓர் இடத்தில் இதை ஏற்படுத்துவாயாக! மக்கள் இதைப் பார்த்து இது தண்டனையால் ஏற்பட்டது என்று கூறிவிடுவார்கள் என நான் பயப்படுகிறேன்'' என்று வேண்டியவுடன் அந்த ஒளி எனது கைத்தடிக்கு மாறிவிட்டது. நான் எனது தந்தையையும், எனது மனைவியையும் இஸ்லாமின் பக்கம் அழைக்கவே அவர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள். சிறிது தாமதித்த எனது கூட்டத்தாரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள்.

இவர் கந்தக் யுத்தம் (அகழ் போர்) நடந்து முடிந்தபின் தங்களது கூட்டத்தால் எழுபது அல்லது எண்பது குடும்பங்களுடன் மதீனாவிற்கு ஹிஜ்ரா செய்து வந்தார். இஸ்லாமிற்காக மாபெரும் தியாகங்களைச் செய்த அன்னார் யமாமா போரில் எதிரிகளால் கொள்ளப்பட்டார். (இப்னு ஹிஷாம்)

5) ழிமாத் அஸ்தீ: இவர் யமனிலுள்ள அஜ்து ஷனாஆ கிளையைச் சேர்ந்தவர். இவர் மந்திரித்துப் பார்க்கும் பழக்கம் உள்ளவராக இருந்தார். இவர் மக்காவிற்கு வந்தபோது அங்குள்ள மூடர்கள் ''முஹம்மது பைத்தியக்காரர்'' என்று கூறக் கேட்கவே நான் அவரைச் சந்தித்து அவருக்கு மந்திரித்தால் அல்லாஹ் என் கையால் அவருக்கு சுகமளிக்கலாம் என்று தனக்குள் கூறிக்கொண்டு நபி (ஸல்) அவர்களை சந்தித்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் ''முஹம்மதே! நான் ஷைத்தானின் சேட்டைகளிலிருந்து மந்திரிப்பவன். உனக்கு மந்திரித்துப் பார்க்கவா?'' என்று கேட்கவே, நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

''நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! நாங்கள் அல்லாஹ்வை புகழ்கிறோம். அவனிடமே உதவி தேடுகிறோம். அவன் நேர்வழி காட்டியோரை வழி கெடுப்பவர் யாரும் இல்லை. அவன் வழிகேட்டில் விட்டுவிட்டவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை. அவனுக்கு இணையானவர் எவருமில்லை என்று நான் சாட்சி கூறுகின்றேன். நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையும் அவனது தூதருமாவார் என்று நான் சாட்சி கூறுகிறேன்'' என்று மொழிந்தார்கள்.

இதைக் கேட்ட ழிமாத் ''நீங்கள் சொன்ன வாக்கியங்களை எனக்குத் திரும்பச் சொல்லுங்கள்'' என்று கூறவே, நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை அவருக்கு இதைக் கூறினார்கள். அதற்கு அவர் ''நான் ஜோசியக்காரர்கள், சூனியக்காரர்கள், கவிஞர்கள் ஆகியோரின் பேச்சையெல்லாம் கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் கூறிய வாக்கியங்களைப் போன்று இதற்குமுன் நான் ஒருபோதும் கேட்டதில்லை. இவை எவ்வளவு கருத்தாழமுள்ள வாக்கியங்களாக இருக்கின்றன. உங்களது கையைக் கொடுங்கள் நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு உங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறேன்'' என்று கூறி, நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

ஆறு மேன்மக்கள்

நபித்துவத்தின் பதினோறாவது ஆண்டு கி.பி. 620 ஜூலை ஹஜ்ஜுடைய காலத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணி சில புதிய நல்ல இளஞ்செடிகளைக் கண்டது. அந்த இளஞ்செடிகள் வெகு விரைவில் நிழல் தரும் அடர்த்தியான மரங்களாக மாறின. அதன் நிழல்களின் கீழ் முஸ்லிம்கள் அநியாயம் மற்றும் கொடுமைகளின் அனலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். இவ்வாறே சிறிது சிறிதாக வரலாற்றுப் பாட்டை மாறிக்கொண்டே சென்றது.

மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களை பொய்ப்பித்து வந்ததாலும் அல்லாஹ்வின் வழியிலிருந்து மக்களைத் தடுத்து வந்ததாலும் நபி (ஸல்) அவர்கள் மக்களைப் பகலில் சந்திக்காமல் இரவில் சந்தித்து வந்தார்கள்.

ஓரிரவு அபூபக்ர், அலீ (ரழி) ஆகியோருடன் மக்களை சந்திப்பதற்காக வெளியே சென்ற நபி (ஸல்) அவர்கள் துஹல், ஷைபான் ஆகியோர் தங்கியிருக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களிடத்தில் இஸ்லாமைப் பற்றி பேசினார்கள். அப்போது அபூபக்ருக்கும் துஹல் கிளையைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் மிக அழகிய உரையாடலும், அற்புதமான கேள்வி பதில்களும் நடைபெற்றன. ஷைபான் கிளையினர் நல்ல ஆதரவான பதில்களை கூறியபோதும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. (ஸீரத்துர் ரஸூல்)

அடுத்து நபி (ஸல்) மினாவில் 'அகபா' என்ற இடத்திற்கு சென்றபோது அங்கு சில ஆண்களின் பேச்சுக் குரல் கேட்டவுடன் அவர்களிடம் சென்று பேச விரும்பினார்கள். அவர்கள் கஸ்ரஜ் கிளையாரைச் சேர்ந்த மதீனாவில் உள்ள ஆறு இளைஞர்களாவர்.

அவர்கள்,

1) அஸ்அது இப்னு ஜுராரா (நஜ்ஜார் குடும்பம்)

2) அவ்ஃப் இப்னு ஹாரிஸ் (நஜ்ஜார் குடும்பம்)

3) ராஃபிஃ இப்னு மாலிக் (ஜுரைக் குடும்பம்)

4) குத்பா இப்னு ஆமிர் இப்னு ஹதீதா (ஸலமா குடும்பம்)

5) உக்பா இப்னு ஆமிர் இப்னு நாபி (ஹராம் இப்னு கஅப் குடும்பம்)

6) ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஆப் (உபைத் இப்னு கனம் குடும்பம்)

மதீனாவாசிகளுக்கும் யூதர்களுக்கும் சண்டை மூளும்போது ''கடைசி காலத்தில் ஒரு நபி வருவார். அவருடன் சேர்ந்து நாங்கள் உங்களைக் கடுமையாகக் கொலை செய்வோம்'' என்று அந்த யூதர்கள் மதீனாவாசிகளைப் பார்த்துக் கூறுவார்கள். இவ்வாறு யூதர்கள் கூறுவதை பலமுறை மதீனாவாசிகள் கேட்டிருந்தனர். எனவே, இப்போது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்தியபோது அவர்களை அறிந்து கொள்வது மதீனாவாசிகளுக்கு மிக எளிதாக இருந்தது. (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

நபி (ஸல்) அவர்கள் அந்த வாலிபர்களிடம் சென்று ''நீங்கள் யார்?'' என்று வினவ அவர்கள் ''நாங்கள் கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்தவர்கள்'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''யூதர்களின் நண்பர்களா?'' என்று கேட்க, அவர்கள் ''ஆம்!'' என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் ''என்னுடன் சற்று அமரமாட்டீர்களா? நான் உங்களிடம் பேச வேண்டும்'' என்று கூற அவர்கள் ''சரி! பேசலாம்'' என்று கூறி, நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்தார்கள். அவர்களுக்கு இஸ்லாமின் உண்மையையும் அதன் அழைப்பையும் விரிவாக எடுத்துக் கூறி, அல்லாஹ்வின் பக்கம் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவர்களுக்குக் குர்ஆனையும் ஓதிக் காண்பித்தார்கள். அதற்கு அவர்களில் சிலர் சிலரிடம் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த நபியை வைத்தே யூதர்கள் உங்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தனர். எனவே, அவர்களுக்கு முன்னதாக இவரின் அழைப்பை ஏற்று நீங்கள் முஸ்லிமாகி விடுங்கள்'' என்று கூறினார்கள்.

இஸ்லாமைத் தழுவிய இந்த வாலிபர்கள் மதீனாவின் அறிஞர்களாக விளங்கினர். பொதுவாக மதீனாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த உள்நாட்டுப் போர்களால் மதீனாவாசிகள் மிகவும் நலிந்து போயிருந்தனர். நபி (ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று மனங்கள் ஒன்றிணைந்தால் ஒருக்கால் இப்போர் முடிவுக்கு வரலாம் என்று அவர்கள் ஆசைப்பட்டனர். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் ''எங்களது கூட்டங்களில் இருக்கும் பகைமை மற்றும் தீமையைப் போன்று வேறு எந்தக் கூட்டத்திலும் இருக்காது. அல்லாஹ் உங்கள் மூலமாக அவர்களை ஒன்று சேர்ப்பான். நாங்கள் அவர்களிடம் சென்று உங்கள் மார்க்கத்திற்கு அவர்களை அழைப்போம். நாங்கள் ஏற்றுக் கொண்ட உங்கள் மார்க்கத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவோம். அல்லாஹ் உங்கள் முன்னிலையில் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து விட்டால் அவர்களிடம் உங்களைவிட கண்ணியத்திற்குரியவர் எவரும் இருக்க முடியாது'' என்றனர்.

இவர்கள் மதீனாவுக்கு இஸ்லாமிய அழைப்பை எடுத்துச் சென்றார்கள். அங்கு மதீனாவாசிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் நபி (ஸல்) அவர்கள் பற்றியே பேசப்பட்டது. (இப்னு ஹிஷாம்)

(இஸ்லாமை ஏற்றுக் கொண்ட மதீனாவாசிகளை அன்சாரிகள் (உதவியாளர்கள், ஆதரவாளர்கள்) என்று குர்ஆனிலும் நபிமொழியிலும் கூறப்படுகிறது.)

ஆயிஷாவை மணமுடித்தல்

நபித்துவத்தின் பதினோறாவது ஆண்டு ஷவ்வால் மாதம் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். அப்போது ஆயிஷா (ரழி) அவர்களின் வயது ஆறு. பிறகு மதீனாவிற்குச் சென்ற முதல் ஆண்டு, ஆயிஷா (ரழி) அவர்களின் ஒன்பதாவது வயதில் அவர்களைத் தங்களது இல்லத்திற்கு அழைத்துக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மிஃராஜ்

மேற்கூறிய சூழ்நிலையில் நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி ஒருபுறம் வெற்றி, மறுபுறம் கொடுமைகள் என்ற இரண்டிற்கும் இடையில் உள்ள பாதையை பிளந்து சென்று கொண்டிருந்தது. நம்பிக்கை நட்சத்திரங்கள் வெகு தூரத்தில் மின்னத் துவங்கின. அப்போதுதான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயணம் நடைபெற்றது. இதையே இஸ்லாமிய வரலாற்றில் ''மிஃராஜ்'' என அறியப்படுகிறது.

மிஃராஜின் நிகழ்ச்சி எப்போது நடந்தது என்பதில் பல கருத்துகள் உள்ளன.

1) நபித்துவம் கிடைத்த ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் தப்ரி ஆமோதிக்கிறார்கள்)

2) நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் நவவியும் இமாம் குர்துபீயும் உறுதிப்படுத்துகிறார்கள்)

3) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரஜப் மாதம் 27வது இரவில் நடைபெற்றது.

4) ஹிஜ்ராவிற்கு 16 மாதங்களுக்கு முன், அதாவது நபித்துவத்தின் பனிரெண்டாவது வருடம் ரமழான் மாதத்தில் நடைபெற்றது.

5) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டு, இரண்டரை மாதங்களுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடைபெற்றது.

6) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் நடைபெற்றது.

இந்த கருத்துகளில் முதல் மூன்று கருத்துகள் சரியல்ல. ஏனெனில், அன்னை கதீஜா (ரழி) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமழான் மாதத்தில்தான் இறந்தார்கள். அன்னார் தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன் மரணித்து விட்டார்கள். தொழுகை மிஃராஜில்தான் கடமையாக்கப்பட்டது. ஆகவே, மேற்கூறப்பட்ட முதல் மூன்று கருத்துகள் சரியானவையாக இருக்க முடியாது. அடுத்த மூன்று கருத்துகளில் எந்த கருத்து மிக ஏற்றமானது என்பதற்குரிய சரியான சான்றுகள் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அத்தியாயம் 'இஸ்ரா'வின் கருத்துகளை நன்கு ஆய்வு செய்யும்போது 'மிஃராஜ்' சம்பவம் மக்கா வாழ்க்கையின் மிக இறுதியில்தான் நடைபெற்றது என்பது தெரியவருகிறது.

இந்நிகழ்ச்சியின் விளக்கங்களை ஹதீஸ் (நபிமொழி) கலையின் வல்லுனர்கள் விரிவாகக் கூறியிருப்பதை இங்கு நாம் சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம்:

இப்னுல் கய்யூம்'' (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு தனது உடலுடன் சென்றார்கள். இப்பயணம் மஸ்ஜிதுல் ஹராமில் தொடங்கி முதலில் பைத்துல் முகத்தஸ் சென்றார்கள். ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை 'புராக்'' என்னும் வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள். 'புராக்' எனும் வாகனத்தை மஸ்ஜிதுல் அக்ஸாவுடைய கதவின் வளையத்தில் கட்டிவிட்டு நபிமார்கள் அனைவருக்கும் இமாமாக தொழுகை நடத்தினார்கள்.

பிறகு அதே பைத்துல் முகத்தஸிலிருந்து முதல் வானத்திற்கு ஜிப்ரீல் அழைத்துச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களுக்காக ஜிப்ரீல் கதவைத் திறக்கக் கோரவே அவர்களுக்காக கதவு திறக்கப்பட்டது. அங்கு மனிதகுல தந்தை ஆதம் (அலை) அவர்களை சந்தித்தார்கள். ஆதம் (அலை) நபி (ஸல்) அவர்களுக்கு முகமன், ஸலாம் கூறி வரவேற்றார்கள். அல்லாஹ் ஆதமின் வலப்புறத்தில் நல்லோர்களின் உயிர்களை நபி (ஸல்) அவர்களுக்குக் காண்பித்தான். அவ்வாறே கெட்டவர்களின் உயிர்களை அவரது இடப்புறத்தில் காண்பித்தான். பிறகு இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யஹ்யா, ஈஸா (அலை) ஆகியோரை சந்தித்தார்கள். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் ஸலாமுக்கு பதில் கூறி அவர்களை வரவேற்றார்கள்.

அங்கிருந்து மூன்றாவது வானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யூஸுஃப் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூறினார்கள். அவர்கள் ஸலாமுக்குப் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு நான்காவது வானத்திற்குச் சென்று இத்ரீஸ் (அலை) அவர்களை சந்தித்தார்கள். நபி (ஸல்) ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஐந்தாவது வானத்திற்குச் சென்று ஹாரூன் (அலை) அவர்களை சந்தித்து ஸலாம் கூற அவர்களும் பதில் கூறி, நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். பிறகு ஆறாவது வானத்திற்குச் சென்று மூஸா (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற அவர்கள் பதில் கூறி வரவேற்றார்கள். மூஸா (அலை) அவர்களைக் கடந்து நபி (ஸல்) சென்றபோது மூஸா (அலை) அழ ஆரம்பித்தார்கள். ''நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு, ''எனக்குப் பிறகு அனுப்பப்பட்டவரின் சமுதாயத்தில் சொர்க்கம் செல்பவர்கள் எனது உம்மத்தில் சொர்க்கம் செல்பவர்களைவிட அதிகமாக இருப்பதால் நான் அழுகிறேன்'' என்று கூறினார்கள். பிறகு ஏழாவது வானத்திற்கு சென்றார்கள். அங்கு இப்றாஹீம் (அலை) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூற, பதில் கூறி நபி (ஸல்) அவர்களை வரவேற்றார்கள். ஏழு வானங்களில் சந்தித்த அனைத்து இறைத்தூதர்களும் முஹம்மது (ஸல்) அவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

பிறகு 'ஸித்ரதுல் முன்தஹா''விற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதன் பழங்கள் ஹஜர் நாட்டு பானைகளைப் போன்றும், அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றும் இருந்தன. பிறகு ஸித்ரதுல் முன்தஹாவை தங்கத்தினாலான வண்ணத்துப் பூச்சிகளும், பிரகாசமும், பல நிறங்களும் சூழ்ந்துகொண்டவுடன் அது மாற்றமடைந்தது. அல்லாஹ்வின் படைப்பினங்களில் எவரும் அதன் அழகை வருணிக்க முடியாத அளவுக்கு அது இருந்தது. பிறகு அங்கிருந்து பைத்துல் மஃமூருக்கும்' அழைத்துச் செல்லப்பட்டார்கள். அதில் ஒவ்வொரு நாளும் 70,000 மலக்குகள் நுழைகிறார்கள். ஒருமுறை நுழைந்தவர்கள் மீண்டும் அங்கு வருவதில்லை.

பிறகு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு முத்து வளையங்கள் இருந்தன. சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது. பிறகு அங்கிருந்து அதற்கு மேல் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு எழுதுகோள்களின் சப்தங்களைக் கேட்டார்கள்.

பிறகு அல்லாஹ்விடம் அழைத்து செல்லப்பட்டார்கள். (சேர்ந்த) இரு வில்களைப் போல் அல்லது அதைவிடச் சமீபமாக அல்லாஹ்வை அவர்கள் நெருங்கினார்கள். அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்குப் பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான். ஐம்பது நேரத் தொழுகைகளை அவர்கள் மீது கடமையாக்கினான்.

அவர்கள் திரும்பி வரும்போது மூஸா (அலை) அவர்களை சந்தித்தார்கள். மூஸா (அலை) ''தங்கள் இறைவன் தங்களுக்கு என்ன கடமையாக்கினான்'' என்று கேட்க நபி (ஸல்) ''ஐம்பது நேரத் தொழுகைகளைக் கடமையாக்கினான்'' என்று கூறினார்கள். மூஸா (அலை) ''நீங்கள் திரும்பிச் சென்று உங்களது இறைவனிடம் இதைக் குறைக்கச் சொல்லுங்கள்'' என்று கூறவே நபி (ஸல்) ஆலோசனைக் கேட்பதைப் போன்று ஜிப்ரீலைப் பார்த்தார்கள். ஜிப்ரீல் ''நீங்கள் விரும்பினால் அப்படியே செய்யுங்கள்'' என்று கூறவே நபி (ஸல்) அதை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்விடம் திரும்பச் சென்றார்கள். அல்லாஹ் பத்து நேரத் தொழுகைகளைக் குறைத்தான்.

திரும்பும்போது மூஸா (அலை) அவர்களைச் சந்திக்கவே அவர்கள் மீண்டும் குறைத்து வர ஆலோசனை கூற, நபி (ஸல்), அல்லாஹ்விற்கும் மூஸாவுக்கும் இடையில் திரும்பத் திரும்ப சென்று வந்ததில் அல்லாஹ் ஐம்பதை ஐந்து நேரத் தொழுகைகளாக ஆக்கினான். மூஸா (ஸல்) மீண்டும் சென்று குறைத்து வரும்படி கூறவே, நபி (ஸல்) அவர்களுமோ ''நான் எனது இறைவனிடம் திரும்பச் சென்று இதற்கு மேல் குறைத்துக் கேட்பதற்கு வெட்கப்படுகிறேன். என்றாலும் நான் இதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன். முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கூறிவிட்டார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) சற்று தூரம் சென்று விடவே, அல்லாஹ் அவர்களை அழைத்து ''நீங்கள் எனது கடமையையும் ஏற்றுக்கொண்டீர்கள். எனது அடியார்களுக்கு இலகுவாகவும் ஆக்கிவிட்டீர்கள்'' என்று கூறினான். (ஜாதுல் மஆது)

மிஃராஜில் நபி (ஸல்) அல்லாஹ்வை பார்த்தார்களா? என்பதில் சில மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்று இப்னுல் கய்'' (ரஹ்) கூறியபிறகு. இது விஷயத்தில் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் கருத்துகளையும் மற்ற அறிஞர்களின் கருத்துகளையும் எடுத்துக் கூறியுள்ளார். இப்னுல் கய்யூம்'' (ரஹ்) இது விஷயத்தில் செய்திருக்கும் ஆய்வின் சுருக்கமாவது:

''நபி (ஸல்) அல்லாஹ்வை கண்கூடாக பார்க்கவில்லை. அவ்வாறு எந்த நபித்தோழரும் கூறவுமில்லை'' என்பதாகும். ஆனால், இப்னு அப்பாஸ் (ரழி) மூலம் இரு அறிவிப்புகள் வந்துள்ளன. ஒன்று நபி (ஸல்) அல்லாஹ்வைப் பார்த்தார்கள். இரண்டாவது, நபி (ஸல்) அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள். எனவே, மற்ற நபித்தோழர்களின் முடிவுக்கும் இப்னு அப்பாஸின் கருத்துக்குமிடையில் முரண்பாடு இல்லை. ஏனெனில், அல்லாஹ்வை நபி (ஸல்) பார்த்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) கூறுவது உள்ளத்தால் பார்த்ததையே குறிப்பிடுகிறார்கள். மற்ற நபித்தோழர்கள் அல்லாஹ்வை நபி (ஸல்) பார்க்கவில்லை என்று கூறுவது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை கண்ணால் பார்க்கவில்லை என்பதைக் குறிப்பிடுவதாகும்.

தொடர்ந்து இப்னுல் கய்யூம்'' (ரஹ்) கூறுகிறார்: அத்தியாயம் நஜ்மில் 'இறங்கினார், பின்னர் நெருங்கினார்' என்ற வசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கம் என்பது ஜிப்ரீல் நெருங்கியதையும் அவர் இறங்கியதையும் குறிக்கிறது. இவ்வாறுதான் ஆயிஷா, இப்னு மஸ்வூத் (ரழி) ஆகியோரும் கூறுகிறார்கள். குர்ஆனின் இவ்வசனத்தின் முன் பின் தொடரும் இக்கருத்தையே உறுதிபடுத்துகிறது. 'மிஃராஜ்' தொடர்பான ஹதீஸில் வந்துள்ள 'தனா ஃபததல்லா' என்பது அல்லாஹ் நெருங்கியதைக் குறிப்பிடுகிறது. அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பற்றி 'நஜ்ம்' அத்தியாயத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஸித்ரத்துல் முன்தஹாவிற்கு அருகில் அவர் அவரைப் பார்த்தார் என்று 'நஜ்ம்' அத்தியாயத்தில் உள்ள வசனம் நபி (ஸல்) வானவர் ஜிப்ரயீலை அங்கு பார்த்ததையே குறிப்பிடுகின்றது. நபி (ஸல்) ஜிப்ரயீலை அவரது முழு உருவத்தில் இருமுறை பார்த்தார்கள். ஒன்று பூமியிலும், மற்றொன்று ஸித்ரத்துல் முன்தஹாவிற்கு அருகிலுமாகும். (இத்துடன் இப்னுல் கய்ம்மின் கூற்று முடிகிறது.) (ஜாதுல் மஆது. மேலும் விவரங்களுக்கு பார்க்க, புகாரி 1:50, 455, 456, 470, 471, 481, 545, 550. 2:284. முஸ்லிம் 1:91-96)

நபி (ஸல்) அவர்களின் இருதயம் இப்பயணத்திலும் பிளக்கப்பட்டது என்று சில அறிவிப்புகளில் வந்துள்ளது. மேலும், இப்பயணத்தில் நபி (ஸல்) பலவற்றைக் கண்டார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு பாலும், மதுவும் வழங்கப்பட்டது. நபி (ஸல்) பாலை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதற்கு ''நீங்கள் இயற்கை நெறிக்கு வழிகாட்டப்பட்டீர்கள். நீங்கள் மதுவை எடுத்திருந்தால் உங்களது சமுதாயத்தினர் வழிகெட்டிருப்பார்கள்'' என்று கூறப்பட்டது.

ஸித்ரத்துல் முன்தஹாவின் வேரிலிருந்து நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு ஆறுகள் வெளிரங்கமானது. இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது, வெளிரங்கமான இரண்டு ஆறுகள் நீல் (நைல்), ஃபுராத் ஆகும். இவ்விரண்டின் பிறப்பிடம் அங்கிருந்துதான் உருவாகிறது. மற்ற உள்ரங்கமான இரண்டு ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ள ஆறுகளாகும். நீல், ஃபுராத் நதிகளை நபி (ஸல்) பார்த்தது, 'இவ்விரு பகுதிகளிலும் இஸ்லாம் பரவும்' என்பதற்கு ஒரு முன்னறிவிப்பாக இருக்கலாம். (இரகசியங்களை அல்லாஹ்வே மிக அறிந்தவனாக இருக்கின்றான்.)

நரகத்தின் காவலாளியைப் பார்த்தார்கள். அவர் சிரிப்பதே இல்லை. முகமலர்ச்சியும் புன்முறுவல் என்பதும் அவரிடம் காணமுடியாத ஒன்று. அவரது பெயர் மாலிக்.

மேலும், சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்தார்கள்.

அனாதைகளின் சொத்துகளை அநியாயமாகப் பயன்படுத்திக் கொண்டவர்களைப் பார்த்தார்கள். அவர்களுடைய உதடுகள் ஒட்டகங்களின் உதடுகளைப் போன்று இருந்தது. அம்மிக் குழவிகளைப் போன்ற நெருப்புக் கங்குகளை அவர்களது வாயில் தூக்கி எறியப்படவே அது அவர்களின் பின் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது.

வட்டி வாங்கி வந்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களது வயிறு மிகப் பெரியதாக இருந்ததால் அவர்கள் தங்களது இடங்களிலிருந்து எந்தப் பக்கமும் திரும்ப சக்தியற்றவர்களாக இருந்தனர். ஃபிர்அவ்னின் குடும்பத்தாரை நரகத்தில் கொண்டு வரப்படும்போது அவர்கள் இவர்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள் இவர்களை மிதித்தவர்களாகச் செல்வார்கள்.

விபசாரம் செய்தவர்களையும் பார்த்தார்கள். அவர்களுக்கு முன் கொழுத்த நல்ல இறைச்சித் துண்டும் இருந்தது. அதற்கருகில் துர்நாற்றம் வீசும் அருவெறுப்பான மெலிந்த இறைச்சித் துண்டும் இருந்தது. அவர்கள் இந்த துர்நாற்றம் வீசும் இறைச்சித் துண்டையே சாப்பிடுகின்றனர். நல்ல கொழுத்த இறைச்சித் துண்டை விட்டுவிடுகின்றனர்.

பிற ஆண்கள் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு, அதை தங்களது கணவன் மூலம் பெற்ற குழந்தை என்று கூறும் பெண்களையும் பார்த்தார்கள். இத்தகைய பெண்கள் மார்பகங்கள் கட்டப்பட்டு அதில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.

நபி (ஸல்) மிஃராஜ் போகும்போதும் வரும்போதும் மக்காவாசிகளின் வியாபாரக் கூட்டத்தை வழியில் பார்த்தார்கள். அவர்களின் ஓர் ஒட்டகம் தவறி இருந்தது. அவர்களுக்கு நபி (ஸல்) அதை காண்பித்துக் கொடுத்தார்கள். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களின் மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலிருந்து தண்ணீரை அருந்திவிட்டு மீண்டும் அப்பாத்திரத்தை அவ்வாறே மூடி வைத்து விட்டார்கள். அன்று இரவு விண்வெளிப் பயணம் முடித்து திரும்பிய நபி (ஸல்), காலையில் மக்களுக்கு இப்பிரயாணக் கூட்டத்தைப் பற்றிக் கூறியது நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் உண்மை என்பதற்குரிய மிகப்பெரியஆதாரமாக அமைந்தது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

இப்னுல் கய்யூம்'' (ரஹ்) கூறுகிறார்: காலையில் நபி (ஸல்) தங்களது கூட்டத்தாரிடம் அல்லாஹ் தனக்குக் காண்பித்த மாபெரும் அத்தாட்சிகளை அறிவித்தார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் முன்பைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்களுக்கு நோவினையும், தொந்தரவும் கொடுத்து அவர்களை 'பெரும் பொய்யர்' என்று வருணித்தனர். ''உங்களது பயணம் உண்மையானதாக இருந்தால் எங்களுக்கு பைத்துல் முகத்தஸின் அடையாளங்களைக் கூறுங்கள்'' என்று கேட்டனர். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் கண்முன் பைத்துல் முகத்தஸைக் காண்பிக்கவே நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் கேட்ட அடையாளங்களை அப்படியே கூறினார்கள். அதில் எதையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் போகும் வழியில் சந்தித்த வியாபாரக் கூட்டத்தையும், அது எப்போது மக்காவிற்கு வரும் என்பதையும், அவர்களது காணாமல்போன ஒட்டகத்தைப் பற்றியும் மக்காவாசிகளுக்கு அறிவித்தார்கள். நபி (ஸல்) எவ்வாறு கூறினார்களோ அனைத்தும் அவ்வாறே இருந்தன. இருப்பினும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள் நிராகரிக்கவே செய்தனர். சத்தியத்தை விட்டும் வெகுதூரம் விலகியே சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)

மக்கள் இந்நிகழ்ச்சியை பொய்யென்று மறுத்துக் கூறியபோது அபூபக்ர் (ரழி) இந்நிகழ்ச்சியை உண்மையென்றும், சத்தியமென்றும் ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களை 'சித்தீக்' (வாய்மையாளர்) என்று அழைக்கப்பட்டது. (இப்னு ஹிஷாம்)
இந்த வானுலகப் பயணம் நடைபெற்றதற்குரிய மகத்தான காரணத்தைப் பற்றிக் கூறும்போது மிக சுருக்கமாக ''நாம் நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே'' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன். அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ளியிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கியவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:1)

இது நபிமார்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் நியதியாகும். பல இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்திருக்கிறான்.

இப்றாஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்முடைய) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம். (அல்குர்ஆன் 6:75)

நபி மூஸா (அலை) அவர்களைப் பற்றி,

(இவ்வாறு இன்னும்) நம்முடைய பெரியஅத்தாட்சிகளை உங்களுக்கு நாம் காண்பிப்போம். (அல்குர்ஆன் 20:23)

என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஏன் அத்தாட்சிகளைக் காண்பித்தான் என்பதற்கு ''அவர் நம்மை உறுதிகொண்டவர்களில் ஒருவராக ஆகவேண்டும் என்பதற்காக'' என்ற காரணத்தைக் கூறுகிறான். இறைத் தூதர்களுக்கு இவ்வாறு பல அத்தாட்சிகளை அல்லாஹ் காண்பித்ததால் அவர்களது உள்ளத்திலிருந்த நம்பிக்கை மேன்மேலும் உறுதியடைந்தது. ஆகவே தான், அல்லாஹ்வின் பாதையில் பிறரால் சகித்துக்கொள்ள முடியாததை இறைத்தூதர்களால் சகித்துக்கொள்ள முடிந்தது. உலகத்தின் எவ்வளவு பெரியசக்தியாயினும் சரி. அது கொசுவின் இறக்கைக்குச் சமமாகவே அவர்களிடம் இருந்தது. சிரமங்களும் துன்பங்களும் எவ்வளவுதான் அவர்களுக்கு ஏற்பட்டாலும், அதை அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.

இப்பயணத்தில் மறைந்திருக்கும் ஞானங்களையும் இரகசியங்களையும் மார்க்க சட்டங்களின் இரகசியங்களை பற்றி விவரிக்கும் நூல்களில் காணலாம். எனினும், இப்பயணத்தில் பல உண்மைகளும் யதார்த்தங்களும் நிறைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்:

இந்த வானுலக பயண சம்பவத்தைப் பற்றி மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் 17:1-ல் மட்டும்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இந்த ஒரு வசனத்தைத் தொடர்ந்து வரும் வசனங்களில் யூதர்களின் கெட்ட செயல்கள் மற்றும் குற்றங்களைப் பற்றி அல்லாஹ் விரிவாகக் கூறுகிறான். அதன் இறுதியில் இந்தக் குர்ஆன்தான் மிகச் சரியான வழிகாட்டுகின்றது என்று கூறுகிறான். இவ்வசனங்களை ஓதுபவர் மிஃராஜ் சம்பவம், யூதர்களின் அநியாயங்கள், குர்ஆனைப் பற்றிய புகழ்ச்சி, இவற்றுக்கிடையில் என்ன தொடர்பிருக்கிறது என யோசிக்கலாம். ஆம்! உண்மையில் ஆழமான தொடர்பிருக்கிறது. அதன் விளக்கமாவது:

முஹம்மது (ஸல்) நபியாக அனுப்பப்படுவதற்கு முன் யூதர்கள்தான் மனித சமுதாயத்தை வழிநடத்தும் பொறுப்பை வகித்தனர். ஆனால், அவர்கள் செய்த அநியாயங்களின் காரணமாக அப்பொறுப்புக்கு தகுதியற்றவர்களாக ஆகிவிட்டனர்.

எனவே, அவர்களிடமிருந்து அந்தத் தகுதியை அல்லாஹ் தனது தூதருக்கு அதிவிரைவில் மாற்றப்போகின்றான். நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய இஸ்லாமிய அழைப்புப் பணியின் இரு மையங்களான மக்காவையும், ஃபலஸ்தீனையும் நபி (ஸல்) அவர்களுக்கு ஒருங்கே அருள இருக்கின்றான். மோசடி, குற்றம், வரம்பு மீறுதல் ஆகியவற்றையே தங்களது குலத்தொழிலாகக் கொண்ட சமூகத்திடமிருந்து ஆன்மிக வழிகாட்டலின் தலைமைத்துவத்தை பறித்து நன்மைகளையே நோக்கமாகக் கொண்ட சமுதாயத்திற்கு அல்லாஹ் அருள இருக்கின்றான் என்பதை நபி (ஸல்) அவர்களை மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்நிகழ்ச்சி உறுதி செய்தது.

மக்காவின் தெருக்களிலும் மலை ஓரங்களிலும் விரட்டியடிக்கப்பட்டு கண்ணியமிழந்து சுற்றி வரும் ஒருவருக்கு இந்தத் தலைமைத்துவம் எப்படிக் கிடைக்கும்? அதாவது, இஸ்லாமிய அழைப்புப் பணியின் முதல் கட்டமான இந்த சிரமமான காலம் வெகு விரைவில் முடிந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய காலக்கட்டம் தொடரப்போகிறது என்பதையே நபி (ஸல்) அவர்களின் இந்நிகழ்ச்சி குறிப்பிடுகிறது. இதையே பின்வரும் வசனங்களும் உறுதி செய்கின்றன. அவ்வசனங்களில் அல்லாஹ் இணைவைப்பவர்களை மிகத் தெளிவாகவும் கடுமையாகவும் எச்சரிக்கை செய்கிறான்.

ஓர் ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நாம் ஏவுகிறோம். அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம்முடைய வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.

நூஹுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழித்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை அறிந்து கொள்வதற்கு உங்களது இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் தேவையில்லை.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:16, 17)

இதுநாள்வரை நிராகரிப்போருக்கு அவகாசம் தரப்பட்டது. அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் செய்த அநீதிகளை அல்லாஹ் பொறுத்து வந்தான். ஆனால், இனியும் அவர்கள் இத்தகைய தவறுகளிலிருந்து விலகாவிட்டால் அல்லாஹ் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பான் என்ற எச்சரிக்கை மேற்கூறிய வசனத்திலிருந்து தெரியவருகின்றது.

இதைத் தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்திற்கு அடிப்படையான கொள்கைகள், ஒழுக்கங்கள், கலாச்சாரங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதையும் விரிவாக விளக்குகிறான். முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தனி நாட்டையும் அதிகாரத்தையும் கொடுக்கும்போது அவர்களது சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களையெல்லாம் அல்லாஹ் கூறுவது போன்றே இருக்கின்றது. மேலும், வெகு விரைவில் நபி (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தையும், உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இஸ்லாமிய அழைப்புப் பணியை விரிவாக்குவதற்கு ஒரு மையத்தையும் அல்லாஹ் தர இருக்கிறான் என்பதை இந்த நிகழ்ச்சி சுட்டிக் காட்டுகிறது.

இந்தக் காரணங்களின் அடிப்படையில்தான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயண நிகழ்ச்சி மக்கா வாழ்க்கையின் இறுதியில் நடைபெற்றது. இதுவே ஏற்றமான, சரியான சொல் என்று நாம் கூறுகிறோம். அகபாவில் நடைபெற்ற முதல் ஒப்பந்தத்திற்கு முன் அல்லது முதலாவது இரண்டாவது ஒப்பந்தங்களுக்கிடையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பின்வரும் பக்கங்களில் அந்த ஒப்பந்தங்களின் விவரங்களைப் பார்ப்போம்.

அகபாவில் முதல் ஒப்பந்தம்

மதீனாவைச் சேர்ந்த ஆறு நபர்கள் நபித்துவத்தின் பதினொறாவது ஆண்டு ஹஜ்ஜுடைய காலத்தில் நபி (ஸல்) அவர்களின் கையில் இஸ்லாமைத் தழுவி, நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை தங்கள் கூட்டத்தாருக்கும் தெரிவிப்போம் என்று வாக்குக் கொடுத்திருந்தனர். இந்நிகழ்ச்சியைப் பற்றி இதற்கு முன்பே நாம் கூறியிருக்கிறோம்.

இதை அடுத்து நபித்துவத்தின் பனிரெண்டாம் ஆண்டு ஹஜ் காலத்தில் (கி.பி. 621 ஜூலையில்) மதீனாவிலிருந்து நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்வதற்காக 15 நபர்கள் வந்திருந்தனர். முந்தைய ஆண்டு வந்த ஆறு நபர்களில் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஆபைத் தவிர மற்ற ஐந்து பேர்களும், அவர்களுடன் புதிதாக ஏழு நபர்களும் இச்சமயம் வந்திருந்தனர். அந்த ஏழு நபர்களில் முந்திய ஐந்து பேர் கஸ்ரஜ் கிளையையும் பிந்திய இருவர் அவ்ஸ் கிளையையும் சேர்ந்தவர்கள்.

1) முஆத் இப்னு ஹாரிஸ் (ரழி) - நஜ்ஜார் குடும்பம்.

2) தக்வான் இப்னு அப்துல் கைஸ் (ரழி) - ஜுரைக் குடும்பம்.

3) உபாதா இப்னு ஸாமித் (ரழி) - கன்ம் குடும்பம்.

4) யஜீது இப்னு ஸஃலபா (ரழி) -கன்ம் குடும்ப நண்பர்களில் ஒருவர்.

5) அப்பாஸ் இப்னு உபாதா இப்னு நழ்லா (ரழி) - ஸாலிம் குடும்பம்.

6) அபுல் ஹைஸம் இப்னு தய்ம்ஹான் (ரழி) -அப்துல் அஷ்ஹல் குடும்பம்.

7) உவைம் இப்னு ஸாம்தா (ரழி) - அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பம்.

இவர்கள் அனைவரும் மினாவில் 'அகபா' என்ற இடத்திற்கு அருகில் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்தார்கள். (இப்னு ஹிஷாம்)

நபியே! நம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம் வந்து, ''அல்லாஹ்வுக்கு யாதொன்றையும் இணைவைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபசாரம் செய்வதில்லை என்றும், தங்கள் (பெண்) சந்ததிகளைக் கொலை செய்வதில்லை'' என்றும், ''தங்களுடைய கை கால்கள் அறிய (அதாவது: பொய்யெனத் தெரிந்தே) கற்பனையாக அவதூறு கூறுவது இல்லை'' என்றும், உங்களிடம் (பைஅத்து கொடுத்து) வாக்குறுதி செய்தால், அவர்களுடைய வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டு, நீங்கள் அவர்களுக்காக (முன்னர் அவர்கள் செய்துவிட்ட குற்றங்களுக்காக) அல்லாஹ்விடத்தில் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 60:12)

என்ற இந்த வசனத்திற்கேற்பவே நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் செய்தார்கள்.

உபாதத் இப்னு ஸாமித் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''வாருங்கள்! நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. திருடக்கூடாது. விபசாரம் செய்யக் கூடாது. உங்களின் பிள்ளைகளை கொலை செய்யக்கூடாது. அவதூறு கூறக்கூடாது. நன்மையில் எனக்கு மாறு செய்யக்கூடாது என்று என்னிடம் நீங்கள் இஸ்லாமிய ஒப்பந்தம் செய்து தாருங்கள். உங்களில் யார் இந்த உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவான். யார் சில குற்றங்களை செய்து அதற்காக உலகிலேயே தண்டிக்கப் படுவாரோ அத்தண்டனையே அவர் பாவத்தைப் போக்கிவிடும். ஒருவர் குற்றம் செய்து அந்த குற்றத்தை அல்லாஹ் மறைத்துவிட்டால் அது அல்லாஹ்வின் விருப்பத்திற்குட்பட்டது. அவன் விரும்பினால் அவரைத் தண்டிக்கலாம் அல்லது மன்னிக்கலாம்.'' நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறி முடித்தபின் நாங்கள் அதை ஏற்றுக் கொண்டோமென்று நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தோம். (ஸஹீஹுல் புகாரி)
மதீனாவில் அழைப்பாளர்

மேற்கூறப்பட்ட ஒப்பந்தம் நல்லமுறையில் முடிந்தது. ஹஜ்ஜுடைய காலங்கள் கழிந்தப்பின் ஒப்பந்தம் செய்து கொடுத்தவர்களுடன் நபி (ஸல்) தனது முதல் இஸ்லாமிய அழைப்பாளரை மதீனாவிற்கு அனுப்பினார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்புவதற்கும் மார்க்க ஞானங்களை கற்றுக் கொடுப்பதற்காகவும் இந்த அழைப்பாளர் அனுப்பப்பட்டார். இப்பணிக்காக முதலாவதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவரான முஸ்அப் இப்னு உமைர் அல் அப்த (ரழி) என்ற வாலிபரை நபி (ஸல்) தேர்ந்தெடுத்தார்கள்.

மகிழ்ச்சி தரும் வெற்றி

முஸ்அப் இப்னு உமைர், அஸ்அது இப்னு ஜுராரவின் வீட்டில் தங்கினார். 'அல்முக்' (குர்ஆனின் ஞானமுடையவர்) என்று முஸ்அப் முஸ்லிம்களால் கண்ணியமாக அழைக்கப்பட்டார். முஸ்அபும் அஸ்அதும் சேர்ந்து மதீனாவாசிகளிடையே மிக உற்சாகத்துடன் இஸ்லாமைப் பரப்பினார்கள்.

முஸ்அப் (ரழி) அழைப்புப் பணியில் நல்லதொரு முன்னேற்றம் கண்டார். பல சாதனைகள் படைத்தார் என்பதற்குரிய சான்றுகளில் ஒன்று: ஒரு நாள் அஸ்அத் இப்னு ஜுராரா (ரழி) முஸ்அபை அழைத்துக் கொண்டு அப்துல் அஷ்ஹல், ளஃபர் ஆகிய கோத்திரத்தார்களின் இல்லங்களுக்குச் சென்றார். வழியில் ளஃபர் கோத்திரத்தாரின் தோட்டத்திற்குள் சென்று 'மரக்' என்ற கிணற்றுக்கருகில் அமர்ந்தனர். அவர்களுடன் பல முஸ்லிம்களும் அங்கு சேர்ந்து கொண்டனர். ஸஅது இப்னு முஆத் என்பவரும் உஸைத் இப்னு ஹுழைர் என்பவரும் அதுவரை இஸ்லாமை ஏற்காமல் இணைவைப்பில்தான் இருந்தனர். இவ்விருவரும் தங்களின் கூட்டத்தினருக்குத் தலைவர்களாக இருந்தனர். முஸ்அபும், அஸ்அதும் தங்களின் தோட்டங்களில் அமர்ந்திருக்கின்றனர் என்று கேள்விப்பட்டவுடன் ஸஅத், உஸைதிடம் ''நீ நமது எளியோர்களை ஏமாற்றும் இந்த இருவரிடமும் சென்று, அவர்களை எச்சரிக்கை செய்! நமது வீடுகளுக்கு அவர்கள் வரக்கூடாது என்று தடுத்துவிடு! நான் அவர்களிடம் கூற முடியாததற்குக் காரணம் அஸ்அத் இப்னு ஜுராரா எனது சிறிய தாயின் மகனாவார். இந்த உறவு மட்டும் இல்லாதிருந்தால் நானே இக்காரியத்தை செய்திருப்பேன்'' என்று கூறினார்.

இதைக் கேட்ட உஸைத் தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு இருவரையும் நோக்கி விரைந்து வந்தார். இதைப் பார்த்துவிட்ட அஸ்அத் இப்னு ஜுராரா தனது நண்பர் முஸ்அபிடம் ''இதோ தனது கூட்டத்தின் தலைவர் வருகிறார். நீங்கள் அவரிடம் அல்லாஹ்வுக்காக உண்மையானவற்றைக் கூறிவிடுங்கள்!'' என்று கூறவே அதற்கு முஸ்அப், ''அவர் என்னுடன் அமர்ந்தால் நான் அவருடன் பேசுவேன்'' என்று கூறினார்.

அங்கு வந்த உஸைத் அவருக்கருகில் நின்றுகொண்டு ''நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்! எங்களில் எளியோர்களை ஏமாற்றவா? உங்களுக்கு உயிரின் மீது ஆசை இருந்தால் இங்கிருந்து சென்று விடுங்கள்'' என்று கோபமாகப் பேசினார். அதற்கு முஸ்அப் அவரிடம் ''நீங்கள் அமர்ந்து நான் சொல்வதைக் கேளுங்கள்! உங்களுக்கு விருப்பமாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்! நீங்கள் விரும்பாவிட்டால் விட்டுவிடுங்கள்!'' என்று கூறவே உஸைத் ''நீங்கள் சொல்வது சரிதான்!'' என்று கூறித் தனது ஈட்டியை நட்டுவைத்து அதற்கருகில் உட்கார்ந்து கொண்டார்.

முஸ்அப் (ரழி) உஸைதுக்கு இஸ்லாமின் விளக்கங்களை கூறி குர்ஆனை ஓதிக் காட்டினார்கள். இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் போதே உஸைதின் முகத்தில் மாற்றத்தை, அதாவது, இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை அனைவரும் கண்டனர். இதைக் கேட்டதற்குப் பிறகு உஸைத் ''ஆஹா! இது எவ்வளவு அழகிய உரைநடையாக இருக்கின்றது. இம்மார்க்கத்தில் சேர விரும்பினால் நான் என்ன செய்ய வேண்டும்'' என்று கேட்டார். அதற்கு அவ்விருவரும் ''நீங்கள் குளித்து, தூய்மையான ஆடை அணிந்து 'லாஇலாஹஇல்லல்லாஹ்' என மொழிந்து, பிறகு இரண்டு ரக்அத் தொழ வேண்டும்'' என்று கூறினார்கள். உஸைத் எழுந்துச் சென்று குளித்து, தூய்மையான ஆடை அணிந்துகொண்டு இஸ்லாமை ஏற்று, இரண்டு ரகஅத் தொழுதார். பிறகு கூறினார் ''எனக்குப் பிறகு ஒருவர் இருக்கிறார். அவரும் உங்களைப் பின்பற்றி உங்களது மார்க்கத்தை ஏற்றுக் கொண்டால் அவரது கூட்டத்தினர் அனைவரும் உங்களை ஏற்றுக் கொள்வார்கள். அவர்தான் ஸஅது இப்னு முஆத். அவரை உங்களுக்கு நான் காட்டுகிறேன்'' என்று கூறினார். பிறகு தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு ஸஅது இப்னு முஆதிடம் சென்றார். ஸஅது தனது கூட்டத்தாருடன் சபையில் அமர்ந்திருந்தார்.

உஸைதை பார்த்த ஸஅது ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவரது முகத்தில் ஏதோ மாற்றம் தெரிகிறது. இங்கிருந்து செல்லும்போதிருந்த அவருடைய முகம் அவர் திரும்ப வரும்போது இல்லையே'' என்று கூறினார்.

சபையில் வந்துநின்ற உஸைதிடம் ''உஸைதே! அங்கு சென்று என்ன செய்தாய்?'' என்று ஸஅத் கேட்டார். அதற்கு உஸைத், தான் இஸ்லாமைத் தழுவியதை வெளிப்படுத்தாமல் ''நான் அவ்விருவரிடமும் பேசினேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவ்விருவரிடமும் எந்தத் தவறையும் நான் காணவில்லை. இருப்பினும் நான் அவர்களை அவர்களது செயல்களிலிருந்து தடுக்கவும் செய்தேன். அதற்கு அவ்விருவரும் எனது விருப்பத்திற்கேற்ப நடந்துகொள்வதாக கூறினார்கள்'' என்றார்.

மேலும், ''ஹாஸா கூட்டத்தார் உங்களுடன் உள்ள உடன்படிக்கையை முறிக்க வேண்டும் என்பதற்காகவே உங்கள் சிறிய தாயின் மகனான அஸ்அதை கொலை செய்யச் சென்றிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது.'' என்று ஸஅதிடம் உஸைத் கூறினார். இதைக் கேட்டவுடன் ஸஅத் சினமடைந்தவராக தனது ஈட்டியை எடுத்துக்கொண்டு அவ்விருவரிடம் வந்தார்.

அவ்விருவரும் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்து உஸைத் கூறிய நோக்கத்தைப் ஸஅது புரிந்துகொண்டார். இவர்களின் பேச்சை நான் கேட்க வேண்டுமென்பதற்காகத்தான் உஸைத் இவ்வாறு செய்திருக்கிறார் என்று ஸஅத் விளங்கிக் கொண்டார். அவர்களுக்கருகில் நின்றுகொண்டு அஸ்அத் இப்னு ஜுராராவைப் பார்த்து ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அபூ உமாமாவே! உனக்கும் எனக்கும் உள்ள உறவின் காரணத்தால்தான் நீ இவ்வாறு செய்வதற்கு துணிந்திருக்கிறாய்! உனக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும்!! எங்களது வீட்டிற்கு வந்து எங்களுக்கு விருப்பமற்ற முறையில் நடந்து கொள்கிறாயா?'' என்று கேட்டார்.

அஸ்அத் இப்னு ஜுராரா இதற்கு முன்பு ஸஅத் இப்னு முஆதைப் பற்றி முஸ்அபிடம் கூறியிருந்தார். அதாவது முஸ்அபே! நம்மிடம் வருகிற இவர் தனது கூட்டத்தின் தலைவர். இவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் இவரது சமூகத்தினர் அனைவரும் ஒருவர் கூட பின்வாங்காமல் இஸ்லாமை ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறியிருந்தார். முஸ்அப் (ரழி) அவர்கள் அமைதியாக ''ஸஅதே! அமர்ந்து நான் கூறுவதைக் கேட்க மாட்டீர்களா? உங்களுக்கு நாங்கள் கூறுவது பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு நாங்கள் கூறுவது வெறுப்பாக இருந்தால் உங்களுக்கு விருப்பமற்றதிலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம்'' என்று கூறினார். சரி! என்று கூறி தனது ஈட்டியை நட்டுவைத்து ஸஅத் அமர்ந்துகொண்டார். முஸ்அப் (ரழி) அவருக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்திக் குர்ஆனை ஓதிக் காட்டினார். அடுத்து ஸஅத் பேசத் துவங்கும் முன்பே அவரது முகத்தில் இஸ்லாம் பிரகாசிப்பதை அனைவரும் கண்டனர்.

பிறகு ஸஅது, இஸ்லாமை ஏற்றுக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டுமென்று வினவினார். குளித்து, தூய்மையான ஆடை அணிந்து, 'லாஇலாஹஇல்லல்லாஹ்' எனக் கூறி இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்று கூறினார்கள். உடனே அவரும் அவ்வாறே செய்தார். பிறகு தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு தனது சமூகத்தினர் அமர்ந்திருந்த சபைக்கு வந்தார். அவரைப் பார்த்த அவரின் சமூகத்தினர் ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவரது முகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது'' என்று பேசிக்கொண்டனர்.

ஸஅத் சபைக்கருகில் வந்து ''அப்துல் அஷ்ஹல் கிளையினரே! என்னைப் பற்றி உங்களது கருத்தென்ன?'' என்று கேட்டார். அதற்கவர்கள் ''நீங்கள் எங்கள் தலைவர் எங்களில் சிறந்த அறிவாளி; எங்களில் மிக பாக்கியம் பெற்றவர்'' என்று கூறினர். அப்போது அவர் ''நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கும் வரை நான் உங்களில் எந்த ஆண்களிடமும், பெண்களிடமும் பேசமாட்டேன்'' என்று கூறினார். அன்று மாலைக்குள் அவரது கூட்டத்தினரில் உஸைம் என்பவரைத் தவிர அனைத்து ஆண்களும் பெண்களும் முஸ்லிமாகிவிட்டனர். உஸைம் உஹுத் போர் நடந்தபோதுதான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். தொழும் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாகவே போரில் கலந்துகொண்டு வீர மரணம் அடைந்தார். இதனால் அவரைப் பற்றி ''மிகக் குறைவாக அமல் செய்தார். ஆனால், அதிகமான நன்மையை அடைந்து கொண்டார்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அஸ்அத் இப்னு ஜுராராவின் வீட்டில் தங்கி முஸ்அப் (ரழி) இஸ்லாமின் அழைப்புப் பணியை செய்து கொண்டிருந்தார். மதீனாவாசிகளில் பெரும்பாலானவர்களின் இல்லங்களில் இஸ்லாம் நுழைந்திருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ஆண்களும் பெண்களுமாக பலர் இஸ்லாமைத் தழுவியிருந்தனர். ஆனால், உமைய்யா இப்னு ஜைத், கத்மா, வாயில் ஆகிய குடும்பத்தினர் மட்டும் இஸ்லாமை ஏற்கவில்லை. இவர்கள் அவர்களது இனத்தைச் சேர்ந்த 'கைஸ் இப்னு அல் அஸ்வத்' என்ற பிரபல கவிஞன் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவர் அம்மக்களை இஸ்லாமை ஏற்கவிடாமல் தடுத்திருந்தார். ஆனால், அவர்களும் பிற்காலத்தில் கந்தக் யுத்தம் (அகழ் போர்) நடைபெற்ற ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு இஸ்லாமைத் தழுவினர்.

நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு ஹஜ்ஜுடைய காலம் தொடங்கும் முன்பே மாபெரும் சாதனை! வெற்றி!! என்ற நற்செய்தியை எடுத்துக்கொண்டு முஸ்அப் (ரழி) மக்கா திரும்பினார். நபி (ஸல்) அவர்களிடம் மதீனாவாசிகளின் செய்திகள், அவர்களின் சிறந்த பண்புகள், அவர்களுக்கு இருக்கும் ஆற்றல்கள், மன உறுதி ஆகியவற்றை விவரமாக எடுத்துக் கூறினார். (இப்னு ஹிஷாம்)

அகபாவில் இரண்டாவது ஒப்பந்தம்

நபித்துவத்தின் 13 ஆம் ஆண்டு (கி.பி. 622 ஜூன் திங்கள்) ஹஜ்ஜுடைய காலத்தில் ஹஜ்ஜுக்காக மதீனாவாசிகளில் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் கலந்து, எழுபதுக்கும் அதிகமானோர் மக்கா வந்தனர். மதீனாவில் இருக்கும்போது அல்லது மக்காவிற்கு வரும் வழியில் இந்த முஸ்லிம்கள் இவ்வாறு பேசிக் கொண்டனர். ''மக்காவின் மலைப்பாதைகளில் சுற்றித் திரிந்து கொண்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்டு மக்களை அஞ்சிய நிலையில் வாழ்ந்து வர நபி (ஸல்) அவர்களை நாம் எதுவரை விட்டு வைத்திருப்பது?'' மதீனாவாசிகளின் இந்த உணர்ச்சிமிக்க பேச்சிலிருந்து நபி (ஸல்) அவர்களை மதீனாவிற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்ற ஆசை அவர்களது உள்ளத்தில் இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இவர்கள் அனைவரும் மக்கா வந்து சேர்ந்தனர். பிறகு அதிலிருந்த முஸ்லிம்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையில் இரகசியமான முறையில் சந்திப்புகள் பல நடந்து கொண்டிருந்தன. இறுதியாக, ஹஜ்ஜுக் கடமைகளை முடித்து மினாவில் முதல் ஜம்ராவுக்கு அருகிலுள்ள அகபாவில் பிறை 12ம் நாள் நள்ளிரவில் சந்திப்போமென்று நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் முடிவு செய்தனர். சிலை வழிபாட்டிற்கும் இஸ்லாமிற்கும் நடந்த போராட்டத்தில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்த வரலாற்று பிரசித்திமிக்க இந்த சந்திப்பைப் பற்றி அன்சாரிகளின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய கஅப் இப்னு மாலிக் (ரழி) விவரிப்பதை நாம் பார்ப்போம்:

''நாங்கள் ஹஜ் செய்ய மக்காவிற்கு வந்திருந்தோம். ஹஜ் முடிந்த இரண்டாவது தினத்தில் அகபாவில் சந்திக்கலாம் என்று நபி (ஸல்) அவர்களிடம் பேசி முடிவு செய்தோம். அதன்படி நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க நாங்கள் தயாரானோம். அப்போது எங்களுடன் எங்களின் தலைவர்களில் சிறப்புமிக்க ஒருவரான 'அபூஜாபிர்' எனப்படும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஹராம் என்பவரையும் உடன் அழைத்துக் கொண்டோம். எங்களுடன் வந்தவர்களில், அதுவரை இஸ்லாமை ஏற்காமல் இருந்தவர்களுக்கு நாங்கள் இதைப் பற்றி எதையும் கூறவில்லை. அபூஜாபிருக்கு நாங்கள் இஸ்லாமைப் பற்றி விளக்கம் கொடுத்தோம். ''அபூஜாபிரே! நீங்கள் எங்களின் தலைவர்களில் ஒருத்தர். எங்களில் மிகவும் மதிப்புமிக்கவர்களில் நீங்களும் ஒருத்தர். நீங்கள் நாளை நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவதை நாங்கள் விரும்பவில்லை'' என்று கூறி இஸ்லாமை ஏற்க அழைப்பு கொடுத்தோம். நாங்கள் நபி (ஸல்) அவர்களை அகபாவில் சந்திக்க இருக்கிறோம் என்பதையும் கூறினோம். அவர் எங்களின் அழைப்பை ஏற்று இஸ்லாமைத் தழுவி எங்களுடன் அகபா ஒப்பந்தத்திலும் கலந்து கொண்டார். பிறகு நியமிக்கப்பட்ட 12 தலைவர்களில் இவரும் ஒருவராவார்.

தொடர்ந்து கஅப் (ரழி) கூறுகிறார்: அன்றிரவு நாங்கள் எங்களது கூடாரங்களில் எங்களது கூட்டத்தினருடன் தங்கியிருந்துவிட்டு இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிந்த பின் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக இரகசியமாக வெளியாகி அகபாவிற்கு அருகிலுள்ள கணவாயில் ஒன்று சேர்ந்தோம். நாங்கள் ஆண்களில் 73 பேரும், பெண்களில் மாஜின் குடும்பத்தைச் சேர்ந்த 'உம்மு உமாரா' என்ற நுஸைபா பின்த் கஅப் என்பவரும், ஸலமா குடும்பத்தைச் சேர்ந்த 'உம்மு மனீஃ' என்ற அஸ்மா பின்த் அம்ர் என்பவரும் கலந்துகொண்டனர்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்து அக்கணவாயில் கூடினோம். நபி (ஸல்) அவர்களுடன் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபும் வந்தார்கள். அந்நேரத்தில் அவர் முஸ்லிமாக இல்லை. எனினும், தனது அண்ணன் மகனுடைய செயல்பாடு மற்றும் நடைமுறைகளை சரிவரத் தெரிந்து கொள்வதற்காகவும் அவருக்காக அன்சாரிகளிடம் உறுதிமொழி வாங்குவதற்காகவும் அங்கு வந்திருந்தார். அவரே குழுமியிருந்தவர்களில் முதலாவதாகப் பேசத் தொடங்கினார்.'' (இப்னு ஹிஷாம்)

உரையாடலின் தொடக்கமும் அப்பாஸின் விளக்கமும்

அனைவரும் சபையில் ஒன்று கூடியபின் மார்க்க ரீதியான மற்றும் நபி (ஸல்) அவர்களை பாதுகாப்பது தொடர்பான ஒப்பந்தங்களை உறுதிப்படுத்துவதற்காக பேச்சுவார்த்தைகள் தொடங்கின. முதலில் நபி (ஸல்) அவர்களது தந்தையின் சகோதரர் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் பேசினார். அவர் தனது பேச்சில் இந்த நட்பு ஒப்பந்தத்தின் விளைவாக தங்களின் தோள்களில் சுமக்க இருக்கும் பொறுப்பு எவ்வளவு ஆபத்தானது, எவ்வளவு பெரிய பின்விளைவுகளைக் கொண்டது என்பதை மிகத் தெளிவாக அன்சாரிகளுக்கு விவரித்தார். இதோ அப்பாஸ் அவர்களின் பேச்சின் சுருக்கம்:

''கஸ்ரஜ் கூட்டத்தினரே! நிச்சயமாக முஹம்மது எங்களிடம் எவ்வாறு இருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்கள் கூட்டத்தில் எங்களது (ஷிர்க்-இணைவைக்கும்) கொள்கையின் மீது இருப்பவர்களிடமிருந்து நாம் அவரை இதுநாள் வரை பாதுகாத்து வந்திருக்கிறோம். அவர் எங்களது கூட்டத்தில் கண்ணியமாக, அதே நேரத்தில் அவரது ஊரில் பாதுகாப்புடனும்தான் இருக்கின்றார். எனினும், அவர் உங்களுடன் இணைந்துவிடவும், உங்களுடன் ஒன்றிவிடவும் விரும்புகிறார். நீங்கள் அவருக்கு தரும் வாக்கைக் காப்பாற்றி எதிரிகளிடமிருந்து அவரை பாதுகாப்பவர்களாக இருந்தால் அவரை அழைத்துச் செல்லலாம். இல்லை, 'நீங்கள் அவரை எதிரிகளிடம் ஒப்படைத்து விடுவீர்கள். இங்கிருந்து அழைத்துச் சென்றவுடன் கைவிட்டு விடுவீர்கள்' என்றிருப்பின் இப்போதே அவரை விட்டுவிடுங்கள். ஏனெனில், அவர் தனது கூட்டத்தினருடன் தனது ஊரில் கண்ணியத்துடனும், பாதுகாப்புடனும் தான் இருக்கின்றார்.''

அப்பாஸின் இந்த உரையாடலுக்குப் பின் கஅப் ''நீங்கள் கூறியதை நாங்கள் கேட்டு விட்டோம் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் பேசுங்கள். உங்களுக்கும் உங்களது இறைவனுக்கும் நீங்கள் விரும்பியதையெல்லாம் எங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார். (இப்னு ஹிஷாம்)

அன்சாரிகளின் உறுதியையும், வீரத்தையும், இந்த மகத்தான பொறுப்பையும், அதன் விபரீதமான பின்விளைவுகளையும் தாங்கிக் கொள்வதில் அவர்களிடம் இருந்த உறுதியையும் மனத் தூய்மையையும் இந்த பதில்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். கஅப் கூறிய பிறகு நபி (ஸல்) அவர்களின் உரையும் அதற்குப் பின் உறுதிமொழி வாங்குவதும் நடைபெற்றது.

ஒப்பந்தத்தின் அம்சங்கள்

ஜாபிர் (ரழி) இதைப்பற்றி மிக விரிவாக அறிவிக்கிறார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! எந்த விஷயங்களுக்காக நாங்கள் உங்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்ய வேண்டு''ம் என்று கேட்க அதற்கு விளக்கமாக நபி (ஸல்) கூறினார்கள்

''இன்பத்திலும் துன்பத்திலும் (கட்டளைக்கு) செவிசாய்க்க வேண்டும், கட்டுப்பட வேண்டும்

வசதியிலும் வசதியின்மையிலும் செலவு செய்ய வேண்டும்

நன்மையை ஏவ வேண்டும், தீமையைத் தடுக்க வேண்டும்

அல்லாஹ்வுக்காக நீங்கள் தியாகம் செய்யத் தயாராக வேண்டும் அல்லாஹ்வின் விஷயத்தில்

பழிப்பவர்களின் பழிப்பு உங்களைப் பாதித்து விடக்கூடாது

ஆட்சி, அதிகாரத்தைப் பெறுவதற்காக சண்டையிடக்கூடாது

நான் உங்களிடம் வந்து விட்டால் நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும். உங்களையும் உங்களது மனைவியரையும் பிள்ளைகளையும் பாதுகாப்பதைப் போல் நீங்கள் என்னைப் பாதுகாக்க வேண்டும். இதனை நீங்கள் பைஆ (இஸ்லாமிய ஒப்பந்தம்) செய்து கொடுங்கள். அல்லாஹ் உங்களுக்குச் சொர்க்கத்தைத் தருவான்.'' இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். (முஸ்னது அஹ்மது, பைஹகீ, முஸ்தத்ரகுல் ஹாகிம், இப்னு ஹிஷாம்)

இந்நிகழ்ச்சியை கஅப் (ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அதில் அவர்கள் கூறுவதாவது:

''நபி (ஸல்) எங்களிடம் பேசினார்கள் குர்ஆனை ஓதிக் காண்பித்தார்கள். அல்லாஹ்வின் பக்கம் எங்களை அழைத்தார்கள். இஸ்லாமை ஏற்றுக் கொள்வதற்கு ஆர்வமூட்டினார்கள். பிறகு நீங்கள் உங்களது மனைவிகளையும் பிள்ளைகளையும் பாதுகாப்பது போன்று என்னையும் பாதுகாக்க வேண்டும் என்று நான் உங்களிடம் உறுதிமொழி கேட்கிறேன்'' என்று கூறி முடித்தார்கள். அப்போது பராஆ இப்னு மஅரூர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடித்து ''சத்திய மார்க்கத்தைக் கொண்டு உங்களை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்களை நாங்கள் பாதுகாப்பது போன்றே உங்களையும் நிச்சயம் நாங்கள் பாதுகாப்போம்! அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் வாக்குறுதியும் ஒப்பந்தமும் பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் போரின் மைந்தர்கள். கவச ஆடை அணிந்தவர்கள். பரம்பரைப் பரம்பரையாக போர் செய்து பழக்கப்பட்டவர்கள்'' என்று வீர முழக்கமிட்டார்கள்.

இவ்வாறு பராஆ (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அபுல் ஹைசம் இப்னு தைம்ஹான் (ரழி) அவர்கள் குறுக்கிட்டு ''அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கும் யூதர்களுக்குமிடையில் சில உடன்படிக்கை உறவுகள் இருக்கின்றன. நாங்கள் அதை துண்டித்து உங்களுடன் சேர்ந்து கொள்கிறோம். பிறகு ஒரு காலத்தில் அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைக் கொடுத்துவிட்டால் நீங்கள் எங்களை விட்டுவிட்டு உங்களது கூட்டத்தனரிடம் சென்று விடுவீர்களா?'' என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் புன்முறுவல் பூத்தவர்களாக ''அவ்வாறில்லை. உங்களது உயிர் எனது உயிராகும், உங்களது அழிவு எனது அழிவாகும், நான் உங்களைச் சேர்ந்தவன். நீங்கள் என்னைச் சேர்ந்தவர்கள், நீங்கள் போர் புரிபவர்களுடன் நானும் போர் புரிவேன், நீங்கள் சமாதான உடன்படிக்கை செய்பவர்களுடன் நானும் சமாதான உடன்படிக்கை செய்து கொள்வேன்'' என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

ஒப்பந்தத்தின் பின்விளைவை உணர்த்துதல்

மேற்கூறப்பட்ட நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தைகள் முடிவுற்றது. நபித்துவத்தின் 11, 12 ஆம் ஆண்டுகளில் முதன்மையாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களில் இருவர், ஒருவர் பின் ஒருவராக எழுந்து தாங்கள் சுமந்து கொள்ளப்போகும் இந்தப் பொறுப்பு எவ்வளவு விபரீதமானது என்பதைத் தங்களது சமுதாயத்திற்கு மிக விளக்கமாக உணர்த்தினார்கள். ஏனெனில், மக்கள் இவ்விஷயத்தை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் தியாகத்திற்கு எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறார்கள் என்பதை அறிந்து உறுதிசெய்து கொள்வதற்காகவும் இவ்வாறு எடுத்துக் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்ய அனைவரும் ஒன்று சேர்ந்தபின் அப்பாஸ் இப்னு உபாதா இப்னு நழ்லா (ரழி) அவர்கள் எழுந்து ''மக்களே! இவரிடம் நீங்கள் எதற்கு வாக்குக் கொடுக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார். அதற்கு அம்மக்கள் 'அது எங்களுக்கு நன்கு தெரியும்' என்றவுடன், தொடர்ந்து அவர் ''மக்களே! நீங்கள் இவரிடம் வெள்ளையர், கருப்பர் என அனைத்து மக்களுக்கு எதிராக போர் செய்யவும் தயார் என்று வாக்கு கொடுக்கின்றீர்கள். உங்களது செல்வங்கள் அழிந்து, உங்களில் சிறப்பிற்குரியவர்கள் கொலை செய்யப்படும் போது நீங்கள் அவரை எதிரிகளிடம் ஒப்படைத்து விடுவீர்கள் என்று கருதினால் இப்போதே இவரை இங்கேயே விட்டு விடுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்தத் தவறை நீங்கள் செய்வது இம்மையிலும் மறுமையிலும் மிகப்பெரிய இழிவை உங்களுக்குத் தரும். உங்களது செல்வங்கள் அழிந்தாலும்கூட உங்களது சிறப்பிற்குரியவர்கள் கொலை செய்யப்பட்டாலும் கூட எந்த நிபந்தனைகளுடன் நீங்கள் இவரை அழைத்துச் செல்ல இருக்கிறீர்களோ அந்த நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றுவீர்கள் என்ற உறுதி உங்களுக்கு இருப்பின் இவரை நீங்கள் அழைத்துச் செல்லுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது இம்மை மறுமையின் மிகப்பெரிய நற்பாக்கியமாகும்'' என்று கூறினார்.

அதற்கு அம்மக்கள் ''செல்வங்கள் அழிந்தாலும் சிறப்பிற்குரியவர்கள் கொலை செய்யப்பட்டாலும் நாங்கள் இவரை அரவணைத்துக் கொள்வோம் கைவிட்டுவிட மாட்டோம். இதே நிபந்தனைகளின் பேரில்தான் இவரை அழைத்துச் செல்கிறோம். நாங்கள் இந்த நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றினால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''சொர்க்கம் கிடைக்கும்'' என்று கூறினார்கள். உடனே அந்த மக்கள் உங்களது ''கையை நீட்டுங்கள்'' என்று கூற நபி (ஸல்) அவர்கள் கையை நீட்டியவுடன் அனைவரும் இஸ்லாமிய ஒப்பந்தம் செய்து கொடுத்தார்கள். (இப்னு ஹிஷாம்)

ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் 'பைஆ' செய்ய எழுந்தபோது, முதலாவதாக எங்களில் மிகக் குறைந்த வயதுடைய அஸ்அது இப்னு ஜுராரா நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு பின்வருமாறு கூறினார்:

''மதீனாவாசிகளே! சற்றுப் பொறுங்கள். இவர் அல்லாஹ்வின் தூதர். இவரை இவரது ஊரிலிருந்து வெளியேற்றி அழைத்துச் செல்வதால் முழு அரபு இனத்தையும் பிரிய வேண்டும். நம்மிலுள்ள மேன்மக்கள் கொலை செய்யப்படலாம், நம்மை எதிரிகளின் வாட்கள் வெட்டி வீழ்த்தலாம், இவை அனைத்தையும் தெரிந்து கொண்டுதான் நாம் பயணம் செய்து வந்திருக்கிறோம் என்பது தெரிந்த விஷயமே. ஆனால், இப்போது நான் உங்களுக்கு சொல்ல வருவது என்னவெனில், இந்த சோதனைகளை உங்களால் சகித்துக்கொள்ள முடியுமென்றால் இவரை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். அதற்குரிய கூலியை நிச்சயம் அல்லாஹ் உங்களுக்குக் கொடுப்பான். ஒருவேளை உங்களது உயிரைப் பற்றிய பயம் உங்களுக்கு இருந்தால் இப்போது இவரை இங்கேயே விட்டுவிடுங்கள். அல்லாஹ் உங்களை மன்னித்து விடலாம்.'' இவ்வாறு அஸ்அத் கூறிமுடித்தவுடன் மக்கள் ''அஸ்அதே! உமது கையை அகற்றிவிடு. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்வதிலிருந்து நாங்கள் பின்வாங்கவும் மாட்டோம் ஒருக்காலும் அதை முறிக்கவும் மாட்டோம்'' என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மது, பைஹகீ)

இவ்வாறு அஸ்அத் செய்ததற்குக் காரணம் மதீனாவாசிகள் இந்த மார்க்கத்திற்காக தியாகம் செய்ய எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காகத்தான்.

இதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்களிடம் முதன்மையாக ஒப்பந்தம் செய்து கொடுத்தது அஸ்அது இப்னு ஜுராராதான். (இப்னு ஹிஷாம்)

ஏனெனில், இவர்தான் முஸ்அப் இப்னு உமையிடம் சென்ற மாபெரும் மார்க்க அழைப்பாளராவார். இதற்குப் பிறகு மக்கள் அனைவரும் பைஆ செய்தனர்.

ஜாபிர் (ரழி) கூறுவதாவது: நாங்கள் ஒவ்வொருவராக எழுந்து நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி (ஸல்) எங்களிடம் வாக்குறுதிப் பெற்றபின் அதற்கு பகரமாக எங்களுக்கு சொர்க்கத்தை வாக்களித்தார்கள். (முஸ்னது அஹ்மது)

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் இருவரும் ஒப்பந்தம் செய்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடிக்காமல் சொல்லால்தான் ஒப்பந்தம் செய்தனர். நபி (ஸல்) எந்த ஒரு அந்நியப் பெண்ணிடமும் கை கொடுத்ததில்லை. (ஸஹீஹ் முஸ்லிம்)
12 தலைவர்கள்

மேற்கூறப்பட்ட முறைப்படி ஒப்பந்தம் நிறைவு பெற்றவுடன் நபி (ஸல்) அவர்கள் அந்த மக்களிடம் 12 தலைவர்களை தங்களுக்காகத் தேர்ந்தெடுக்கும்படி கூறினார்கள். தங்களது கூட்டத்தினரை கண்காணிப்பதும், ஒப்பந்தத்தின் அம்சங்களை நிறைவேற்றத் தூண்டுவதும் அந்தத் தலைவர்களின் பணியாக இருந்தது.

மதீனாவாசிகள் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த ஒன்பது நபர்களையும், அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த மூன்று நபர்களையும் தங்களின் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தனர்.

கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்த தலைவர்கள்:

1) அஸ்அது இப்னு ஜுராரா இப்னு அதஸ்

2) ஸஅது இப்னு ரபீஃ இப்னு அம்ரு

3) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா இப்னு ஸஃலபா

4) ராஃபிஃ இப்னு மாலிக் இப்னு அஜ்லான்

5) பராஃ இப்னு மஃரூர் இப்னு ஸக்ர்

6) அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஹராம்

7) உபாதா இப்னு ஸாபித் இப்னு கய்ஸ்

8) ஸஃது இப்னு உபாதா இப்னு துலைம்

9) முன்திர் இப்னு அம்ரு இப்னு குனைஸ் (ரழியல்லாஹு அன்ஹும்).

அவ்ஸ் கிளையைச் சேர்ந்த தலைவர்கள்:

1) உஸைத் இப்னு ஹுழைர் இப்னு சிமாக்

2) ஸஅது இப்னு கைஸமா இப்னு ஹாரிஸ்

3) ஃபாஆ இப்னு அப்துல் முன்திர் இப்னு ஜுபைர் (ரழியல்லாஹு அன்ஹும்).

இந்தத் தலைவர்களிடம் அவர்கள் தலைவர்கள் என்ற அடிப்படையில் மற்ற சில உடன்படிக்கையையும் நபி (ஸல்) வாங்கினார்கள்.

அதாவது, ஈஸா இப்னு மர்யமுக்கு அவரது உற்றத் தோழர்கள் பொறுப்பாளிகளாக இருந்தது போன்று நீங்கள் உங்களது கூட்டத்தினரின் காரியங்களுக்கு பொறுப்பாளிகளாவீர்கள். நான் முழு முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் பொறுப்பாளி ஆவேன் என்று நபி (ஸல்) கூற இதை அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். (இப்னு ஹிஷாம்)

ஷைத்தான் கூச்சலிடுகிறான்

நள்ளிரவில் இரகசியமாக நடைபெற்ற உடன்படிக்கை முழுமையாக நிறைவுபெற்று, கூட்டத்தினர் அனைவரும் பிரிந்து செல்ல இருக்கும் நேரத்தில், ஷைத்தான்களில் ஒருவனுக்கு அந்த ஒப்பந்தத்தைப் பற்றி தெரிய வந்தவுடன் அதைப் பகிரங்கப்படுத்துவதற்காக கூச்சலிட்டான். கடைசி தருணத்தில்தான் அவனுக்கு உடன்படிக்கை தெரியவந்ததால் குறைஷி தலைவர்களுக்கு இந்தச் செய்தியை முன்கூட்டியே தெரிவிக்க முடியாமல் போய்விட்டது. எனவே, முஸ்லிம்கள் ஒன்று சேர்வதிலிருந்து அவர்களைத் தடுக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு ஏற்படவில்லை. உடனடியாக அந்த ஷைத்தான் அங்குள்ள ஓர் உயரமான இடத்தில் ஏறி நின்றுகொண்டு மிக பயங்கரமான சப்தத்தில் ''ஓ! கூடாரத்தில் தங்கியிருப்பவர்களே! இதோ இந்த இழிவுக்குரியவரையும் அவருடன் மதம்மாறி சென்றவர்களையும் நீங்கள் பார்க்க வேண்டாமா? இவர்களெல்லாம் உங்கள் மீது போர் தொடுக்க வேண்டுமென ஒன்றுகூடி இருக்கின்றனர்'' என்று கூச்சலிட்டான்.

அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் ''இவன் இந்தக் கணவாயின் ஷைத்தான்'' என்று கூறி அந்த ஷைத்தானை நோக்கி ''ஏய் அல்லாஹ்வின் எதிரியே! அதிவிரைவில் நான் உனது கணக்கை முடித்து விடுகிறேன்'' என்று கூறிவிட்டு அங்கிருந்தவர்களிடம் அவரவர் கூடாரங்களுக்குக் கலைந்து செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்கள். (இப்னு ஹிஷாம்)

இந்த ஷைத்தானின் பேச்சைக் கேட்ட அப்பாஸ் இப்னு உபாதா இப்னு நள்லா ''உங்களை உண்மையைக் கொண்டு அனுப்பிய இறைவனின் மீது ஆணையாக! நீங்கள் விரும்பினால் நாளை இங்கு தங்கியிருக்கும் மினாவாசிகள் அனைவர் மீதும் நாங்கள் வாளேந்தி போர் தொடுக்கிறோம்'' என்று கூறினார். ஆனால் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நமக்கு அவ்வாறு கட்டளை இடப்படவில்லை. இப்போது நீங்கள் உங்களது கூடாரங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள்'' என்று கூறவே அனைவரும் திரும்பிச் சென்று தங்களது கூட்டத்தினருடன் உறங்கிக் கொண்டார்கள். (இப்னு ஹிஷாம்)

குறைஷிகளின் எதிர்ப்பு

இந்த உடன்படிக்கையின் செய்தி குறைஷிகளின் காதுகளுக்கு எட்டியவுடன் அவர்களுக்கு மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களைத் துக்கங்களும் கவலைகளும் ஆட்கொண்டன. இதுபோன்ற உடன்படிக்கை ஏற்பட்டால் அதன் முடிவுகளும் விளைவுகளும் எப்படி இருக்கும் என்பதை குறைஷிகள் நன்கு அறிந்திருந்ததால் நிலைமை என்னவாகுமோ என்று பயந்து சஞ்சலத்திற்கு உள்ளாயினர். எனவே, அதிகாலையில் மக்காவாசிகளுடைய தலைவர்களின் ஒரு மாபெரும் குழு இவ்வுடன்படிக்கைக்குத் தங்களது கடுமையான எதிர்ப்பையும் ஆட்சேபனையையும் தெரிவிப்பதற்காக மதீனாவாசிகளிடம் வந்தனர்.

''கஸ்ரஜ் கூட்டத்தினரே! எங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவரை எங்களிடமிருந்து வெளியேற்ற விரும்புகின்றீர்களா? எங்கள் மீது போர் தொடுக்க அவருடன் நீங்கள் உடன்படிக்கை செய்கின்றீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களுக்கும் நமக்கும் மத்தியில் போரை நாங்கள் அறவே விரும்பவில்லை'' என்று அந்தக் குழு மதீனாவாசிகளிடம் கூறினர். (இப்னு ஹிஷாம்)

இந்த உடன்படிக்கை இரவின் இருளில் மிக இரகசியமாக நடைபெற்று இருந்ததால் மதீனாவாசிகளில் இணைவைப்பவர்களாக இருந்தவர்களுக்கு இவ்வுடன்படிக்கையைப் பற்றி எதுவும் தெரியாது. எனவே, அவர்கள் குழம்பிவிட்டனர். அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று மதீனாவைச் சேர்ந்த இணைவைப்பவர்கள் மறுத்தனர். மக்காவாசிகள், அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூலிடம் விசாரித்தனர். அதற்கு, ''இது முற்றிலும் பொய்யான செய்தி. நான் மதீனாவில் இருந்திருந்தால் கூட எனது கூட்டத்தினர் என்னிடம் ஆலோசனை செய்யாமல் இதுபோன்ற செயல்களில் இறங்க மாட்டார்கள். நான் இங்கு இருக்கும்போது எனக்குத் தெரியாமல் இது போன்று அவர்கள் ஒருக்காலும் செய்திருக்கவே மாட்டார்கள்'' என்று அவன் கூறினான்.

முஸ்லிம்களோ தங்களை ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு எதுவும் பேசாமல் வாய்மூடி இருந்துவிட்டனர். குறைஷித் தலைவர்கள் மதீனா முஷ்ரிக்குகளின் பேச்சை நம்பி, தோல்வியுடன் திரும்பினர்.

குறைஷிகள் செய்தியை உறுதி செய்தனர்

மதீனாவாசிகளைப் பற்றி கேள்விப்பட்ட செய்தி பொய்யாக இருக்குமோ என்று சற்றே உறுதியான எண்ணத்தில்தான் அவர்கள் திரும்பினர். ஆனாலும், அதைப் பற்றி துருவித் துருவி ஆராய்ந்து, விசாரித்துக் கொண்டே இருந்தனர். இறுதியில், தாங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மைதான், இரவிலேயே ஒப்பந்தம் முழுமை அடைந்து விட்டது என்று அறிந்து கொண்டனர். உடனே, மதீனாவாசிகளை விரட்டிப் பிடிப்பதற்காக குறைஷிகளின் குதிரை வீரர்கள் தங்களது குதிரைகளை வெகு விரைவாக செலுத்தினர். ஆனால், அவர்களை அடைந்துகொள்ள முடியவில்லை. காரணம், நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க மதீனாவாசிகள் வெகு விரைவாக தங்களது நாடுகளை நோக்கி பயணமாகி விட்டனர். ஆனால், பயணக் கூட்டத்தின் கடைசியாக சென்று கொண்டிருந்த ஸஅது இப்னு உபாதாவையும், முன்திர் இப்னு அம்ரையும் குறைஷிகள் பார்த்து விட்டனர். அவர்கள் இருவரையும் பிடிக்க முயலவே முன்திர் விரைந்து சென்று தப்பித்துக் கொண்டார். ஸஅது (ரழி) குறைஷிகளின் கையில் சிக்கிக் கொண்டார். அந்தக் குறைஷிகள் அவரை அவரது வாகனத்தின் கயிற்றைக் கொண்டு கையை கழுத்துடன் கட்டி, அடித்து, தலைமுடியைப் பிடித்து இழுத்தவர்களாக மக்காவுக்கு அழைத்து வந்தனர். இதைப் பார்த்த முத்யீம் இப்னு அதீயும், ஹாரிஸ் இப்னு ஹர்ப் இப்னு உமைய்யாவும் ஸஅதை குறைஷிகளின் பிடியிலிருந்து விடுவித்தனர். ஏனெனில், முத்'' மற்றும் ஹாரிஸின் வியாபாரக் கூட்டங்கள் மதீனாவைக் கடந்து செல்லும்போது அக்கூட்டங்களுக்கு ஸஅது (ரழி) அவர்கள்தான் பாதுகாப்பு அளித்து வந்தார்கள். இதற்கிடையில் தங்களுடன் ஸஅதைப் பார்க்காத அன்சாரிகள் அவரைக் காப்பாற்றி அழைத்து வருவதற்காக ஆலோசனை செய்து கொண்டிருந்தபொழுது ஸஅது (ரழி) குறைஷிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வந்துவிடவே அனைவரும் மதீனா சென்று விட்டனர். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

இதுதான் அகபாவின் இரண்டாவது உடன்படிக்கை ஆகும். இதற்கு 'அகபாவின் மாபெரும் உடன்படிக்கை' என்றும் பெயர் கூறப்படும். இந்த உடன்படிக்கை அன்பு, ஆதரவு என்ற உணர்ச்சிகளுடனும், முஸ்லிம்கள் பலதரப்பட்டவர்களாக இருப்பினும் தங்களுக்குள் உதவி, ஒத்தாசை செய்து கொள்ள வேண்டும் அல்லாஹ்வின் வழியிலே தங்களது வீரத்தையும், உறுதியையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற உணர்ச்சிகளுடனும் நிறைவு பெற்றது. மதீனாவில் வாழும் ஒரு முஸ்லிம் மக்காவில் வாழும் பலவீனமான தன் சகோதர முஸ்லிம் மீது இரக்கம் காட்டுகிறார். அவருக்காக உணர்ச்சி வசப்படுகிறார் அவர் மீது அநியாயம் செய்பவர்களை வெறுக்கிறார் தனது முஸ்லிமான சகோதரர் தன்னைவிட்டு மறைந்திருந்தாலும் அல்லாஹ்விற்காக அவர் மீது அன்பின் உணர்வுகள் இவரது உள்ளத்தில் ஊற்றெடுக்கின்றன. இந்த உணர்வுகளும், உணர்ச்சிகளும் காலத்தால் நீங்கிவிடக்கூடியதல்ல. ஏனெனில், இதன் பிறப்பிடம் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், அவனது வேதத்தையும் நம்பிக்கை கொண்டதால் உருவானதாகும்.

இந்த இறைநம்பிக்கையை உலகத்தின் எந்த ஓர் அநியாயமான அல்லது வரம்புமீறிய சக்தியாலும் நீக்கிவிட முடியாது. இந்த இறைநம்பிக்கை எனும் புயல் வீச ஆரம்பித்தால் கொள்கையிலும், செயல்களிலும் வியக்கத்தக்க மாபெரும் ஆச்சரியங்களைப் பார்க்கலாம். இந்த ஈமானை (இறைநம்பிக்கையை) அடைந்ததின் மூலமாகத்தான் முஸ்லிம்கள் வரலாற்றுப் பக்கங்களில் தங்களது செயல்களைப் பதித்து மாறாத அடிச்சுவடுகளை விட்டுச் செல்ல முடிந்தது. அதுபோன்ற வீரச்செயல்களும், அடிச்சுவடுகளும் கடந்த காலத்திலும் இல்லை, தற்காலத்திலும் இல்லை, இனிவரும் காலங்களிலும் இருக்காது.

ஹிஜ்ராவின் தொடக்கங்கள்

அல்லாஹ்வின் அருளால் இரண்டாவது உடன்படிக்கை முடிந்தது. அறியாமையும், இறைநிராகரிப்பும் சூழ்ந்த பாலைவனங்களுக்கு நடுவில் இஸ்லாம் தனக்கொரு தனி நாட்டை நிறுவுவதில் வெற்றி பெற்றது. இது இஸ்லாமிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முஸ்லிம்களுக்கு அந்த நாட்டை நோக்கி ஹிஜ்ரா செய்ய அனுமதி அளித்தார்கள்.

'ஹிஜ்ரா' என்றால் தனது எல்லா உலக ஆதாயங்களையும் இழந்து சொந்த மண்ணில் உள்ள உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு தன்னையும் தனது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்ள தனது சொந்த நாட்டை, சொந்த ஊரை துறந்து அந்நிய நாட்டுக்கு, அந்நிய ஊருக்கு செல்வதாகும். செல்லும் வழியில் அல்லது செல்வதற்கு முன் பல ஆபத்துகளை சந்திக்க வேண்டி வரும். உயிர் பறிபோகலாம் உடைமைகள் அபகரிக்கப்படலாம் செல்லுமிடத்தில் எத்தகைய எதிர்காலத்தை முன்னோக்க வேண்டியிருக்குமோ? அங்கு என்னென்ன கவலைகளும், துக்கங்களும், துயரங்களும் மறைந்திருக்கின்றனவோ? என்று எதுவும் அறியாத நிலையில் மேற்கொள்ளப்படும் பயணமே ஹிஜ்ராவாகும்.

இவை அனைத்தையும் தெரிந்துதான் முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்யத் தொடங்கினர். முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்து ஓரிடத்தில் ஒன்று கூடிவிட்டால் தங்களுக்கு ஆபத்துகள் ஏதும் ஏற்படலாம் என்று உணர்ந்திருந்த மக்கா முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) முஸ்லிம்களை ஹிஜ்ரா செய்யவிடாமல் தடுத்தனர். இதற்கு சில உதாரணங்களை இங்கு பார்ப்போம்:

1) ஹிஜ்ரா செய்த முதல் கூட்டத்தில் அபூஸலமாவும் ஒருவர். இவர் இரண்டாவது அகபாவிற்கு ஒரு வருடத்துக்கு முன் ஹிஜ்ரா செய்தார். அபூ ஸலமா (ரழி) தனது மனைவியுடனும் தனது சிறிய குழந்தையுடனும் ஹிஜ்ரா செய்ய நாடியபோது அவரது மனைவியின் உறவினர்கள் அபூஸலமாவை நோக்கி ''நீ எங்களை புறக்கணித்து விட்டாய் நீ வேண்டுமானால் சென்றுவிடு எங்களுடைய பெண்ணை ஊர் ஊராக அழைத்துத்திரிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்'' என்று கூறி அவரின் மனைவியையும் குழந்தையையும் அவரிடமிருந்து பிரித்து விட்டனர். இதைப் பார்த்த அபூஸலமாவின் குடும்பத்தினர் ''நீங்கள் உங்களது பெண்ணை எங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரித்து விட்டீர்கள். எனவே, எங்கள் மகனுக்குப் பிறந்த குழந்தையை நாங்கள் உங்கள் பெண்ணுடன் விடமாட்டோம்'' என்று சண்டையிட்டு குழந்தையைப் பறித்துக் கொண்டனர். இதே நிலையில் அபூஸலமா மதீனாவை நோக்கிப் பயணமானார்.

தனது கணவனும் சென்றுவிட குழந்தையையும் பறிகொடுத்த உம்மு ஸலமாவின் உள்ளம் வேதனையால் வெந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் 'அப்தஹ்' என்ற இடத்திற்கு வந்து மாலை வரை அழுதுகொண்டே இருப்பார். அழுதே ஒரு வருடத்தைக் கழித்துவிட்ட நிலையில் அவரது குடும்பத்தினரின் உள்ளத்தில் அவர் மீது இரக்கம் பிறந்தது. நீ உனது கணவனுடன் சென்று சேர்ந்து கொள் என்று அனுமதித்து, அவரின் பிள்ளையையும் அபூ ஸலமாவின் குடும்பத்தாரிடமிருந்து வாங்கித் தந்தனர். ஏறக்குறைய 500 கி.மீ. தொலைவுள்ள மதீனாவை நோக்கி பயணமானார். உயர்ந்த மலைகள், அபாயம் நிறைந்த வழிகள், அல்லாஹ்வின் படைப்பினங்களில் யாரும் உடன் இல்லை. இந்நிலையில் பயணித்து 'தன்யீம்' வந்தடைந்தபோது அவரை உஸ்மான் இப்னு தல்ஹா இப்னு அபூதல்ஹா சந்தித்தார். அவரது நிலைமை மீது இரக்கம் கொண்டு அவரை பாதுகாப்புடன் அழைத்து வந்து 'குபா'வில் விட்டுவிட்டு ''இதோ இந்த ஊரில்தான் உங்கள் கணவர் இருக்கிறார். அல்லாஹ் உங்களுக்கு அருள்வளம் (பரக்கத்) செய்வான்'' என்று உம்முஸலமாவை வாழ்த்தி விட்டு அவர் மக்கா திரும்பினார். (இப்னு ஹிஷாம்)

2) சுஹைப் இப்னு ஸினான் ரூமி: நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரா சென்றபின் இவர் ஹிஜ்ரா செல்ல முனைந்தபோது குறைஷிக் காஃபிர்கள் இவரைச் சுற்றி வளைத்து ''ஏ சுஹைபே! நீ எங்களிடம் பிச்சைக்கார பரதேசியாக வந்தாய். எந்த செல்வத்தையும் நீ கொண்டு வரவில்லை. ஆனால், எங்களிடம் வந்தவுடன் செல்வச்செழிப்பு ஏற்பட்டு கொழுத்து விட்டாய். இப்போது நீ உனது செல்வத்துடன் சென்றுவிடலாம் என்று நினைக்கிறாயா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! அது ஒருக்காலும் நடக்காது'' என்று கூறினர். அதற்கு சுஹைப் (ரழி) ''நான் எனது செல்வத்தை உங்களுக்குத் தந்துவிட்டால் என்னை விட்டு விடுவீர்களா?'' என்று கேட்டதற்கு அவர்கள் ''ஆம்!'' என்றனர். ''நான் எனது செல்வத்தை உங்களுக்குத் தந்துவிட்டேன்'' என்று கூறி சுஹைப் (ரழி) மதீனாவுக்கு தப்பி வந்துவிட்டார். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது ''சுஹைப் லாபமடைந்தார்! சுஹைப் இலாபமடைந்தார்!'' என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

3) உமர் இப்னுல் கத்தாப், அய்யாஷ் இப்னு அபூ ரபீஆ, ஹிஷாம் இப்னு ஆஸ் இப்னு வாயில் (ரழி) இம்மூவரும் 'சஃப்' என்ற இடத்திற்கு மேலுள்ள ''தனாழுப்'' என்ற இடத்திற்கு வந்து காலையில் அங்கிருந்து ஹிஜ்ரா செய்வோம் என்று முடிவு செய்துகொண்டனர். ஆனால் உமர், அய்யாஷ் (ரழி) இருவர் மட்டும் அங்கு வந்தனர். ஹிஷாம் அங்கு வரவில்லை.

உமரும், அய்யாஷும் மதீனாவுக்கு வந்து குபாவில் தங்கினர். அப்போது அபூ ஜஹ்லும், அவனது சகோதரன் ஹாஸும் அய்யாஷைத் தேடி அங்கு வந்துவிட்டனர். இம்மூவரும் தாய்வழி சகோதரர்கள் ஆவர். இவர்களது தாயின் பெயர் 'அஸ்மா பின்த் முகர்பா.' அங்கு வந்த அபூ ஜஹ்லும், ஹாஸும் அய்யாஷை நோக்கி ''அய்யாஷே! உன்னைப் பார்க்கும் வரை தலை வாரமாட்டேன் வெயிலிலிருந்து நிழலில் ஒதுங்கமாட்டேன் என்று உன் தாய் நேர்ச்சை (சத்தியம்) செய்துவிட்டார்'' என்று கூறினர். தாயின்மீது இரக்கம் கொண்ட அய்யாஷ் வந்தவர்களுடன் திரும்பிச் செல்வதற்குத் தயாராகிவிட்டார். அப்போது உமர் (ரழி) அவரிடம் ''அய்யாஷே! உங்கள் கூட்டத்தார் உங்களை இஸ்லாமிலிருந்து திருப்பி விடத்தான் முயற்சிக்கின்றனர். எனவே, நீ அவர்களிடம் எச்சரிக்கையாக நடந்துகொள்! நான் கூறுவதைக் கேள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! பொடுகு, பேன்களால் உனது தாய்க்கு தொந்தரவு ஏற்படும்போது அவர் தலைவாரிக் கொள்வார். மக்காவில் வெயில் கடுமையாகி விட்டால் கண்டிப்பாக அவர் நிழலுக்குச் சென்றுவிடுவார் எனவே, நீ இவர்களுடன் செல்ல வேண்டாம்'' என உமர் (ரழி) அவருக்கு உபதேசம் செய்தார்.

இருப்பினும் அய்யாஷ் ''என் தாயின் சத்தியத்தை நிறைவேற்ற நான் சென்றே ஆக வேண்டும்'' என்று கூறினார். அதற்கு உமர் (ரழி) ''சரி! நீ செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் எனது இந்த ஒட்டகத்தை எடுத்துக்கொள்! இது புத்திசாலியான, பணிவான ஒட்டகமாகும். அதன் முதுகிலிருந்து நீ கீழே இறங்கிவிடாதே. உனது கூட்டத்தினர் மூலம் உனக்கு ஏதாவது ஆபத்து என்று தெரிந்தால் இதன் மூலம் நீ தப்பித்துக் கொள்'' என்று அவரிடம் கூறினார். அய்யாஷ் உமர் (ரழி) கொடுத்த ஒட்டகத்தில் அவ்விருவருடன் சென்று கொண்டிருந்த போது வழியில் அவரிடம் அபூஜஹ்ல் ''எனது தாயின் மகனே! எனது இந்த ஒட்டகத்தில் பயணம் செய்வது எனக்குக் கடினமாக இருக்கிறது. எனவே, என்னை உனது வாகனத்தில் ஏற்றிக் கொள்'' என்று கூறினான். இதைக் கேட்ட அய்யாஷ் ''சரி!'' என்று கூறினார். தனது ஒட்டகத்தைப் பூமியில் படுக்க வைக்கவே அதே நேரத்தில் அவ்விருவரும் இவர் மீது பாய்ந்து இவரைக் கட்டிவிட்டனர். பிறகு கட்டப்பட்ட நிலையில் மக்காவுக்கு அழைத்துச் சென்றனர். அபூஜஹ்லும், ஹாஸும் மக்காவாசிகளைப் பார்த்து ''ஓ மக்காவாசிகளே! இதோ பாருங்கள். நாங்கள் இந்த முட்டாளிடம் நடந்துகொண்டது போன்றே நீங்களும் உங்களது முட்டாள்களுடன் நடந்து கொள்ளுங்கள்'' என்று கூறினர். (இப்னு ஹிஷாம்)

ஹிஷாம், அய்யாஷ் (ரழி) ஆகிய இருவரும் இணைவைப்போரிடம் கைதிகளாகவே சில காலங்கள் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் அய்யாஷையும் ஷாமையும் இணைவைப்போடமிருந்து காப்பாற்றி யார் இங்கு அழைத்து வர முடியும்? என்று தங்களது தோழர்களிடம் விசாரித்தார்கள். அல் வலீத் இப்னு அல் வலீத் (ரழி) என்ற நபித்தோழர் ''அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்காக நான் அவர்களைக் காப்பாற்றி அழைத்து வருகிறேன்'' என்றார். அதற்குப் பிறகு அல் வலீத் யாருக்கும் தெரியாமல் மக்காவிற்குள் புகுந்து அவ்விருவரும் கைது செய்யப்பட்டிருக்கும் இடத்தை அறிந்துகொண்டார். அவ்விருவரும் மேல் முகடற்ற ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருந்தனர். ஒரு நாள் மாலை நேரம் ஆனவுடன் சுவர் ஏறிக் குதித்து அவ்விருவரின் விலங்கை உடைத்தெறிந்து விட்டு தனது ஒட்டகத்தில் அவர்களை அழைத்துக் கொண்டு நலமுடன் மதீனா வந்து சேர்ந்தார். (இப்னு ஹிஷாம்)

யாராவது ஹிஜ்ரா செய்து செல்கிறார்கள் என்று இணைவைப்போர் தெரிந்துகொண்டால் இவ்வாறுதான் அவர்களைத் தடுத்து, அவர்களுக்கு நோவினை செய்து வந்தனர். இவ்வளவு சிரமங்கள் இருந்தும் முஸ்லிம்கள் தனித்தனியாக ஒருவர் பின் ஒருவராக மதீனாவை நோக்கிச் சென்றுகொண்டே இருந்தனர். அகபாவின் இரண்டாவது உடன்படிக்கைக்குப் பின் மூன்று மாதங்களுக்குள் முஸ்லிம்கள் பலர் மக்காவைவிட்டு ஹிஜ்ரா செய்துவிட்டனர். நபி (ஸல்) அவர்களும், அவர்களது கட்டளையின்படி தங்கியிருந்த அபூபக்ரும், அலீயும் இன்னும் நிர்பந்தத்தில் இருந்த முஸ்லிம்கள் மட்டும்தான் மக்காவில் தங்கியிருந்தனர். நபி (ஸல்) ஹிஜ்ரவிற்குண்டான முழு தயாரிப்பும் செய்திருந்தார்கள். எனினும், அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்திருந்தார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரழி) அவர்களும் பிரயாணத்திற்கு உண்டான முழு தயாரிப்பும் செய்திருந்தார்கள். (ஜாதுல் மஆது)

ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) முஸ்லிம்களிடம் ''எனக்கு நீங்கள் ஹிஜ்ரா செய்ய வேண்டிய இடம் (மதீனா) கனவில் காட்டப்பட்டது'' என்று கூறினார்கள். இதைக்கேட்ட பெரும்பாலான முஸ்லிம்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரா சென்றுவிட்டனர். ஹபஷாவிற்கு சென்றிருந்த முஸ்லிம்களும் மதீனாவிற்கு திரும்பி விட்டனர். அபூபக்ர் (ரழி) மதீனாவிற்கு செல்ல தயாரானபோது அவர்களிடம் நபி (ஸல்) ''சற்று தாமதியுங்கள். எனக்கும் அனுமதி கிடைக்கும் என்று நான் ஆதரவு வைக்கிறேன்'' என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரழி) ''எனது தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டுமாக! நீங்கள் அதை ஆதரவு வைக்கிறீர்களா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) ''ஆம்!'' என்று கூறியவுடன் அபூபக்ர் (ரழி) நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து செல்வதற்காகத் தன் பயணத்தைத் தள்ளி வைத்தார். பிறகு தன்னிடமிருந்த இரண்டு ஒட்டகங்களை நல்ல முறையில் தீனி கொடுத்து வளர்த்தார்கள். இந்த உரையாடலுக்குப் பிறகு நான்கு மாதங்கள் கழித்து இருவரும் மதீனா புறப்பட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)
தாருந் நத்வா - இது குறைஷிகளின் ஆலோசனை மன்றம்.

நபித்தோழர்கள் தங்களது மனைவி, மக்களுடன் மக்காவை விட்டு வெளியேறி மதீனாவில் அவ்ஸ், கஸ்ரஜ்களுடன் குடியேறியதைப் பார்த்த இணைவைப்பவர்கள் மிகப்பெரிய சங்கடத்துக்கு ஆளானார்கள். இதற்கு முன்பில்லாத அளவுக்கு எந்நேரமும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். தங்களின் சிலை வழிபாட்டையும், அரசியல் அந்தஸ்தையும் முற்றிலும் அடியோடு தகர்த்தெறியக் கூடிய பேராபத்து ஒன்று வரப்போவதை உணர்ந்தனர்.

நபி (ஸல்) பிறரைக் கவரும் ஆற்றல் உள்ளவர்கள். தலைமைத்துவத்துக்கும் நேர்வழிபடுத்தவும் முழுத் தகுதி பெற்றவர்கள். நபித்தோழர்கள் நெஞ்சுறுதி மிக்கவர்கள். நிலைத்தன்மை கொண்டவர்கள். நபியவர்களுக்காக எதையும் அர்ப்பணிக்கத் துணிந்தவர்கள். மதீனாவில் உள்ள அவ்ஸ், கஸ்ரஜ் கிளையினரோ மிகுந்த ஆற்றலும் பலமுமிக்கவர்கள். இவ்விரு சமூகத்திலும் உள்ள அறிஞர்களோ சமாதானத்தையும், சீர்திருத்தத்தையும் விரும்புபவர்கள். குரோதம் கொள்வதை எதிர்ப்பவர்கள். ஏற்கனவே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர்களால் மதீனா நகரம் பாதிக்கப்பட்டிருக்கும் போது தற்போது சண்டை சச்சரவுகளை அன்சாரிகள் அறவே விரும்ப மாட்டார்கள் என்று மக்காவாசிகள் நன்கு விளங்கி வைத்திருந்தனர்.

மதீனா மிக முக்கிய மைய நகரமாக விளங்குகின்றது. யமன் நாட்டிலிருந்து ஷாம் வரை நீண்டு செல்லக்கூடிய செங்கடலின் கரை வழியாக செல்லும் வியாபாரக் கூட்டங்கள் அதன் வழியாகத்தான் செல்ல வேண்டும். மக்காவாசிகள் மட்டும் ஓர் ஆண்டுக்கு மதீனா வழியாக ஷாம் தேசத்துடன் குறைந்தது இரண்டரை லட்சம் தங்க நாணயங்களுக்கு வியாபாரம் செய்து வந்தனர். இது மட்டுமல்லாமல் தாயிஃப் நகர மக்களும் அதைச் சுற்றியுள்ள மக்களும் மதீனா வழியாகவே வியாபாரம் செய்து வந்தனர். மதீனா பாதுகாப்புடையதாக இருந்ததால் அனைவரும் வியாபாரத்திற்காக இவ்வழியையேத் தேர்ந்தெடுத்தனர். எனவே, மதீனா இத்தகைய முக்கியத்துவம் பெற்றிருப்பதையும் அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

ஆகவே, இஸ்லாமிய அழைப்பு மதீனாவில் மையம் கொள்வதாலும் மதீனாவாசிகள் தங்களுக்கு எதிராக ஒன்று கூடுவதாலும் ஏற்படும் மாபெரும் ஆபத்தை குறைஷிகள் உணராமல் இருக்கவில்லை.

தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த ஆபத்து அதிகமாகுவதைக் குறைஷிகள் நன்கு உணர்ந்து கொண்டனர். இந்த ஆபத்து உருவாகுவதின் மூலக் காரணத்தை, அதாவது நபி முஹம்மது (ஸல்) அவர்களையே அழித்து விடுவதுதான் இந்த ஆபத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஏற்றமான வழி என்று முடிவு செய்தனர்.

நபித்துவத்தின் பதிநான்காம் ஆண்டு, ஸஃபர் மாதம் 26 வியாழன், அதாவது கி.பி. 622, செப்டம்பர் 12' இரண்டாவது அகபா உடன்படிக்கை முடிந்து இரண்டரை மாதங்கள் கழிந்து காலையில் குறைஷிகளின் மிக முக்கியமான ஆலோசனை மன்றம் ஒன்று கூடியது.'' இந்த சபையில் குறைஷிகளின் முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் ஏகத்துவ அழைப்பைப் பரப்பி வரும் நபி (ஸல்) அவர்களையும் அவ்வழைப்பின் தாக்கத்தையும் முழுமையாக அழித்து விடுவதற்கு ஆலோசனை செய்து சரியான திட்டம் தீட்ட ஒன்று கூடினர். ('ரஹ்மத்துல்லில் ஆலமீன், ''இப்னு இஸ்ஹாக்)

இந்த ஆபத்தான ஆலோசனை மன்றத்தில் கலந்துகொண்ட குறைஷிகளின் சில முக்கிய பிரமுகர்கள் பின்வருமாறு:

1) மக்ஜும் கிளையினரின் சார்பாக அபூஜஹ்ல்,

2,3,4) நவ்ஃபல் இப்னு அப்து மனாஃப் கிளையினரின் சார்பாக ஜுபைர் இப்னு முத்'', துஅய்மா இப்னு அதீ, ஹாரிஸ் இப்னு ஆமிர் ஆகிய மூவர்,

5,6,7) அப்து ஷம்ஸ் இப்னு அப்து முனாஃப் கிளையினரின் சார்பாக ஷைபா, உத்பா, அபூஸுஃப்யான் இப்னு ஹர்ஃப் ஆகிய மூவர்,

8) அப்துத் தார் கிளையினரின் சார்பாக நள்ர் இப்னு ஹாரிஸ்,

9,10,11) அஸ்அத் இப்னு அப்துல் உஜ்ஜா கிளையினரின் சார்பாக அபுல் பக்த இப்னு ஹிஷாம், ஜம்ஆ இப்னு அஸ்வத், ஹகீம் இப்னு ஜாம் ஆகிய மூவர்,

12,13) சஹம் கிளையினரின் சார்பாக நுபைஹ் இப்னு ஹஜ்ஜாஜ், முனப்பிஹ் இப்னு ஹஜ்ஜாஜ் ஆகிய இருவர்,

14 ) ஜுமஹ் கிளையினரின் சார்பாக உமையா இப்னு கலஃப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேற்கூறிய இவர்களும் மற்றவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் தாருந் நத்வாவிற்கு வந்து சேர்ந்தபோது, தடிப்பமான ஓர் ஆடையை அணிந்துகொண்டு வயோதிக தோற்றத்தில் இப்லீஸ்' அங்கு வந்தான். அவர்கள் ''வயோதிகர் யார்?'' என்று கேட்கவே, அவன் ''நான் நஜ்து பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிகன். நீங்கள் பேசுவதைக் கேட்டு என்னால் முடிந்த நல்ல யோசனையையும், அபிப்ராயத்தையும் கூறலாம் என்று வந்திருக்கிறேன்'' என்றான். இதனைக் கேட்ட அம்மக்கள் ''சரி! உள்ளே வாருங்கள்'' என்றவுடன் உள்ளே சென்று அமர்ந்து கொண்டான்.

நபியவர்களைக் கொல்ல திட்டமிடுதல்

சபை ஒன்றுகூடிய பின் பலவிதமான கருத்துகள், விவாதங்கள் நடைபெற்றன. அவர்களில் ஒருவனான அபுல் அஸ்வத் என்பவன் ''நாம் அவரை நமது ஊரைவிட்டு வெளியேற்றி விடுவோம். அவர் எங்கு சென்றால் நமக்கென்ன. நாம் நமது காரியத்தையும், நமக்கு மத்தியிலிருந்த நட்பையும் முன்பு போல் சீர்படுத்திக் கொள்வோம்'' என்று கூறினான்.

அதற்கு அந்த நஜ்தி வயோதிகன் ''இது சரியான யோசனையல்ல. அவரின் அழகிய பேச்சையும், இனிமையான சொல்லையும், தனது மார்க்கத்தைக் கொண்டு மக்களின் உள்ளங்களில் அவர் இடம்பிடித்து விடுவதையும் நீங்கள் பார்க்கவில்லையா? அவ்வாறு நீங்கள் செய்தால் அவர் வேறொரு இடம் சென்று அவர்களிடம் தங்கி அவர்களை முஸ்லிம்களாக மாற்றிவிடலாம். பிறகு அவர்களை அழைத்துக்கொண்டு உங்களது ஊருக்கு வந்து உங்களை அழித்தொழித்து விடலாம். எனவே வேறு யோசனை செய்யுங்கள்'' என்று கூறினான்.

அடுத்து அபுல் புக்த என்பவன் ''அவரை சங்கிலியால் பிணைத்து ஓர் அறையில் அடைத்து விடுவோம். இதற்கு முன் ஜுஹைர், நாஃபிகா போன்ற கவிஞர்களுக்கு நடந்தது போன்று நடக்கட்டும். அதாவது, சாகும் வரை அப்படியே அவரை விட்டுவிடுவோம்'' என்று கூறினான்.

இதைக் கேட்ட நஜ்து தேச கிழவன் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது ஒரு யோசனையே அல்ல. நீங்கள் அவரை அடைத்து வைத்தாலும் அவருடைய தோழர்களுக்கு அவரைப் பற்றிய செய்தி தெரிந்து, உங்கள் மீது பாய்ந்து அவரை உங்களிடருந்து விடுவித்து விடுவார்கள். பிறகு உங்களையும் அவர்கள் வீழ்த்தி விடலாம். எனவே, இதுவும் ஒரு யோசனையே அல்ல. வேறு ஒரு யோசனை சொல்லுங்கள்'' என்றான்.

இவ்விரண்டு யோசனைகளையும் அம்மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டபோது, மக்கா அயோக்கியர்களில் மிகப்பெரும் கொடியவனான 'அபூஜஹ்ல்' ஒரு யோசனையைக் கூறினான். அந்த யோசனையை அரக்க குணம் படைத்த அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

''அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஒரு யோசனை இருக்கின்றது. அது உங்களுக்குத் தோன்றியிருக்காது'' என்று அபூஜஹ்ல் கூற, ''அபுல் கமே! அது என்ன யோசனை'' என்றனர் மக்கள். அதற்கு அபூஜஹ்ல் ''நாம் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் நல்ல வீரமிக்க, குடும்பத்தில் சிறந்த, ஒரு வாலிபரைத் தேர்வு செய்து, ஒவ்வொரு வாலிபனுக்கும் மிகக் கூர்மையான வாள் ஒன்றையும் கொடுப்போம். அவர்கள் அனைவருமாக சேர்ந்து அவரை ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கொன்றுவிடட்டும். அவர் இறந்துவிட்டால் நாம் நிம்மதி பெருமூச்சு விடலாம். கொலை செய்தவர்கள் பல கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவரின் உறவினர்களான அப்து மனாஃப் கிளையினர் பழிக்கு யாரையும் கொல்ல முடியாது. முழு அரபு சமுதாயத்தினரையும் பகைத்துக் கொண்டு அப்து மனாஃப் கிளையினர் நம்மீது போர் தொடுக்க முடியாது. எனவே, கொலைக்குப் பகரமாக அபராதத் தொகையை நிர்பந்தமாக ஏற்றுக் கொள்வார்கள். நாமும் அவர்களுக்கு அந்த அபராதத்தைக் கொடுத்து விடலாம்'' என்று அரக்கன் அபூஜஹ்ல் கூறிமுடித்தான்.

நஜ்து தேச அயோக்கியக் கிழவன் (அவன்தான் இப்லீஸ்) இதைக் கேட்டுவிட்டு ''ஆஹா! இதல்லவா யோசனை! இதுதான் சரியான யோசனை! இதைத் தவிர வேறெதுவும் சரியான யோசனையல்ல'' என்று கூறினான். (இப்னு ஹிஷாம்)

இந்தக் கருத்தை அனைத்து பிரமுகர்களும் தலைவர்களும் ஏற்றுக் கொண்டு, வெகு விரைவில் இதை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியில் தங்களது வீடுகளுக்குத் திரும்பினர்.

குறைஷிகளின் திட்டமும், அல்லாஹ்வின் ஏற்பாடும்

குறைஷிகள் தங்களின் அன்றாட வேலைகளில் சகஜமாக ஈடுபட்டு, தங்களின் செயல்பாடுகளில் எவ்வித மாற்றமும் தெரியாத விதத்தில் நடந்துகொண்டனர். பிறர் இந்த சதித் திட்டத்தின் வாடையைக் கூட நுகர முடியாத வண்ணம், அந்த குறைஷிகள் நடந்து கொண்டனர். இவர்கள் அல்லாஹ்வுக்கு சூழ்ச்சி செய்ய நாடினர். அல்லாஹ் அவர்கள் அறியாத விதத்தில் அவர்களது சூழ்ச்சிகளை வீணாக்கி விட்டான். குறைஷிகளின் சதித்திட்டத்தை நபி (ஸல்) அவர்களிடம் அறிவிப்பதற்காக அல்லாஹ்வின் புறத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் இறங்கி வந்தார். ''நீங்கள் 'ஹிஜ்ரா' செய்ய அல்லாஹ் அனுமதி கொடுத்து விட்டான். அதற்குரிய நேரத்தையும் நிர்ணயம் செய்துள்ளான். குறைஷிகளின் இத்திட்டத்தை முறியடிப்பதற்குரிய வழியையும் தெளிவுபடுத்தி இருக்கின்றான். எனவே, இன்று இரவு நீங்கள் வழக்கமாக தூங்கும் விரிப்பில் தூங்க வேண்டாம்'' என்று வானவர் ஜிப்ரீல் கூறினார். (இப்னு ஹிஷாம்)

மக்கள் எல்லாம் தங்களது இல்லங்களில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் மதிய வேளையில் ஹிஜ்ராவின் திட்டத்தை உறுதி செய்து கொள்வதற்காக நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரிடம் வந்தார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:

மதிய வேளையில் நாங்கள் வீட்டில் அமர்ந்திருந்தபோது ஒருவர் அபூபக்ரிடம் ''இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முகத்தை மறைத்தவராக உங்களிடம் வந்திருக்கிறார்'' என்று கூறினார். அது நபி (ஸல்) எங்களிடம் வரும் வழக்கமான நேரமல்ல! ''எனது தாயும் தந்தையும் நபி (ஸல்) அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்நேரத்தில் அவர்கள் வந்திருப்பதற்குக் காரணம் ஏதோ ஒரு முக்கியமான விஷயம்தான்'' என்று அபூபக்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்.

எங்களிடம் வந்த நபி (ஸல்) உள்ளே வர அனுமதி கேட்கவே அபூபக்ர் (ரழி) அனுமதி கொடுத்தார்கள். உள்ளே நுழைந்த நபி (ஸல்) அபூபக்ரிடம் ''உங்களுடன் இருப்பவர்களை உடனே வெளியேற்றுங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரழி) ''அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுக்கு அர்ப்பணமாவேனாக! இங்கு உங்கள் குடும்பத்தார்கள்தான் இருக்கிறார்கள்'' என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''எனக்கு மக்காவைவிட்டு வெளியேறுவதற்கு அனுமதி கிடைத்து விட்டது'' என்றார்கள். அதற்கு அபூபக்ர் (ரழி) ''அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நானும் உங்களுடன் வருகிறேன்'' என்று கூறவே, நபி (ஸல்) ''சரி!'' என்றார்கள். (இப்னு ஹிஷாம்)

பின்பு ஹிஜ்ரா எவ்வாறு செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அபூபக்ர் (ரழி) அவர்களுடன் பேசி முடிவு செய்து கொண்டார்கள். வீட்டிற்குத் திரும்பிய நபி (ஸல்) அன்று சூரியன் மறைந்து இருட்டுவதை எதிர்பார்த்திருந்தார்கள். தான் குறைஷிகளின் தீய திட்டத்தை தெரிந்து கொள்ளாதது போன்றே, தன் அன்றாடச் செயல்களை வழக்கம் போல் செய்து கொண்டிருந்தார்கள். குறைஷிகளின் தீய திட்டத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பிறர் தனது ஹிஜ்ராவின் திட்டத்தைத் தெரிந்து கொள்ளதவாறு நடந்து கொண்டார்கள்.

சுற்றி வளைத்தல்

குறைஷிகளின் தலைவர்கள், பகலில் தாங்கள் செய்த தீய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பதினொரு மூத்த தலைவர்களைத் தேர்வு செய்தனர்.

1) அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம்

2) ஹகம் இப்னு அபூஆஸ்

3) உக்பா இப்னு அபூமுயீத்

4) நள்ர் இப்னு ஹாரிஸ்,

5) உமைய்யா இப்னு கலஃப்,

6) ஜம்ஆ இப்னு அஸ்வத்

7) துஐமா இப்னு அதீ

8) அபூலஹப்

9) உபை இப்னு கலஃப்,

10) நுபைஃ இப்னு ஹஜ்ஜாஜ்,

11) முனப்பிஹ் இப்னு ஹஜ்ஜாஜ் (ஜாதுல் மஆது)

பொதுவாக நபி (ஸல்) இஷா தொழுத பின் முன்னிரவில் தூங்கி இரவின் நடுநிசிக்குப் பின் எழுந்து சங்கைமிகு பள்ளிக்குச் சென்று இரவுத் தொழுகைகளைத் தொழுவார்கள். அன்றிரவு அலீ (ரழி) அவர்களைத் தனது விரிப்பில் படுத்து, தனது யமன் நாட்டு பச்சை நிறப் போர்வையை போர்த்திக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள். மேலும், எந்த ஓர் ஆபத்தும் உங்களுக்கு ஏற்படாது என்றும் அலீ (ரழி) அவர்களுக்குக் கூறினார்கள்.

நன்கு இரவாகி அமைதி நிலவி, மக்கள் உறங்கிய பின் மேற்கூறப்பட்ட கொலைகாரர்கள் இரகசியமாக நபி (ஸல்) அவர்களின் இல்லம் வந்து வீட்டு வாசலில் அவர்களை எதிர்பார்த்தவர்களாக நின்று கொண்டனர். ''முஹம்மது தூங்குகிறார். அவர் எழுந்து பள்ளிக்கு செல்லும்போது அனைவரும் அவர் மீது பாய்ந்து நமது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வோம்'' என்று எண்ணியிருந்தனர்.

இந்த மோசமான சதித்திட்டம் நிச்சயம் வெற்றி பெரும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருந்தனர். அபூஜஹ்ல் மிகவும் கர்வமும், பெருமையும் கொண்டு சுற்றியிருந்த தனது தோழர்களிடத்தில் மிகவும் பரிகாசத்துடன் பின்வருமாறு கூறிக் கொண்டிருந்தான். ''நீங்கள் முஹம்மதை பின்பற்றினால் அரபிகளுக்கும், அரபியல்லாதவர்களுக்கும் அரசர்களாக ஆகிவிடலாம், நீங்கள் மரணித்தபின் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவீர்கள், அப்போது உங்களுக்கு ஜோர்டான் நாட்டு தோட்டங்களைப் போல் சொர்க்கங்கள் உண்டு, அப்படி நீங்கள் செய்யவில்லையென்றால் அவர் உங்களைக் கொன்று விடுவார், பின்பு நீங்கள் மரணித்த பின் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவீர்கள், அங்கு நெருப்பில் நீங்கள் பொசுக்கப்படுவீர்கள் என்று முஹம்மது கூறுகிறார். ஆனால், இன்று அவரது நிலையைப் பார்த்தீர்களா!''- இவ்வாறு அபூஜஹ்ல் தனது சகாக்களிடம் கிண்டலும் கேலியுமாகப் பேசினான். (இப்னு ஹிஷாம்)

நடுநிசிக்குப் பின் நபி (ஸல்) தமது வீட்டிலிருந்து வெளியேறி பள்ளிக்குச் செல்லும் நேரத்தைத் தங்களது சதித்திட்டத்தை நிறைவேற்ற தேர்வு செய்திருந்தனர். நடுநிசியை எதிர்பார்த்து விழித்திருந்தனர். அல்லாஹ் தனது காரியத்தில் அவனே மிகைத்தவன். வானங்கள் பூமியின் ஆட்சி அவனது கையில்தான் இருக்கின்றது. அவன் நாடியதை செய்யும் ஆற்றல் உள்ளவன். அவனே பாதுகாப்பளிப்பவன். அவனுக்கு யாரும் பாதுகாப்பளிக்கத் தேவையில்லை. இத்தகைய வல்லமை படைத்த அல்லாஹ் தனது நபி (ஸல்) அவர்களுக்கு இந்த நிகழ்ச்சிக்குப் பின் குர்ஆனில் இறக்கிய வசனத்தில் கூறியதைப் போன்றே செய்து காட்டினான்.

(நபியே!) உங்களைச் சிறைப்படுத்தவோ அல்லது உங்களைக் கொலை செய்யவோ அல்லது உங்களை (ஊரைவிட்டு) அப்புறப்படுத்தவோ நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்த (நேரத்)தை நினைத்துப் பாருங்கள். அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர் (அவர்களுக்கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ்வே மிக மேலானவன். (அல்குர்ஆன் 8:30)

நபியவர்கள் புறப்படுகிறார்கள்

குறைஷிகள் தங்களது தீய திட்டத்தில் எவ்வளவுதான் சுதாரிப்புடனும், விழிப்புடனும் இருந்தாலும் கூட படுதோல்வி அடைந்தனர். நபி (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி கூட்டத்தைப் பிளந்து கொண்டு தரையிலிருந்து கைப்பிடி மண்ணை எடுத்து அங்கிருந்தவர்களின் தலையின் மீது தூவிவிட்டுச் சென்றார்கள். எதிரிகள் நபி (ஸல்) அவர்களை பார்க்க முடியாதவாறு அல்லாஹ் செய்துவிட்டான்.

அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும், பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடிவிட்டோம். ஆதலால், அவர்கள் (எதனையும்) பார்க்க முடியாது. (அல்குர்ஆன் 36:9)

நபி (ஸல்) இவ்வசனத்தை ஓதியவர்களாக அங்கிருந்து வெளியேறி சென்றார்கள். அங்கிருந்த ஒவ்வொருவரின் மீதும் நபி (ஸல்) மண்ணை தூவியிருந்தார்கள். பின்பு அபூபக்ர் (ரழி) அவர்களின் வீட்டுக்கு வருகை தந்து அபூபக்ர் (ரழி) அவர்களையும் அழைத்துக் கொண்டு வீட்டின் பின்பக்கம் உள்ள சிறிய கதவின் வழியாக வெளியாகி, மக்காவிலிருந்து யமன் நாட்டை நோக்கிச் செல்லும் பாதையிலுள்ள 'ஸவ்ர்' குகையை வந்தடைந்தார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

முற்றுகையிட்டிருந்தவர்கள் நடுநிசியை எதிர்பார்த்திருந்த நேரத்தில் தாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்பது அவர்களுக்குத் தெரிந்தது. வெளியிலிருந்து வந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களின் வீட்டு வாசலில் இவர்கள் இருப்பதைப் பார்த்தவுடன் ''நீங்கள் எதை எதிர்பார்த்திருக்கின்றீர்கள்'' என்று கேட்டார். அவர்கள் ''நாங்கள் முஹம்மதை எதிர்பார்த்து இருக்கிறோம்'' என்றனர். அவர் ''நீங்கள் தோல்வியடைந்து விட்டீர்கள் நஷ்டமடைந்து விட்டீர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! இப்போதுதானே முஹம்மது உங்களைக் கடந்து செல்கிறார். உங்களது தலையின் மீது மண் தூவப்பட்டுள்ளதே! நீங்கள் பார்க்கவில்லையா?'' என்று அவர் கூற, அவர்கள் தங்கள் தலையிலுள்ள மண்ணைத் தட்டிவிட்டு ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் அவரைப் பார்க்கவில்லையே! எப்படி அவர் சென்றிருப்பார்!'' என்று திகைத்தனர்.

இருப்பினும் கதவின் இடுக்கின் வழியாக வீட்டிற்குள் பார்த்தனர். அங்கு அலீ (ரழி) படுத்திருப்பதை நபி என்று எண்ணி, ''இதோ முஹம்மதுதான் தூங்குகிறார். இது அவருடைய போர்வைதான்'' என்று கூறி, அவர் வெளியேறுவதை எதிர்பார்த்தவர்களாகவே விடியும்வரை நின்றிருந்தனர். ஆனால், காலையில் விரிப்பிலிருந்து அலீ (ரழி) எழுந்து வெளியே வருவதைப் பார்த்ததும், கைசேதமடைந்து நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்கவே அலீ (ரழி) ''எனக்கு எதுவும் தெரியாது'' என்று மறுத்துவிட்டார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

வீட்டிலிருந்து குகை வரை

நபித்துவத்தின் 14ஆம் ஆண்டு ஸஃபர் மாதம் பிறை 27 இரவில், அதாவது கி.பி. 622 செப்டம்பர் 12 அல்லது 13ல் நபி (ஸல்) தனது வீட்டை விட்டு வெளியேறி உயிராலும், பொருளாலும் தனக்கு மிகுந்த உதவி ஒத்தாசை செய்து வந்த, தனது தோழரான அபூபக்ர் (ரழி) வீட்டிற்கு வந்தார்கள். பின்பு, இருவரும் வீட்டின் பின்வாசல் வழியாகப் புறப்பட்டனர். விடியற்காலை உதயமாவதற்குள் மக்காவை விட்டு வெளியேறிவிடத் துரிதமாகப் பயணித்தனர்.

குறைஷிகள் தங்களை மிக மும்முரமாகத் தேட முயற்சிப்பார்கள், பொதுவாக மக்காவிலிருந்து வடக்கு நோக்கிய மதீனாவின் பாதையைத்தான் கண்காணிப்பார்கள் என்பதால் முற்றிலும் அந்த பாதைக்கு எதிர் திசையிலுள்ள மக்காவிலிருந்து யமன் நாட்டை நோக்கிய தெற்கு திசையின் பாதையில் சென்றார்கள். இவ்வாறு ஐந்து மைல் நடந்ததற்குப் பின் அங்குள்ள 'ஸவ்ர்' மலையை சென்றடைந்தார்கள். இது ஏறுவதற்குக் கடினமான, பெரிய பாறைகளைக் கொண்ட உயரமான மலையாகும். இதனால் நபி (ஸல்) அவர்களின் பாதங்கள் காயமடைந்தன. (எதிரிகள் தங்களின் பாத அடிகளைத் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக குதிகால்களின் மீது நீண்ட நேரம் நடந்து வந்ததால்தான் நபி (ஸல்) அவர்களின் கால்கள் காயமடைந்தன என்றும் சிலர் கூறுகின்றனர்.) காரணம் எதுவாயினும் சரியே! மலையில் நபி (ஸல்) அவர்களால் ஏற இயலவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரழி) சுமந்து கொண்டு மலையின் உச்சியிலுள்ள குகைக்குச் சென்றார்கள். அக்குகைக்கு வரலாற்றில் 'ஸவ்ர் குகை' என்று கூறுகின்றனர்.

இருவரும் குகைக்குள்

நபி (ஸல்) அவர்களும், அவர்களது தோழரும் குகையை அடைந்தபோது ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் உள்ளே நுழையக் கூடாது. நான்தான் முதலில் நுழைவேன். அதில் ஏதாவது தீங்குகள் இருப்பின் அதனால் பாதிப்பு எனக்கு ஏற்படட்டும், உங்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது'' என்று அபூபக்ர் (ரழி) கூறி, உள்ளே நுழைந்தார்கள். அக்குகையைச் சுத்தம் செய்து அதிலிருந்த ஓட்டைகளில் ஓர் ஓட்டையைத் தனது கீழாடையின் ஒரு பகுதியைக் கிழித்து அடைத்துவிட்டு மற்ற இரண்டு ஓட்டைகளை தனது கால்களைக் கொண்டு அடைத்துக் கொண்டார்கள். பின்பு, நபி (ஸல்) அவர்களை உள்ளே அழைக்கவே அவர்கள் உள்ளே நுழைந்து அபூபக்ரின் மடியில் தனது தலையை வைத்துத் தூங்கி விட்டார்கள். சிறிது நேரத்தில் அபூபக்ர் (ரழி) காலில் ஏதோவொன்று தீண்டிவிடவே வலியினால் வேதனையடைந்த அவர்கள், 'நபி (ஸல்) விழித்துக் கொள்வார்களே!' என்ற பயத்தில் அசையாமல் இருந்து விட்டார்கள். எனினும், வலியின் வேதனையால் அவர்களின் கண்களில் இருந்து கசிந்த நீர், நபி (ஸல்) அவர்களின் முகத்தை நனைத்தது. விழித்துப் பார்த்த நபி (ஸல்) ''அபூபக்ரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது'' என்று கேட்டார்கள். ''என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! என்னை ஏதோ தீண்டிவிட்டது'' என்று அவர்கள் கூறவே நபி (ஸல்) தங்களது உமிழ்நீரை அவ்விடத்தில் தடவ அவர்களது வலி தூரமானது. (ரஜீன், மிஷ்காத்)

இருவரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று இரவுகள் குகையில் தங்கியிருந்தனர். (ஃபத்ஹுல் பாரி)

அபூபக்ர் (ரழி) மகனார் அப்துல்லாஹ்வும் அங்கு சென்று இரவு தங்குவார். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அப்துல்லாஹ் புத்திசாலியான நல்ல அறிவுள்ள வாலிபராக இருந்தார். அவ்விருவருடன் தங்கிவிட்டு, இரவின் இறுதிப் பகுதியில் வெளியேறி, விடிவதற்குள் மக்கா வந்து விடுவார். அவ்விருவரைப் பற்றி ஏதாவது செய்திகளை மக்காவில் கேட்டால், அதை நினைவில் வைத்துக்கொண்டு இருள் சூழ்ந்தவுடன் இருவரிடமும் சென்று அந்தச் செய்தியை எடுத்துரைப்பார்.

அபூபக்ர் (ரழி) அவர்களின் அடிமையான ஆமிர் இப்னு ஃபுஹைரா (ரழி) அங்கு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்து விட்டு மாலை சாய்ந்தவுடன் அவ்விருவருக்கும் ஆட்டுப் பாலைக் கறந்து தருவார். இவ்வாறு மூன்று இரவுகள் அவர் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். (ஸஹீஹுல் புகாரி)

அதிகாலையில் அப்துல்லாஹ் இப்னு அபூபக்ர் (ரழி) 'ஸவ்ர்' குகையிலிருந்து வெளியேறி மக்காவிற்குச் செல்லும்போது ஆமிர் இப்னு ஃபுஹைரா (ரழி) தனது ஆடுகளை அப்துல்லாஹ்வின் காலடித் தடங்கள் மீது ஓட்டிச் சென்று அவற்றை அழித்துவிடுவார். (இப்னு ஹிஷாம்)

'நபி (ஸல்) தப்பித்துவிட்டார்கள்' என்ற செய்தியைக் காலையில் குறைஷிகள் உறுதியாக தெரிந்து கொண்டபோது அவர்களுக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது. நபி (ஸல்) அவர்களைப் பற்றி அலீ (ரழி) அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் சரியாக பதில் கூறாததால், அவர்களை கடுமையாக அடித்து கஅபாவுக்கு இழுத்து வந்து சில மணி நேரம் அங்கேயே பிடித்து வைத்திருந்தனர். (தாரீக் தபரீ)

அலீ (ரழி) அவர்களிடமிருந்து எந்த செய்தியும் கிடைக்காததால் அபூபக்ரின் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்து வெளியே வந்த அபூபக்ரின் மகளார் அஸ்மாவிடம் ''உனது தந்தை எங்கே?'' என்றனர். ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்குத் தெரியாது'' என்றார் அவர். இந்தப் பதிலைக் கேட்ட தீயவன் 'அபூஜஹ்ல்', அவரது கன்னத்தில் அறைந்தான். இதனால் அவன் காது தோடு அறுந்து கீழே விழுந்தது. (இப்னு ஹிஷாம்)

உடனே, அவசரமாக ஆலோசனை சபையைக் கூட்டிய குறைஷிகள் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ரையும் பிடிப்பதற்கு அனைத்து வழிகளையும் கையாள வேண்டுமென முடிவு செய்தனர். மக்காவிலிருந்து வெளியேறும் அனைத்துத் திசைகளையும் ஆயுதமேந்திய வீரர்களின் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கினார்கள். ''நபி (ஸல்) அபூபக்ர் (ரழி) இவ்விருவரில் ஒவ்வொருவரின் தலைக்கும் நூறு ஒட்டகங்கள் பரிசாக அளிக்கப்படும், இவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ யார் மக்காவிற்கு கொண்டு வருகிறார்களோ அவர் யாராக இருப்பினும் சரி அவருக்கு இந்தப் பரிசுஉண்டு'' என்று பொது அறிவிப்பு செய்தனர். (ஸஹீஹுல் புகாரி)

அப்போது கால்நடை வீரர்கள், குதிரை வீரர்கள், காலடி நிபுணர்கள் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ரையும் சல்லடை போட்டு மலைகள், பாலைவனங்கள், காடுகள், பள்ளத்தாக்குகள் என அனைத்து இடங்களிலும் வலை வீசி தேடினர். ஆனால், அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ளவர்களை அவர்களால் எப்படி கண்டுகொள்ள முடியும்?

எதிரிகள் நபி (ஸல்) அவர்களைத் தேடி அலைந்து அவர்கள் தங்கியிருந்த குகைவாசலை வந்தடைந்தனர். இதைப் பற்றி அபூபக்ர் (ரழி) கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் குகையில் தங்கியிருந்தபோது எனது தலையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது எதிரிகளின் பாதங்கள் தெரிந்தன. நான் அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் யாராவது தங்களது பார்வையைத் தாழ்த்தினால் நம்மை பார்த்துவிடுவார்களே'' என்று கூறினேன். நபி (ஸல்) ''அபூபக்ரே! சும்மா இருங்கள். நம் இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றான்.'' என்றும் (மற்றொரு அறிவிப்பில்) ''அபூபக்ரே! அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கும் இருவரைப் பற்றி உமது எண்ணமென்ன! (அப்படியிருக்க நாம் ஏன் பயப்படவேண்டும்?)'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய அல்லாஹ் மாபெரும் அற்புதமாகும் இது. சில எட்டுகளே நபி (ஸல்) அவர்களுக்கும் எதிரிகளுக்கும் இருந்தன. எனினும், தேடி வந்தவர்களால் நபி (ஸல்) அவர்களையும், அவர்களுடைய தோழரையும் பார்க்க முடியாமல் திரும்பி விட்டனர்.

மதீனாவின் வழியினிலே

குறைஷிகளின் வேகம் அடங்கியது. அவர்களின் தேடும் வேட்டை தணிந்தது. நபி (ஸல்) அவர்களைக் கைது செய்ய வேண்டுமென்ற அவர்களது கோபத் தீ அணைந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் அலைந்து திரிந்து தேடியும் எவ்விதப் பலனுமில்லாமல் போனது. இதை உணர்ந்த பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தனது தோழருடன் குகையிலிருந்து வெளியேறி மதீனா செல்ல ஆயத்தமானார்கள்.

மதீனா வரை தங்களுக்கு வழிகாட்டியாக அப்துல்லாஹ் இப்னு உரைக்கித் லைஸி என்பவரை நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரழி) அவர்களும் கூலிக்குப் பேசியிருந்தார்கள். இவர் முஸ்லிமாக இல்லாமல் குறைஷிகளின் மதத்தை பின்பற்றியவராக இருந்தும், இவர்மீது நம்பிக்கை கொண்டு தங்களது இரண்டு ஒட்டகங்களையும் அவரிடம் ஒப்படைத்தார்கள். மேலும், மூன்று இரவுகள் கழித்து 'ஸவ்ர்' மலையின் குகைக்கு வருமாறு அவரிடம் நேரம் குறித்திருந்தார்கள்.

ஹிஜ்ரி முதல் ஆண்டு செப்டம்பர் 16 கி.பி. 622, ரபீவுல் அவ்வல் முதல் பிறை திங்கள் இரவு அப்துல்லாஹ் இப்னு உரைக்கித் இரண்டு ஒட்டகங்களுடன் அவர்களிடம் வந்து சேர்ந்தார். இதற்கு முன் நபி (ஸல்) அபூபக்ரிடம் அவரது வீட்டில் ஆலோசனை செய்து கொண்டிருந்த போது ''அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இதோ எனது இரண்டு ஒட்டகங்களில் சிறந்ததை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று அபூபக்ர் (ரழி) கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) ''அதற்குரிய கிரயத்திற்கு பகரமாக நான் அதை வாங்கிக் கொள்கிறேன்'' என்று கூறியிருந்தார்கள். அபூபக்ரின் மகளார் அஸ்மா (ரழி) இருவருக்கும் பயண உணவை ஒரு துணியில் மடித்து எடுத்து வந்தார்கள். ஆனால், அதைத் தொங்க விடுவதற்குக் கயிறு எடுத்துவர மறந்து விட்டார்கள்.

அவ்விருவரும் பயணமானபோது உணவு மூட்டையை தொங்கவிட கயிறு இல்லாததால் தங்களது இடுப்பிலுள்ள கயிற்றை அவிழ்த்து அதை இரண்டாகக் கிழித்து ஒன்றின் மூலம் உணவு மூட்டையை வாகனத்தில் கட்டிவிட்டு, மற்றொன்றை தனது இடுப்பில் கட்டிக் கொண்டார்கள். எனவேதான் அஸ்மாவிற்கு ''தாத்துன் நித்தாகைன்'' -இரட்டைக் கச்சுடையாள்- என்று பெயர் வந்தது. (ஸஹீஹுல் புகாரி)

அல்லாஹ்வின் தூதரும் அபூபக்ரும் அவர்களுடன் ஆமிர் இப்னு புஹைராவும் பயணமானார்கள். வழிகாட்டியான அப்துல்லாஹ் இப்னு உரைக்கித் கடற்கரை வழியாக அவர்களை அழைத்துச் சென்றார். யாரும் நபி (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து விடக்கூடாது என்பதற்காக முற்றிலும் மாறுபட்ட வழியில் அழைத்துச் சென்றார். முதலில் தெற்கு நோக்கி யமன் நாட்டை நோக்கி செல்லும் பாதையில் சென்று, பின்பு கடற்கரையை நோக்கி மேற்கு வழியாக சென்று, பின்பு அங்கிருந்து செங்கடலின் கரையை நோக்கி வடக்குப் பக்கமாக அழைத்துச் சென்றார்.

நபி (ஸல்) வழியில் எந்தெந்த இடங்களைக் கடந்து சென்றார்கள் என்பது பற்றி இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுவதைப் பார்ப்போம்:

இப்னு உரைகித், நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ரையும் மக்காவின் தெற்குத் திசையில் அழைத்துச் சென்று கடற்கரை வந்தவுடன், 'உஸ்ஃபான்' என்ற ஊரின் எல்லை வழியாக சென்று 'அமஜ்' என்ற ஊரின் எல்லையை அடைந்தார். பின்பு அங்கிருந்து குறுக்கு வழியில் 'குதைத்' என்ற ஊருக்கு வந்து, பின்பு 'கர்ரார்', அங்கிருந்து 'ஸனியத்துல் மர்ரா', அங்கிருந்து 'லிக்ஃப்', அங்கிருந்து 'லிக்ஃப்' எனும் காட்டு வழியாக அழைத்துச் சென்றார். பின்பு 'மிஜாஜ்' காட்டு வழியாக 'மிஜாஹ்' வந்து, பின்பு 'துல்குழுவைன்', பின்பு 'தீ கஷ்ர்', 'ஜதாஜித்', 'அஜ்ரத்' வழியாக வந்து அங்கிருந்து 'திஃன்' காட்டு வழியாக 'அபாபீத்' சென்றடைந்து பின்பு அங்கிருந்து 'ஃபாஜா' சென்றடைந்து ஃபாஜாவிலிருந்து 'அர்ஜ்' என்ற இடத்தில் தங்கி பின்பு 'ரகூபா' என்ற ஊரின் வலது புறம் உள்ள 'ஸனியத்துல் ஆம்ர்' என்ற ஊரின் வழியாக சென்று 'ஃம்' என்ற பள்ளத்தாக்கில் இறங்கி குபாவுக்கு அழைத்துச் சென்றார். (இப்னு ஹிஷாம்)

வழியில் நடந்த சம்பவங்களில் சிலவற்றை நாம் பார்ப்போம்:

1) அபூபக்ர் (ரழி) கூறுகிறார்கள்: அன்று இரவும் அடுத்த நாளும் நாங்கள் சென்று கொண்டிருந்தபோது மதிய நேரத்தை அடைந்தவுடன் வெயிலின் காரணமாக, பாதை ஆள் நடமாட்டமின்றி இருந்தது. மிகப் பெரிய உயரமான பாறை ஒன்று தென்படவே அதன் அருகில் சென்றோம். நல்ல நிழல் இருந்தது. நபி (ஸல்) தூங்குவதற்காக அங்கு இடத்தைச் சரிசெய்து விரிப்பை விரித்தேன். பின்பு ''அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தூங்குங்கள். நான் உங்களைச் சுற்றி பார்த்துக் கொள்கிறேன்'' என்று கூறினேன். நபி (ஸல்) தூங்கிக் கொண்டார்கள்.

நான் அவர்களை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஆட்டிடையர் தன்னுடைய ஆட்டு மந்தையை மேய்த்துக் கொண்டு நிழல் தேடி அப்பாறையை நோக்கி வந்தார். நான் அவரிடம் ''நீ யாரின் அடிமை?'' என்று கேட்டவுடன் அவர் ''மக்காவைச் சேர்ந்த அல்லது மதீனாவைச் சேர்ந்த ஒருவரின் பெயரைக் கூறி அவருடைய அடிமை'' என்று கூறினார். நான் அவரிடம் ''உனது ஆட்டு மந்தையில் பால் கிடைக்குமா?'' என்றேன். அவர் ''கிடைக்கும்'' என்றார். ''கறந்து தரமுடியுமா?'' என்றேன். அவர் ''முடியும்'' என்றார். பின்பு ஓர் ஆட்டைப் பிடித்து வரவே, நான் அவரிடம் ''மண், முடி அசுத்தத்திலிருந்து மடியை சுத்தம் செய்துகொள்'' என்று கூறினேன். அவர் தடிப்பமான பாத்திரத்தில் கொஞ்சம் பால் கறந்து கொடுத்தார். நான் நபி (ஸல்) தண்ணீர் குடிப்பதற்காகவும், ஒளு செய்வதற்காகவும் எடுத்து வந்த சிறிய பாத்திரத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீரைப் பாலில் கலந்து, பால் குளிர்ந்தவுடன் நபி (ஸல்) அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்கலாம் என்றிருந்தேன். ஆனால், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்ப மனமில்லாததால் அவர்கள் விழிக்கும் வரை நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

அவர்கள் விழித்தவுடன் ''அல்லாஹ்வின் தூதரே! இந்த பாலைக் குடியுங்கள்'' என்றேன். நான் திருப்தியடையும் வரை நபி (ஸல்) பாலைக் குடித்தார்கள். பின்பு நபி (ஸல்) ''என்ன! பயணிக்க இன்னும் நேரம் வரவில்லையா?'' என்று கேட்கவே ''ஆம்! நேரம் வந்துவிட்டது'' என்று கூறினேன். பின்பு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். (ஸஹீஹுல் புகாரி)

2) அபூபக்ர் (ரழி) பொதுவாக நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் செல்லும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் வயோதிக தோற்றமுடையவர்களாக இருந்தார்கள். நபி (ஸல்) வாலிப தோற்றமுடையவர்களாகவும் மக்களுக்கு அறிமுகமற்றவர்களாகவும் இருந்தார்கள். அப்போது இடையில் யாராவது அபூபக்ர் (ரழி) அவர்களைப் பார்த்து ''உனக்கு முன் செல்பவர் யார்?'' என்று கேட்டால் ''எனக்கு வழி காட்டுபவர்'' என்று கூறுவார்கள். கேட்டவர் பயணப் பாதையை காட்டக் கூடியவர் என்று விளங்கிக் கொள்வார். அபூபக்ர் (ரழி) அவர்களோ ''நன்மைக்கு வழி காட்டுபவர்'' என்ற பொருளை மனதில் எண்ணிக் கொள்வார்கள். (ஸஹீஹுல் புகாரி)

3) இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் குஜாம் கிளையைச் சேர்ந்த 'உம்மு மஅபத்' என்ற பெண்ணின் இரண்டு கூடாரங்களைக் கண்டார்கள். அந்தக் கூடாரங்கள் மக்காவிலிருந்து 130 கி.மீ. தூரத்தில் உள்ள 'குதைத்' என்ற ஊரின் எல்லையில் 'முஷல்லல்' என்ற இடத்தில் இருந்தது. இந்த 'உம்மு மஅபத்' வீரமும், துணிவுமிக்கவர் ஆவார். இவர் எப்போதும் தனது கூடாரத்தின் வெளியில் அமர்ந்துகொண்டு தன்னைக் கடந்து செல்பவர்களுக்கு உணவும், நீரும் வழங்கி வருவார். அவரைப் பார்த்த நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரும் ''உன்னிடம் எதுவும் சாப்பிட இருக்கிறதா?'' என்று கேட்டார்கள். அவர் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஏதாவது இருப்பின் நான் உங்களுக்கு விருந்தளிப்பதில் குறைவு செய்ய மாட்டேன். ஆட்டு மடியிலும் பால் இல்லையே! இந்த ஆண்டு மிகப் பஞ்சமாக இருக்கின்றது'' என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்களின் பார்வை கூடாரத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஓர் ஆட்டின் மீது பட்டது. ''உம்மு மஅபதே! இது என்ன ஆடு?'' என்று கேட்டார்கள். அவர் ''இது ஆட்டு மந்தையுடன் சேர்ந்து மேய்ந்துவர முடியாத அளவுக்கு பலவீனமான ஆடு'' என்றார். ''அது பால் தருமா?'' என்று நபி (ஸல்) கேட்டார்கள். ''அது மிக மெலிந்ததாயிற்றே!'' என்று அப்பெண் கூறினார். ''நான் அந்த ஆட்டில் பால் கறந்துகொள்ள எனக்கு அனுமதியளிக்கிறாயா?'' என்று நபி (ஸல்) கேட்க, ''எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டுமாக! அதில் பால் இருக்கிறது என்று நீங்கள் கருதினால் தாராளமாக கறந்து கொள்ளுங்கள்'' என்றார் அப்பெண்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) 'பிஸ்மில்லாஹ்' (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறி அல்லாஹ்விடம் பிரார்தித்தார்கள். அல்லாஹ்வின் அருளால் ஆட்டின் மடி பாலால் நிரம்பி சொட்டியது. ஒரு நடுத்தரமான பாத்திரத்தை எடுத்துவரக் கூறி அதில் பால் கறந்தார்கள். பாத்திரம் நிரம்பவே முதலில் அப்பெண்மணிக்கு குடிக்கக் கொடுத்தார்கள். அவர் குடித்து தாகம் தீரவே பின்பு தனது தோழர்களுக்குக் கொடுத்தார்கள். அவர்களுக்குப் பின்பு நபி (ஸல்) குடித்தார்கள். பின்பு மற்றொரு முறை அந்த பாத்திரம் நிரம்பப் பால் கறந்து அப்பெண்மணியிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.

சிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவர் அபூ மஅபத், மெலிந்த நடக்க இயலாத பலவீனமான ஆடுகளை ஓட்டிக்கொண்டு அங்கு வந்தார். அங்கு பால் கறக்கப்பட்டிருப்பதைப் பார்த்தவுடன் ஆச்சரியமடைந்து ''இந்தப் பால் உனக்கு எங்கிருந்து கிடைத்தது? வீட்டில் பால் சுரக்கும் ஆடு இல்லை மற்ற ஆடுகளும் தூரமாக இருந்தன எப்படி உனக்கு பால் கிடைக்க முடியும்?'' என்று கேட்டார். அதற்கு அப்பெண் ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒரு நல்ல பாக்கியம் பெற்ற மனிதர் இங்கு வந்தார். அவர் இப்படி இப்படியெல்லாம் பேசினார். அவரின் நிலை இப்படி இப்படி இருந்தது'' என்று வருணித்தார். அதற்கு அவர் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! குறைஷிகள் தேடும் மனிதராகத்தான் அவர் இருக்க வேண்டும் என்று கூறி அவரைப் பற்றி முழுமையாக எனக்கு விவரித்துக் கூறு'' என்றார்.

அப்பெண், நபி (ஸல்) அவர்களின் அழகிய பண்புகளை கேட்பவர் கண்முன் காண்பது போன்று வருணித்துக் கூறினார். (இன்ஷா அல்லாஹ்! இந்த நூலின் இறுதியில் அந்த வருணனையை நாம் காண்போம்.) அப்போது அபூ மஅபத் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் குறைஷிகள் தேடும் மனிதர்தான். குறைஷிகள் இவரைப் பற்றி ஏராளம் கூறியிருக்கின்றனர். நான் அவருடன் தோழமை கொள்ள வேண்டுமென்று திட்டமாக நினைத்திருந்தேன். அதற்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நான் அதைச் செய்வேன்'' என்றார்.

இந்நேரத்தில், மக்காவில் உள்ளவர்களோ உயர்ந்த சப்தம் ஒன்றைச் செவிமடுத்தார்கள். ஆனால், அந்த சப்தம் கொடுப்பவரை அவர்கள் பார்க்க முடியவில்லை. அந்த சப்தமாவது:

''அர்ஷின் அதிபதியான அல்லாஹ் நற்கூலி வழங்கட்டும்!

உம்மு மஅபதின் கூடாரத்தில் தங்கிச் சென்ற இரு தோழர்களுக்கு.

அவர்கள் நலமுடனே தங்கி நலமுடனே போனார்கள்.

முஹம்மதுக்கு தோழராகும் பாக்கியம் பெற்றவர் வெற்றியடைந்தார்.

குஸை வம்சமே! என்ன கைசேதம்! தலைமையையும் சிறப்பையும்

உங்களை விட்டுவிட்டு அல்லாஹ் அவருக்கு வழங்கி விட்டான்.

கஅபு குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் பல! அவருடைய திருமதியின் இல்லம் அருமையானது!

அது இறைவிசுவாசிகளுக்கு தங்குமிடமானது!

உங்கள் சகோதரியிடம் ஆடு, பாத்திரம் பற்றி வினவுங்கள்!

நீங்கள் ஆட்டிடம் கேட்டால் அதுவும் சான்று பகரும்!

அஸ்மா பின்த் அபூபக்ர் (ரழி) கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் எங்கு சென்றார்கள் என்று எங்களுக்குத் தெரியாமல் இருந்தது. அப்போது மக்காவின் கீழ் பகுதியிலிருந்து ஒரு ஜின் இக்கவிதைகளைப் பாடியது. மக்கள் சப்தம் வரும் திசையை நோக்கி சப்தத்தைக் கேட்டுக் கொண்டே சென்றார்கள். ஆனால் பாடுவது யார்? என்று தெரியவில்லை. பின்பு அந்த சப்தம் மக்காவின் மேல்புறத்தின் வழியாக மறைந்துவிட்டது. அந்த ஜின்னின் சப்தத்தைக் கேட்டபோது நபி (ஸல்) மதீனாவை நோக்கி சென்றிருக்கலாம் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம். (ஜாதுல் மஆது, முஸ்தத்ரகுல் ஹாகிம்)

4) வழியில் சுராக்கா இப்னு மாலிக் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ரையும் கைது செய்ய வேண்டும் என்று பின்தொடர்ந்தார். இதைப் பற்றி சுராக்கா கூறுவதை நாம் கேட்போம்: நான் எனது கூட்டத்தினராகிய முத்லஜின் அவையில் உட்கார்ந்திருந்தேன். அப்போது எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் எங்களிடம் விரைந்து வந்து ''கடற்கரையில் சில மனிதர்களைப் பார்த்தேன். அவர்கள் முஹம்மதும் அவரது தோழர்களுமாகத்தான் இருக்க வேண்டும்'' என்று கூறினார். அது உண்மையில் அவர்கள்தான் என்பதை நான் விளங்கிக் கொண்டேன். இருந்தும் அதை வெளிக்காட்டாமல் ''நீ பார்த்தது அவர்களல்ல! நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க, எங்கள் கண்முன் சென்ற இரண்டு நபர்களைத்தான் நீயும் பார்த்திருக்கிறாய்! நீ கூறுவது போன்று அவர்கள் முஹம்மதும் அவரது தோழர்களும் அல்லர்'' என்று கூறி மழுப்பினேன். பிறருக்கு சந்தேகம் வராமலிருக்க சபையில் சிறிது நேரம் அமர்ந்திருப்பது போல் இருந்துவிட்டு எனது வீட்டுக்கு வந்தேன்.

எனது அடிமைப் பெண்ணிடம் எனது குதிரையைத் தூரத்தில் உள்ள ஒரு மேட்டுக்குக் கொண்டு வந்து என்னை எதிர்பார்த்திருக்கும்படி கூறினேன். பின்பு எனது ஈட்டியை எடுத்துக் கொண்டு வீட்டின் கொள்ளைப் புறமாக வெளியேறி அந்த ஈட்டியை பூமியில் தேய்த்தவனாக எனது குதிரையில் ஏறினேன். நபி (ஸல்) அவர்களுக்கு நெருக்கத்தில் வந்தவுடன் எனது குதிரை தடுமாறவே நான் குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டேன். பின்பு எழுந்து, எனது அம்புக் கூட்டிலிருந்து நான் அவர்களுக்குத் தீங்கு செய்யட்டுமா? வேண்டாமா? என்று குறிபார்க்கும் எண்ணத்தில் ஓர் அம்பை எடுத்தபோது ''வேண்டாம்'' என்ற அம்பு வந்தது. அதில் எனக்கு திருப்தி ஏற்படாததால் மீண்டும் குதிரையில் ஏறி அவர்களை நெருங்க ஆரம்பித்தேன். நபி (ஸல்) ஓதும் சப்தத்தை கேட்கும் அளவிற்கு நான் அவர்களை நெருங்கி விட்டேன். நபி (ஸல்) திரும்பி பார்க்காமல் சென்றார்கள். ஆனால், அபூபக்ரோ அதிகம் அதிகம் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்கள். அப்போது எனது குதிரையின் முன்னங்கால்கள் முழங்கால் வரை பூமியில் புதைந்து கொண்டன. நான் குதிரையிலிருந்து கீழே விழுந்தேன்.

பின்பு எழுந்து, எனது குதிரையை விரட்டவே, அது மிகச் சிரமத்துடன் கால்களை வெளியே எடுத்தது. அது நேராக நின்றவுடன் வானத்திலிருந்து புகை போன்று வந்த ஒரு புழுதி அதன் முன்னங்கால்களில் காயத்தை ஏற்படுத்தியது. நான் என்ன செய்யலாம் என்று குறிபார்க்க அம்பை எடுத்தபோது எனக்குப் பிடிக்காத அம்பே இப்போதும் வந்தது. நான் அவர்களை எனக்கு பாதுகாப்புத் தரக்கோரி கூவி அழைத்தேன். எனது சப்தத்தைக் கேட்டு அவர்கள் நின்று விட்டார்கள். நான் குதிரையில் ஏறி அவர்களிடம் வந்தேன். நான் அவர்களை நெருங்குவதற்கு தடை ஏற்படுவதிலிருந்தே நிச்சயமாக நபி (ஸல்) அவர்களின் மார்க்கம் மிகைத்தே தீரும் என்று உறுதிகொண்டேன்.

நபி (ஸல்) அவர்களிடம் ''உங்களது கூட்டத்தினர் உங்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குச் சன்மானம் உண்டு என அறிவிப்புச் செய்திருக்கிறார்கள். எனவே, மக்கள் உங்களை பிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற வெறியில் உள்ளனர்'' என்று கூறினேன். நான் அவர்களிடம் என்னிடம் இருந்த பிரயாண உணவையும், சாமான்களையும் அவர்கள் எடுத்துக் கொள்வதற்காக அவர்கள் முன் வைத்தேன். ஆனால், அவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. மேற்கொண்டு என்னிடம் எதுவும் விசாரிக்கவும் இல்லை. இருப்பினும் ''எங்களின் செய்திகளை மறைத்துவிடு'' என்று மட்டும் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் எனக்காக பாதுகாப்புப் பத்திரம் ஒன்று கொடுக்குமாறு கூறினேன். நபி (ஸல்) ஆமிர் இப்னு புஹைராவிடம் கூறவே அவர் எனக்கு சிறிய துண்டுத் தோலில் எழுதிக் கொடுத்தார். பின்பு நபி (ஸல்) சென்று விட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அபூபக்ர் (ரழி) அறிவிக்கின்றார்கள்: நாங்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரிகள் எங்களை வலைவீசித் தேடினர். ஆனால், சுராக்கா இப்னு மாலிக் இப்னு ஜுஃஷுமைத் தவிர வேறு எவராலும் எங்களைக் கண்டுகொள்ள முடியவில்லை. சுராக்கா எங்களுக்கு அருகாமையில் வந்தவுடன் ''அல்லாஹ்வின் தூதரே! இதோ நம்மை தேடி வந்து விட்டார்கள்'' என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,

''நீங்கள் கவலைப்படாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்'' (அத்தவ்பா 9:40) என்று கூறினார்கள்.

சுராக்கா எங்களை விட்டு திரும்பியபோது, மக்கள் எங்களைத் தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்களிடம் உங்களுக்காக நான் இங்கு எல்லா இடங்களிலும் தேடிவிட்டேன். நீங்கள் இங்கு தேடவேண்டிய அவசியமில்லை என்று கூறி மக்களைத் திசை திருப்பினார். காலையில் நபி (ஸல்) அவர்களை ஒழிக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தவர் மாலையில் நபி (ஸல்) அவர்களின் பாதுகாவலராக மாறினார். (ஜாதுல் மஆது)

5) பயண வழியில் நபி (ஸல்) புரைதா இப்னு ஹுஸைப் அஸ்லமியை சந்தித்தார்கள். அவருடன் அவருடைய கிளையினரில் எண்பது குடும்பங்களையும் சந்தித்தார்கள். அவருக்கு இஸ்லாமை எடுத்துக் கூறவே அவரும் அவரது கூட்டத்தாரும் இஸ்லாமைத் தழுவினர். பின்பு நபி (ஸல்) இஷா தொழுகையைத் தொழ வைக்க, அவர்கள் அனைவரும் இஷா தொழுதார்கள். புரைதா (ரழி) தங்களது கூட்டத்தினரிடமே தங்கியிருந்து விட்டு உஹுத் போர் நடந்த பின்பு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்.

புரைதாவின் மகன் அப்துல்லாஹ் (ரழி) அறிவிக்கின்றார்: நபி (ஸல்) அவர்களின் வழக்கம் நல்ல பெயர்களைக் கொண்டு மகிழ்ச்சியடைவார்கள். ஆனால், சகுனம் பார்க்க மாட்டார்கள். நபி (ஸல்) மதீனாவை நோக்கி ஹிஜ்ரா சென்று கொண்டிருக்கும்போது எனது தந்தை புரைதா தங்களது குடும்பத்தினர் பனூ சஹ்முடன் எழுபது வாகனங்களில் வந்து கொண்டிருந்தார். அவரை சந்தித்த நபி (ஸல்) அவர்கள் ''நீர் எந்தக் கிளையைச் சேர்ந்தவர்?'' என்று கேட்க, அவர் ''அஸ்லம் கிளையைச் சேர்ந்தவர்'' என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அபூபக்ரிடம் ''நாம் பாதுகாப்பு பெற்றுவிட்டோம்'' என்றார்கள். (ஏனெனில் 'அஸ்லம்' என்றால் 'மிகுந்த பாதுகாப்புப் பெற்றவர்' என்பது பொருள்) பின்பு நபி (ஸல்), அவரிடம் ''நீர் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்?'' என்று கேட்டார்கள். அவர் ''சஹம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்'' என்றார். நபி (ஸல்) அபூபக்ரிடம் ''உமது அம்பு வெளியாகி விட்டது'' (எதிரிகளிடமிருந்து நாம் தப்பித்துக் கொண்டோம்) என்று கூறினார்கள்.

6) நபி (ஸல்) வழியில் அஸ்லம் கிளையைச் சேர்ந்த அபூஅவ்ஸ் தமீம் இப்னு ஹஜரை அல்லது அபூ தமீம் அவ்ஸ் இப்னு ஹஜரைச் சந்தித்தார்கள். அவர் 'அர்ஜ்' என்ற இடத்தில் ஜுஹ்ஃபா, ஹர்ஷா என்ற இரண்டு மலைகளுக்கிடையில் தனது கொழுத்த ஒட்டகங்களை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரும் ஒரே ஒட்டகத்தில் இருந்தார்கள். காரணம், நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அபூபக்ர் (ரழி) அவர்களைத் தவிர மற்ற இருவரும் அவர்களுடைய ஒட்டகங்களுடன் வர தாமதமாகி விட்டதால் இவர்கள் இருவரும் ஒரே ஒட்டகத்தில் வந்தார்கள். அப்போது அபூஅவ்ஸ் தனது ஒட்டகங்களில் நல்ல ஆண் ஒட்டகை ஒன்றை அபூபக்ருக்கு வழங்கி, அதில் பயணிக்க வைத்தார்கள். பின்பு தனது அடிமை மஸ்வூதையும் அவர்களுடன் வழிகாட்டுவதற்காக அனுப்பி வைத்தனர். மேலும், தனது அடிமையிடம் ''யாரும் செல்லாத தனி வழியில் இவர்களை அழைத்துச் செல். இவர்களை விட்டு எங்கும் நீ பிரிந்து சென்றுவிட வேண்டாம்'' என்று கூறினார். (அஸதுல் காபா)

அந்த அடிமை நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரழி) அவர்களையும் பத்திரமாக அழைத்து வந்து மதீனாவில் சேர்த்தார். பின்பு நபி (ஸல்) அந்த மஸ்வூதிடம் ''உமது எஜமானரிடம் தனது ஒட்டகங்களின் கழுத்துகளில் இரண்டு வளையங்களைக் கொண்டு அடையாளமிடச் சொல்!'' என்று கூறி அவரை அவரது எஜமானரிடம் அனுப்பி வைத்தார்கள். உஹுத் போர் நடந்தபோது மக்காவிலிருந்து இணைவைப்பவர்கள் வரும் செய்தியை 'அவ்ஸ்' தனது அடிமை மஸ்வூதை அர்ஜிலிருந்து கால்நடையாகவே அனுப்பி நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்து வரச் செய்தார். உஹுத் போர் நடந்து நபி (ஸல்) மதீனாவிற்குத் திரும்பியவுடன் இவர் இஸ்லாமை ஏற்று அர்ஜிலேயே வசித்து வந்தார். (அஸதுல் காபா)

7) 'பத்தன் ஃம்' என்ற இடத்தில் ஷாம் நாட்டிற்கு வியாபாரத்திற்காக சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த ஜுபைர் (ரழி) அவர்களையும், அவர்களுடன் இருந்த மற்ற முஸ்லிம் வியாபாரிகளையும் சந்தித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கும் அபூபக்ருக்கும் வெண்மையான ஆடைகளை ஜுபைர் அணிவித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

'குபா'வில்

நபித்துவத்தின் 14 வது ஆண்டு, அதாவது ஹிஜ்ராவின் முதல் ஆண்டு ரபீவுல் அவ்வல் பிறை 8 திங்கள் பகல் கி.பி. 622 செப்டம்பர் 23ல் நபி (ஸல்) குபா வந்திறங்கினார்கள். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)

உர்வா இப்னு ஜுபைர் (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) மக்காவிலிருந்து வெளியேறிவிட்ட செய்தியை மதீனாவில் வாழும் முஸ்லிம்கள் கேட்டவுடன் ஒவ்வொரு நாள் காலையிலும் மதீனாவிற்கு வெளியில் உள்ள 'ஹர்ரா'' என்ற இடத்திற்கு வந்து காத்திருப்பார்கள். மதிய வெயில் கடுமையானவுடன் மீண்டும் மதீனாவிற்கு வந்து விடுவார்கள். ஒருநாள் மிக நீண்ட நேரம் எதிர்பார்த்திருந்து விட்டு மதீனாவுக்குத் திரும்பினார்கள். அது சமயம், யூதர்களில் ஒருவன் ஏதோ ஒன்றைப் பார்ப்பதற்காக தனது கோட்டை மீது ஏறினான். நபி (ஸல்) அவர்களையும் நபித் தோழர்களையும் வெண்மையான ஆடை அணிந்து வருவதைப் பார்த்தவுடன் ''ஓ அரபுகளே! நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த பாக்கியம் இதோ வருகிறது!'' என்று உயர்ந்த சப்தத்தில் கூறினான். இதைக் கேட்டவுடன் முஸ்லிம்கள் தங்களின் ஆயுதங்களைப் பாய்ந்து எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களை வரவேற்க 'ஹர்ரா' நோக்கி ஓடினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இப்னுல் கய்யூம்'' (ரஹ்) கூறுகிறார்: மக்கள் பரபரப்புடன் அங்குமிங்கும் ஓடுவதாலும், வரவேற்கும் உற்சாகத்தில் குரலை உயர்த்திப் பேசுவதாலும், ஏதோ ஒன்று வேகமாக விழுந்தது போன்ற பலத்த சப்தம் கேட்டது. அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பம் வசிக்கும் பகுதியிலிருந்து தக்பீர் முழக்கம் (அல்லாஹ் மிகப் பெரியவன் என்ற சப்தம்) விண்ணைப் பிளந்தது. நபி (ஸல்) அவர்களுடைய வருகையின் மகிழ்ச்சியால் முஸ்லிம்கள் தக்பீர் முழங்கினர். நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க விரைந்தனர். வாழ்த்துக் கூறி சூழ்ந்து நின்று ''வருக! வருக!'' என வரவேற்றனர். நபி (ஸல்) அமைதி தவழ வந்து கொண்டிருந்தார்கள். அந்நேரத்தில்,

நிச்சயமாக அல்லாஹ் அவரைப் பாதுகாப்பவனாக இருக்கின்றான். அன்றி, ஜிப்ரயீலும், நம்பிக்கையாளர்களிலுள்ள நல்லடியார்களும், இவர்களுடன் (மற்ற) வானவர்களும் (அவருக்கு) உதவியாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 66:4)

என்ற வசனம் இறங்கியது.

உர்வா இப்னு ஜுபைர் கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களை வரவேற்றபோது அவர்கள் மக்களுடன் வலது புறமாக சென்று அம்ர் இப்னு அவ்ஃப் கிளையாருடன் தங்கினார்கள். அது ரபீவுல் அவ்வல் மாதத்தின் முதல் திங்கட்கிழமையாகும். நபி (ஸல்) அமைதியாக அமர்ந்து கொள்ளவே அபூபக்ர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று கொண்டார்கள். அன்சாரிகளில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்திராதவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூறுவதற்காக வந்தபோது அபூபக்ரை நபியென நினைத்து அவருக்கு ஸலாம் கூறிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் மீது வெயில் படவே அபூபக்ர் தன்னுடைய போர்வையால் நபி (ஸல்) அவர்களுக்கு நிழல் தந்தார்கள். அப்போதுதான் நபி (ஸல்) யார்? என்பதை மக்கள் விளங்கிக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மதீனாவில் எங்கு பார்த்தாலும் நபி (ஸல்) அவர்களை வரவேற்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதுபோன்ற ஒரு நாளை வரலாற்றில் மதீனா கண்டதில்லை. நபி (ஸல்) குபாவில் குல்ஸும் இப்னு ஹத்ம்' என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார்கள். சிலர் ஸஅது இப்னு கைஸமா வீட்டில் தங்கியிருந்தார்கள் என்றும் கூறுகின்றனர். ஆனால், முந்திய கூற்றே வலுவானதாகும்.

அலீ இப்னு அபூதாலிப் (ரழி) மக்காவில் மூன்று நாள் தங்கியிருந்தார்கள். நபி (ஸல்) தன்னிடம் கொடுத்துவிட்டு சென்ற அமானிதங்களை' உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு கால்நடையாகவே மதீனா புறப்பட்டார்கள். பின்பு, குபா வந்தடைந்து நபி (ஸல்) தங்கியிருந்த குல்ஸும் இப்னு ஹத்ம் வீட்டில் தங்கினார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

நபி (ஸல்) குபாவில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நான்கு நாட்கள் தங்கியிருந்தார்கள். (இப்னு ஹிஷாம்)

அப்போது குபாவில் ஒரு பள்ளியை நிர்மாணித்து அதில் தொழ வைத்தார்கள். ஐந்தாவது நாள், அதாவது வெள்ளிக்கிழமை அன்று அல்லாஹ்வின் உத்தரவு வரவே அங்கிருந்து புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் வாகனத்தில் அவர்களுக்குப் பின்னால் அபூபக்ர் (ரழி) அமர்ந்திருந்தார்கள்.

நபி (ஸல்) தான் வரும் செய்தியை தனது தாய்மாமன்மார்களுக்கு, அதாவது, நஜ்ஜார் கிளையினருக்கு சொல்லி அனுப்பினார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களை வரவேற்பதற்காக வாட்களை அணிந்து வந்தனர். அவர்கள் சூழ்ந்து செல்ல, நபி (ஸல்) மதீனா நோக்கி பயணமானார்கள். (ஸஹீஹுல் புகாரி)

குபாவில் கட்டப்பட்ட பள்ளிதான் நபித்துவத்திற்கு பிறகு இறையச்சத்துடன் கட்டப்பட்ட முதல் பள்ளியாகும். நபி (ஸல்) பயணித்துக் கொண்டிருக்கும்போது ஸாலிம் இப்னு அவ்ஃப் கிளையினர் வசிக்கும் இடம் வந்தபோது ஜுமுஆ' தொழுகைக்கான நேரமும் ஆகிவிட்டதால் 'பத்னுல் வாதி' என்ற இடத்தில் அனைவரையும் ஒன்று சேர்த்து நபி (ஸல்) ஜுமுஆ தொழுகை நடத்தினார்கள். (அந்த இடத்தில் இன்று பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது) மொத்தம் நூறு நபர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

மதீனாவில்

ஜுமுஆ தொழுகைக்குப் பின்பு நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு, மதீனாவிற்குள் நுழைந்தார்கள். இதற்கு முன் 'யத்ரிப்' என்று பெயர் கூறப்பட்டு வந்த அந்த நகரம் அன்றிலிருந்து 'மதீனத்துர் ரஸுல்' - இறைத்தூதரின் பட்டணம்- என்று அழைக்கப்பட்டது. இதையே சுருக்கமாக இன்று 'அல்-மதீனா' என்று கூறப்படுகிறது. நபி (ஸல்) மதீனாவிற்குள் நுழைந்த அந்நாள் அம்மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிறைந்த நாளாக இருந்தது. மதீனாவின் தெருக்களிலும், வீடுகளிலும் இறைப்புகழும், இறைத்துதியும் முழங்கப்பட்டன. அன்சாரிகளின் சிறுமிகள் மிக ஆனந்தத்துடன் சில கவிகளைப் பாடி குதூகலமடைந்தனர்.

''நமக்கு முழு நிலா தோன்றியது.

ஸனியாத்தில் விதா என்னும் மலைப்பாங்கான இடத்திலிருந்து,

அல்லாஹ்வுக்காக அழைப்பவர் அழைக்கும்போதெல்லாம்

நாம் நன்றி செலுத்துவது கடமையாயிற்று.

எங்களுக்கு அனுப்பப்பட்டவரே!

பின்பற்றத் தகுந்த மார்க்கத்தைத்தான் கொணர்ந்தீரே!

அன்சாரிகள் மிகுந்த செல்வ செழிப்புடையவர்களாக இல்லையென்றாலும் நபி (ஸல்) அவர்களின் மீது அவர்கள் வைத்திருந்த பிரியத்தினால் ஒவ்வொருவரும் நபி (ஸல்) தங்கள் வீட்டில்தான் தங்கவேண்டுமென ஆசைபட்டனர். ஒவ்வொருவரும் நபி (ஸல்) தங்கள் வீட்டைக் கடந்து செல்லும்போது நபியவர்களின் வாகனக் கயிற்றை பிடித்துக்கொண்டு ''அல்லாஹ்வின் தூதரே! பாதுகாப்பும், ஆயுதமும், படைபலமும், வீரர்களும் நிறைந்த எங்களிடம் வந்துவிடுங்கள்'' என்று கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) தன்னை அழைத்தவர்களிடம் ''வாகனத்திற்கு வழிவிடுங்கள். அது பணிக்கப்பட்டுள்ளது'' என்று கூறிக்கொண்டே வந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வாகனம் தொடர்ந்து சென்றுகொண்டே இருந்தது. இறுதியில், தற்போது நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அமையப் பெற்றிருக்கும் இடத்தில் மண்டியிட்டுக் கொண்டது. ஆனால், நபி (ஸல்) அதிலிருந்து இறங்கவில்லை. பின்பு சிறிது நேரத்தில் அந்த ஒட்டகம் எழுந்து சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தது பின்பு முதலில் மண்டியிட்ட அதே இடத்தில் மீண்டும் வந்து மண்டியிட்டு அமர்ந்துதது.

தங்கள் ஒட்டகத்திலிருந்து நபி (ஸல்) இறங்கினார்கள். மேலும், அந்த இடம் நபி (ஸல்) அவர்களின் தாய்மாமன்களாகிய நஜ்ஜார் கிளையினருக்கு சொந்தமானதாகும். நபி (ஸல்) அவர்களின் விருப்பத்திற்கேற்ப அல்லாஹ் அவர்களின் தாய்மாமன்களின் வீட்டிலேயே தங்குவதற்கு அருள் புரிந்தான். நஜ்ஜார் கிளையினரில் ஒவ்வொருவரும் நபி (ஸல்) அவர்களிடம் 'நீங்கள் எங்களது வீட்டில் தங்க வேண்டும்' என்று அழைத்துக் கொண்டிருக்கையில் அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்கள் மட்டும் நபி (ஸல்) அவர்களின் பயணச் சாமான்களை தங்களது வீட்டிற்குள் எடுத்துச் சென்று விட்டார்கள். இதைப் பார்த்த நபி (ஸல்) ''மனிதன் அவனது சாமான்களுடன்தானே இருக்க முடியும்'' என்று மற்றவர்களிடம் கூறினார்கள். அஸ்அத் இப்னு ஜுராரா நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டார்கள். அவரின் விருப்பப்படி நபி (ஸல்) அவர்களின் வாகனம் அவரிடம் இருக்க அனுமதிக்கப்பட்டது. (இப்னு ஹிஷாம்)

அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) ''நமது உறவினர்களின் வீடுகளில் எது நெருக்கமாக இருக்கிறது'' என்று கேட்டார்கள். அதற்கு அபூ அய்யூப் ''அல்லாஹ்வின் தூதரே! இதோ எனது வீடு. இதுதான் எனது வீட்டு வாயில்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) ''சரி! எழுந்து சென்று படுக்கும் இடத்தை சரிசெய்யுங்கள்'' என்று கூறினார்கள். ''ரஸுலுல்லாஹ்வே! எல்லாம் தயார், அல்லாஹ்வின் பரக்கத்துடன் -அருள் வளத்துடன்- நீங்கள் இருவரும் எழுந்து வாருங்கள்'' என்று அபூ அய்யூப் (ரழி) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

சில நாட்களுக்குப் பின் நபி (ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா (ரழி) அவர்களும் இரு மகள்கள் ஃபாத்திமா, உம்மு குல்தூம் மற்றும் உஸாமா இப்னு ஜைது, உம்மு அய்மன் ஆகியோர் மதீனா வந்தார்கள். இவர்களுடன் அபூபக்ரின் மகனார் அப்துல்லாஹ், அபூபக்ரின் குடும்பத்தாரையும் அழைத்து வந்தார்கள். இவர்களில் ஆயிஷாவும் இருந்தார். நபி (ஸல்) அவர்களின் இன்னொரு மகள் ஜைனபுடைய கணவர் அபுல்ஆஸ் ஹிஜ்ரா செல்ல சந்தர்ப்பமளிக்காததால் ஜைனப் (ரழி) மதீனா வர இயலவில்லை. இவர்கள் பத்ர் போருக்குப் பின் மதீனா வந்தார்கள். (ஜாதுல் மஆது)

ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: ''நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அப்போது மதீனா அல்லாஹ்வின் பூமியிலேயே நோய் மிகுந்ததாக இருந்தது. மதீனாவிற்கு அருகிலுள்ள 'புத்ஹான்' என்ற ஓடையில் கலங்கிய நீர் ஓடிக்கொண்டிருந்தது.

மேலும், ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அபூபக்ர், பிலால் (ரழி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. நான் அவர்களிடம் சென்று தந்தையே தாங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? பிலாலே தாங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? என்று கேட்டேன்.

பொதுவாக அபூபக்ர் (ரழி) அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால்,

''ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் கலந்திருக்க...

மரணமோ அவனது செருப்பு வாரைவிட மிகச் சமீபத்தில் இருக்கிறது''

என்ற கவிதையைக் கூறுவார்கள்.

பிலால் (ரழி) அவர்களுக்கு காய்ச்சலின் சூடு சற்று குறைந்தால் வேதனையுடன் குரலை உயர்த்தி,

''இத்கிர், ஜலீல் எனும் புற்கள் என்னைச் சூழ்ந்திருக்க,

அது போன்றதொரு பள்ளத்தாக்கில் ஓர் இராப்பொழுதையேனும் நான் கழிப்பேனா?

ம்மஜின்னா' எனும் (சுனையின்) நீரை நான் அருந்துவேனா?

ஷாமா, தஃபீல் எனும் இரு மலைகள் எனக்குத் தென்படுமா?''

என்ற கவிதையைக் கூறுவார்கள்.

தொடர்ந்து ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தியைக் கூறினேன். நபி (ஸல்) அவர்கள் ''இறைவா! ஷைபா இப்னு ரபிஆ, உத்பா இப்னு ரபிஆ, உமையா இப்னு கலஃப் ஆகியோர் எங்கள் நாட்டிலிருந்து எங்களை (அப்புறப்படுத்தி) இந்த நோய்ப் பிரதேசத்திற்கு விரட்டியது போல், அவர்களை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தி விடுவாயாக!'' என்று பிரார்த்தனை செய்தார்கள். மேலும், ''இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! இறைவா! எங்களுடைய (அளவைகளான) ஸாவு, முத்து ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ அருள் வளம் செய்! இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்கு! இங்குள்ள காய்ச்சலை 'ஜுஹ்ஃபா' எனும் பகுதிக்கு மாற்றிவிடு!'' என்று பிரார்த்தனை செய்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அல்லாஹ்! நபி (ஸல்) அவர்களின் இந்த துஆவை ஏற்றுக் கொண்டான். ஒரு நாள் கனவில் தலைவிரிக் கோலமான கருப்பு நிறப்பெண் மதீனாவிலிருந்து வெளியேறி ஜுஹ்ஃபா சென்றடைந்ததைப் பார்த்தார்கள். இது மதீனாவிலிருந்து அந்த நோய் ஜுஹ்ஃபாவை நோக்கி வெளியேறிவிட்டது என்பதற்கான அறிவிப்பாக இருந்தது. அல்லாஹ்வின் அருளால் மதீனாவின் தட்பவெப்ப நிலையினால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நபித்தோழர்கள் முற்றிலும் சுகமடைந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையின் ஒரு பகுதி, அதாவது மக்கா வாழ்க்கை இத்துடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையை சுருக்கமாகப் பார்ப்போம். அதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக!