ரஹீக் அல் மக்தூம் (முஹம்மத் நபி வரலாறு

Saturday, June 27, 2015

[ரஹீக் 025]-மூன்றாம் கட்டம்

இது நபி (ஸல்) அவர்களுடைய வாழ்வின் கடைசிக் கட்டம். இஸ்லாமிய அழைப்புப் பணி ஏறக் குறைய இருபதாண்டு காலமாகச் சந்தித்த சிரமங்கள், இன்னல்கள், துன்பங்கள், மோதல்கள், போர்கள் ஆகிய அனைத்திற்குப் பின் ஏற்பட்ட அழகிய பின்விளைவுகள்தான் இக்காலக் கட்டத்தின் முக்கிய அம்சங்கள். இந்த மக்கா வெற்றிக்குப் பின் அரபுலகமே முற்றிலும் மாற்றம் கண்டது. அரபிய தீபகற்பத்தின் எதிர்காலமே தெளிவான வெளிச்சத்தை நோக்கி வெற்றி நடைபோட்டது. 'மக்கா வெற்றிக்கு முன்', 'மக்கா வெற்றிக்குப் பின்' என்று 'மக்கா வெற்றி' ஒரு வரலாற்று அடித்தளமாக மாறியது. குறைஷிகள்தான் அரபு மக்களுக்கு மார்க்க வழிகாட்டிகளாக விளங்கினர். சிலைகளைப் புறந்தள்ளி விட்டு, இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டது அரபியத் தீபகற்பத்தில் சிலை வணக்கம் வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிந்தது என்பதற்கு மாபெரும் சான்றாகும்.

இக்காலக் கட்டத்தை நாம் இரண்டாகப் பிரிக்கலாம்

1) தியாகங்களும், போர்களும்.

2) பல குடும்பத்தினர், கிளையினர் கூட்டம் கூட்டமாக இஸ்லாமிய மார்க்கத்தில் இணைதல்.

இவ்விரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாக இருந்தாலும் இவற்றை வேறுபடுத்திக் காட்ட முதன் முதலாக போர்களைப் பற்றி பேச இருக்கிறோம். ஏனெனில், இதற்கு முன்னால் போரைப் பற்றியே நாம் அதிகம் அலசியிருக்கிறோம். அதனால், தொடர்ந்து போரைப் பற்றி பேசுவதே பொருத்தமானதாக இருக்கும்.

ஹுனைன் யுத்தம்

மக்கா வெற்றி அரபிகள் யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சியாகும். இதனைக் கண்ணுற்ற அக்கம் பக்கத்திலுள்ளோர் திடுக்கிட்டனர். அவர்களால் அதனைத் தடுத்து நிறுத்த முடியாததால் பெரும்பாலான மக்கள் பணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். எனினும், கர்வமும் வம்பும் முரட்டுக் குணமும் கொண்ட சமூகத்தவர்கள் அடிபணிய மறுத்தனர்.

இவர்களில் ஹவாஜின், ஸகீஃப் கோத்திரத்தினர் முன்னிலை வகித்தனர். இவர்களுடன் கைஸ், அய்லான் கோத்திரத்தைச் சார்ந்த நஸ்ர், ஜுஷம், ஸஅது இப்னு பக்ர் ஆகிய குடும்பத்தினரும் ஹிலால் குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து கொண்டனர். முஸ்லிம்களின் வெற்றியை ஏற்பது இந்தக் கோஷ்டிகளுக்கு மானப் பிரச்சனையாகவும், கண்ணியக் குறைவாகவும் தென்படவே முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்க மாலிக் இப்னு அவ்ஸ் என்பவனின் தலைமையில் ஒன்று சேர்ந்தனர்.

அவ்தாஸில் எதிரிகள்

முஸ்லிம்களிடம் சண்டையிடுவதற்குப் படை வீரர்களை மாலிக் இப்னு அவ்ஸ் ஒன்று திரட்டினார். அவரின் படை வீரர்கள் அனைவரும் பொருட்கள், செல்வங்கள், மனைவி மக்கள் அனைத்துடனும் போர்க்களத்திற்கு வந்து வீரதீரமாகப் போரிட வேண்டும் என ஆணையிட்டார். அவ்வாறே அனைவரும் அவ்தாஸுக்கு வந்தனர். 'அவ்தாஸ்' என்பது ஹுனைன் அருகில் ஹவாஜின் கிளையார் வசிப்பிடத்திற்கு அருகாமையிலுள்ள ஒரு பள்ளத்தாக்காகும். ஹுனைன் என்பது 'தில் மஜாஸ்' என்ற ஊரின் அண்மையில் உள்ள பள்ளத்தாக்காகும். இங்கிருந்து அரஃபா வழியாக ஏறக்குறைய பத்து மைல் தொலைவில் தான் மக்கா இருக்கிறது. எனவே, ஹுனைன் வேறு, அவ்தாஸ் வேறு. (ஃபத்ஹுல் பாரி)

போர்த் தளபதியின் முடிவுக்கு போர்க்கள நிபுணர் எதிர்ப்பு

மக்கள் அவ்தாஸை அடைந்தவுடன் தங்கள் தளபதியிடம் ஒன்று கூடினர். அவர்களில் துரைத் என்ற பெயருடைய போரில் நல்ல அனுபவமுள்ள ஒருவன் இருந்தான். அவன் வாலிபத்தில் வலிமை மிக்க போர் வீரனாக விளங்கியவன். தற்போது போர் பற்றிய ஆலோசனை வழங்குவதற்காக படையுடன் வந்திருந்தான். அவனுக்கு கண் பார்வை குன்றியிருந்தது. அவன் மக்களிடம் ''தற்போது எந்தப் பள்ளத்தாக்கிற்கு வந்திருக்கிறோம்'' என்று வினவினான். ''அவ்தாஸ் வந்துள்ளோம்'' என மக்கள் கூறினர். ''இது குதிரைகள் பறந்து போட ஏதுவான இடம். கரடு முரடான உயர்ந்த மலைப் பகுதியுமல்ல மிகவும் மிருதுவான தாழ்ந்த தரைப்பகுதியுமல்ல ஆகவே, இது பொருத்தமான இடமே. ஆயினும், நான் குழந்தைகளின் அழுகுரலையும், ஆடு, மாடு கழுதை போன்றவற்றின் சப்தங்களையும் கேட்கிறேன். அவை இங்கு ஏன் வந்தன?'' எனக் கேட்டான். ''தளபதி மாலிக் இப்னு அவ்ஃப்தான் போர் வீரர்கள் அனைவரும் தங்களது மனைவி, மக்கள், கால்நடைகள், செல்வங்கள் அனைத்துடன் போர்க்களம் வரும்படி கட்டளையிட்டிருந்தார்'' என மக்கள் தெரிவித்தனர்.

துரைத் மாலிக்கை வரவழைத்து, ''ஏன் இவ்வாறு செய்தாய்?'' என்று விளக்கம் கேட்க ''ஒவ்வொரு படை வீரன் பின்னணியிலும் இவர்கள் இருந்தால்தான் குடும்பத்தையும் பொருளையும் பாதுகாக்க தீவிரமாகப் போர் செய்வார்கள்'' என்றான் தளபதி மாலிக். அதற்குத் துரைத், ''ஆட்டு இடையனே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒருவன் தோற்று புறமுதுகிட்டு ஓட ஆரம்பித்தால் எதுதான் அவனைத் தடுத்து, திரும்ப போர்க்களத்திற்கு கொண்டு வரும்? சரி! இப்போரில் உனக்கு வெற்றி கிடைத்தால் அதில் ஒரு வீரனின் ஈட்டி மற்றும் வாளால்தான் கிடைக்க முடியும். உனக்குத் தோல்வி ஏற்பட்டால் அதில் உன் குடும்பத்தினர் முன்னே இழிவடைவதாகும். உனது செல்வங்களையெல்லாம் இழந்து நிர்க்கதியாகி விடுவாய்'' என எச்சரித்து விட்டு சில குடும்பத்தினரையும் தலைவர்களையும் குறிப்பாக விசாரித்தார்.

அதன் பின் மாலிக்கிடம் ''ஹவாஜின் கிளையினரின் குழந்தைகளைப் போர் மைதானத்தில் நேரடியாக பங்கு கொள்ள வைப்பது முறையான செயலல்ல பயன்தரத் தக்கதுமல்ல. குடும்பங்களைப் பாதுகாப்பான உயரமான இடங்களில் இருக்க வை. அதன்பின் குதிரை மீது அமர்ந்து மதம் மாறிய இந்த எதிரிகளிடம் போரிடு. உனக்கு வெற்றி கிட்டினால் குடும்பத்தினர் உன்னிடம் வந்து சேர்ந்து விடுவார்கள். நீ தோல்வியைத் தழுவினால் அது உன்னோடு முடிந்துவிடும். உனது குடும்பமும் பொருளும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்படும்'' என்றார்.

ஆனால், துரைதுடைய இந்த ஆலோசனையைத் தளபதியான மாலிக் நிராகரித்து விட்டான். மேலும் ''நீ சொல்வது போல் அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒருபோதும் செய்ய முடியாது. நீயும் கிழடாகி விட்டாய். உனது அறிவுக்கும் வயசாகி விட்டது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த ஹவாஜின் கிளையினர் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால் இந்தக் கூர்மையான வாளின் மீது வீழ்வேன் அது என் முதுகிலிருந்து வெளியேறட்டும்'' என்றான். இப்போல் துரைதுக்கு பேரும் புகழும் கிடைத்து விடுவதை வெறுத்ததன் காரணமாகவே அவன் இவ்வாறு சொன்னான். இதனைக் கேட்ட ஹவாஜின் சமூகத்தார் ''நாம் உனக்கு கட்டுப்படுகிறோம் கீழ்ப்படிகிறோம்'' என்றனர். துரைத் கவலையுடன் ''இந்த நாளைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? இதில் நான் கலந்து கொள்ளவுமில்லை, விலகிப் போகவுமில்லை'' என்றான்.

மாலிக் முஸ்லிம்களின் பலத்தை அறிய ஒற்றர்களை அனுப்பியிருந்தான். அவர்களோ முஸ்லிம்களின் நிலைகளை அறிந்து முகம் சிவந்து, நரம்புகள் புடைக்க, முகம் இருள் கவ்வ திரும்பி வந்தனர். மாலிக் பதறிப்போய், ''உங்களுக்கு என்ன கேடு! உங்களுக்கு என்ன நிகழ்ந்தது?'' என்றான் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! கருப்பும் வெண்மையும் கலந்த குதிரைகள் மீது வெண்மை நிற வீரர்களைக் கண்டோம். அதனைக் கண்ட எங்கள் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை எங்களால் கட்டுப்படுத்த இயலவில்லை'' என்றனர்.

நபியவர்களின் உளவாளி

எதிரிகள் புறப்பட்டு விட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அபூ ஹத்ரத் அஸ்லமி (ரழி) என்பவரிடம் ''நீ எதிரிகளுடன் கலந்து அங்குள்ள நிலைமைகளை முழுவதுமாக அறிந்து வந்து என்னிடம் தெரிவிக்கவும்'' என்று நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அவ்வாறே அவரும் சென்று வந்தார்.

மக்காவிலிருந்து ஹுனைனை நோக்கி

ஹிஜ்ரி 8, ஷவ்வால் மாதம், சனிக்கிழமை பிறை 6, நபி (ஸல்) அவர்கள் பன்னிரெண்டாயிரம் வீரர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைனை நோக்கிப் புறப்பட்டார்கள். இதில் பத்தாயிரம் வீரர்கள் மதீனாவிலிருந்து வந்தவர்கள். மீதம் இரண்டாயிரம் வீரர்கள் மக்காவாசிகள். இவர்களில் பெரும்பாலோர் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்கள். மேலும், ஸஃப்வான் இப்னு உமய்யாவிடமிருந்து நூறு கவச ஆடைகளை இரவலாக நபி (ஸல்) எடுத்துக் கொண்டார்கள். மக்காவில் அத்தாப் இப்னு உஸைத் (ரழி) என்பவரைத் தனது பிரதிநிதியாக நியமித்தார்கள். மக்காவிற்குள் வந்து சரியாக 19வது நாள் நபி (ஸல்) ஹுனைன் நோக்கிப் புறப்படுகிறார்கள். அன்று மாலை குதிரை வீரர் ஒருவர் வந்து ''நான் மலைமீது ஏறிப் பார்த்தேன். அப்போது ஹவாஜின் கிளையினர் தங்களது குடும்பங்கள், செல்வங்களுடன் ஹுனைனில் குழுமி இருக்கின்றார்கள்'' என்று கூறினார். இதனைச் செவியேற்ற நபி (ஸல்) அவர்கள் ''இன்ஷா அல்லாஹ்! நாளை அவை முஸ்லிம்களின் கனீமா பொருளாகிவிடும்'' என புன்னகை ததும்பக் கூறினார்கள். அன்றிரவு படையின் பாதுகாப்புக்கு அனஸ் இப்னு அபூ மர்சத் கனவீ (ரழி) பொறுப்பேற்றார். (ஸுனன் அபூதாவூது)

ஹுனைனை நோக்கிச் செல்லும் வழியில் முஸ்லிம்கள் பசுமையான மிகப்பெரிய இலந்தை மரம் ஒன்றைக் கண்டார்கள். அம்மரத்தை 'தாத் அன்வாத்' என்று அரபிகள் அழைத்தனர். அக்காலத்தில் அதில் தங்களது வாட்களை தொங்க விடுவர். அங்கு தங்கி பிராணிகளைப் பலியிடுவர். தங்களின் சிலை வழிபாடுகளுக்கு அதை பாக்கியம் பொருந்திய ஒன்றாகக் கருதி வந்தனர். அம்மரத்தைப் பார்த்தவுடன் படையிலிருந்த சிலர் ''அல்லாஹ்வின் தூதரே! முஷ்ரிக்குகளுக்கு 'தாத் அன்வாத்' இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு 'தாத் அன்வாத்' ஏற்படுத்தித் தாருங்கள்'' என்றனர். நபி (ஸல்) ''அல்லாஹு அக்பர்! முஹம்மதின் ஆத்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! 'அவர்களுக்கு கடவுள்கள் இருப்பது போன்று எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்தித் தாருங்கள்' என்று மூஸாவின் கூட்டத்தினர் கேட்டது போலல்லவா கேட்கிறீர்கள்! நிச்சயமாக நீங்கள் அறியாத கூட்டத்தினர். இதுதான் சென்று போனவர்களின் வழிமுறையாகும். உங்களுக்கு முன் சென்றவர்களின் வழிமுறைகளையே நிச்சயமாக நீங்களும் பின்பற்றுவீர்கள்'' என்று எச்சரித்தார்கள். (முஸ்னது அஹ்மது, ஜாமிவுத் திர்மிதி)

மற்றும் படையிலுள்ள சிலர் படையின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைப் பார்த்து ''இன்றைய தினம் நம்மை யாராலும் வெல்ல முடியாது'' என்று கூறினர். சிலரின் இந்தக் கூற்று நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.

முஸ்லிம்கள் திடீரெனத் தாக்கப்படுதல்

ஷவ்வால் மாதம், பிறை 10, செவ்வாய் மாலை புதன் இரவு இஸ்லாமியப் படை ஹுனைன் வந்தடைந்தது. முஸ்லிம்களுக்கு முன்னதாகவே மாலிக் இப்னு அவ்ஃப் தனது படையுடன் அங்கு வந்து, ஹுனைன் பள்ளத்தாக்கு முழுவதும் நிறுத்தி வைத்துவிட்டான்.

மேலும், நன்கு அம்பெறிவதில் தேர்ச்சி பெற்ற வீரர்களைப் பதுங்குக் குழிகளிலும், நெருக்கமான வளைவுகளிலும், முக்கிய நுழைவிடங்களிலும், பாதைகளின் ஓரங்களிலும் தங்க வைத்து விட்டான். முஸ்லிம்கள் தங்களுக்கு எதிரில் வந்தவுடன் முதலில் அம்புகளால் அவர்களைத் தாக்க வேண்டும் பின்பு அவர்கள் மீது பாய்ந்து நேருக்கு நேராகத் தாக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அதிகாலை நேரத்தில் நபி (ஸல்) தங்களது படையைத் தயார் செய்து அவற்றுக்குரிய சிறிய பெரிய கொடிகளை வீரர்களுக்கு வழங்கினார்கள். அதிகாலையில் சற்று மங்கலான நேரத்தில் முஸ்லிம்கள் ஹுனைன் பள்ளத்தாக்கினுள் நுழைய ஆரம்பித்தார்கள். ஹுனைன் பள்ளத்தாக்கில் எதிரிகள் மறைந்திருப்பதை முஸ்லிம்கள் அறவே அறிந்திருக்கவில்லை. திடீரென எதிரிகள் அவர்களை நோக்கி அம்புகளை எறிந்தனர். பின்பு எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே பாய்ச்சலாக பாய்ந்து முஸ்லிம்களைத் தாக்கினர். இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பார்த்திராத முஸ்லிம்கள் சமாளிக்க முடியாமல் அங்கும் இங்குமாக ஓடினர். இது மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. புதிதாக இஸ்லாமை ஏற்றிருந்த அபூஸுஃப்யான் இப்னு ஹர்ஃப் இக்காட்சியைப் பார்த்து ''இவர்கள் செங்கடல் வரை ஓடிக்கொண்டே இருப்பார்கள் போல் தெரிகிறதே!'' என்றார். மேலும், ஜபலா இப்னு ஹன்பல் அல்லது கலதா இப்னு ஹன்பல் என்பவன் ''பாருங்கள்! இன்று சூனியம் பொய்யாகி விட்டது'' என்று ஓலமிட்டான்.

நபி (ஸல்) பள்ளத்தாக்கின் வலப்புறமாக ஒதுங்கிக் கொண்டு ''மக்களே! என் பக்கம் வாருங்கள். நான் அல்லாஹ்வின் தூதர். நான்தான் முஹம்மது இப்னு அப்துல்லாஹ்'' என்று அழைத்தார்கள். இந்த இக்கட்டான நிலையில் முஹாஜிர் மற்றும் அன்சாரிகளில் வெகு குறைவானவர்களே நபி (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இவர்கள் ஒன்பது நபர்கள் என இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். இமாம் நவவீ (ரஹ்) பன்னிரெண்டு நபர்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால், கீழ்க்காணும் அஹ்மது மற்றும் முஸ்தத்ரக் ஹாகிமில் இடம் பெற்றிருக்கும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களின் அறிவிப்பில் வந்திருக்கும் எண்ணிக்கையே சரியானது:

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள்: ஹுனைன் போரிலே நானும் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். நபி (ஸல்) அவர்களை விட்டு மக்கள் ஓடிவிட்ட நிலையில், முஹாஜிர் மற்றும் அன்சாரிகளைச் சேர்ந்த எண்பது நபர்கள் மட்டும் நபியவர்களுடன் உறுதியாக நின்றனர். புறமுதுகுக் காட்டி ஓடவில்லை. (முஸ்தத்தரகுல் ஹாகிம், முஸ்னது அஹ்மது)

மேலும், இப்னு உமர் (ரழி) கூறுகிறார்கள். ஹுனைன் சண்டையின் போது மக்களெல்லாம் புறமுதுகுக் காட்டி ஓடிவிட்டனர். அன்றைய தினத்தில் ஏறக்குறைய நாங்கள் நூறு நபர்களுக்குக் குறைவானவர்களே நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (ஜாமிவுத் திர்மிதி)

அந்நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் நிகரற்ற வீரம் வெளிப்பட்டது. ''நானே நபியாவேன் அதில் எந்தப் பொய்யுமில்லை நான் அப்துல் முத்தலிபின் மகனாவேன்.'' என்று கூறிக் கொண்டே தங்களது கோவேறுக் கழுதையை எதிரிகள் நோக்கி ஓட்டினார்கள். எனினும், நபி (ஸல்) அவர்கள் விரைந்து முன்னேறி விடாமலிருக்க அபூ ஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் (ரழி) கோவேறுக் கழுதையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டார். அப்பாஸ் (ரழி) அதன் இருக்கையைப் பிடித்துக் கொண்டார். இதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் கோவேறுக் கழுதையிலிருந்து கீழே இறங்கி, ''அல்லாஹ்வே! உனது உதவியை இறக்குவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.

முஸ்லிம்கள் களம் திரும்புதல், போர் உக்கிரமாகுதல்

மக்களை சப்தமிட்டு அழைக்கும்படி நபி (ஸல்) அவர்கள் அப்பாஸை பணித்தார்கள். அவர் உரத்த குரலுடையவராக இருந்தார். இதைப் பற்றி அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: நான் மிக உயர்ந்த சப்தத்தில் 'அய்ன அஸ்ஹாபுஸ் ஸமுரா' (ஸமுரா' மரத் தோழர்கள் எங்கே?) என்று அழைத்தேன். எனது சப்தத்தைக் கேட்டவுடன் மாடு தனது கன்றை நோக்கி ஓடி வருவது போல் தோழர்கள் ஓடி வந்தனர். எனது அழைப்புக்கு 'யா லப்பைக், யா லப்பைக்' (ஆஜராகி விட்டோம்) என்று பதிலளித்தனர். (ஸஹீஹ் முஸ்லிம்)

சிலர், வேகமாக ஓடிக் கொண்டிருந்த தனது ஒட்டகத்தைத் திருப்ப முயன்று அது முடியாமல் ஆனபோது அதிலிருந்த தங்களது ஆயுதங்களை எடுத்துக் கொண்டு கீழே குதித்து சப்தம் வந்த திசையை நோக்கி ஓடி வந்தனர். இவ்வாறு புதிதாக நூறு நபர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒன்று சேர்ந்தவுடன் எதிரியை நோக்கி முன்னேறிச் சண்டையிட்டனர்.

பின்பு அன்சாரிகளை 'ஏ... அன்சாரிகளே! ஏ... அன்சாரிகளே!' என்று கூவி அழைக்கப்பட்டது. குறிப்பாக, ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் கிளையினரைக் கூவி அழைக்கப்பட்டது. இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம்களை அழைக்க, எல்லோரும் மைதானத்தில் ஒன்று சேர்ந்து விட்டனர். இரு தரப்பினருக்குமிடையில் கடுமையான சண்டை நிகழ்ந்தது. நபி (ஸல்) 'இப்போதுதான் போர் சூடுபிடித்திருக்கிறது' என்று கூறி, பூமியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து 'முகங்களெல்லாம் நாசமாகட்டும்' என்று கூறி எதிரிகளை நோக்கி வீசி எறிந்தார்கள். அங்கிருந்த எதிரிகள் அனைவரின் கண்களிலும் அல்லாஹ் இந்த மண்ணைப் பரப்பி விட்டான். எதிரிகளின் வேகம் தணிந்து போரில் பின்வாங்க ஆரம்பித்தனர்.

எதிரிகள் தோல்வி அடைகின்றனர்

நபி (ஸல்) கைப்பிடி மண்ணை வீசிய சில நிமிடங்களிலேயே எதிரிகள் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தனர். முஸ்லிம்களின் எதிர் தாக்குதலால் ஸகீஃப் கிளையினரில் மட்டும் எழுபது நபர்கள் கொல்லப்பட்டனர். எதிரிகள் தாங்கள் கொண்டு வந்த உடமைகளையெல்லாம் விட்டுவிட்டு போர் மைதானத்திலிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த ஆயுதங்கள், பொருட்கள் அனைத்தையும் முஸ்லிம்கள் ஒன்று சேர்த்தனர். முஸ்லிம்களுக்குக் கிடைத்த இந்த வெற்றியைப் பற்றித்தான் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்:

பல (போர்க்) களங்களில் (உங்கள் தொகைக் குறைவாயிருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கின்றான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களைப் பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எந்தப் பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகி விட்டது. அன்றி, நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள். (இதன்) பின்னர், அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் தன்னுடைய அமைதியை அளித்து அருள்புரிந்தான். உங்கள் கண்ணுக்குத் தெரியாத ஒரு படையையும் (உங்களுக்கு உதவியாக) இறக்கி வைத்து நிராகரிப்பவர்களை வேதனை செய்தான். இதுதான் நிராகரிப்பவர்களுக்குரிய கூலியாகும். (அல்குர்ஆன் 9:25, 26)

எதிரிகளை விரட்டுதல்

போரில் தோல்வி கண்ட எதிரிகள் பல பக்கங்களிலும் சிதறி ஓடினர். ஒரு பிரிவினர் 'தாயிஃபை' நோக்கி ஓடினர். வேறொரு பிரிவினர் 'நக்லா' என்ற ஊரை நோக்கி ஓடினர். மற்றும் ஒரு பிரிவினர் 'அவ்தாஸை' நோக்கி ஓடினர். இதைத் தொடர்ந்து நபி (ஸல்) எதிரிகளை விரட்டிப் பிடிப்பதற்கு முதலில் 'அவ்தாஸை' நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அதற்கு அபூ ஆமிர் அஷ்அரி (ரழி) தலைமை ஏற்றார். அங்கு இரு தரப்பினருக்குமிடையில் சிறு மோதல் ஏற்பட்டது. அதிலும் எதிரிகள் தோல்வியடைந்து ஓடிவிட்டனர். இந்த மோதலில் தலைவராயிருந்த அபூ ஆமிர் அஷ்அரி (ரழி) கொல்லப்பட்டார்.

முஸ்லிம்களின் குதிரை வீரர்களில் ஒரு பிரிவினர் நக்லாவை நோக்கி ஓடிய முஷ்ரிக்குகளை விரட்டிச் சென்றனர். அவர்களுக்கிடையிலும் சிறு மோதல் ஏற்பட்டது. இச்சண்டையில் துரைத் இப்னு ஸிம்மாவை ரபிஆ இப்னு ருஃபை (ரழி) கொன்றார்.

இப்போரில் தோற்ற பெரும்பாலான முஷ்ரிக்குகள் தாயிஃபை நோக்கித்தான் ஓடினர். எனவே, கனீமத்துப் பொருட்களை ஒழுங்குபடுத்தி ஒன்று சேர்த்து வைத்துவிட்டு தாயிஃபை நோக்கி நபி (ஸல்) படையுடன் பயணமானார்கள்.

கனீமா பொருட்கள்

இப்போரில் முஸ்லிம்களுக்கு ஏராளமான கனீமத்துப் பொருட்கள் கிடைத்தன. ஆராயிரம் அடிமைகள், இருபத்தி நான்காயிரம் ஒட்டகங்கள், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான ஆடுகள், நான்காயிரம் 'ஊக்கியா' வெள்ளிகள் ஆகியவை கனீமத்தாக (வெற்றிப் பொருளாகக்) கிடைத்தன. நபி (ஸல்) இவற்றை ஒன்று சேர்த்து 'ஜிஃரானா' என்ற இடத்தில் வைத்து அதற்கு 'மஸ்வூது இப்னு அம்ர் கிஃபாரியை' பாதுகாவலராக நியமித்தார்கள். தாயிஃப் சென்று திரும்பிய பிறகுதான் இவற்றை நபி (ஸல்) பங்கிட்டார்கள்.

சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் 'ஷீமா பின்த் ஹாரிஸ் அல் ஸஃதியா' என்ற பெண்ணும் இருந்தார். இவர் நபி (ஸல்) அவர்களின் பால்குடி சகோதரியாவார். இவரை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டது. அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நபி (ஸல்) ஓர் அடையாளத்தைக் கொண்டு அப்பெண்மணி இன்னார்தான் என்பதை அறிந்து கொண்டார்கள். அவரை சங்கை செய்து, தனது போர்வையை விரித்து அமர வைத்தார்கள். அவருக்கு உதவி செய்து அவரது கூட்டத்தார்களிடமே அனுப்பி வைத்தார்கள்.

தாயிஃப் போர்

இப்போர், உண்மையில் ஹுனைன் போரின் ஒரு தொடராகும். 'ஹவாஜின், ஸகீப்' கிளையினரில் தோல்வியடைந்த அதிகமானவர்கள் தங்களின் தளபதி 'மாலிக் இப்னு அவ்ஸ்யுடன் தாயிஃபில் அடைக்கலம் புகுந்தனர். முதலில் ஆயிரம் வீரர்களுடன் காலித் இப்னு வலீதை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். பின்பு நக்லா அல்யமானியா, கர்னுல் மனாஜில், லிய்யா வழியாக தாயிஃபிற்குப் பயணமானார்கள். 'லிய்யா' என்ற இடத்தில் மாலிக் இப்னு அவ்ஃபிற்குச் சொந்தமான பெரும் கோட்டை ஒன்று இருந்தது. நபி (ஸல்) அதை உடைக்கும்படி கட்டளையிட்டார்கள். தாயிஃபின் கோட்டையில் எதிரிகள் அடைக்கலம் புகுந்திருந்தனர். நபி (ஸல்) அக்கோட்டையைச் சுற்றி முற்றுகையிட்டார்கள்.

இம்முற்றுகை பல நாட்கள் அதாவது, நாற்பது நாட்களாக நீடித்தது என்று ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஓர் அறிவிப்பிலிருந்து தெரிய வருகிறது. ஆனால், வரலாற்று ஆசிரியர்கள் இதற்கு மாற்றமாக கூறுகின்றனர். சிலர் இருபது நாட்கள் என்றும், சிலர் பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் என்றும், சிலர் பதினெட்டு நாட்கள் என்றும், சிலர் பதினைந்து நாட்கள் என்றும் கூறுகின்றனர். (ஃபத்ஹுல் பாரி)

இக்காலக் கட்டத்தில் இருதரப்பிலிருந்தும் அம்பு, ஈட்டி, கற்கள் ஆகியவற்றால் தாக்குதல்கள் நடந்தன. முதலில் எதிரிகளிடமிருந்து அம்புகளால் கடுமையான தாக்குதல் நடந்தது. முஸ்லிம்களில் பலருக்கு இதில் பலத்த காயமேற்பட்டது. 12 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதனால் முஸ்லிம்கள் தங்களது முகாம்களை மாற்றி உயரமான இடத்திற்குச் சென்று விட்டனர். அதாவது, இன்று தாயிஃபின் பெரிய பள்ளிவாசல் இருக்குமிடத்தில் தங்களது முகாம்களை அமைத்துக் கொண்டனர்.

நபி (ஸல்) மின்ஜனீக் கருவிகள் மூலமாகக் கற்களை எறிந்து கோட்டைச் சுவரில் பெரும் ஓட்டையை ஏற்படுத்தினார்கள்.

முஸ்லிம்கள் மரப் பலகைகளால் செய்யப்பட்ட பீரங்கி போன்ற குழாய்களில் புகுந்து கொண்டு கோட்டைச் சுவரை நோக்கி நெருங்கினர். எதிரிகள் பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புக் கொக்கிகளைக் கொண்டு மேலிருந்து முஸ்லிம்களைத் தாக்கினர். இதனால் மரக் குழாய்களிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறினர். அப்போது எதிரிகள் முஸ்லிம்களை நோக்கி அம்புகளை எறிந்தனர். அதில் முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து எதிரிகளைப் பணிய வைப்பதற்காக போர்த் தந்திரம் என்ற முறையில் மற்றொரு வழியையும் நபி (ஸல்) கையாண்டார்கள். அங்கிருந்த திராட்சைக் கொடிகளையெல்லாம் வெட்டி வீழ்த்துமாறு கட்டளையிட்டார்கள். முஸ்லிம்களும் அவ்வாறே செய்தனர். இதைப் பார்த்த ஸகீஃப் கிளையினர் தூதனுப்பி அல்லாஹ்வுக்காகவும், உறவுக்காகவும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று வேண்டினர். நபியவர்களும் அதை விட்டுவிட்டார்கள்.

''யார் கோட்டையிலிருந்து வெளியேறி எங்களிடம் வந்து சேர்ந்து விடுவாரோ அவர் அடிமைப்படுத்தப் படமாட்டார்'' என்று அறிவிக்கும்படி நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். இந்த அறிவிப்பைக் கேட்டு எதிரிகளில் இருபத்து மூன்று வீரர்கள் சரணடைந்தனர். (ஸஹீஹுல் புகாரி)

அதில் பிரசித்திப் பெற்ற 'அபூபக்ரா'வும் ஒருவர். இவர் நீர் இரைக்கும் கப்பியின் மூலமாக கயிற்றில் கீழே இறங்கி வந்தார். இதற்கு அரபியில் 'பக்கரா' என்று சொல்லப்படும். இதனால் நபி (ஸல்) அவருக்கு 'அபூபக்ரா' என்று புனைப் பெரியட்டார்கள். வந்தவர்கள் அனைவரையும் உரிமை விட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவரையும் முஸ்லிம்களில் ஒருவர் பொறுப்பேற்கும்படி செய்தார்கள். இச்சம்பவங்களைக் கண்ட எதிரிகள் மனச் சங்கடத்திற்கு உள்ளானார்கள்.

இவ்வாறு முற்றுகையின் காலம் நீண்டு கொண்டே சென்றது. கோட்டையை வெல்வதும் மிகச் சிரமமாக இருந்தது, எதிரிகளின் அம்பு மற்றும் இரும்புக் கொக்கிகளுடைய தாக்குதலால் முஸ்லிம்களுக்குப் பெருத்தச் சேதமும் ஏற்பட்டது. ஓர் ஆண்டுக்கு முற்றுகையை தாக்குப் பிடிக்குமளவிற்கு கோட்டை வாசிகள் முழு தயாரிப்புகளுடன் இருந்தனர். இதனால் நபி (ஸல்) நவ்ஃபல் இப்னு முஆவியாவிடம் ஆலோசனை செய்தார்கள். அவர் கூறிய கருத்தாவது:

இவர்கள் பொந்திலுள்ள நரியைப் போன்றவர்கள். நீங்கள் அதைப் பிடிக்க வேண்டுமென்று நிலையாக நின்றால் பிடித்து விடலாம். அதை விட்டுச் செல்வதால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காது.

நவ்ஃபலின் இந்த ஆலோசனையைக் கேட்ட நபி (ஸல்) திரும்பி சென்று விடலாம் என்று முடிவு செய்தார்கள். உமரை அழைத்து ''இன்ஷா அல்லாஹ்! நாளை நாம் திரும்ப இருக்கிறோம்'' என்று மக்களுக்கு அறிவிக்கும்படி கூறினார்கள். ''கோட்டையை வெற்றி கொள்ளாமல் நாம் எப்படி திரும்புவது?'' என்று முஸ்லிம்கள் கேட்டனர். இப்பேச்சு நபி (ஸல்) அவர்களின் காதுக்கு எட்டியவுடன் ''சரி! நாளைக்கும் போரிடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள் மறுநாள் போருக்குச் சென்றபோது கடினமான காயம் அவர்களுக்கு ஏற்பட்டது. அன்று மாலையில் ''நாளை நாம் திரும்பிச் சென்று விடலாம்'' என அறிவிப்புச் செய்தார்கள். மக்கள் அதைக் கேட்டு சந்தோஷமடைந்து புறப்படுவதற்குத் தயாரானார்கள். இதைப் பார்த்து நபி (ஸல்) சிரித்தார்கள்.

மக்கள் பயணமானவுடன் பின்வரும் துஆவை ஓதும்படி நபி (ஸல்) கூறினார்கள். ''திரும்புகிறோம் பாவமீட்சி கோருகிறோம் இறைவணக்கம் செய்கிறோம் எங்கள் இறைவனையே புகழ்கிறோம்.''

சிலர் ''அல்லாஹ்வின் தூதரே! இந்த ஸகீஃப் கிளையினருக்கு எதிராகப் பிரார்த்தியுங்கள்'' என்று கூறினார்கள். ஆனால் நபி (ஸல்) ''அல்லாஹ்வே! ஸகீஃப் கிளையினருக்கு நேர்வழி காட்டுவாயாக! அவர்களை என்னிடம் வரச் செய்வாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.

ஜிஃரானாவில் கனீமாவைப் பங்கு வைத்தல்

தாயிஃபில் முற்றுகையை முடித்துக் கொண்டு நபி (ஸல்) ஜிஃரானா திரும்பி அங்கு பத்து நாட்களுக்கு மேலாக தங்கியிருந்தார்கள். ஆனால், கனீமத்தைப் பங்கிடவில்லை. இவ்வாறு நபி (ஸல்) தாமதப்படுத்தியதற்குக் காரணம், 'ஹவாஜின் கிளையினர் மன்னிப்புக்கோரி தங்களிடம் வந்தால் அவர்களது பொருட்களை திரும்பக் கொடுத்து விடலாம்' என்பதற்கே! பத்து நாட்களுக்கு மேலாகியும் அவர்கள் திரும்ப வராததால் கனீமா பொருட்களை நபி (ஸல்) பங்கிட்டார்கள். கோத்திரங்களின் தலைவர்களும், மக்காவின் முக்கியப் பிரமுகர்களும் தங்களின் பங்கை மிக்க ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். புதிதாக இஸ்லாமை ஏற்றிருந்த இவர்களுக்கு கனீமா முதலாவதாகவும் அதிகமாகவும் கொடுக்கப்பட்டது.

அபூ ஸுஃப்யானுக்கு நாற்பது ஊக்கியா வெள்ளியும், நூறு ஒட்டகைகளும் நபி (ஸல்) வழங்கினார்கள். அவர் ''எனது மகன் எஜீதுக்கு?'' என்று கேட்டார். நபி (ஸல்) எஜீதுக்கும் அதே அளவு வழங்கினார்கள். பின்பு ''எனது மகன் முஆவியாவுக்கு?'' என்று கேட்டார். அவருக்கும் அதே அளவு வழங்கினார்கள். ஹக்கீம் இப்னு ஸாமுக்கு 100 ஒட்டங்கள் வழங்கினார்கள். பின்பு ஸஃப்வான் இப்னு உமைய்யாவுக்கு மூன்று தடவை நூறு நூறாக முன்னூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். இவ்வாறே பல குறைஷித் தலைவர்களுக்கும் ஏனைய கோத்திரத்தாரின் தலைவர்களுக்கும் நூறு நூறு ஒட்டகங்கள் நபி (ஸல்) வழங்கினார்கள். (அஷ்ஷிஃபா)

மற்றவர்களுக்குகெல்லாம் ஐம்பது, நாற்பது என வழங்கினார்கள். நபி (ஸல்) அவர்களின் இந்தக் கொடைத் தன்மையை கண்ட மக்கள், முஹம்மது வறுமையைக் கண்டு அஞ்சாமல் வாரி வழங்குகிறார் என்று பேசினார்கள். கிராம அரபிகளும் இந்தச் செய்தியை கேட்டு பொருட்களைப் பெறுவதற்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபியவர்களை நிர்ப்பந்தமாக தள்ளிச் சென்று, ஒரு மரத்தில் சாய்த்தனர். அவர்களை போர்வையால் இறுக்கி ''அதில் எங்களுக்கும் கொடுங்கள்'' என்று விடாப்பிடியாக கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) ''மக்களே! எனது போர்வையை என்னிடம் கொடுத்து விடுங்கள். 'திஹாமா' மாநிலத்துடைய மரங்களின் எண்ணிக்கை அளவு கால்நடைகள் இருந்தால் அதையும் உங்களுக்கே பங்கிட்டுக் கொடுத்து விடுவேன். பின்பு நான் கஞ்சனாகவோ, கோழையாகவோ, பொய்யனாகவோ இல்லையென்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.''

பிறகு தனது ஒட்டகத்திற்கு அருகில் சென்று அதன் திமிலில் இருந்து சில முடிகளைப் பிடுங்கி மக்களை நோக்கி உயர்த்திக் காண்பித்து ''மக்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களுடைய கனீமா பொருட்களிலிருந்து ஐந்தில் ஒன்றைத் தவிர அதிகமாக இந்த முடியின் அளவு கூட நான் எனக்காக வைத்துக் கொள்ளவில்லை. நான் பெற்றுக் கொண்ட ஐந்தில் ஒன்றும் உங்களுக்கே திருப்பி வழங்கப்பட்டுவிட்டது'' என்று கூறினார்கள்.

மற்ற கனீமா பொருட்கள் அனைத்தையும் கொண்டு வரும்படி ஜைது இப்னு ஸாபித்துக்கு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். மக்கள் அனைவரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். மீதமிருந்த பொருட்களை எல்லாம் நபி (ஸல்) மக்களுக்கு பங்கிட்டார்கள். காலாட்படை வீரர்களுக்கு நான்கு ஒட்டகங்கள் அல்லது நாற்பது ஆடுகள் வழங்கப்பட்டன. குதிரை வீரருக்கு 12 ஒட்டகங்கள் அல்லது 120 ஆடுகள் வழங்கப்பட்டன.

நபியவர்கள் மீது அன்சாரிகளின் வருத்தம்

புதிதாக இஸ்லாமைத் தழுவிய குறைஷித் தலைவர்களுக்கும் ஏனைய குறைஷிகளுக்கும் நபி (ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கினார்கள். ஆனால், இஸ்லாமுக்காக நீண்ட காலம் தியாகம் செய்து வந்த தனது உற்ற தோழர்களுக்கு அந்தளவு வழங்கவில்லை. ஒரு பெரிய அரசியல் காரணத்தை முன்னிட்டு நபி (ஸல்) இவ்வாறு செய்தார்கள். பொதுவாக மக்கள் அந்த நுட்பத்தை விளங்கிக் கொள்ளாமல் பலவாறு பேசினார்கள். இதைப் பற்றி அபூஸயீது அல்குத்ரீ (ரழி) வாயிலாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அறிவிப்பதை பார்ப்போம்.

அபூஸயீது அல்குத்ரீ (ரழி) கூறுகிறார்கள்: குறைஷிகளுக்கும் ஏனைய அரபு கோத்திரங்களுக்கும் நபி (ஸல்) கனீமத்தை வாரி வழங்கினார்கள். ஆனால், அன்சாரிகளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. இதனால் அன்சாரிகளில் ஒரு குறிப்பிட்ட கிளையினர் மன வருத்தமடைந்து பலவாறாகப் பேசினர். அவர்களில் சிலர் ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) தனது கூட்டத்தினருக்கே வாரி வழங்குகின்றார்கள்'' என்று பேசினார்கள். ஸஅது இப்னு உபாதா (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! அன்சாரிகளில் இந்தக் கூட்டத்தினர் உங்கள் மீது வருத்தமாக உள்ளனர். உங்களுக்குக் கிடைக்கப்பட்ட இந்த கனீமா பொருட்களில் உங்கள் கூட்டத்தாருக்கும் ஏனைய கோத்திரங்களுக்கும் வாரி வழங்கினீர்கள். ஆனால் அன்சாரிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதுதான் அவர்களின் வருத்தத்திற்குக் காரணம்'' என்றார். ''ஸஅதே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' என்று நபி (ஸல்) கேட்டார்கள். ''நான் எனது கூட்டத்தாரில் ஒருவன்தானே!'' என்று கூறினார். நபி (ஸல்) ''சரி! உங்கள் கூட்டத்தார்களை இந்தத் தடாகத்திற்கு அருகில் ஒன்று சேருங்கள்'' என்று கூறினார்கள்.

ஸஅது (ரழி), நபியவர்களிடமிருந்து வெளியேறி தனது கூட்டத்தாரிடம் சென்று அவர்களை அந்தத் தடாகத்திற்கருகில் ஒன்று சேர்த்தார். அங்கே சில முஹாஜிர்களும் வந்தார்கள். அவர்களுக்கு ஸஅது (ரழி) அனுமதி வழங்கவே அவர்களும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். மேலும் சில முஹாஜிர்கள் அங்கே வந்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அனைவரும் ஒன்று சேர்ந்தவுடன் ஸஅது (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் சென்று ''அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டனர். வாருங்கள்!'' என நபியவர்களை அழைத்தார்கள். நபி (ஸல்) அங்கு வந்து அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு பேசினார்கள். ''அன்சாரி கூட்டத்தினரே! உங்களைப் பற்றி எனக்கு எட்டிய செய்தி என்ன? என்மீது நீங்கள் கோபமடைந்துள்ளீர்களா? நீங்கள் வழிகேட்டில் இருக்கும் போது நான் உங்களிடம் வரவில்லையா? அல்லாஹ் உங்களுக்கு (நான் வந்த பின்) நேர்வழி காட்டினான். நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ் உங்களை செல்வந்தர்களாக்கினான். நீங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருந்தீர்கள். அல்லாஹ் உங்களை ஒன்று சேர்த்தான்.'' இவ்வாறு நபி (ஸல்) கூறி முடித்தார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! ஆம்! நீங்கள் கூறியது உண்மைதான். அல்லாஹ்வும் அவனது தூதரும் எங்கள் மீது பெரும் கருணையுடைவர்கள், பேருபகாரம் உள்ளவர்கள்'' என்று அன்சாரிகள் கூறினார்கள்.

''அன்சாரிகளே! நீங்கள் எனக்குப் பதிலளிக்க மாட்டீர்களா?'' என்று நபி (ஸல்) கேட்டார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களிடம் என்ன கூறுவது? அனைத்து உபகாரமும் கிருபையும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமே உரித்தானது'' என்று அன்சாரிகள் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) கூறியதாவது: ''அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! பொய்ப்பிக்கப்பட்டவராக நீங்கள் எங்களிடம் வந்தீர்கள் நாங்கள் உங்களை உண்மைப்படுத்தினோம். மக்களால் கைவிடப்பட்டவர்களாக எங்களிடம் வந்தீர்கள் நாங்கள்தான் உங்களுக்கு உதவி செய்தோம். மக்களால் விரட்டப்பட்ட நிலையில் வந்தீர்கள் நாங்கள் உங்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம். நீங்கள் சிரமத்துடன் வந்தீர்கள் நாங்கள் உங்களுக்கு ஆதரவளித்தோம் என்று நீங்கள் பதில் கூறலாம்.

அப்படி நீங்கள் கூறினால் அது உண்மைதான். நாமும் அதை உண்மை என்றே ஏற்றுக் கொள்கிறோம். அன்சாரிகளே! இவ்வுலகின் அற்பப் பொருள் விஷயத்திலா கோபமடைந்தீர்கள்? மக்களில் சிலர் பரிபூரண முஸ்லிமாவதற்காக நான் அதை அவர்களுக்குக் கொடுத்தேன். உங்களை உங்களது இஸ்லாமிய மார்க்கத்திடமே ஒப்படைத்து விட்டேன் (உங்களது இஸ்லாம் மிக உறுதிமிக்கது). அன்சாரிகளே! மக்களெல்லாம் ஆடுகளையும் ஒட்டகங்களையும் அழைத்துச் செல்லும்போது நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு அல்லாஹ்வின் தூதரை அழைத்துச் செல்வது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லையா? முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! ஹிஜ்ரத் என்ற சிறப்பு மட்டும் இல்லையெனில் நான் அன்சாரிகளில் ஒருவனாகவே இருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு வழியில் சென்று அன்சாரிகள் மட்டும் வேறொரு வழியில் சென்றால் நான் அன்சாரிகளின் வழியில்தான் சென்றிருப்பேன். அல்லாஹ்வே! அன்சாரிகளுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் கருணை காட்டுவாயாக!'' என்று கூறி தங்களது உரையை முடித்தார்கள்.

கேட்டுக் கொண்டிருந்த அன்சாரிகளெல்லாம் தாடி நனையுமளவிற்கு அழுதார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! எங்களது பங்கைத் திருப்தி கொண்டோம். நீங்கள் எங்களுக்குக் கொடுத்த பங்கைப் பொருந்திக் கொண்டோம்'' என்று கூறியவர்களாகக் கலைந்து சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)

ஹவாஜின் குழுவினரின் வருகை

இந்நிகழ்ச்சிக்குப் பின் ஜுஹைர் இப்னு ஸுர்தின் தலைமையில் பதிநான்கு நபர்கள் கொண்ட ஹவாஜின் குழுவினர் இஸ்லாமை ஏற்று நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அதில் நபி (ஸல்) அவர்களுடைய பால்குடி தந்தையின் சகோதரர் அபூ ஃபுர்கானும் இருந்தார். நபியவர்களிடம் அவர்கள் பைஅத் செய்த பின் ''அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் கைதிகளாக இருப்பவர்களில் தாய்மார்களும், சகோதரிகளும், மாமிமார்களும், தாயின் சகோதரிகளும் இருக்கின்றனர். அவர்களுக்கு தீங்கு ஏற்படுவது சமுதாயத்திற்கு கேவலமாகும்.'' என்று கூறிய பின்,

''இறைத்தூதரே! தயாளத்தன்மையுடன் உதவி புரியுங்கள்

உங்களை நாம் ஆதரவு வைத்திருக்கின்றோம்

உதவியை எதிர்பார்க்கிறோம்

நீங்கள் பால் குடித்த தாய்மார்களுக்கு உதவுங்கள்

கலப்பற்ற முத்தான பாலால் உங்கள் வாய் நிரம்பியுள்ளது!''

என்ற கவிகளைப் பாடினர். இதைக் கேட்ட நபி (ஸல்) ''என்னுடன் இருப்பவர்களை நீங்கள் பார்க்கிறீர்கள். பேச்சுகளில் எனக்கு மிகப் பிடித்தமானது உண்மையான பேச்சுதான். உங்களது பெண்களும், பிள்ளைகளும் உங்களுக்குப் பிரியமானவர்களா? அல்லது உங்களது செல்வங்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் எங்களுக்கு வேண்டாம் எங்களது குடும்பங்களே எங்களுக்கு வேண்டும் எங்கள் குடும்பக் கௌரவத்திற்கு நிகராக எதையும் நாங்கள் மதிப்பதில்லை'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) ளுஹ்ர் தொழுகைக்குப் பின் என்னிடம் வந்து சபையில் எழுந்து நின்று, ''நாங்கள் அல்லாஹ்வுடைய தூதரின் பரிந்துரையால் முஃமின்களிடமும், முஃமின்களின் பரிந்துரையால் அல்லாஹ்வுடைய தூதரிடமும் எங்கள் கைதிகளை திரும்ப கொடுக்கும்படி கோருகிறோம்'' என்று கூறுங்கள்.

ஹவாஜின் கிளையினர் ளுஹ்ர் தொழுகைக்குப் பின் வந்து நபி (ஸல்) அவர்கள் கூறியவாறே கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) ''எனக்கும் அப்துல் முத்தலிப் குடும்பத்தாருக்கும் சொந்தமான கைதிகளை நான் உங்களுக்கு வழங்கி விடுகிறேன். மேலும், உங்களுக்காக மக்களிடமும் கேட்கிறேன்'' என்று கூறினார்கள். அதைக் கேட்ட முஹாஜிர்களும், அன்சாரிகளும் ''அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சொந்தமானது உங்களுக்கு சொந்தமானதுதான்'' என்று கூறினார்கள். ஆனால், அக்ரா இப்னு ஹாபிஸ் ''நானும் தமீம் கிளையினரும் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம்'' என்று கூறிவிட்டார். உயய்னா இப்னு ஹிஸ்ன் ''நானும் ஃபஸாரா கிளையினரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்'' என்று கூறிவிட்டார். இவ்வாறே அப்பாஸ் இப்னு மிர்தாஸ் என்பவரும் எழுந்து ''நானும் ஸுலைம் கோத்திரத்தாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்'' என்று கூறினார். ஆனால், ஸுலைம் கூட்டத்தார் எழுந்து ''அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குரியதை உங்களுக்குத் தந்துவிடுகிறோம்'' என்று கூறி தங்கள் தலைவன் பேச்சை மறத்து விட்டனர். அதற்கு அப்பாஸ் இப்னு மிர்தாஸ் (ரழி) ''என்னை இவ்வாறு பலவீனப்படுத்தி விட்டீர்களே!'' என்று வருந்தினார்.

அதைத் தொடர்ந்து நபி (ஸல்) ''இந்தக் கூட்டத்தினர் இஸ்லாமை ஏற்று நம்மிடம் வந்திருக்கிறார்கள். இவர்களின் வருகையை எதிர்பார்த்துதான் கனீமா பங்கீடு செய்வதில் தாமதம் காட்டினேன். நான் இவர்களிடம் பொருள் வேண்டுமா? கைதிகள் வேண்டுமா?'' என்று கேட்டேன். அதற்கவர்கள் ''எங்களின் குடும்பம்தான் வேண்டும்'' என்று கூறிவிட்டனர். அதற்கு ஈடாக அவர்கள் எதையும் மதிக்கவில்லை. எனவே, ''யாரிடம் கைதிகள் இருக்கிறார்களோ அவர்களை எந்தவிதப் பகரமும் எதிர்பார்க்காமல் விட்டுவிடவும் அல்லது விரும்பினால் அதற்குரிய பகரத்தைப் பிற்காலத்தில் அல்லாஹ் நமக்கு வழங்கும் கனீமாவிலிருந்து அவருடைய ஒரு பங்கிற்குப் பகரமாக ஆறு பங்குகள் கொடுக்கப்படும்'' என்று கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! எந்தப் பகரமும் இல்லாமல் நாங்கள் இந்தக் கைதிகளை உரிமை விட்டுவிடுகிறோம்'' என்று கூறினர். ஆனால் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''உங்களில் முழுமையான திருப்தியுடன் இதைச் செய்பவர் யார்? அல்லது திருப்தியின்றி செய்பவர் யார்? என்று எனக்குத் தெரியாது. எனவே, நீங்கள் சென்று ஆலோசித்துக் கொள்ளுங்கள். உங்களது தலைவர்கள் உங்கள் முடிவை எனக்குத் தெரிவிக்கட்டும்!'' என்று கூறினார்கள். இறுதியில் மக்கள் தங்களிடமிருந்த கைதிகள் அனைவரையும் நபி (ஸல்) அவர்களிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். உயய்னா இப்னு ஹிஸ்ன் மட்டும் தனக்குக் கிடைத்த வயதான மூதாட்டியைத் திரும்பத்தர அந்நேரத்தில் மறுத்து விட்டார்கள். பிறகு சிறிது நாட்கள் கழித்து திரும்பக் கொடுத்து விட்டார்கள். கைதிகளுக்கு நபி (ஸல்) கிப்தி ஆடையை அணிவித்து மகிழ்ந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஃபத்ஹுல் பாரி)

உம்ராவை நிறைவேற்றி மதீனா திரும்புதல்

இந்நிகழ்ச்சிக்குப் பின் நபி (ஸல்) ஜிஃரானாவில் இஹ்ராம் அணிந்து உம்ராவை நிறைவேற்றினார்கள். மக்காவில் அத்தாப் இப்னு உஸைப் (ரழி) என்ற தோழரை ஆளுநராக நியமித்துவிட்டு மதீனா நோக்கிப் பயணமானார்கள். ஹிஜ்ரி 8, துல்கஅதா மாதம் முடிய ஆறு நாட்கள் இருக்கும் போது மதீனா வந்தடைந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது, தாரீக் இப்னு கல்தூன்)

மக்கா வெற்றிக்குப் பின் அனுப்பப்பட்ட படைப் பிரிவுகளும் குழுக்களும்

இந்த நீண்ட வெற்றிமிக்க பயணத்திலிருந்து நபி (ஸல்) மதீனா திரும்பிய பின், பல பாகங்களிலிருந்து மக்கள் கூட்டங்களும், குழுக்களும் வந்தன. மேலும், நபி (ஸல்) தங்களது தோழர்களை பல இடங்களுக்கு ஆளுநர்களாக அனுப்பினார்கள் இஸ்லாமியப் பிரச்சாரப் பணிக்காகவும் பல அழைப்பாளர்களை பல பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்கள். இவை ஒரு புறமிருக்க, இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாமல் அல்லது அரபுலகம் கண் கூடாகப் பார்த்துக் கொண்ட உண்மைக்கு அடிபணியாமல் அகம்பாவம் பிடித்து, வம்புத்தனம் செய்து வந்த கோத்திரங்களை அடக்குவதற்குண்டான நடவடிக்கைகளையும் நபி (ஸல்) எடுத்தார்கள். இது தொடர்பான சிறு விளக்கங்களைப் பார்ப்போம்:

ஜகாத் வசூலிக்க அனுப்பப்பட்டவர்கள்

ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டின் கடைசி நாட்களில் நபி (ஸல்) மதீனாவுக்குத் திரும்பி வந்தார்கள் என்பதை இதற்கு முன் நாம் அறிந்தோம். ஆக, சில நாட்களிலேயே ஹிஜ்ரி 9, முஹர்ரம் மாதம் இஸ்லாமியப் புத்தாண்டு தொடங்கிற்று. சென்ற ஆண்டிற்கான ஜகாத்தை வசூலிக்க நபி (ஸல்) தங்களது தோழர்களை பல கோத்திரத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். அதன் விவரமாவது:

ஜகாத் வசூலிக்க அனுப்பப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் அனுப்பப்பட்ட கோத்திரத்தாரின் பெயர்கள்:

1. உயைனா இப்னு ஹிஸ்ன் (ரழி) - பனூ தமீம்

2. யஜீது இப்னு அல் ஹுஸைன் (ரழி) - அஸ்லம், கிஃபார்

3. அப்பாது இப்னு பஷீர் அஷ்ஹலி (ரழி) - சுலைம், முஜைனா

4. ராஃபி இப்னு மக்கீஸ் (ரழி) - ஜுஹைனா

5. அம்ரு இப்னு ஆஸ் (ரழி) - பனூ ஃபஜாரா

6. ழஹ்ஹாக் இப்னு ஸுஃப்யான் (ரழி) - பனூ கிளாப்

7. பஷீர் இப்னு ஸுஃப்யான் (ரழி) - பனூ கஅப்
8. இப்னு லுத்பிய்யா அஜ்தி (ரழி) - பனூ துப்யான்

9. முஹாஜிர் இப்னு அபூ உமைய்யா (ரழி) - ஸன்ஆ நகரம் (இவர்கள் ஸன்ஆவிற்கு அனுப்பப்பட்ட காலத்தில் தான் தன்னை நபி என்று வாதிட்ட அஸ்வது அனஸி அங்குத் தோன்றினான்)

10. ஜியாது இப்னு லபீது (ரழி) - ஹழர மவுத் (யமன் நாட்டிலுள்ள ஓர் ஊர்)

11. அதீ இப்னு ஹாத்தம் (ரழி) - தை மற்றும் பனூ அஸத்

12. மாலிக் இப்னு நுவைரா (ரழி) - பனூ ஹன்ளலா

13. ஜிப்கான் இப்னு பத்ர் (ரழி) - பனூ ஸஅதின் ஒரு பிரிவினருக்கு

14. கைஸ் இப்னு ஆஸிம் (ரழி) - பனூ ஸஅதின் மற்றொரு பிரிவினருக்கு

15. அலா இப்னு ஹழ்ரமி (ரழி) - பஹ்ரைன் தீவு
16. அலீ இப்னு அபூதாலிப் (ரழி) - நஜ்ரான் பிரதேசம் (ஜகாத் மற்றும் ஜிஸ்யா வசூலிப்பதற்காக அனுப்பப்பட்டவர்கள்.)

நபி (ஸல்) அந்த ஆண்டு முஹர்ரம் மாதத்திலேயே மேற்கூறப்பட்ட அனைத்து குழுக்களையும் அனுப்பிவிடவில்லை. அவர்களில் சில கோத்திரத்தார்கள் தாமதமாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டதால், அற்குப் பிறகே நபி (ஸல்) தோழர்களை அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். ஆனால், இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து நபி (ஸல்) தங்களது தோழர்களை அனுப்பி வைத்தது ஹிஜ்ரி 9, முஹர்ரம் மாதத்தில்தான் ஆரம்பமானது. இதிலிருந்து ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் இஸ்லாமிய அழைப்புப் பணி எந்தளவு வெற்றி அடைந்துள்ளது என்பது தெளிவாகிறது. அவ்வாறே, மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின் மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைந்தனர்.

படைப் பிரிவுகள்

ஜகாத் வசூல் செய்வதற்குப் பல கோத்திரத்தாரிடம் தங்களது தோழர்களை அனுப்பியவாறே சில படைகளையும் பல பகுதிகளுக்கு நபி (ஸல்) அனுப்பினார்கள். அரேபியத் தீபகற்பம் முழுவதிலும் முழு அமைதியை நிலை நாட்டுவதே அதன் நோக்கமாகும். அவ்வாறு அனுப்பப்பட்ட படைகளின் விவரம் வருமாறு:

1) உயைனா இப்னு ஹிஸ்ன் படைப் பிரிவு: தமீம் கிளையினர் முஸ்லிம்களுக்கு எதிராக ஏனைய கிளையினரைத் தூண்டி வந்ததுடன், முஸ்லிம்களுக்குச் செலுத்த வேண்டிய ஜிஸ்யா வரியையும் கொடுக்க விடாமல் தடுத்து வந்தனர். எனவே, உயைனா இப்னு ஹிஸ்ன் அல்பஸாயின் தலைமையில் ஐம்பது குதிரை வீரர்களை ஹிஜ்ரி 9, முஹர்ரம் மாதத்தில் பனூ தமீம் கிளையினரிடம் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இப்படையில் முஹாஜிர் மற்றும் அன்சாரிகளில் எவரும் இருக்கவில்லை. அனுப்பப்பட்ட அனைவரும் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்களே.

உயைனா தனது படையுடன் இரவில் பயணிப்பதும் பகலில் மறைவதுமாக தமீமினரை நோக்கிச் சென்றார். ஒரு பாலைவனத்தில் ஒன்று கூடியிருந்த அந்த தமீம் கிளையினர் மீது திடீரென தாக்குதல் நடத்தினார். முஸ்லிம்களின் படையைச் சமாளிக்க முடியாமல் அக்கூட்டத்தினர் அங்குமிங்கும் ஓடினர். பதினொரு ஆண்கள், இருபத்தொரு பெண்கள், முப்பது சிறுவர்களைக் கைதிகளாக்கி உயைனா மதீனா அழைத்து வந்தார். அவர்கள் அனைவரும் ரம்லா பின்த் அல்ஹாரிஸின் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

தமீமினரின் தலைவர்களில் பத்து முக்கிய நபர்கள் தங்களின் கைதிகளை விடுவிப்பதற்காக மதீனா வந்தனர். அங்கு நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க அவர்களின் இல்லம் வந்து ''முஹம்மதே! எங்களிடம் வாருங்கள்'' என்று கூவி அழைத்தனர். நபி (ஸல்) வந்தவுடன் அவர்கள் நபியவர்களை பற்றிக் கொண்டனர். நபி (ஸல்) சிறிது நேரம் பேசிவிட்டு ளுஹ்ர் தொழுகைக்காகச் சென்று விட்டார்கள். தொழுகை முடித்து பள்ளியின் முற்றத்தில் அமர்ந்தபோது அக்குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''வாருங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பெருமையைப் பற்றி விவாதிப்போம்'' என்று கூறினர்.

அவர்களில் புகழ்பெற்ற பேச்சாளரான உத்தாத் இப்னு ஹாரிஸ் என்பவரை அவர்கள் முன்னிறுத்தினர். அவர் உரையாற்றியவுடன் இஸ்லாமியப் பேச்சாளரான கைஸ் இப்னு ஷம்மாஸுக்கு நபி (ஸல்) கட்டளையிட, அவர் எழுந்து உத்தாதிற்கு பதிலளித்தார். பின்பு தங்களின் புகழ்பெற்ற கவிஞர் ஜுப்ருகான் இப்னு பத்ரை அவர்கள் நிறுத்தினர். அவர் தங்களின் பெருமையைக் கவிதையாகப் பாடினார். நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்திடம் பதில் கூறும்படி கூறினார்கள். ஹஸ்ஸான் உடனடியாக வாயடைக்கும் பதிலைத் தனது கவிதையில் வழங்கினார்.

இப்போட்டி முடிந்தவுடன் தமீம் குழுவில் இடம் பெற்றிருந்த நடுவர் அக்ரா இப்னு ஹாபிஸ் கூறி தீர்ப்பாவது: நபி (ஸல்) அவர்களின் பேச்சாளர் நமது பேச்சாளரை விட மிகத் திறமையானவர் நபி (ஸல்) அவர்களின் கவிஞர் நமது கவிஞரைவிட மிகத் திறமையானவர் அவர்களுடைய குரல் நமது குரலைவிட மிக உயர்ந்தது அவர்களது சொற்கள் நமது சொற்களை விட மிக உயர்ந்தது. அவரின் இத்தீர்ப்புக்குப் பின் அனைவரும் இஸ்லாமைத் தழுவினர். நபி (ஸல்) அவர்களுக்கு வெகுமதிகளை அளித்ததுடன் கைதிகளையும் அவர்களிடம் திரும்ப ஒப்படைத்தார்கள்.

2) குத்பா இப்னு ஆமிர் படைப் பிரிவு: ஹிஜ்ரி 9, ஸஃபர் மாதம் 'துரபா' என்ற நகருக்கருகிலுள்ள 'தபாலா' என்ற பகுதியில் வசிக்கும் கஸ்அம் கபீலாவைச் சேர்ந்த ஒரு கிளையினரிடம் குத்பா இப்னு ஆமிர் என்பவரை இருபது வீரர்களுடன் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் பத்து ஒட்டகங்களில் ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி பயணம் செய்தனர். அங்குச் சென்று எதிரிகளுடன் கடுமையான சண்டை செய்தனர். இரு தரப்பிலும் அதிகமான சேதங்கள் ஏற்பட்டன. இதில் தளபதியாக இருந்த குத்பாவும் கொல்லப்பட்டார். ஆனால், இறுதியில் வெற்றி முஸ்லிம்களுக்கே கிடைத்தது. எதிரிகளின் கால்நடைகளையும் பெண்களையும் முஸ்லிம்கள் மதீனாவுக்குக் கொண்டு வந்தனர்.

3) ழஹ்ஹாக் இப்னு ஸுஃப்யான் படைப் பிரிவு: ஹிஜ்ரி 9, ரபீஉல் அவ்வல் மாதத்தில் 'ழஹ்ஹாக் இப்னு ஸுஃப்யான் கிலாபி' என்பவரின் தலைமையில் கிளாப் கிளையினரை இஸ்லாமின் பக்கம் அழைப்பதற்காக நபி (ஸல்) ஒரு படைப் பிரிவை அனுப்பி வைத்தார்கள். முஸ்லிம்களின் அழைப்பை அவர்கள் ஏற்க மறுத்துப் போருக்குத் தயாரானார்கள். போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள். எதிரிகளில் ஒருவன் மட்டும் கொல்லப்பட்டான்.

4) அல்கமா படைப் பிரிவு: ஹிஜ்ரி 9, ரபீஉல் ஆகிர் மாதம் 'ஜுத்தா' கடற்கரையை நோக்கி 'அல்கமா இப்னு முஜஸ்ஸிர்' என்பவரின் தலைமையின் கீழ் 300 வீரர்களை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இதற்குக் காரணம், ஹபஷாவைச் சேர்ந்த சிலர் மக்காவில் கொள்ளையடிப்பதற்காக ஜுத்தா கடற்கரையில் ஒன்று கூடியிருக்கின்றனர் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அல்கமா தனது படையுடன் கடற்கரைப் பகுதிகள் முழுவதும் ரோந்து சுற்றினார். அங்குள்ள ஒரு தீவு வரை சென்று தேடினார். முஸ்லிம்கள் வருகிறார்கள் என்ற செய்தியை அறிந்த ஹபஷிகள் தப்பி ஓடிவிட்டதால் சண்டை ஏதும் நடக்கவில்லை. (ஃபத்ஹுல் பாரி)

5) அலீ படைப் பிரிவு: தை கூட்டத்தினருக்கென்று பிரசித்திப்பெற்ற சிலை ஒன்றிருந்தது. அதை அம்மக்கள் 'ஃபுல்ஸ்' என்றழைத்தனர். அதை இடிப்பதற்ககாக அலீ இப்னு அபூ தாலிபை 150 வீரர்களுடன் ஹிஜ்ரி 9, ரபீஉல் அவ்வல் மாதத்தில் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் நூறு ஒட்டகைகள், ஐம்பது குதிரைகளில் பயணம் செய்தனர். இவர்களிடம் கருப்பு நிறத்தில் பெரிய கொடி ஒன்றும், வெள்ளை நிறத்தில் சிறிய கொடி ஒன்றும் இருந்தது. வந்து சேர வேண்டிய இடத்தை அடைந்தவுடன், ஃபுல்ஸ் சிலையைத் தகர்த்தெறிந்து விட்டு அங்கிருந்த கஜானாவையும் கைப்பற்றினர். அதில் மூன்று வாட்களும், மூன்று கவச ஆடைகளும் இருந்தன.

அங்கு வசித்த 'ஹாத்திம்' குடும்பத்தனரிடம் சண்டையிட்டு நிறைய கால்நடைகளைக் கைப்பற்றி அவர்களில் பலரைக் கைது செய்தனர். அங்கு தைம் கிளையினரின் தலைவராக இருந்த அதீ இப்னு ஹாதிம் தப்பித்து ஷாம் நாட்டை (சிரியா) நோக்கி ஓட்டம் பிடித்தார். கைதியாக்கப்பட்டவர்களில் இவரின் சகோதரியும் இருந்தார். மதீனா வரும் வழியில் நபி (ஸல்) அவர்களுக்காக வெற்றிப் பொருளில் ஐந்தில் ஒரு பகுதியை ஒதுக்கி விட்டு மீதியை வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. ஆனால், கைதிகளில் ஹாத்திம் குடும்பத்தாரை மட்டும் பங்கிடாமல் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதீயின் சகோதரி நபி (ஸல்) அவர்களிடம் தன் மீது இரக்கம் காட்டுமாறு கேட்டுக் கொண்டார். ''அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உதவி செய்பவரும் ஓடிவிட்டார், தந்தையும் இறந்துவிட்டார் நானோ வயதான மூதாட்டி. எனக்குப் பணிவிடை செய்வதற்கும் யாருமில்லை. எனக்கு உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்'' என்று அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி (ஸல்) ''உமக்கு உதவி செய்பவர் யார்?'' என்று கேட்க, ''அதீ இப்னு ஹாத்திம்'' என்று பதிலளித்தார். ''அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் விரண்டோடிய அவரா?'' என்று கேட்டுவிட்டு வேறெதுவும் பேசாமல் சென்று விட்டார்கள்.

மறுநாளும் இதுபோன்றே நபி (ஸல்) அவர்களிடம் அப்பெண்மணி உரையாடினார். முந்தைய நாள் கூறியது போன்றே கூறிவிட்டு சென்று விட்டார்கள். மூன்றாம் நாளும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முன்பு கூறியது போன்றே கேட்டுக் கொண்டார். நபி (ஸல்) அவர் மீது இரக்கம் காட்டி அவரை விடுதலை செய்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒருவர் இருந்தார். அநேகமாக அவர் அலீயாக இருக்குமென்று அப்பெண் கூறுகிறார். அவர் ''வாகனிப்பதற்காக வாகனத்தையும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு பெற்றுக் கொள்!'' என்று யோசனைக் கூறினார். அப்பெண்மணியும் நபி (ஸல்) அவர்களிடம் வாகனம் கேட்கவே நபி (ஸல்) அவர்களும் அதற்கு ஏற்பாடு செய்தார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பிய அப்பெண்மணி தனது சகோதரரைத் தேடி ஷாம் நாட்டிற்குப் பயணமானார். அங்கு தனது சகோதரரைச் சந்தித்து நபி (ஸல்) அவர்களின் பெருந்தன்மை குறித்து விவரித்துவிட்டு ''உமது தந்தை செய்திராத நற்செயல்களை எல்லாம் அவர் செய்கிறார். எனவே, விரும்பியோ விரும்பாமலோ நீ அவரைச் சந்தித்தே ஆக வேண்டும்'' என்று அறிவுரைக் கூறினார். தனது சகோதரியின் இந்த யோசனைக்குப் பின் தனக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லையென்றாலும் துணிவுடன் நபியவர்களை சந்திக்க அவர் பயணமானார்.

நபி (ஸல்) அவர்களின் இல்லம் வந்து அவர்களுக்கருகில் அமர்ந்தவுடன், அவர் யார் என்பதை அறிந்து கொண்டு அவரிடம் நபி (ஸல்) பேசினார்கள். அல்லாஹ்வை புகழ்ந்ததற்கு பின் ''நீ இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாமல் ஓடுவதற்குரிய காரணம் என்ன? 'லாஇலாஹஇல்லல்லாஹ்' என்று கூறுவதற்கு பயந்தா நீ ஓடுகிறாய்? அல்லாஹ்வை தவிர வேறொர் இறைவன் இருக்கிறான் என்று உன் அறிவுக்கு எட்டுகிறதா?'' என்று அவரிடம் வினவினார்கள். அதற்கு அவர் ''அப்படி ஒன்றுமில்லை'' என்றார். மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு ''அல்லாஹு அக்பர் என்று சொல்வதற்குப் பயந்தா நீ ஓடுகிறாய்? அல்லாஹ்வை விட மிகப்பெரியவன் ஒருவன் இருக்கிறான் என்று உன் அறிவுக்கு எட்டுகிறதா?'' என்று நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர் ''அவ்வாறு இல்லை'' என்று பதிலளித்தார்.

யூதர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்கள், கிறிஸ்தவர்கள் வழிதவறியவர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். இதனைக் கேட்ட அதிய் ''நான் இணைவைப்பிலிருந்து முற்றிலும் விலகிய முஸ்லிமாக இருக்கிறேன்'' என்று கூறினார். அவரின் இப்பேச்சைக் கேட்ட நபி (ஸல்) முகம் மலர்ந்தவர்களாக அன்சாரி ஒருவரின் வீட்டில் விருந்தாளியாக, அவரைத் தங்க வைத்தார்கள். அவர் அங்கு தங்கி ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் இருமுறை நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து வந்தார். (ஜாதுல் மஆது)

தான் முஸ்லிமானதைப் பற்றி அதிய் கூறியதை இப்னு இஸ்ஹாக் (ரஹ்)அறிவிக்கிறார்: ''என்னை நபி (ஸல்) தங்கள் இல்லத்தில் அவர்களுக்கு முன்பாக அமர வைத்தார்கள். நபி (ஸல்) என்னிடம் ''ஹாத்திமின் மகன் அதியே! நீ 'ரகூஸி'யாக இருந்தாய் அல்லவா?'' (ரகூஸி' என்பது கிறிஸ்துவம் மற்றும் நட்சத்திரங்களை வணங்குபவர்.)

அதிய்: ஆம்! அப்படித்தான்.

நபி (ஸல்): உமது கூட்டத்தினருக்குச் சொந்தமான கனீமா பொருட்களின் 1-4 பங்கை அனுபவித்து வந்தாயல்லவா?

அதிய்: ஆம்! அவ்வாறுதான் செய்தேன்.

நபி (ஸல்): அது உமது மார்க்கத்தில் ஆகுமான செயலாக இல்லையே?

அதிய்: ஆம்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் சொல்வது சரிதான்.

மக்களுக்கு தெரியாதவை அவருக்குத் தெரிகிறது. எனவே, நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் தூதர்தான் என்று அறிந்து கொண்டேன்.) (இப்னு ஹிஷாம்)
அதிய் தொடர்பாக முஸ்னது அஹ்மதில் மற்றொரு அறிவிப்பு வந்துள்ளது.

நபி (ஸல்): அதிய்யே! நீ இஸ்லாமை ஏற்றுக் கொள்! ஈடேற்றமடைவாய்!

அதிய்: நானும் ஒரு மார்க்கத்தைப் பின்பற்றுபவன்தானே?

நபி (ஸல்): நான் உம்மைவிட உமது மார்க்கத்தை நன்கறிவேன்.

அதிய்: அது எப்படி என் மார்க்கத்தை என்னைவிட நீங்கள் நன்கறிவீர்கள்?

நபி (ஸல்): நீர் ரகூஸியா கூட்டத்தை சேர்ந்தவர்தானே? உமது கூட்டத்தில் கனீமத்தில் 1-4 பங்கை அனுபவித்து வந்தீரே?

அதிய்: நீங்கள் கூறுவது உண்மைதான்.

நபி (ஸல்): நிச்சயமாக உமது இந்தச் செயல் உமது மார்க்கத்தில் ஆகுமானதல்லவே.

அதிய் (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களின் இந்தப் பேச்சுக்கு முன் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உடனே நான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன். (முஸ்னது அஹ்மது)

ஸஹீஹ் புகாரியில் அதிய்யின் மூலமாக மற்றும் ஒரு நிகழ்ச்சி பதிவாகியுள்ளது: நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனது வறுமையை முறையிட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு மற்றொருவர் தனது பொருட்களை எல்லாம் கொள்ளையர்கள் வழியில் கொள்ளையடித்து விட்டதாக முறையிட்டார். நபி (ஸல்) என்னைப் பார்த்து ''அதிய்யே! ஹீரா தேசம் எங்கிருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? உனக்கு ஆயுள் நீளமாக இருந்தால் ஒரு பெண் தனியாக ஹீராவிலிருந்து புறப்பட்டு கஅபாவிற்கு வந்து தவாஃப் செய்வாள். அவளுக்கு அல்லாஹ்வை தவிர வேறு எந்த பயமும் இருக்காது என்பதை நீ பார்க்கத்தான் போகிறாய். மேலும், உனக்கு ஆயுள் நீளமாக இருந்தால் கிஸ்ராவின் பொக்கிஷங்களை நீ வெற்றி கொள்வாய். மேலும், உனக்கு வயது நீளமாக இருந்தால் ஒருவர் கை நிறைய தங்கம் அல்லது வெள்ளியை அள்ளிக்கொண்டு தர்மம் செய்ய வெளியேறி அதைப் பெறுவோர் யாரும் உண்டா? என்று தேடி அலைவார். ஆனால், அதைப் பெறுவதற்கு யாரும் அவருக்குக் கிடைக்க மாட்டார்கள்.

சற்று நீளமாக வரும் ஹதீஸின் இறுதியில்: ''ஹீராவிலிருந்து பயணம் செய்து கஅபாவிற்கு வந்து தவாஃப் செய்து திரும்பும் பெண்ணைப் பார்த்தேன். அவளுக்கு அல்லாஹ்வை தவிர வேறு எந்த அச்சமுமில்லை. மேலும், கிஸ்ரா இப்னு ஹுர்முஜின் கஜானாக்களை வெற்றி கொண்டவர்களில் நானும் இருந்தேன். உங்களுக்கு வாழ்க்கை நீளமாக இருந்தால் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பான கை நிறைய தங்கம், வெள்ளியை எடுத்துக் கொண்டு தர்மம் செய்ய அலைபவர்களையும் நீங்கள் பார்ப்பீர்கள்'' என்று அதிய் கூறுகின்றார். (ஸஹீஹுல் புகாரி)

Friday, June 19, 2015

[ரஹீக் 024]-அடுத்தக்கட்ட போர்களும் படைப் பிரிவுகளும் (ஹிஜ்ரி 7)

தாதுர் ரிகா

இஸ்லாமிற்கு எதிரான மூன்று மாபெரும் ராணுவங்களில் பலம் வாய்ந்த இரண்டு ராணுவங்களை முற்றிலும் முறியடித்ததற்குப் பின் மூன்றாவது எதிரியின் பக்கம் தங்களது கவனத்தை முழுமையாகத் திருப்பினார்கள். நஜ்தின் கிராமப்புறங்களில் பரவியிருந்த நாடோடி வம்பர்களான அரபிகளே அந்த மூன்றாவது எதிரிகள். அந்த அரபிகள் சந்தர்ப்பங்களையும் அவகாசங்களையும் எதிர்பார்த்திருந்து அவ்வப்போது மதீனாவின் மீது தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பது, வழிப்பறி செய்வது, திருடுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நாடோடிகள் ஒரு குறிப்பிட்ட ஊரிலோ நகரத்திலோ வசிக்கவில்லை. இவர்களது இல்லங்கள் பெரும் கோட்டைகளோ அரண்களோ இல்லை. மாறாக, முகவரியின்றி, பாலைவனங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் வசித்து வந்த காரணத்தால் இவர்களை அடக்குவதோ, இவர்களின் அட்டூழியத்தை அணைப்பதோ, முந்திய இரு எதிரிகளை அடக்கியதைவிட சற்றுச் சிரமமாகவே இருந்தது. ஆகவே, அவர்களை அச்சுறுத்தும்படி தாக்குதல்கள் நடத்துவது அவசியமாயிற்று. அதைத் தவிர வேறு நடவடிக்கை ஏதும் அவர்களுக்குப் பலனளிப்பதாக இல்லை. அதனால் முஸ்லிம்கள் அவர்கள் மீது பலமுறை திடீர் திடீரென தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த அரபிகளுக்கு பாடம் கற்பிப்பதற்காக நபியவர்கள் எடுத்த ஒரு போர் நடவடிக்கைக்கு ''தாதுர் ரிகா'' என்று சொல்லப்படுகிறது.

பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் இப்போர் நான்காம் ஆண்டு நடந்தது என்று கூறுகின்றனர். ஆனால், இப்போரில் அபூ மூஸா அஷ்அரி (ரழி) மற்றும் அபூஹுரைரா (ரழி) கலந்து கொண்டதிலிருந்து இப்போர் கைபர் போருக்கு பின்னர்தான் நடந்தது என்று உறுதியாக சொல்ல முடிகிறது. ஆகவே, ஹிஜ்ரி 7, ரபீஉல் அவ்வல் மாதத்தில்தான் இது நடந்திருக்க வேண்டும்.

இப்போர் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதின் சுருக்கமாவது: கத்ஃபான் கோத்திரத்தைச் சேர்ந்த அன்மார், ஸஅலபா மற்றும் முஹாப் ஆகிய இம்மூன்று கிளையினரும் ஒன்று சேர்ந்து முஸ்லிம்களைத் தாக்கத் தயாராகின்றனர் என்று நபியவர்களுக்குத் தெரிந்தவுடன் 400 அல்லது 700 தோழர்களை அழைத்துக் கொண்டு விரைந்தார்கள். மதீனாவில் அபூதர் அல்லது உஸ்மானைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். தங்களது படையுடன் அவர்களது ஊர்களுக்குள் நீண்ட தூரம் வரை நபி (ஸல்) ஊடுருவிச் சென்றார்கள். மதீனாவிலிருந்து இரண்டு நாட்கள் பிரயாண தூரமுள்ள 'நக்ல்' என்ற இடத்தை அடைந்தார்கள். அங்குக் கத்ஃபான் கிளையினரின் ஒரு கூட்டத்தினரைச் சந்தித்து ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக ஆகி, ஒருவர் மற்றவரை அச்சுறுத்திக் கொண்டனர். ஆனால், சண்டை ஏதும் நடைபெறவில்லை. எனினும், நபி (ஸல்) அன்றைய பொழுது 'ஸலாத்துல் கவ்ஃப்'' முறைப்படி அனைத்து தொழுகைகளையும் தொழ வைத்தார்கள்.

ஸஹீஹுல் புகாரியில் வருவதாவது: (படை இரண்டாக பிரிக்கப்பட்டது) தொழுகைக்கு இகாமத் சொல்லப்படவே நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரிவினருக்கு இரண்டு ரக்அத் தொழுகை நடத்தினார்கள். இரண்டு ரக்அத்துகளை முடித்துக் கொண்டு அப்பிரிவினர் பாதுகாப்பிற்குச் சென்றுவிட, மற்றொரு பிரிவினர் பிந்திய இரண்டு ரக்அத்தில் நபியுடன் சேர்ந்து தொழுதனர். ஆக, நபி (ஸல்) நான்கு ரக்அத்தும், மற்ற இரண்டு பிரிவினரும் இரண்டு இரண்டு ரக்அத்துகள் தொழுதனர். (ஸஹீஹுல் புகாரி)

அபூ மூஸா அஷ்அரி (ரழி) அறிவிக்கின்றார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இப்போருக்காக புறப்பட்டோம். ஓர் ஒட்டகத்தில் ஆறு நபர்கள் வீதம் மாறி மாறி சவாரி செய்தோம். இதனால் எங்களது கால்கள் வெடித்து விட்டன. எனது கால்களிலும் வெடிப்பு ஏற்பட்டு நகங்கள் எல்லாம் பெயர்ந்து விட்டன. அதனால் துண்டுத் துணிகளை எடுத்து எங்களது கால்களைச் சுற்றிக் கொண்டோம். எனவேதான் இப்போருக்குப் பெயர் 'தாதுர் ரிகா' (துண்டுத் துணிகள் உடையது) என்று அழைக்கப்பட்டது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் 'தாத்துர் ரிகா' போருக்கு சென்றிருந்தோம். ஓர் அடர்த்தியான நிழல் தரும் மரத்தருகில் வந்தபோது அதில் நபி (ஸல்) ஓய்வு எடுப்பதற்காக ஏற்பாடு செய்தோம். மக்கள் பிரிந்து சென்று ஆங்காங்கிருந்த மற்ற மர நிழல்களில் ஓய்வெடுக்க, நபி (ஸல்) அவர்கள் ஒரு மரநிழலில் தங்கினார்கள். அம்மரத்தில் தனது வாளைத் தொங்க விட்டுவிட்டு அதன் நிழலில் தூங்கினார்கள். நாங்களும் சிறிது தூங்கினோம். ஒரு முஷ்ரிக் அங்கு வந்து நபியின் வாளை உருவிக் கொண்டார். நபி (ஸல்) கண் விழித்து பார்த்தபோது ''நீ எனக்குப் பயப்படுகிறாயா?'' என்று அவர் கேட்டார். நபி (ஸல்) ''இல்லை'' என்றார்கள். அவர் ''யார் உன்னை என்னிடமிருந்து பாதுகாக்க முடியும்!'' என்றார். நபியவர்கள் ''அல்லாஹ்'' என்றார்கள். இதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். நாங்கள் நபியவர்களிடம் சென்றபோது அங்கு கிராமவாசி ஒருவர் உட்கார்ந்திருந்தார். நபியவர்கள் ''நான் தூங்கிக் கொண்டிருந்த போது எனது வாளை இவர் எடுத்துக் கொண்டார். நான் விழித்துப் பார்த்தபோது அது அவரது கையில் உருவப்பட்ட நிலையில் இருந்தது. இவர் ''உன்னை என்னிடமிருந்து யார் பாதுகாப்பார்?'' என்று கேட்டார். ''அல்லாஹ்'' என்று நான் கூறினேன். இதோ... அவர் உட்கார்ந்து இருக்கிறார் என்று நபி (ஸல்) கூறினார்கள். அவரைத் தண்டிக்காமல் விட்டுவிட்டார்கள். (முக்தஸர் ஸீரத்திர்ரஸூல்)

இச்சம்பவத்தைப் பற்றி வரும் மற்றொரு அறிவிப்பில் வருவதாவது, ''அல்லாஹ்'' என்று நபி (ஸல்) பதில் கூறியவுடன் அவரது கையிலிருந்து வாள் வீழ்ந்துவிட்டது. அதை நபி (ஸல்) எடுத்துக் கொண்டு ''என்னிடமிருந்து உன்னை யார் பாதுகாப்பார்?'' என்று கேட்டார்கள். அவர் ''வாளை எடுத்தவர்களில் சிறந்தவராக நீங்கள் இருங்கள்'' என்றார். ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீ சான்று கூறுவாயா?'' என்று நபி (ஸல்) அவரிடம் கேட்டார்கள். அவர் ''நான் உங்களிடம் போர் செய்யவோ, உங்களிடம் போர் புரியும் கூட்டத்தினருடன் சேரவோ மாட்டேன் என்று நான் உங்களிடம் ஒப்பந்தம் செய்கிறேன்'' எனக் கூறினார். நபி (ஸல்) அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார்கள். அவர் தனது கூட்டத்தனரிடம் சென்று ''நான் மக்களில் சிறந்தவரிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன்'' என்று கூறினார். (ஃபத்ஹுல் பாரி, முக்தஸர் ஸீரத்திர்ரஸூல்)

''இந்த கிராமவாசியின் பெயர் கவ்ரஸ் இப்னு ஹாரிஸ்'' என்று ஸஹீஹுல் புகாரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிஞர் வாகிதியின் நூலில் ''இந்த கிராமவாசியின் பெயர் துஃஸூர் இவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கருத்து வேற்றுமைக்கு ஸஹீஹுல் புகாரியின் விரிவுரையாளர் இப்னு ஹஜர் ''இரண்டும் வெவ்வேறு நிகழ்ச்சிகளாக இருக்கலாம்'' என்று விளக்கம் அளிக்கிறார். அல்லாஹ்வே மிக அறிந்தவன். (ஃபத்ஹுல் பாரி)

இப்போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வழியில் இணைவைப்பாளர் ஒருவன் மனைவியை முஸ்லிம்கள் சிறை பிடித்தனர். அவளது கணவன் ''அதற்குப் பகரமாக ஒரு நபித்தோழரைக் கொல்வேன்'' என்று நேர்ச்சை செய்து கொண்டு, இரவில் முஸ்லிம்கள் இருந்த இடம் நோக்கி வந்தான். நபி (ஸல்) முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகவும் எதிரிகளைக் கண்காணிப்பதற்காகவும் அப்பாது இப்னு பிஷ்ர், அம்மார் இப்னு யாஸிர் (ரழி) ஆகிய இரு வீரர்களை நியமித்தார்கள். அப்பாது (ரழி) தொழுகையில் ஈடுபட்டார்கள். (அம்மார் (ரழி) தூங்கி விட்டார்) அப்போது அவன் அப்பாத் (ரழி) அவர்களை நோக்கி அம்பெறிந்தான். அவர் அதை பிடுங்கி எறிந்துவிட்டு தொழுகையை முறிக்காமல் தொடர்ந்தார்கள். இவ்வாறு மூன்று அம்புகள் எறிந்தும் தொழுகையை முறிக்கவில்லை. இறுதியாக ஸலாம் கொடுத்த பின்னர் தனது தோழரை எழுப்பினார். அவர் ''ஸுப்ஹானல்லாஹ்! என்னை நீங்கள் எழுப்பியிருக்கலாமே?'' என்றார். அதற்கு அவர் ''நான் ஒரு சூராவை ஓதிக்கொண்டு இருந்தேன். அதை உடனே முறிப்பதை விரும்பவில்லை'' என்றார். (ஃபத்ஹுல் பாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

வம்பர்களாக இருந்து வந்த கிராமப்புற அரபுகளின் உள்ளங்களில் இப்போர் பெரும் அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது. இப்போருக்குப் பின் நபி (ஸல்) அனுப்பிய படையெடுப்புகளின் விவரங்களை நாம் அலசிப்பார்க்கும் போது இப்போருக்குப் பின் கத்ஃபான் கிளையினர் முற்றிலும் துணிவை இழந்து, சிறிது சிறிதாகப் பணிந்து, இறுதியில் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பது நமக்குத் தெரியவருகிறது. மேலும், இந்தக் கிராமவாசிகளில் பல குடும்பத்தினர், நபி (ஸல்) அவர்களுடன் மக்காவை வெற்றி கொள்ள வந்தனர். அதற்குப் பிறகு ஹுனைன் போரிலும் கலந்து கொண்டனர். அதன் கனீமத்தும் இவர்களுக்குக் கிடைத்தது. மக்கா வெற்றிக்குப் பின் இவர்களிடம் ஜகாத் வசூல் செய்ய நபி (ஸல்) தங்களது ஆட்களை அனுப்பினார்கள். அவர்களும் ஜகாத்தை நிறைவேற்றினார்கள் என்பதையும் நாம் பார்க்கிறோம்.

ஆகவே, இதன் மூலம் அகழ் போரில் கலந்து கொண்ட மூன்று எதிரி ராணுவங்களையும் நபி (ஸல்) தோற்கடித்து விட்டார்கள். மதீனாவிலும், சுற்றுப்புறங்களிலும் அமைதியும் பாதுகாப்பும் நிலவியது. இதற்குப் பின் சில பகுதிகளில் கோத்திரங்கள் சிலவற்றால் ஏற்பட்டிருந்த பிரச்சனைகளைத் தீர்க்க முஸ்லிம்கள் ஆற்றல் பெற்றனர். உள்ளுக்குள் பிரச்சனைகள் முடிவடைந்து, நிலைமைகள் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் சாதகமாக மாறுமளவு முன்னேறிவிட்டதால் இப்போருக்குப் பின் பல பெரிய நாடுகளையும், நகரங்களையும் வெற்றி கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர்.

இப்போரிலிருந்து திரும்பிய பின் மதீனாவில் நபி (ஸல்) ஹிஜ்ரி 7, ஷவ்வால் வரை தங்கி இருந்தார்கள். அக்காலக் கட்டத்தில் பல படைப் பிரிவுகளை நபி (ஸல்) பல இடங்களுக்கு அனுப்பினார்கள். அதன் விவரங்கள் பின்வருமாறு:

1) காலிப் இப்னு அப்துல்லாஹ் படைப் பிரிவு

குதைத்' என்ற இடத்தில் வசிக்கும் 'முலவ்விஹ்' என்ற கூட்டத்தார், பஷீர் இப்னு சுவைத் (ரழி) எனும் நபித்தோழரின் அன்பர்களைக் கொன்று விட்டனர். அக்கூட்டத்தாரைப் பழி தீர்க்க ஹிஜ்ரி 7, ஸஃபர் அல்லது ரபிஊல் அவ்வல் மாதத்தில் காலிப் இப்னு அப்துல்லாஹ் (ரழி) தலைமையில் குதைத் நோக்கி ஒரு படையை நபி (ஸல்) அனுப்பினார்கள்.

இப்படை இரவு நேரத்தில் சென்று அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தி, பலரைக் கொன்றுவிட்டு கால்நடைகளை ஓட்டி வந்தனர். விழித்துக் கொண்ட எதிரிகள் பெரும் படையை திரட்டிக் கொண்டு முஸ்லிம்களைத் தாக்கப் பின்தொடர்ந்தனர். மிகச் சமீபத்தில் எதிரிகள் வந்துவிட்ட பொழுது கடுமையான மழை ஒன்றை அல்லாஹ் இறக்கினான். சிறிது நேரத்தில் பயங்கர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதும் எதிரிகளிடமிருந்து முஸ்லிம்கள் தப்பித்து மதீனா வந்து சேர்ந்தனர்.

2) ஹிஸ்மா படைப் பிரிவு

ஹிஜ்ரி 7, ஜுமாதல் ஆகிராவில் இப்படை அனுப்பப்பட்டது. ''அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கடிதம் எழுதுதல்'' என்ற தலைப்பின் கீழ் இப்படையெடுப்பின் விவரங்கள் கூறப்பட்டு விட்டன.

3) உமர் இப்னு கத்தாப் படைப் பிரிவு

ஹிஜ்ரி 7, ஸஅபான் மாதத்தில் முப்பது நபர்களுடன் உமர் (ரழி) அவர்களை 'துர்பா' என்ற இடத்துக்கு நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இப்படை இரவில் பயணிப்பதும் பகலில் மறைந்திருப்பதுமாக தங்கள் பயணத்தைத் தொடர்ந்தது. துர்பாவில் வசித்து வந்த ஹவாஸின் கிளையினருக்கு இச்செய்தி எட்டியவுடன் இடங்களைக் காலி செய்து தப்பித்து ஓடிவிட்டனர். உமர் (ரழி) தங்கள் படையுடன் அங்கு சென்று பார்த்தபொழுது யாரும் இல்லாததால் மீண்டும் மதீனாவிற்குத் திரும்பி விட்டார்கள்.

4) பஷீர் இப்னு ஸஅது படைப் பிரிவு

ஹஜ்ரி 7, ஷஅபான் மாதத்தில் பஷீர் (ரழி) அவர்களை முப்பது வீரர்களுடன் நபி (ஸல்) 'ஃபதக்' மாநிலத்தின் ஓர் எல்லையில் வசிக்கும் முர்ரா கிளையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு அனுப்பி வைத்தார்கள். இப்படை அங்கு சென்று தாக்குதல் நடத்தி, அவர்களின் கால்நடைகளை எல்லாம் ஓட்டிக் கொண்டு திரும்பினர். இரவு நேரத்தில் எதிரிகள் படையாக வந்து இவர்களுடன் போர் புரிந்தனர். பஷீர் (ரழி) அவர்களும் அவருடைய தோழர்களும் எதிரிகளை அம்பால் எறிந்து தாக்கினர். இவர்களின் அம்புகள் அனைத்தும் தீர்ந்து விட்டன. இறுதியாக நடந்த வாள் சண்டையில் பஷீரைத் தவிர அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். பஷீர் (ரழி) தனக்கு ஏற்பட்ட காயங்களுடன் அங்கிருந்து ஃபதக்குக்குச் சென்றார். காயங்கள் குணமாகும் வரை யூதர்களிடம் தங்கியிருந்து விட்டு மதீனா வந்து சேர்ந்தார்.

5) காலிபு இப்னு அப்துல்லாஹ் படைப் பிரிவு

ஹிஜ்ரி 7, ரமழான் மாதத்தில் 130 வீரர்களுடன் 'மைஃபஆ' என்ற இடத்திலுள்ள உவால், அப்து இப்னு ஸஅலபா ஆகியோர் மீது தாக்குதல் நடத்த காலிப் இப்னு அப்துல்லாஹ்வுடன் ஒரு படையை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அந்தப் படை எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி எதிர்த்தவர்களைக் கொன்றுவிட்டு கால்நடைகளை ஓட்டி வந்தனர். இப்படையெடுப்பின் போதுதான் 'நஹ்க் இப்னு மிர்தாஸ்' என்பவர் கலிமாவை மொழிந்தும் உஸாமா இப்னு ஸைது (ரழி) என்ற நபித்தோழரால் கொல்லப்பட்டு விட்டார். படை மதீனா வந்தடைந்ததும் அச்செய்தி நபியவர்களுக்குத் தெரிய வரவே ''லாயிலாஹஇல்லல்லாஹ் என்று கூறிய பின்னரா நீ அவரைக் கொலை செய்தாய்?'' எனக் கோபத்துடன் கேட்டார்கள். அதற்கு, ''தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் அதைக் கூறினார்'' என்று உஸாமா (ரழி) பதிலளிக்க, ''அவர் உண்மையாளரா? பொய்யரா? என நீ அறிய அவரது உள்ளத்தை பிளந்து பார்த்தாயா?'' என்று நபி (ஸல்) வன்மையாகக் கண்டித்தார்கள்.

6) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா படைப் பிரிவு


அஸீர் இப்னு ஜாம் அல்லது பஷீர் இப்னு ஜாம் என்பவர் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த சில கத்ஃபானியரை ஒன்று சேர்க்கிறார் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. இதனால் நபி (ஸல்) ஹிஜ்ரி 7, ஷவ்வால் மாதத்தில் 30 வீரர்களை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) தலைமையில் கைபரை நோக்கி அனுப்பி வைத்தார்கள். இப்படை அஸீரிடம் வந்து எங்களுடன் ''நீர் உமது தோழர்களுடன் வாரும் நபி (ஸல்) உம்மையே கைபருக்கு ஆளுநராக ஆக்கி விடுவார்கள் என்று ஆசை வார்த்தைக் கூறினர். அவரும் தயாராகவே, அஸீரையும் அவரது 30 தோழர்களையும் அழைத்துக் கொண்டு அப்துல்லாஹ் மதீனா நோக்கிப் புறப்பட்டார். வழியில் 'கற்கறா நியார்' என்ற இடத்தில் தங்கியிருந்தபோது இரு கூட்டத்தினருக்குமிடையில் பிரச்சனை வரவே, அஸீரையும் அவரது 30 தோழர்களையும் முஸ்லிம்கள் கொன்று விட்டனர். வரலாற்று ஆசிரியரான வாக்கிதி, ''ஹிஜ்ரி 6, ஷவ்வால் மாதம் கைபர் போர் நடப்பதற்கு சில மாதங்கள் முன்னதாக இச்சம்பவம் நடந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

7) பஷீர் இப்னு ஸஅத் படைப் பிரிவு

300 வீரர்களுடன் பஷீர் இப்னு ஸஅதை யமன், ஜபார் என்ற இடங்களுக்கு நபி (ஸல்) அனுப்பினார்கள். இவை கத்ஃபான் கிளையினருக்குச் சொந்தமான இடங்களாகும். சிலர் இந்த இடம் பஜாரா மற்றும் உத்ரா கிளையினருக்குச் சொந்தமான இடம் என்றும் கூறுகின்றனர். பல இடங்களிலிருந்து வந்து ஒன்றுகூடி மதீனாவைத் தாக்க இருந்தவர்களை எதிர்ப்பதற்காக இப்படை புறப்பட்டது. இரவில் பயணித்தும் பகலில் மறைந்திருந்தும் இவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர். பஷீரின் வருகையை அறிந்த எதிரிகள், இடங்களைக் காலிசெய்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். பஷீர் (ரழி) அங்கு சென்று எதிரிகளின் ஏராளமான கால்நடைகளை ஓட்டிக் கொண்டு இருவரையும் கைது செய்து மதீனா திரும்பினார். கைதிகள் இருவரும் மதீனா வந்ததும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர்.

8) அபூ ஹத்ரத் படைப் பிரிவு

''ஜுஸம் இப்னு முஆவியா கிளையைச் சேர்ந்த ஒருவன் பெரும் கூட்டத்தை அழைத்துக் கொண்டு 'காபா' என்ற இடத்திற்கு வந்திருக்கிறான், அங்கிருக்கும் கைஸ் கிளையினருடன் சேர்ந்து முஸ்லிம்களின் மீது போர் தொடுக்க உள்ளான்'' என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அதை விசாரித்து உறுதியான செய்தியை அறிந்து வர, அபூ ஹத்ரதையும் (ரழி) அவருடன் இரண்டு தோழர்களையும் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அபூ ஹத்ரத் (ரழி) சூரியன் மறையும் நேரத்தில் காபா வந்து சேர்ந்தார். அவர் ஊரின் ஓர் ஓரத்தில் மறைந்து கொண்டு மற்ற இரு தோழர்களை மற்றொரு புறத்தில் மறைந்து கொள்ளும்படிக் கூறினார். அன்று கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றிருந்த அக்கூட்டத்தினரின் இடையர் வருவதற்கு தாமதமானது. நன்கு இருட்டிய பின்பு அந்த இடையரைத் தேடி அக்கூட்டத்தின் தலைவர் தனியாகப் புறப்பட்டார். அத்தலைவர் அருகில் வந்தபோது அபூ ஹத்ரத் (ரழி) அவரது நெஞ்சை குறிவைத்து அம்பெறிந்தார். அம்பு குறி தவறாது நெஞ்சைத் துளைக்கவே, அவர் எந்தவித சப்தமுமின்றி இறந்து விட்டார்.

அவன் தலையைக் கொய்து, அக்கூட்டத்தினர் தங்கியிருந்த ராணுவ முகாம் அருகே அபூ ஹத்ரத் (ரழி) கட்டித் தொங்க விட்டார். பின்பு பெரும் சப்தத்துடன் தக்பீர் முழங்கினார். அவரின் சப்தத்தைக் கேட்ட மற்ற இரு தோழர்களும் உரத்த குரலில் தக்பீர் முழங்கினர். இதனைச் செவிமடுத்து, தொங்கும் தலையையும் பார்த்தவுடன் கூட்டத்தினர் தலை தெறிக்க ஓடினர். இந்த மூன்று முஸ்லிம்கள் அதிகமான ஒட்டகங்களையும் ஆடுகளையும் ஓட்டிக் கொண்டு மதீனா வந்து சேர்ந்தனர். இப்படையெடுப்பு அடுத்துக் கூறப்பட உள்ள ''உம்ரத்துல் கழா''வுக்கு முன்பதாக நடந்தது என்று இப்னுல் கைய்யிம் (ரஹ்) குறிப்பிடுகின்றார். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

உம்ராவை நிறைவேற்றப் புறப்படுதல் (உம்ரத்துல் கழா)

அறிஞர் ஹாகிம் (ரஹ்) கூறுகிறார்: துல்கஅதா பிறை உதயமானதும், ''சென்ற ஆண்டு (ஹுதைபிய்யாவில்) தவறிப்போன உம்ராவை நிறைவேற்ற வேண்டியிருப்பதால், இடைப்பட்ட காலங்களில் (ஷஹீத்) வீரமரணம் அடைந்தவர்களைத் தவிர ஹுதைபிய்யாவில் கலந்து கொண்ட (ஒருவர்கூட பின்தங்கி விடாமல்) அனைவரும் புறப்பட வேண்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள்.

நபியவர்களின் கட்டளைக்கிணங்க ஹுதைபிய்யாவில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் உம்ராவை நிறைவேற்ற புறப்பட்டனர். இவர்களுடன் உம்ராவில் ஆர்வம் கொண்ட மற்றும் பலரும் புறப்பட்டனர். இவர்களில் பெண்கள், சிறுவர்கள் தவிர ஆண்கள் மட்டும் மொத்தம் இரண்டாயிரம் பேர் இருந்தனர்.'' (ஃபத்ஹுல் பாரி)

மதீனாவில் உவைஃப் இப்னு அழ்பத் அத்தய்லி அல்லது அபூ ரூஹும் அல்கிஃபாரியை பிரதிநிதியாக நியமித்துவிட்டு குர்பானிக்காக அறுபது ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு நபி (ஸல்) புறப்பட்டார்கள். இந்த ஒட்டகங்களுக்குப் பொறுப்பாளராக நாஜியா இப்னு ஜுன்துப் அஸ்லமியை நியமித்தார்கள். துல்ஹுலைபா வந்தவுடன் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து கொண்டு தல்பியா கூறினார்கள். முஸ்லிம்களும் நபியவர்களைப் பின்பற்றி தல்பியா கூறலானார்கள். குறைஷிகள் மோசடி செய்யலாம் அல்லது ஒப்பந்தத்தை மீறலாம் என்ற அச்சத்தில் போர் வீரர்கள், ஆயுதங்கள் சகிதம் எதற்கும் ஆயத்தமாகவே நபி (ஸல்) புறப்பட்டார்கள். 'யஃஜுஜ்' என்ற இடத்தை அடைந்தவுடன் தங்களிடமிருந்த ஈட்டிகள், அம்புகள், கேடயங்கள் அனைத்தையும் அங்கு வைத்துவிட்டு, அவற்றிற்கு அவ்ஸ் இப்னு கவ்லி அன்சாரியை 200 வீரர்களுடன் அதன் பாதுகாப்புக்கு நியமித்தார்கள். ஒரு பயணி வைத்திருக்கும் ஆயுதத்தை மட்டும் அதாவது, உறையிலிடப்பட்ட வாட்களை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள். (ஃபத்ஹுல் பாரி, ஜாதுல் மஆது)

நபி (ஸல்) தனது கஸ்வா ஒட்டகத்தில் வாகனிக்க, முஸ்லிம்கள் நபியவர்களை சுற்றி படை சூழ வாளேந்தியவர்களாக தல்பியாவையும் முழங்கிக் கொண்டு மக்காவிற்குள் நுழைந்தார்கள். இணைவைப்பாளர்கள் கஅபாவின் வடப் பகுதியில் இருந்த 'குஐகிஆன்' என்ற மலையின் மீது ஏறி நின்று முஸ்லிம்களை வேடிக்கை பார்க்கலானார்கள். மதீனாவின் காய்ச்சலால் பாதிப்படைந்த ஒரு குழுவினர் இப்போது நம்மிடம் வர இருக்கின்றனர் என்று கிண்டலாக தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இதனைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடம் ''வலது தோள்பட்டை வெளியில் தெரியும்படி இஹ்ராமுடைய ஆடையை அணிந்து கொள்ளுங்கள். தவாஃபுடைய முதல் மூன்று சுற்றுகளில் மட்டும் குதித்து ஓடுங்கள். ஆனால், இரண்டு ருகூன்களுக்கு மத்தியில் சாதாரணமாக நடந்துச் சுற்றுங்கள். மீதமுள்ள நான்கு சுற்றுகள் முழுவதும் சாதாரணமாக நடந்தே சுற்றுங்கள்!'' எனக் கட்டளையிட்டார்கள். தங்களது தோழர்கள் மீதுள்ள கருணையினால் ஏழு சுற்றுகளிலும் தோள்களை உயர்த்தி ஓட வேண்டுமென்று நபி (ஸல்) கூறவில்லை. இணைவைப்பாளர்களுக்குத் தங்களது பலத்தைக் காட்டுவதற்காகவே நபி (ஸல்) இவ்வாறு கட்டளையிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஹஜுனுக்கு அருகிலுள்ள மலைக் கணவாயின் வழியாக நபி (ஸல்) மக்காவுக்குள் நுழைந்தார்கள். இணைவைப்பாளர்கள் வரிசையாக நின்று கொண்டு நபியவர்களை வேடிக்கை பார்த்தனர். நபி (ஸல்) தல்பியா கூறிக்கொண்டே பள்ளிக்குள் நுழைந்து தனது தடியால் ஹஜ்ருல் அஸ்வத்தைத் தொட்டுவிட்டு தவாஃபைத் தொடங்க, முஸ்லிம்களும் தங்களது தவாஃபைத் தொடங்கினார்கள். அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) பின்வரும் கவிகளைப் பாடிக்கொண்டு வாளேந்தியவர்களாக நபியவர்களுக்கு முன் சென்று கொண்டிருந்தார்கள்.

''இறைமறுப்போரின் பிள்ளைகளே!அகன்றுபோய் வழிவிடுங்கள்!

இறைத்தூதரிடத்தில் நன்மைகள் அனைத்தும் இருக்கின்றன.

வழிவிடுங்கள்! திட்டவட்டமாக ரஹ்மான் அவன் தன் திருமறையில்...

தனது தூதருக்கு ஓதிக்காட்டப்படும் ஏடுகளில் இறக்கினான்.

இறைவா! அவர் கூற்றை ஏற்கிறேன்.

அவரை ஏற்பதில் உண்மைதனை நிச்சயம் நான் பார்க்கிறேன்.

வெட்டுவதில் சிறந்த வெட்டு இறைப்பாதையில் நிகழ்வதுதான்

இறைமறை கட்டளை; இன்று உங்களை வெட்டுவோம்

அது தலை தனி, முண்டம் தனி ஆக்கிடும் வெட்டு

அது நண்பனை விட்டு நண்பனைப் பிரித்திடும் வெட்டு.

உமர் (ரழி), ''ஏ! ரவாஹாவின் மகனே! அல்லாஹ்வின் தூதருக்கு முன், அதுவும் அல்லாஹ்வின் புனிதப் பள்ளிக்குள் நீ கவிதை பாடுகிறாயா?'' என்று அதட்டினார்கள். அதற்கு நபியவர்கள் ''உமரே! அவரை விட்டுவிடுங்கள். அம்பால் எறிவதைவிட இந்தக் கவிதை குறைஷிகளுக்கு மிக விரைவாக ரோஷத்தை ஊட்டக் கூடியது'' என்று கூறினார்கள். (ஜாமிவுத் திர்மிதி)

நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் முதல் மூன்று சுற்றுகளை (முன் கூறியவாறு) ரமல் செய்தவர்களாகச் சுற்றினார்கள். இதை பார்த்து ஆச்சரியமடைந்த இணைவைப்பாளர்கள் ''என்ன! மதீனாவின் காய்ச்சல் இவர்களை மிகப் பலவீனப்படுத்தி விட்டது என்றல்லவா எண்ணியிருந்தோம். ஆனால், இவர்களோ இவ்வளவு வீரமுள்ளவர்களாக இருக்கிறார்களே'' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் முதலில் தவாஃபை முடித்தார்கள். அதற்குப் பின் 'ஸஃபா, மர்வா' என்ற இரு மலைகளுக்கு மத்தியில் 'ஸயீ'' செய்தார்கள். அதற்குப் பின் மர்வா மலைக்கு வந்தார்கள். அங்குதான் நபியவர்களின் ஒட்டகங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நபியவர்கள் ''இந்த இடத்திலும் குர்பானி பிராணியை அறுக்கலாம். மக்காவின் அனைத்து தெருக்களிலும் குர்பானி பிராணியை அறுக்கலாம்'' என்று அனுமதி வழங்கிவிட்டு, தங்களது குர்பானியை மர்வாவில் வைத்து அறுத்தார்கள். அதற்குப் பின் தங்களது தலைமுடியை சிரைத்து (மொட்டை அடித்து)க் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி முஸ்லிம்களும் அவ்வாறே செய்தார்கள். உம்ராவை முடித்த தோழர்களில் சிலரை ஆயுதங்களை வைத்துவிட்டு வந்த 'யஃஜுஜ்' என்ற இடத்திற்கு அனுப்பிவிட்டு, அங்கிருந்தவர்களை மக்கா வந்து உம்ராவை நிறைவேற்ற அழைத்தார்கள். நபியவர்களின் சொல்லுக்கிணங்க இக்கூட்டத்தினர் அங்குச் சென்று ஆயுதங்களைப் பாதுகாப்பதில் ஈடுபட, அங்கிருந்தவர்கள் மக்கா வந்து உம்ரா செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். குறைஷிகள் நான்காவது நாள் காலையில் அலீயிடம் வந்து, ''தவணை முடிந்துவிட்டது. உமது தோழரை வெளியேறும்படி சொல்'' என்று கூறினர். நபியவர்கள் மக்காவிலிருந்து வெளியேறி 'ஸஃப்' என்ற இடத்தில் தங்கினார்கள்.

நபியவர்கள் மக்காவிலிருந்து வெளியேறியபோது ஹம்ஜா (ரழி) அவர்களின் மகளார், ''எனது சிறிய தந்தையே! எனது சிறிய தந்தையே!'' என கூவிக்கொண்டு நபியவர்களை நோக்கி ஓடிவந்தார்கள். அவரை அலீ (ரழி) தூக்கி அணைத்துக் கொண்டார்கள். அவரை வளர்ப்பதற்காக அலீ, ஜஅஃபர், ஸைது (ரழி) மூவரும் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டனர். ஆனால், நபியவர்கள் அச்சிறுமியை வளர்க்கும் உரிமையை ஜஅஃபருக்குக் கொடுத்தார்கள். காரணம், இச்சிறுமியின் தாயின் சகோதரியைத்தான் ஜஅஃபர் (ரழி) மணம் முடித்திருந்தார்கள்.

இப்பயணத்தில் நபியவர்கள் மைமூனா பின்த் அல்ஹாரிஸ் அல்ஆமியாவைத் திருமணம் செய்தார்கள். நபியவர்கள் மக்கா நுழையும் முன்பே இது விஷயமாக ஜஅஃபர் இப்னு அபூதாலிபை மைமூனாவிடம் அனுப்பி வைத்தார்கள். மைமூனா (ரழி) இந்த உரிமையைத் தனது சகோதரியின் (உம்முல் ஃபழ்லின்) கணவர் அப்பாஸ் (ரழி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.

அப்பாஸ் (ரழி) நபியவர்களின் விருப்பத்தை ஏற்று அவர்களுக்கு மைமூனாவை மணம் முடித்து வைத்தார்கள். நபியவர்கள் உம்ராவை முடித்துவிட்டு மக்காவிலிருந்து வெளியேறியபோது மைமூனாவை அழைத்து வருவதற்காக அபூராஃபியை விட்டு வந்தார்கள். நபி (ஸல்) ஸஃபில் தங்கியிருந்தபோது அபூராபிஃ, மைமூனாவை அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்கள். (ஜாதுல் மஆது)

இந்த உம்ராவிற்கு 'உம்ரத்துல் கழா' என்று கூறப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, சென்ற ஆண்டு உம்ராவை நிறைவேற்ற முடியாமல் போனதற்குப் பகரமாக இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டதால் இப்பெயர் வந்தது. இரண்டாவது, ஹுதைபிய்யாவின் போது செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஏற்ப இந்த உம்ரா அமைந்திருந்ததால் இந்தப் பெயர் வந்தது.

மார்க்க அறிஞர்கள் இரண்டாவது காரணமே மிக ஏற்றமானது எனக் கூறுகின்றனர். (ஜாதுல் மஆது, ஃபத்ஹுல் பாரி)

இந்த உம்ராவிற்கு வரலாற்றில் நான்கு பெயர்கள் கூறப்படுகின்றன. 1) உம்ரத்துல் கழா, 2) உம்ரத்துல் கழிய்யா, 3) உம்ரத்துல் கிஸாஸ், 4) உம்ரத்துல் சுல்ஹ். (ஜாதுல் மஆது, ஃபத்ஹுல் பாரி)

இந்த உம்ராவிலிருந்து மதீனாவிற்குத் திரும்பியதற்குப் பின் நபி (ஸல்) பல சிறிய படைகளை அனுப்பி வைத்தார்கள். அதன் விவரங்கள் வருமாறு:

1) இப்னு அபுல் அவ்ஜா படைப் பிரிவு: ஹிஜ்ரி 7, துல்ஹஜ் மாதத்தில் 50 வீரர்களுடன் இவரை இஸ்லாமிய அழைப்பு விடுப்பதற்காக சுலைம் கிளையினரிடம் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் சுலைமினரிடம் சென்று, அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தபோது ''உங்களது அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய எந்தத் தேவையும் எங்களுக்கு இல்லை'' என்று அவர்கள் மறுத்து விட்டனர். அதனால், இரு சாராருக்குமிடையில் கடுமையான சண்டை நடைபெற்றது. அதில் அபூஅவ்ஜா (ரழி) காயமடைந்தார். இரண்டு எதிரிகள் முஸ்லிம்களால் சிறைபிடிக்கப்பட்டனர்.

2) காலிபு இப்னு அப்துல்லாஹ் படைப் பிரிவு: 'ஃபதக்' என்ற இடத்திற்கு அனுப்பப்பட்ட பஷீர் இப்னு ஸஅது அன்சாரியின் தோழர்கள் கொல்லப்பட்டனர் அல்லவா, அதற்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காக 200 வீரர்களை காலிபு இப்னு அப்துல்லாஹ் (ரழி) தலைமையில் ஹிஜ்ரி 8, ஸஃபர் மாதத்தில் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அங்கு சென்று ஏராளமானவர்களை கொன்றுவிட்டு அதிகமான கால்நடைகளை ஓட்டி வந்தனர்.

3) கஅபு இப்னு உமைர் அன்சாரி படைப் பிரிவு: ஹிஜ்ரி 7, ரபீஉல் அவ்வல் மாதத்தில் இப்படை அனுப்பப்பட்டது. குழாஆ கிளையினர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த பெருமளவில் கூட்டங்களைச் சேர்க்கின்றனர் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. அதனால் கஅபு இப்னு உமைர் அல்அன்சாரியின் தலைமையில் பதினைந்து தோழர்களை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் எதிரிகளைச் சந்தித்து அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தனர். ஆனால், அவர்கள் ஏற்க மறுத்து முஸ்லிம்களை நோக்கி அம்பெறிந்தனர். இதில் அனைத்து முஸ்லிம்களும் கொல்லப்பட்டு விட்டனர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)

4) ஷுஜா இப்னு வஹபு அல்அசதி படைப் பிரிவு: 'ஹவாஸின்' என்ற கிளையினர் முஸ்லிம்களின் எதிரிகளுக்குப் பலமுறை உதவி செய்து வந்தனர். இதனால் அவர்களைக் கண்டிப்பதற்காக ஹிஜ்ரி 8, ரபீஉல் அவ்வல் மாதம், 25 வீரர்களுடன் ஷுஜா இப்னு வஹப் என்ற தோழரை 'தாத் இர்க்' என்ற இடத்திற்கு நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். முஸ்லிம்கள் எதிரிகளின் ஏராளமான கால்நடைகளை ஓட்டிக் கொண்டு மதீனா வந்து சேர்ந்தனர். அங்கு சண்டை ஏதும் நடக்கவில்லை. (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)

முஃதா யுத்தம்

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் சந்தித்த மிகப் பயங்கரமான போர் இதுவேயாகும். கிறிஸ்துவ நாடுகளையும் நகரங்களையும் முஸ்லிம்கள் வெற்றி கொள்ள இது ஒரு தொடக்கமாக அமைந்தது. இப்போர் ஹிஜ்ரி 8, ஜுமாதா அல்ஊலா, கி.பி. 629 ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடைபெற்றது.

'முஃதா' என்பது ஷாம் நாட்டின் பல்கா மாநிலத்தின் கீழ் பகுதியிலுள்ள ஓர் ஊர். இங்கிருந்து பைத்துல் முகத்தஸ், இரண்டு நாட்கள் நடக்கும் தொலைதூரத்தில் உள்ளது.

யுத்தத்திற்கான காரணம்

நபி (ஸல்) அவர்கள் புஸ்ராவின் மன்னருக்குக் கடிதம் ஒன்றை எழுதி அல்ஹாரிஸ் இப்னு உமைர் அல்அஸ்தி (ரழி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஆனால், போகும் வழியில் பல்கா மாநிலத்தின் கவர்னராக இருந்த ஷுரஹ்பீல் இப்னு அம்ரு அல்கஸ்ஸானி என்பவன் அவரைக் கைது செய்து கொன்று விட்டான்.

தூதர்களைக் கொலை செய்வது அரசியல் குற்றங்களில் மிகக் கடுமையானதாகும். பகிரங்கமாகப் போருக்கு அழைப்பு விடுப்பதைவிட தூதரைக் கொலை செய்வது மிகக் கொடிய ஒன்றாக கருதப்பட்டது. தனது தூதர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நபி (ஸல்) பெரும் கவலைக்குள்ளானார்கள். 3000 வீரர்கள் கொண்ட பெரும் படை ஒன்றைத் தயார் செய்து அவர்களிடம் சண்டையிட அனுப்பி வைத்தார்கள். (ஜாதுல் மஆது, ஃபத்ஹுல் பாரி)

அஹ்ஸாப் போரைத் தவிர வேறு எந்தப் போரிலும் முஸ்லிம் வீரர்களின் எண்ணிக்கை இந்தளவு அதிகம் இருந்ததில்லை.

படைத் தளபதிகள்

நபி (ஸல்) அவர்கள் இப்படைக்கு முதலாவதாக ஜைது இப்னு ஹாரிஸாவை (ரழி) தளபதியாக ஆக்கிவிட்டு ''ஜைது கொல்லப்பட்டால் ஜஅஃபர் தளபதியாக இருப்பார் ஜஅஃபரும் கொல்லப்பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தளபதியாக இருப்பார்'' என்று கூறி வெள்ளை நிறக் கொடியை ஜைது இப்னு ஹாரிஸா (ரழி) கையில் கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபியவர்களின் அறிவுரை

பின்பு நபி (ஸல்) அவர்கள் தோழர்களுக்கு வழங்கிய அறிவுரையாவது: நீங்கள் அல்ஹாரிஸ் இப்னு உமைர் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்று அங்குள்ளவர்களை இஸ்லாமின் பக்கம் அழையுங்கள். அவர்கள் ஏற்றுக்கொண்டால் நல்லது. ஏற்காவிட்டால் அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி தேடி அவர்களுடன் போர் செய்யுங்கள். அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் பெயர் கூறி அல்லாஹ்வை நிராகரித்தவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள். மோசடி செய்யாதீர்கள், பதுக்காதீர்கள், குழந்தை, பெண், வயது முதிர்ந்தவர், சர்ச்சுகளில் இருக்கும் சன்னியாசிகள் ஆகியோரைக் கொல்லாதீர்கள். பேரீத்த மரங்கள் மட்டுமல்ல, வேறு எந்த மரங்களையும் வெட்டாதீர்கள். கட்டடங்களை இடிக்காதீர்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸுனன் அபூதாவூது, ஸுனனத் திர்மிதி, இப்னு மாஜா)

படையை வழியனுப்புதல், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அழுதல்

இஸ்லாமியப் படை புறப்படத் தயாரானபோது அவர்களை வழியனுப்புவதற்காக மக்களெல்லாம் ஒன்று கூடினர். படைக்கும் அதன் தளபதிகளுக்கும் பிரியா விடை கொடுத்து ஸலாம் கூறினர். தளபதிகளில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அழலானார். ''மக்கள் ஏன் அழுகிறீர்?'' என்று கேட்க, ''எனக்கு உலகத்தின் மீதுள்ள ஆசையினாலோ அல்லது உங்கள் மீதுள்ள பாசத்தினாலோ நான் அழவில்லை. எனினும், நரகத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் ஒரு குர்ஆன் வசனத்தை நபி (ஸல்) ஓத, நான் கேட்டிருக்கின்றேன். அந்த வசனமாவது:

அதனைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உங்களது இறைவனிடம் முடிவு கட்டப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும். (அல்குர்ஆன் 19:71)

அந்தப் பாலத்தை கடக்கும்போது எனது நிலைமை என்னவாகுமோ என்று எனக்குத் தெரியவில்லையே!'' என்று அப்துல்லாஹ் (ரழி) பதில் கூறினார். ''அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக! அல்லாஹ் அவனது அருளுடன் உங்களுக்குத் துணையாவானாக! வெற்றி பெற்று நல்ல நிலையில் அல்லாஹ் உங்களை எங்களிடம் திரும்பக் கொண்டு வருவானாக!'' என்று வாழ்த்துகள் கூறி மக்கள் அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள். அதற்கு அப்துல்லாஹ் (ரழி) கூறிய பதிலாவது:

மன்னிப்பு, நுரை தள்ளும் பலத்த அடி

அல்லது இரத்தவெறி கொண்ட

ஒருத்தனின் கையால் குடல்களையும் ஈரலையும்

ஊடுருவிச் செல்லும் குறு ஈட்டியால்

நான் குத்தப்பட ரஹ்மானிடம் கேட்கிறேன்.

என் மண்ணறையருகே நடப்போர்,

'அல்லாஹ் நேர்வழி காட்டிய வீரரே!

நேர்வழி பெற்றவரே!' என்று சொல்ல வேண்டும்.

பின்பு நபியவர்களும் மக்களும் 'ஸனியத்துல் விதா' என்ற இடம்வரை சென்று படையை வழியனுப்பி விட்டு இல்லம் திரும்பினார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

இஸ்லாமியப் படை புறப்படுதலும் திடுக்கமான சூழ்நிலையும்

ஜாஸின் வடப்புறமாக ஷாம் நாட்டை நோக்கி இஸ்லாமியப் படை புறப்பட்டு 'மஆன்' என்ற இடத்தை அடைந்தது. ''பல்கா மாநிலத்தின் 'மாப்' என்ற இடத்தில் ஹிர்கல் ஒரு லட்சம் ரோம் நாட்டு வீரர்களுடன் வந்திருக்கின்றான். லக்ம், ஜுதாம், பல்கய்ன், பஹ்ரா, பலிய் ஆகிய கோத்திரத்தாரிலிருந்து மேலும் ஒரு லட்சம் வீரர்கள் ரோமர்களுடன் இணைந்து கொண்டார்கள் என்ற ஓர் அதிர்ச்சி தரும் செய்தியை இஸ்லாமியப் படையின் ஒற்றர்கள் அறிந்து வந்தனர்.

ஆலோசனை சபை

இதுபோன்ற பெரும் படையைச் சந்திக்க நேரிடும் என்று முஸ்லிம்கள் ஒருக்காலும் எண்ணவில்லை. 3000 பேர் கொண்ட ஒரு படை இரண்டு இலட்சம் வீரர்கள் கொண்ட படையை எதிர்ப்பது என்பது சாதாரண விஷயமா? முஸ்லிம்கள் திகைத்து பயணத்தைத் தொடரலாமா? வேண்டாமா? என்று எண்ணி நின்றுவிட்டனர். இப்போது என்ன செய்யலாம்? நபி (ஸல்) அவர்களுக்கு கடிதம் எழுதுவோம். நமது எதிரிகளின் எண்ணிக்கையைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்போம். அவர்கள் நமக்கு உதவ மேலும் பல வீரர்களை அனுப்பலாம், அல்லது வேறு யோசனைக் கூறலாம் நாம் அதற்கேற்ப நடந்து கொள்ளலாம் என்று ஆலோசனை செய்தனர். இதே நிலைமையில் இரண்டு நாட்கள் கடந்தன.

ஆனால், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) இந்த யோசனைக்கு மறுப்புத் தெரிவித்து மக்களுக்கு வீரமூட்டி உரையாற்றினார்: ''எனது கூட்டத்தினரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் இப்போது வெறுக்கும் வீரமரணத்தைத் தேடித்தானே மதீனாவிலிருந்து புறப்பட்டீர்கள். நாம் எதிரிகளிடம் போரிடுகிறோம். நமது ஆயுதங்களைக் கொண்டா? அல்லது ஆற்றலைக் கொண்டா? அல்லது எண்ணிக்கையைக் கொண்டா? இவற்றில் எதுவுமில்லை. பின்னர் ஏன் எண்ணிக்கையை வைத்து யோசிக்க வேண்டும். அல்லாஹ் நமக்கு எந்த மார்க்கத்தின் மூலம் கண்ணியம் வழங்கியிருக்கின்றானோ அந்த மார்க்கத்திற்காகவே நாம் அவர்களிடம் போர் புரிகின்றோம். எனவே, தயக்கம் வேண்டாம் புறப்படுங்கள்! இரண்டு பாக்கியங்களில் ஒன்று நிச்சயம் உண்டு. ஒன்று வெற்றி அல்லது வீரமரணம்.''

இப்னு ரவாஹாவின் இந்த வீர உரையை கேட்ட மக்கள் ரோமர்களை எதிர்த்து போரிட முடிவு செய்தனர்.

எதிரியைக் களம் காண இஸ்லாமியப் படை புறப்படுகிறது

'மஆன்' என்ற இடத்தில் இரண்டு நாட்கள் கழித்த பின் முஸ்லிம்கள் எதிரிகளின் நாட்டை நோக்கிப் புறப்பட்டனர். இறுதியாக, பல்காவின் கிராமங்களில் ஒன்றான 'மஷாஃப்' என்ற இடத்தில் இரு படைகளும் சந்தித்தன. எதிரிகள் நெருங்கி வர முஸ்லிம்கள் சற்று பின்வாங்கி 'முஃதா' என்ற இடம் வந்து அங்கு தங்களது முகாம்களை அமைத்துக் கொண்டனர். அங்கிருந்து போருக்கான தயாரிப்புகளை செய்யத் தொடங்கினர். முஸ்லிம்கள், படையின் வலப்பக்கத்திற்கு குத்பா இப்னு கதாதாவை தளபதியாகவும், இடப்பக்கத்திற்கு உபாதா இப்னு மாலிக்கை தளபதியாகவும் ஆக்கினர்.

யுத்தத்தின் ஆரம்பம்

'முஃதா' என்ற இடத்தில் இரு படைகளும் சண்டையிட்டன. மூவாயிரம் பேர் இரண்டு லட்சம் வீரர்களுக்குச் சமமாக சண்டையில் ஈடுபட்டனர். என்ன ஆச்சரியம்! உலகமே திகைப்புடன் பார்க்க ஆரம்பித்தது. ஆம்! ஈமானியப் புயல் வீச ஆரம்பித்தால் இப்படித்தான் ஆச்சரியங்கள் நடக்கும்.

நபியவர்களின் விருப்பத்திற்குரிய தோழரான ஜைது (ரழி) முதலில் கொடியை ஏந்தி கடுமையான யுத்தம் புரிந்தார். அவர் அன்று காட்டிய வீரத்திற்கு என்ன உதாரணம் சொல்ல முடியும்! அவரைப் போன்ற இஸ்லாமிய வீரனிடமே தவிர வேறு எங்கும் அந்த வீரதீரத்தைப் பார்க்க முடியாது. இறுதியில் எதிரிகளின் ஈட்டிக்கு இரையாகி வீரமரணம் எய்தினார்.

அடுத்து இஸ்லாமியப் படையின் கொடியை ஜஅஃபர் (ரழி) கையில் எடுத்துக் கொண்டு மின்னலாகப் போர் புரிந்தார். போர் உச்சக்கட்டத்தை அடைந்தவுடன் தனது 'ஷக்ரா' என்ற குதிரையிலிருந்து கீழே இறங்கி, அதை வெட்டி வீழ்த்திவிட்டு, படைக்குள் புகுந்து எதிரிகளின் தலைகளை வாளால் சீவலானார். அவரது வலது கை வெட்டப்பட்டு விட்டது. கொடியை இடது கையில் பிடித்தார். இடது கையும் வெட்டப்படவே புஜத்தால் பிடித்தார். பின்பு எதிரி ஒருவனால் கொல்லப்பட்டு வீரமரணம் எய்தினார். அவரை ரோமைச் சேர்ந்த எதிரி ஒருவன் இரண்டாக பிளந்து விட்டான் என்று வரலாற்றில் கூறப்படுகிறது.

அல்லாஹ் அவர்களுக்கு வெட்டப்பட்ட இரு கரங்களுக்குப் பகரமாக சுவனத்தில் இரண்டு இறக்கைகளை வழங்கினான். அதன் மூலமாக அவர்கள் தாங்கள் நாடிய இடமெல்லாம் சுற்றித் திரிகிறார்கள். இதனை முன்னிட்டே இவர்களுக்கு 'ஜஅஃபர் அத்தய்யார்' (பறக்கும் ஜஅஃபர்), 'ஜஅஃபர் துல்ஜனாஹைன்' (இரு இறக்கைகளை உடைய ஜஅஃபர்) என்றும் கூறப்படுகிறது.

இப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார்கள்: ''வெட்டப்பட்டுக் கிடந்த ஜஅஃபரை நான் பார்த்தேன். அவரது உடம்பில் ஈட்டி மற்றும் வாளின் 50 காயங்கள் இருக்கக் கண்டேன். அதில் எந்தக் காயமும் உடம்பின் பிற்பகுதியில் இல்லை.'' (ஸஹீஹுல் புகாரி)

மற்றொரு அறிவிப்பில் இப்னு உமர் (ரழி) கூறியதாக வருவதாவது: ''நானும் 'முஃதா' போரில் கலந்து கொண்டேன். போர் முடிந்த பிறகு ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரழி) அவர்களின் உடலைத் தேடினோம். அப்போது கொல்லப்பட்டவர்களில் இருந்த அவர் உடலில் 90க்கும் மேற்பட்ட அம்பு மற்றும் ஈட்டிகளின் காயங்கள் இருந்தன.'' மற்றொரு வழியாக வரும் இதே அறிவிப்பில் ''அந்த அனைத்துக் காயங்களும் அவரது உடலின் முன்பகுதியில்தான் இருந்தன'' என்று வந்துள்ளது. (ஸஹீஹுல் புகாரி)

இவ்வளவு வீரமாக போர் புரிந்து இறுதியில் ஜஅஃபர் (ரழி) வீர மரணமடைந்த பின்னர் கொடியை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) ஏந்தினார். தனது குதிரையின் மீதிருந்து போர்க் களத்தை நோக்கி முன்னேறிய அவர் சிறிது தாமதிக்கலானார். அதற்குப் பின்,

''சத்தியமாக என் உயிரே! விருப்போ வெறுப்போ

போரில் நீ குதித்தே ஆக வேண்டும்!

மக்கள் போருக்கு ஆயத்தமாகி ஈட்டிகளை

ஏந்தி நிற்கும் போது சுவனத்தை நீ வெறுப்பவனாக

உன்னை நான் காணுவதேன்?''

இக்கவிதையை பாடிவிட்டு குதிரையிலிருந்து கீழிறங்கி, போர்க்களத்தை நோக்கி ஓடியபோது அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஓர் இறைச்சித் துண்டை கொண்டு வந்து, ''இதன்மூலம் உங்களது முதுகிற்கு வலுசேர்த்துக் கொள்ளுங்கள். இந்நாட்களில் நீங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி விட்டீர்'' என்று கூறினார். அவரது கையிலிருந்த இறைச்சித் துண்டை வாங்கி ஒரு கடி கடித்துவிட்டு மீதமுள்ளதை வீசி எறிந்து விட்டார். பின்பு தனது வாளை உருவிக் கொண்டு போர்க்களத்தில் குதித்தவர் இறுதிவரை போரிட்டு வீரமரணமடைந்தார்.

அல்லாஹ்வின் வாள் கொடியை ஏந்தியது

அப்துல்லாஹ் (ரழி) வீரமரணமடைந்து கீழே விழும் நேரத்தில் அஜ்லான் கிளையைச் சேர்ந்த ஸாபித் இப்னு அக்ரம் (ரழி) என்ற வீரர் கொடியை ஏந்திக் கொண்டு ''முஸ்லிம்களே! உங்களில் ஒருவரை உடனே தலைவராகத் தேர்ந்தெடுங்கள்'' என்று கூறினார். மக்கள் ''நீர்தான் அவர்'' என்று கூறினர். அதற்கவர் ''அது என்னால் முடியாது'' என்று கூறிவிட்டார். மக்கள் காலித் இப்னு வலீத் (ரழி) அவர்களைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். கொடியைக் கையில் எடுத்த காலித் (ரழி) காஃபிர்களுக்கு எதிராகக் கடுமையானப் போரை நிகழ்த்தினார்.

காலித் (ரழி) கூறுகிறார்: ''முஃதா போரின் போது எனது கையால் ஒன்பது வாட்கள் உடைந்தன. யமன் நாட்டில் செய்யப்பட்ட ஒரு பட்டை வாள் மட்டும் எனது கையில் நிலைத்திருந்தது. (ஸஹீஹுல் புகாரி)

முஃதா போர்க்களச் செய்திகளை அல்லாஹ் வஹியின் மூலமாக நபியவர்களுக்கு உடனுக்குடன் தெரிவித்தான். போரின்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''முதலில் கொடியை ஜைது ஏந்தினார் அவர் கொல்லப்பட்டார், இரண்டாவதாக ஜஅஃபர் ஏந்தினார் அவரும் கொல்லப்பட்டார், மூன்றாவதாக அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ஏந்தினார் அவரும் கொல்லப்பட்டார் -இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போது நபியவர்களின் கண்களிலிருந்து நீர் வழிந்தோடியது- இதற்குப் பின் கொடியை அல்லாஹ்வின் வாள்களில் ஒரு வாள் ஏந்தியது. அல்லாஹ் அவர் மூலமாக முஸ்லிம்களுக்கு வெற்றியளித்தான்.'' (ஸஹீஹுல் புகாரி)

சண்டை ஓய்கிறது

முஸ்லிம் வீரர்கள் தங்களது முழு வீரத்தையும், திறமையையும், துணிவையும் வெளிக் கொணர்ந்தாலும் கடல் போன்ற மிகப் பயங்கரமான எதிரிப் படைகளைச் சமாளிப்பது மிகச் சிரமமாகவே இருந்தது. இதையறிந்த காலித் இப்னு அல்வலீது (ரழி) முஸ்லிம்களை ஆபத்திலிருந்து தந்திரமாகப் பாதுகாக்க சரியான திட்டம் ஒன்றைத் தீட்டினார்.

போரின் முடிவைப் பற்றி பலவிதமான கருத்துகள் கூறப்படுகின்றன. அந்த அனைத்து அறிவிப்புகளையும் ஒன்று திரட்டி நாம் ஆய்வு செய்யும்போது நமக்குப் புலப்படுவதாவது: கொடியை ஏந்திய அன்றைய தினம் மாலை வரை ரோம் நாட்டுப் படைக்கு முன்பாக மிகத் துணிச்சலாக காலித் (ரழி) எதிர்த்து நின்றார். முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு ஒரு போர் தந்திரத்தைக் கையாண்டார். அது ரோமர்களின் உள்ளங்களில் கடுமையான பயத்தை உண்டு பண்ணியது. அதாவது, முஸ்லிம்கள் பின்னோக்கிச் செல்லும்பொழுது ரோமர்கள் விரட்ட ஆரம்பித்தால் அவர்களிடமிருந்து தப்பிப்பதென்பது மிகக் கடினமே என காலித் (ரழி) நன்கு விளங்கியிருந்தார்.

எனவே, மறுநாள் படைக்கு முற்றிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கினார். படையின் முற்பகுதியை பிற்பகுதியாகவும், வலப்பக்கத்தில் உள்ளவர்களை இடப்பக்கத்திலும் மாற்றி அமைத்தார். மறுநாள் காலை போர் தொடங்கியபோது முஸ்லிம்களின் புதிய அமைப்பைப் பார்த்த எதிரிகள் தங்களுக்கு முன் நேற்று இல்லாத புதிய படை இருப்பதைப் பார்த்தவுடன் இவர்களுக்கு உதவிப்படை வந்திருக்கின்றது என்று கூற ஆரம்பித்தனர். சிறுகச் சிறுக அவர்களது உள்ளத்தை அச்சம் ஆட்கொண்டது.

சிறிது நேரம் இரு தரப்பினரும் சண்டையிட்டு கொண்டிருக்கும் போதே தனது படையில் எவ்வித மாற்றமும் ஏற்படாத அளவிற்கு முற்றிலும் பாதுகாப்புடன் படையை பின்னோக்கி அழைத்துச் சென்றார். முஸ்லிம்கள் ஏதோ சதி செய்ய நாடுகின்றனர் என்று எண்ணிய ரோம் வீரர்கள் முஸ்லிம்களைப் பின்தொடர்வதை விட்டுவிட்டு அவர்களும் பின்வாங்கினர். இவ்வாறு முஸ்லிம்களை விரட்டும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தங்களது நாடுகளுக்கு எதிரிகள் திரும்பி விட்டனர். இவ்வாறு முஸ்லிம்கள் எவ்வித ஆபத்துமின்றி மதீனா வந்து சேர்ந்தனர். (ஃபத்ஹுல் பாரி, ஜாதுல் மஆது)

இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

12 முஸ்லிம்கள் இப்போரில் வீரமரணம் அடைந்தனர். ரோமர்களில் எத்தனை நபர்கள் கொல்லப்பட்டனர் என்ற விவரம் சரிவரத் தெரியவில்லை. இருந்தாலும் போரின் முழு விவரங்களை ஆய்வு செய்து பார்க்கும்போது அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிகிறது.

யுத்தத்தின் தாக்கம்

எந்தப் பழிவாங்கும் நோக்கத்துக்காக முஸ்லிம்கள் இவ்வளவு பெரிய சிரமங்களைச் சகித்தார்களோ! அந்த நோக்கத்தை முஸ்லிம்கள் இப்போரில் அடைந்து கொள்ளவில்லை என்றாலும், இப்போர் முஸ்லிம்களுக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. அரபியர்களின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றிய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதுடன், அவர்களை வியப்பிலும் ஆழ்த்தியது. ரோமர்கள் அக்காலத்தில் பேராற்றல் மிக்கவர்களாக இருந்தனர். அவர்களை எதிர்ப்பது தற்கொலைக்குச் சமமானது என அரபிகள் எண்ணியிருந்தனர். 3000 பேர்கள் கொண்ட ஒரு சிறிய படை இரண்டு லட்சம் வீரர்கள் கொண்ட பெரும் படையுடன் மோதுவதும், பின்பு எந்த பெரிய சேதமும் இன்றி நாட்டுக்குத் திரும்புவதென்பதும் மகா ஆச்சரியமான விஷயமாக இருந்தது.

முஸ்லிம்கள் இதுவரை அரபியர்கள் பார்த்திராத ஓர் அமைப்பில் இருக்கின்றனர். அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. அவர்களது தலைவர் உண்மையில் அல்லாஹ்வின் தூதரே என்பதற்கு இச்சம்பவம் மிகப்பெரிய சான்றாக அமைந்தது. எனவேதான், எப்போதும் முஸ்லிம்களுடன் வம்பு செய்து வந்த பெரும்பாலான அரபு கோத்திரத்தினர், இப்போருக்குப் பின் பணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். சுலைம், அஷ்ஜஃ, கத்ஃபான், துப்யான், ஃபஜாரா ஆகிய கோத்திரங்களெல்லாம் இஸ்லாமைத் தழுவினர்.

பிற்காலத்தில் ரோமர்களுடன் முஸ்லிம்கள் செய்த போர்களின் தொடக்கமாக இப்போர் இருந்தது. முஸ்லிம்கள் ரோமர்களின் நகரங்களையும் தூரமான நாடுகளையும் வெற்றி கொள்வதற்கு முன்மாதிரியாக இப்போர் அமைந்தது.

தாதுஸ்ஸலாசில் படைப் பிரிவு

ஷாம் நாட்டின் மேற்புறங்களில் வசிக்கும் அரபியர்களின் நிலைப்பாட்டை நபி (ஸல்) அவர்கள் இப்போர் வாயிலாக நன்கு விளங்கிக் கொண்டார்கள். ஏனெனில், இவர்களெல்லாம் ரோமர்களுடன் சேர்ந்து கொண்டு இப்போரில் முஸ்லிம்களைத் தாக்கினர். எனவே, ரோமர்களை விட்டு இவர்களைப் பிரித்து முஸ்லிம்களோடு இணக்கமாக்க வேண்டும். அப்போதுதான் மற்றொரு முறை நம்மை எதிர்ப்பதற்கு இது போன்ற பெருங்கூட்டம் ஒன்று திரளாது என்று நபி (ஸல்) முடிவு செய்தார்கள்.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நபி (ஸல்) அம்ரு இப்னு ஆஸைத் தேர்வு செய்தார்கள். ஏனெனில், இவரது தந்தையின் தாய் அப்பகுதியில் வசிக்கும் 'பலிய்' கிளையினரைச் சேர்ந்தவராவார். எனவே, அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள இவரைத் தேர்ந்தெடுத்து முஃதா போர் முடிந்தவுடனேயே ஹிஜ்ரி 8, ஜுமாதல் ஆகிராவில் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இப்படை அனுப்பப்பட்டதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது: 'குழாஆ' கிளையினர் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த ஒன்று திரள்கின்றனர் என்ற செய்தி ஒற்றர்கள் மூலம் நபியவர்களுக்குத் தெரிய வர, அவர்களை எதிர்ப்பதற்காக இப்படையை நபி (ஸல்) அனுப்பினார்கள். ஒரு வேலை இரண்டு காரணங்களை முன்னிட்டும் நபியவர்கள் இப்படையை அனுப்பி இருக்கலாம்.

அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்களுக்கு நபி (ஸல்) வெள்ளை நிறத்தில் ஒரு பெரிய கொடியையும், கருப்பு நிறத்தில் ஒரு சிறிய கொடியையும் வழங்கி 300 முக்கிய வீரர்களுடன் அனுப்பினார்கள். இரவில் பயணிப்பதும் பகலில் பதுங்குவதுமாக அப்படையினர் சென்றனர். எதிரி கூட்டத்தினர் தங்கியிருக்கும் இடத்தை நெருங்கியபோது, அங்கு மிக அதிகமான எண்ணிக்கையில் எதிரிகள் இருக்கிறார்கள் என்ற செய்தி அம்ருக்கு தெரிய வந்தது. உடனே அவர் ராஃபி இப்னு மக்கீஸ் என்பவரை நபியவர்களிடம் உதவி கேட்டு அனுப்பி வைத்தார். நபி (ஸல்) அபூ உபைதாவுக்கு ஒரு கொடியைக் கொடுத்து 200 தோழர்களுடன் அனுப்பினார்கள். இத்தோழர்களில் அபூபக்ர், உமர் (ரழி) மற்றும் முஹாஜிர், அன்சாரிகளில் கீர்த்திமிக்க தோழர்கள் இடம் பெற்றிருந்தனர். அம்ர் (ரழி) அவர்களுடன் அபூ உபைதா (ரழி) வந்து சேர்ந்து கொண்டார்கள். தொழுகை நேரம் வந்தபோது அபூ உபைதா (ரழி) மக்களுக்குத் தொழ வைக்க நாடினார். ''நான்தான் அமீர் (படைத் தலைவன். நானே தொழவைப்பேன்) நீர் எங்களுக்கு உதவிக்காகத்தான் வந்திருக்கின்றீர்'' என்று அம்ரு (ரழி) கூற, இதை அபூ உபைதா (ரழி) ஏற்றுக் கொண்டார்கள். அதற்குப் பின் அம்ருதான் மக்களுக்குத் தொழுகை நடத்தி வந்தார்கள். அம்ரு (ரழி) படையை அழைத்துக் கொண்டு 'குழாஆ' கோத்திரத்தினர் வசிக்கும் பகுதி அனைத்தையும் சுற்றினார்கள்.

இறுதியில், முஸ்லிம்களை எதிர்க்கத் தயாராக இருந்த எதிரிகளின் ஒரு கூட்டத்தினரைக் கண்டபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தி நாலாபுறமும் அவர்களைச் சிதறடித்தனர்.

எடுத்துக் கொண்ட பணியை வெற்றிகரமாக முடித்து திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் மற்றும் போர்க்கள தகவல்களையும் நபி (ஸல்) அவர்களிடம் கூறும்படி அவ்ஃப் இப்னு மாலிக் அஷ்ஜம்யை அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அனுப்பினார்கள்.

'தாத்துஸ் ஸலாசில்' என்பது 'வாதில் குரா' என்ற பகுதிக்குப் பின்னுள்ள இடமாகும். அதற்கும் மதீனாவுக்கும் மத்தியில் பத்து நாட்கள் நடை தூரம் உள்ளது.

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுவதாவது: ஜுதாம் கோத்திரத்தினர் வசிக்கும் இடத்திலுள்ள ஒரு கிணற்றருகில் முஸ்லிம்கள் தங்கினர். அக்கிணற்றின் பெயர் 'ஸல்சல்' என்பதால் இப்படைக்கு பெயர் 'தாத்துஸ் ஸலாசில்' என வந்தது. (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

அபூகதாதா படைப் பிரிவு

கத்ஃபான் கிளையினர் 'கழீரா' என்ற இடத்தில் ஒன்றுகூடி மதீனாவின் மீது தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிடுகின்றனர் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. 'கழீரா' என்பது நஜ்து மாநிலத்தில் 'முஹாப்' கோத்திரத்தினர் வசிக்கும் இடம். எனவே, நபி (ஸல்) அவர்கள் 15 வீரர்களுடன் அபூ கதாதாவை அனுப்பி வைத்தார்கள். அங்கு சென்ற அபூகதாதா (ரழி) பல எதிரிகளைக் கொன்று விட்டு சிலரைச் சிறைபிடித்து, கனீமா பொருட்களுடன் மதீனா திரும்பினார்கள். மொத்தம் 15 நாட்கள் இவர்கள் மதீனாவை விட்டு வெளியே இருந்தனர். (தல்கீஹ்)

மக்காவை வெற்றி கொள்வது

அறிஞர் இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகிறார்: மக்காவின் வெற்றிதான் மிக மகத்தான வெற்றி. இதன் மூலம் அல்லாஹ் அவனது மார்க்கத்திற்கும், தூதருக்கும், நம்பிக்கைக்குரிய அவனது கூட்டத்தினருக்கும், படையினருக்கும் கண்ணியத்தை வழங்கினான். மேலும், தனது ஊரையும், மக்களின் நேர்வழிக்குக் காரணமாகிய தன் வீட்டையும், முஷ்ரிக்குகள் மற்றும் காஃபிர்களின் கையிலிருந்தும் காப்பாற்றினான். இவ்வெற்றியினால் வானத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமா? மக்களெல்லாம் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைந்தனர். பூமி யாவும் இவ்வெற்றியால் பிரகாசமடைந்தது. (ஜாதுல் மஆது)

உடன்படிக்கையை மீறுதல்

ஹுதைபிய்யாவில் நடைபெற்ற ஒப்பந்தங்களில் ஒன்று: ''நபியவர்களுடன் சேர விரும்பியவர்கள் நபியவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் குறைஷிகளுடன் சேர விரும்பியவர்கள் குறைஷிகளுடன் சேர்ந்து கொள்ளலாம். யார் எந்த கூட்டத்தினருடன் சேருகிறார்களோ, அவர் அந்தக் கூட்டத்தினரில் ஒருவராகக் கணிக்கப்படுவார். அவர் மீது யாராவது அத்துமீறினால் அது அந்தக் கூட்டத்தினர் மீதே அத்துமீறியதாகும்.'' இந்த விவரத்தை இதற்கு முன்பே நாம் கூறியிருக்கிறோம்.

இந்த ஒப்பந்தத்திற்கு ஏற்ப குஜாஆ கோத்திரத்தினர் நபியவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பக்ர் கோத்திரத்தினர் குறைஷிகளுடன் சேர்ந்து கொண்டனர். அறியாமைக் காலத்திலிருந்தே பரம்பரை பரம்பரையாக இவ்விரு கோத்திரத்தினரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இஸ்லாம் வந்து, இந்த உடன்படிக்கை ஏற்பட்டதற்குப் பின் இரு சாராரும் தங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்திக் கொண்டனர்.

சில காலங்கள் இவ்வாறு கழிய, இந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பக்ர் கிளையினர். குஜாஆ கோத்திரத்தாரிடமிருந்து தங்களது பழைய பகைமைக்குப் பழி தீர்த்துக் கொள்ள விரும்பினர்.

ஹிஜ்ரி 8, ஷஅபான் மாதம் பக்ர் கோத்திரத்தினரின் ஒரு கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு 'நவ்ஃபல் இப்னு முஆவியா அத்தியலி' என்பவன் புறப்பட்டான். அன்று குஜாஆ கிளையினர் 'அல்வத்தீர்' என்ற கிணற்றுக்கருகில் ஒன்று கூடியிருந்தனர். நவ்ஃபல், தான் அழைத்து வந்தவர்களைச் சேர்த்துக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினான். குஜாஆ கிளையினரில் சிலர் கொல்லப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களுடன் கடுமையான சண்டை நடந்தது. குறைஷிகள் பக்ரு கிளையினருக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதுடன், அவர்களில் சிலரும் இரவின் இருளை பயன்படுத்திக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினர்.

சண்டைசெய்து கொண்டே குஜாஆ கோத்திரத்தினர் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டனர். அப்போது பக்ர் கிளையினர் ''நவ்ஃபலே! நாம் நிறுத்திக் கொள்வோம். நாம் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். உமது இறைவனைப் பயந்துகொள்! உமது இறைவனை பயந்துகொள்!'' என்று கூறினர். ஆனால், சதிகாரன் நவ்ஃபல் மிகக் கடுமையான வார்த்தையைக் கூறினான். ''பக்ர் இனத்தாரே! இன்றைய தினம் எந்த இறைவனும் இல்லை. உங்களது பழியைத் தீர்த்துக் கொள்ளுங்கள். என்மீது சத்தியமாக! ஹரம் எல்லையில் திருடும் நீங்கள் அதில் ஏன் கொலை செய்யக் கூடாது?'' என்றான். குஜாஆவினர் புதைல் இப்னு வரகா மற்றும் ராபிஃ என்ற தங்களது நண்பர்கள் வீட்டில் சென்று அடைக்கலம் தேடினர்.

குஜாஆவைச் சேர்ந்த அம்ரு இப்னு ஸாலிம் மக்காவிலிருந்து மதீனாவிற்கு விரைந்தார். அங்கிருந்து நபியவர்களின் பள்ளிவாயிலை நோக்கி நடந்த அவர், பள்ளிக்குள் நுழைந்ததும் நபியவர்கள் முன்னிலையில் நின்று கொண்டார். நபியவர்கள் மக்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார்கள். அம்ரு நடந்த துக்கத்தை கவிதைகளில் பாடிக் காட்டினார்.

இறைவா! நான் முஹம்மதிடம் எங்களின் ஒப்பந்தத்தையும்

அவர் தந்தையின் பழமையான ஒப்பந்தத்தையும்

கேட்டு வந்திருக்கின்றேன். நீங்கள் பிள்ளைகள்

நாங்கள் பெற்றோர்கள் பின்பு நாம் முஸ்லிமானோம்

பின்வாங்கவில்லை முழுமையாக உதவுங்கள்

அல்லாஹ் உமக்கு வழிகாட்டுவான்.

அல்லாஹ்வின் அடியார்களை அழை;

உதவிக்கு அவர்களும் வருவார்கள்

அவர்களில் ஆயுதம் ஏந்திய அல்லாஹ்வின்

தூதரும் இருக்கின்றார். அவர் வானில் நீந்தும்

முழு நிலா போல் அழகுள்ளவர்.

அவருக்கு அநீதமிழைத்தால் முகம் மாறிவிடுவார்.

நுரை தள்ளும் கடல்போன்ற படையுடன் வருவார்

குறைஷிகள் உன் வாக்கு மாறினர்.

உன் வலுவான ஒப்பந்தத்தை முறித்து விட்டனர்.

கதாவில் எனக்குப் பதுங்கு குழி வைத்துள்ளனர்.

ஒருவரையும் உதவிக்கு அழையேன்

என நினைத்துக் கொண்டனர். அவர்கள் அற்பர்கள்

சிறுபான்மையினர் வதீல் இரவு எங்களைத் தாக்கினர்.

நாங்கள் இறைவனை... பணிந்து குனிந்து வணங்கியபோது

எங்களை அவர்கள் வெட்டினர்.

அவரின் கவிதைகளைக் கேட்ட நபி (ஸல்) ''உனக்கு உதவி செய்யப்படும்'' என்று ஆறுதல் கூறினார்கள். அந்நேரத்தில் வானத்திலிருந்து ஒரு மேகம் அங்கு வந்தது. நபி (ஸல்) அவர்கள் ''இம்மேகம் குஜாஆ கிளையினர் உதவி பெற்று விட்டனர் என்பதற்கு முன் அறிவிப்பு'' என்றார்கள்.

பிறகு ஃபுதைல் இப்னு வரகா அல்குஸாம் தனது கோத்திரத்தினர் சிலரை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களது சமூகம் வந்து, தங்களில் பலர் கொல்லப்பட்டதையும், குறைஷிகள் பலர் தங்களுக்கு எதிராக பக்ரு குலத்தவருக்கு உதவி செய்ததையும் கூறிவிட்டு மக்கா திரும்பினார்.

அபூ ஸுஃப்யான் ஓடி வருகிறார்

குறைஷிகளும், அவர்களது தோழர்களும் செய்தது ஒப்பந்தத்தை முறிக்கும் செயலாகும். மிகப்பெரிய மோசடியாகும். எவ்விதத்திலும் இச்செயலை நியாயப்படுத்த முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தங்களின் இத்தீய செயலுக்குப் பின் அதன் விபரீதத்தை அறிந்து கொண்ட குறைஷிகள் உடனடியாக அவசர ஆலோசனை சபையைக் கூட்டினர். ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்குத் தங்களின் தளபதி அபூஸுஃப்யானை மதீனாவுக்கு அனுப்ப வேண்டுமென்று அதில் முடிவெடுத்தனர்.

''தங்களின் மோசடி செயலுக்குப் பின் குறைஷிகள் என்ன செய்வார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்கு முன்கூட்டியே அறிவித்தார்கள். அநேகமாக ஒப்பந்தத்தை உறுதிசெய்து, அவகாசத்தை நீட்டித் தருவதற்காக அபூ ஸுஃப்யான் உங்களிடம் வருவார்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

குறைஷிகள் முடிவு செய்தவாறே அபூ ஸுஃப்யான் மக்காவிலிருந்து புறப்பட்டார். வழியில் மதீனாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த புதைல் இப்னு வரகாவை 'உஸ்ஃபான்' என்ற இடத்தில் சந்தித்து ''புதைலே எங்கு போய் வருகிறீர்?'' என்றார். அவர், ''நான் எனது கோத்திரத்தாருடன் இந்த கடற்கரை மற்றும் இந்தப் பள்ளத்தாக்கை சுற்றிப் பார்க்க வந்தேன்'' என்று கூறினார். அபூ ஸுஃப்யான் ''நீ முஹம்மதிடம் சென்று வரவில்லையா?'' என்று கேட்டார். அவர் ''இல்லையென்று'' கூறிவிட்டார். புதைல் அந்த இடத்தை விட்டு மக்கா நோக்கிப் புறப்பட்டு போன பின்னர் அபூ ஸுஃப்யான், ''புதைல் மதீனாவுக்குச் சென்றிருந்தால் அங்கு தனது ஒட்டகங்களுக்கு தின்பதற்கு பேரீத்தம் கொட்டைகளைக் கொடுத்திருக்க வேண்டும்'' என்று கூறிவிட்டு அவரது ஒட்டகம் படுத்திருந்த இடத்திற்கு வந்து, அதன் சாணத்தைக் கிளறினார். அதில் பேரீத்தங்கொட்டைகளை பார்த்தவுடன், ''நான் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன்! புதைல் முஹம்மதிடம்தான் சென்று வந்திருக்கிறார்'' என்று கூறினார்.

அபூ ஸுஃப்யான் மதீனா வந்தடைந்து தனது மகள் உம்மு ஹபீபாவின் வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்த விரிப்பில் அவர் உட்கார நாடியபோது சட்டென உம்மு ஹபீபா (ரழி) அதைச் சுருட்டி விட்டார். ''என் அருமை மகளே! இந்த விரிப்பில் நான் உட்காருவதற்குத் தகுதி அற்றவனா? அல்லது இந்த விரிப்பு எனக்குத் தகுதியற்றதா?'' எனக் கேட்டார். ''இல்லை! இது நபி (ஸல்) அவர்களின் விரிப்பு; நீர் அல்லாஹ்விற்கு இணைவைக்கும் அசுத்தமானவர்'' என்று உம்மு ஹபீபா (ரழி) பதில் கூறினார்கள். இதைக் கேட்ட அவர் ''என்னிடமிருந்து வந்ததற்குப் பின் உனக்கு ஏதோ தீங்கு நேர்ந்து விட்டது'' எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, தான் வந்த நோக்கத்தைப் பற்றிப் பேசினார். ஆனால் நபி (ஸல்) அவருக்கு எந்த பதிலும் கூறாததால், அங்கிருந்து எழுந்து அபூபக்ரிடம் வந்து நபியவர்களிடம் தன் விஷயமாகப் பேசுமாறு கூறினார். அதற்கு அபூபக்ர், (ரழி) ''அது என்னால் முடியாது'' எனக் கூறிவிட்டார்கள். பின்பு அங்கிருந்து உமரிடம் சென்று நபியவர்களிடம் பேசுமாறு கூறினார். அதற்கு உமர் (ரழி) ''நானா உங்களுக்காக நபியவர்களிடம் சிபாரிசு செய்வேன்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்னிடம் ஒரு சிறு குச்சியைத் தவிர வேறெதுவும் இல்லை என்றாலும் அதைக் கொண்டே உங்களிடம் போர் புரிவேன்'' என்று கூறினார்கள். பின்பு அவர் அலீ (ரழி) இடம் வந்தார். அங்கு அவருடன் ஃபாத்திமாவும் இருந்தார்கள். அவ்விருவருக்கும் முன்பாக சிறுபிள்ளையாக இருந்த ஹஸன் (ரழி) தவழ்ந்து கொண்டிருந்தார். அவர் ''அலீயே! நீ எனக்கு உறவில் மிக நெருக்கமானவர். ஒரு தேவைக்காக உம்மிடம் வந்திருக்கின்றேன். நான் தோல்வியுற்றவனாக இங்கிருந்து செல்லக் கூடாது. எனவே, எனக்காக முஹம்மதிடம் சிபாரிசு செய்'' என்று கூறினார். அலீ (ரழி) ''உனக்கு நாசம் உண்டாகட்டும்! நபியவர்கள் தீர்க்கமாக முடிவு செய்து விட்டார்கள். அது விஷயமாக நாங்கள் அவர்களுடன் பேச முடியாது'' என்று கூறிவிட்டார்கள். அவர் ஃபாத்திமாவின் பக்கம் திரும்பி ''நீ உனது மகனிடம் சொல்! அவர் மக்களுக்கு மத்தியில் கார்மானமும் பாதுகாப்பும் நிலவ வேண்டுமென்று அறிவிப்புச் செய்யட்டும்! இதனால் காலமெல்லாம் அவர் அரபியர்களின் தலைவராக விளங்குவார்'' என்று கூறினார். ஃபாத்திமா (ரழி), ''அந்தத் தகுதியை எனது மகன் இன்னும் அடையவில்லை. நபியவர்கள் இருக்க வேறு எவரும் பாதுகாப்பும் அடைக்கலமும் கொடுக்க முடியாது.'' என்று கூறிவிட்டார்கள்.

இந்தப் பதில்களையெல்லாம் கேட்ட அபூ ஸுஃப்யானின் கண்களுக்கு முன் உலகமே இருண்டு விட்டது. அவர் அலீ (ரழி) அவர்களிடம் அச்சத்துடனும் நடுக்கத்துடனும் கவலை தோய்ந்த தொனியிலும் ''அபுல் ஹஸனே! நிலைமை மோசமாகிவிட்டது. எனக்கு ஏதாவது நல்ல யோசனை கூறுங்கள்'' என்றார். ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உனக்கு பயன் தரும் எந்த விஷயத்தையும் நான் அறியமாட்டேன். எனினும், நீ கினானா கிளையினரின் தலைவனாக இருக்கிறாய். நீ எழுந்து சென்று ''மக்களுக்கு மத்தியில் பாதுகாப்பும் அச்சமற்றத் தன்மையும் நிலவவேண்டும்'' என்று அறிவிப்பு செய்! பிறகு, உனது ஊருக்கு சென்றுவிடு!'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட அவர் ''இதனால் எனக்கு ஏதேனும் பயனிருக்கிறதா?'' என்று கேட்டார். அதற்கு அலீ (ரழி), ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது பயன் தரும் என்று நான் எண்ணவில்லை என்றாலும் என்னிடம் உனக்காக அதைத் தவிர வேறு யோசனை எதுவுமில்லை'' என்று கூறினார். அபூ ஸுஃப்யான் அங்கிருந்து எழுந்து பள்ளிக்குச் சென்று ''மக்களே! நான் மக்களுக்கு மத்தியில் பாதுகாப்பு நிலவவேண்டும் என்று அறிவிப்பு செய்கிறேன்'' என்று கூறிவிட்டு, தனது ஒட்டகத்தில் ஏறி மக்கா சென்றுவிட்டார்.

அபூ ஸுஃப்யான் குறைஷிகளிடம் வந்து சேர்ந்தபோது ''என்ன செய்தியை பெற்று வந்திருக்கிறீர்?'' என்று அவர்கள் கேட்டனர். ''நான் முஹம்மதிடம் சென்று பேசினேன். அவர் எந்த பதிலும் எனக்குக் கூறவில்லை. பின்பு அபூபக்ரிடம் சென்று பேசினேன். அவருடன் பேசியதில் எப்பயனுமில்லை. பின்பு உமரிடம் பேசினேன். அவர் நமக்கு மிகப்பெரிய எதிரியாக விளங்குகிறார். பின்பு அலீயிடம் சென்றேன். அவர் மிக மென்மையுடன் நடந்து கொண்டார். எனக்கு ஓர் ஆலோசனைக் கூறினார். அதன்படி நானும் செய்துவிட்டு வந்துள்ளேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அந்த ஆலோசனை எனக்கு பயனளிக்குமா? அளிக்காதா? என்பது எனக்குத் தெரியாது'' என்றார். ''அவர் உனக்கு என்ன ஆலோசனை கூறினார்?'' என்று குறைஷிகள் கேட்டனர்.

''மக்களுக்கு மத்தியில் நான் பாதுகாப்புத் தருகிறேன். (குறைஷிகளால் உங்களுக்கு இனி எந்த இடையூறும் ஏற்படாது)'' என்று முஸ்லிம்களுக்கு மத்தியில் அறிவிப்புச் செய்யும்படி எனக்குக் கூறினார். நானும் அவ்வாறே செய்தேன். ''அதை முஹம்மது ஏற்றுக் கொண்டாரா?'' என்று குறைஷியர் கேட்டனர். ''இல்லை'' என்று அபூ ஸுஃப்யான் கூறினார். ''உனக்கு நாசம் உண்டாகட்டுமாக! அந்த ஆள் (அலீ) உன்னுடன் நன்றாக விளையாடி விட்டார்'' என்று குறைஷிகள் கூறினர். அதற்கு அபூ ஸுஃப்யான், ''இல்லை! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் கூறியதைத் தவிர வேறு வழி தெரியவில்லை'' என்று கூறினார்.

மறைமுகமாகப் போருக்கு ஆயத்தம்

அறிஞர் தப்ரானியின் அறிவிப்பிலிருந்து நமக்குத் தெரிய வருவதாவது: குறைஷிகள் ஒப்பந்தத்தை மீறிவிட்டனர் என்ற செய்தி தனக்குக் கிடைப்பதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே போருக்கான சாதனங்களைத் தயார் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவிற்கு உத்தரவிட்டிருந்தார்கள். இதைப் பற்றி யாருக்கும் தெரியாது. ஒரு தடவை அபூபக்ர் (ரழி), ஆயிஷா (ரழி) வீட்டிற்கு வந்தபோது ''எனதருமை மகளே! இது என்ன தயாரிப்பு?'' என்று கேட்டார்கள். ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது'' என்று ஆயிஷா (ரழி) கூறினார்கள். ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது குறைஷிகளிடம் போர் புரிவதற்கான காலமுமில்லையே! நபி (ஸல்) அவர்கள் எங்குதான் செல்லப் போகிறார்கள்?'' என்று அபூபக்ர் (ரழி) கேட்டதற்கு ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அதுபற்றி எனக்கு எந்த அறிவுமில்லை'' என்று ஆயிஷா (ரழி) கூறிவிட்டார்கள். மூன்றாவது நாள் காலையில் 'குஜாஆ' கோத்திரத்தைச் சேர்ந்த அம்ர் இப்னு சாலிம் என்பவர் நாற்பது நபர்களுடன் நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வருகை தந்து, முன்னால் கூறப்பட்ட அந்தக் கவிகளைப் பாடினார். அப்போதுதான் உடன்படிக்கை மீறப்பட்டு விட்டது என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொண்டனர்.

அம்ர் வந்து சென்றதற்குப் பின் புதைல் சில தோழர்களுடன் நபியவர்களிடம் வந்து, நடந்த நிகழ்ச்சியைப் பற்றி விவரித்தார். புதைல் சென்றதற்குப் பின் அபூ ஸுஃப்யான் மதீனா வந்ததைப் பார்த்த முஸ்லிம்கள் தாங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மை என்பதை அறிந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களைப் போருக்குத் தயாராகும்படி கட்டளையிட்டதுடன், நாம் மக்காவிற்கு செல்ல இருக்கிறோம் என்றும் அறிவித்தார்கள். மேலும் ''அல்லாஹ்வே! நான் குறைஷிகளின் ஊருக்கு அவர்களுக்குத் தெரியாமல் திடீரென நுழையும் வரை எந்தச் செய்தியும் அவர்களுக்குச் சேராமலும், ஒற்றர்கள் அவர்களைச் சென்றடையாமலும் நீ பாதுகாப்பாயாக'' என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள்.

மேலும், தங்களின் படையைப் பற்றிய செய்தியை முழுமையாக மறைப்பதற்காக வேறொரு திசையில் சிறிய படையொன்றை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். ஹிஜ்ரி 8, ரமழான் மாதம் தொடக்கத்தில் மதீனாவிலிருந்து மூன்று பரீதும் தொலைவிலுள்ள தூகஷப், துல்மர்வா என்ற இடங்களுக்கு மத்தியிலுள்ள 'இழம்' என்ற இடத்திற்கு அபூ கதாதா இப்னு ப்இ (ரழி) அவர்களின் தலைமையில் 8 வீரர்கள் கொண்ட ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அனுப்பினார்கள். நபியவர்களும் 'இழம்' என்ற இடத்திற்குத்தான் செல்ல இருக்கிறார்கள் என்று மக்கள் எண்ண வேண்டும். இதே செய்தி பரவ வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) இவ்வாறு செய்தார்கள். இப்படை தனது பயணத்தைத் தொடர்ந்து நபி (ஸல்) கூறிய இடத்தை சென்று அடைந்தபோது நபியவர்கள் மக்கா நோக்கி பயணமாகி விட்டார்கள் என்ற செய்தி அப்படைக்குக் கிடைத்தது. உடன் அவர்களும் நபியவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டார்கள். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

நபியவர்கள் மக்கா வருகிறார்கள் என்ற செய்தியைத் தெரிவிப்பதற்காக ஹாதிப் இப்னு அபூ பல்தஆ என்ற நபித்தோழர் கடிதம் ஒன்றை எழுதி ஒரு பெண் மூலம் அனுப்பினார். அதற்குக் கூலியும் கொடுத்தார். அப்பெண் அதைத் தலைமுடி சடைக்குள் வைத்துக் கொண்டு புறப்பட்டாள். ஆனால், ஹாதிபின் இச்செயலை அல்லாஹ் வஹியின் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்து விட்டான். உடனே நபியவர்கள் அலீ, மிக்தாத், ஜுபைர், அபூமர்ஸத் கனவி (ரழி) ஆகியோரை அழைத்து ''நீங்கள் 'காக்' என்ற தோட்டத்திற்குச் செல்லுங்கள் அங்கு ஒரு பெண் பயணி இருப்பாள் அவளிடம் குறைஷிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று இருக்கிறது. அதைக் கைப்பற்றுங்கள்!'' என்று கூறினார்கள்.

அவர்கள் விரைந்து சென்று அவ்விடத்தை அடைந்தார்கள். அங்கு நபி (ஸல்) கூறியபடி அப்பெண் இருக்க, அவளை வாகனத்திலிருந்து இறங்குமாறு கூறி அவளிடம் ''உன்னிடமுள்ள கடிதம் எங்கே? என்று கேட்டார்கள். அவள் ''என்னிடம் எக்கடிதமும் இல்லை'' என்றாள். அவர்கள் அவளது பயணச் சாமான்கள் அனைத்தையும் தேடினர். ஆனால், அதில் ஏதும் கிடைக்கவில்லை.

''அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன். அல்லாஹ்வின் தூதர் பொய் கூற மாட்டார்கள், நாங்களும் பொய் கூறமாட்டோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீயாக அக்கடிதத்தை கொடுத்து விடு அல்லது உனது ஆடையை களைந்து நாங்கள் தேடுவோம்'' என்று அலீ (ரழி) கூறினார்கள். அலீயின் பிடிவாதத்தைப் பார்த்த அப்பெண் ''விலகிக் கொள்'' என்று கூற அலீ (ரழி) விலகிக் கொண்டார்கள். தனது சடையை அவிழ்த்து அதிலிருந்த கடிதத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தாள். அவர்கள் அதை நபியவர்களிடம் ஒப்படைத்தார்கள்.

அந்த கடிதத்தில்: ''ஹாதிப் இப்னு அபூ பல்தஆ குறைஷிகளுக்கு எழுதுவது: நபி (ஸல்) உங்களை நோக்கி புறப்பட்டு விட்டார்கள்'' என்று எழுதப்பட்டிருந்தது. நபி (ஸல்) ஹாதிபை அழைத்தார்கள். ''ஹாதிபே! இது என்ன?'' என்று கேட்டார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்கின்றேன். நான் மதம் மாறவுமில்லை. அதை மாற்றிக் கொள்ளவுமில்லை. நான் குறைஷிகளுடன் சேர்ந்துதான் வாழ்ந்தேனே தவிர நான் குறைஷியல்ல. எனது குடும்பத்தினர்களும், உறவினர்களும் அங்கு இருக்கின்றனர். அவர்களைப் பாதுகாப்பதற்கு அங்கு எனக்கு எந்தக் குறைஷி உறவினரும் இல்லை. உங்களுடன் இருக்கும் மற்றவர்களின் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கு அங்கு அவரது மற்ற உறவினர்கள் இருக்கின்றார்கள். நான் குறைஷிகளுக்கு இந்த உதவியைச் செய்தால், அதனால் அவர்கள் எனது குடும்பத்தைப் பாதுகாப்பார்கள். அதற்காகவே நான் அவர்களுக்கு இந்த உதவியைச் செய்ய ஆசைப்பட்டேன்'' என்று ஹாதிப் (ரழி) பதில் கூறினார். இந்தப் பதிலை கேட்டுக் கொண்டிருந்த உமர் (ரழி), ''அல்லாஹ்வின் தூதரே! அவரது கழுத்தைச் சீவ எனக்கு அனுமதி தாருங்கள். அவர் நிச்சயமாக அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார். அவர் நயவஞ்சகராகி விட்டார்'' என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், ''அல்லாஹ் பத்ரில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து நீங்கள் விரும்பியதை செய்யுங்கள். நான் உங்களின் பாவங்களை நிச்சயமாக மன்னித்து விட்டேன்'' என்று கூறியிருக்கிறான். உமரே! இவர் பத்ரில் கலந்து கொண்டவர் என்பது உனக்குத் தெரியுமா?'' என்று கூறினார்கள். நபியவர்களின் இந்தப் பதிலால் உமரின் கண்களிலிருந்து கண்ணீர் மல்கியது. ''அல்லாஹ்வும் அவனது தூதரும் மிக அறிந்தவர்கள்'' என உமர் (ரழி) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இவ்வாறு ஒற்றர்கள் வழியாக செய்தி கடத்தப்படுவதையும் அல்லாஹ் தடுத்து விட்டான். முஸ்லிம்கள் போருக்குத் தயாராகி வருகிறார்கள் என்ற எந்தவித செய்தியும் குறைஷிகளுக்குக் கிடைக்கவில்லை.

மக்காவை நோக்கி இஸ்லாமியப் படை

ஹிஜ்ரி 8, ரமழான் மாதம் பிறை 10ல் நபி (ஸல்) 10,000 தோழர்களுடன் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். மதீனாவில் அபூ ருஹ்ம் கிஃபாரி (ரழி) என்ற தோழரை நபி (ஸல்) தனக்குப் பிரதிநிதியாக நியமித்தார்கள்.

நபியவர்கள் 'ஜுஹ்ஃபா' என்ற இடத்தில் அல்லது அதைத் தாண்டி ஓரிடத்தில் சென்று கொண்டிருந்தபோது, நபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபு (ரழி) தனது குடும்பத்தினருடன் அவர்களைச் சந்தித்தார்கள். இவர்கள் இஸ்லாமை ஏற்று நபியவர்களைச் சந்திக்க தனது குடும்பத்தார்களுடன் மக்காவிலிருந்து ஹிஜ்ரா செய்து மதீனா நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். பிறகு நபி (ஸல்) 'அப்வா' என்ற இடத்தில் தங்கியிருந்தபோது, நபியவர்களது பெரிய தந்தையின் மகன் அபூ ஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் என்பவரும், மாமி மகன் அப்துல்லாஹ் இப்னு அபூ உமையா ஆகிய இருவரும் வந்தனர்.

ஆனால், இவ்விருவரும் நபி (ஸல்) அவர்களை எப்போதும் இகழ்ந்து கொண்டிருந்ததாலும், அதிகம் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்ததாலும் அவர்களைச் சந்திக்க, அவர்களுடன் பேச நபியவர்கள் மறுத்து விட்டார்கள். நபியவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரழி) ''அல்லாஹ்வின் தூதரே! உங்களது பெரிய தந்தையின் மகனும், மாமி மகனும் உங்களின் புறக்கணிப்பால் நற்பேறு அற்றவர்களாக ஆகிவிட வேண்டாம். அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினார். மேலும் அலீ (ரழி), ''நீ நபியவர்களின் முன்பக்கமாக சென்று நபி யூஸுஃப் (அலை) அவர்களின் சகோதரர்கள் யூஸுஃபிடம் கூறியதைப் போன்று (கீழ்காணும் வசனங்களை) நீயும் கூறு, நபி (ஸல்) அவர்கள் பிறரைவிட தான் அதிக நற்பண்புள்ளவராக இருப்பதையே அதிகம் விரும்புவார்கள். (அதாவது, தனக்கு தீங்கிழைத்த தனது சகோதரர்களை நபி யூஸுஃப் (அலை) மன்னித்து விட்டார்கள் அப்படியிருக்க நபி (ஸல்) அவர்களும் நிச்சயம் மன்னிப்பார்கள்'') என்று அபூ ஸுஃப்யானிடம் கூறினார். அவ்வாறே அபூ ஸுஃப்யானும் செய்தார்.

நபி யூஸுஃப் (அலை) அவர்களின் சகோதரர்கள் கூறியதாவது:

''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (உங்களுக்குப் பெரும்) தீங்கிழைத்தோம். ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உங்களை மேன்மையாக்கி வைத்திருக்கிறான். (எங்களுக்கு நன்மை செய்ய அல்லாஹ் உங்களுக்குச் சந்தர்ப்பமும் அளித்திருக்கிறான்.)'' (அல்குர்ஆன் 12:91)

அதற்கு நபி (ஸல்) அவர்கள்,

''இன்றைய தினம் (நான்) உங்கள் மீது எந்த குற்றமும் (சுமத்துவது) இல்லை. அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்.'' (அல்குர்ஆன் 12:92)

என்ற வசனங்களைக் கூறினார்கள். அதன் பிறகு அபூ ஸுஃப்யான் இப்னு ஹாரிஸ்,

''இது சத்தியம்! லாத்துடைய வீரர்கள்'

முஹம்மதின் வீரர்களை' வீழ்த்த வேண்டும் என்பதற்காக,

நான் போர்க்கொடி சுமந்தபோது

இருளில் சிக்கித் தவிக்கும் திக்கற்ற பயணிபோல் இருந்தேன்

இது எனக்கு சிறந்த நேரம்

நான் நேர்வழிக்கு அழைக்கப்படுகிறேன்

அதை ஏற்று நானும் நேர்வழி பெறுகிறேன்

என் நேர்வழிக்கு நான் காரணமல்லன்.

நான் ஒவ்வொரு இடத்திலும் விரட்டியடித்தேனே

அவர்தான் எனக்கு நேர்வழி காட்டி

அல்லாஹ்வை காட்டித் தந்தார்.''

என்ற கவிதைகளைப் பாடிக்காட்டினார்.

அதற்கு நபியவர்கள், அவரது நெஞ்சில் அடித்து ''நீதான் என்னை ஒவ்வொரு இடங்களிலும் துரத்திக் கொண்டிருந்தாய்'' என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

மர்ருள் ளஹ்ரானில் இஸ்லாமியப் படை

ரமழான் மாதமாக இருந்ததால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் நோன்பு வைத்திருந்தார்கள். 'உஸ்ஃபான்' என்ற இடத்திற்கு அருகிலுள்ள 'குதைத்' என்ற கிணற்றுக்கருகில் இறங்கி அனைவரும் நோன்பு திறந்தனர். (முஸ்னது அஹ்மது, பைஹகி, இப்னு ஹிஷாம்)

அதற்குப் பின் தொடர்ந்து பயணித்து 'ஃபாத்திமா பள்ளத்தாக்கு' என்று கூறப்படும் 'மர்ருள் ளஹ்ரான்' என்ற இடத்தில் இறங்கினார்கள். அங்கு நெருப்பு மூட்டும்படி நபி (ஸல்) கட்டளையிட, ஒவ்வொரு நபித்தோழரும் நெருப்பு மூட்டினார். மொத்தம் பத்தாயிரம் நெருப்புக் குண்டங்கள் அங்கு மூட்டப்பட்டன. இரவில் படையின் பாதுகாப்புக்கு உமர் இப்னு கத்தாபை நபி (ஸல்) தலைமை தாங்க வைத்தார்கள்.

நபியவர்களுக்கு முன் அபூஸுஃப்யான்

முஸ்லிம்கள் மர்ருள் ளஹ்ரானில் தங்கியதற்குப் பின் நபியவர்களின் வெள்ளைக் கோவேறு கழுதையில் அப்பாஸ் (ரழி) ஏறி, அங்கிருந்து புறப்பட்டார். விறகு சேகரிக்க வருபவர்கள் அல்லது வேறு யாராவது கிடைப்பார்களா என்று தேடினார். நபி (ஸல்) மக்கா வரும் செய்தியைக் குறைஷிகளுக்கு சொல்லி அனுப்பினால் நபி (ஸல்) மக்காவுக்குள் நுழைவதற்கு முன்பதாக நபியவர்களிடம் வந்து தங்களுக்குரிய பாதுகாப்பை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள் என்பதே அப்பாஸின் நோக்கமாக இருந்தது..

அல்லாஹ் எந்த வகையிலும் குறைஷிகளுக்கு நபியவர்களின் நடவடிக்கை தெரியாமல் மறைத்து விட்டான். அவர்கள் பயத்துடனும், எந்நேரத்திலும் தாங்கள் தாக்கப்படுவோம் என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். மக்காவில் அபூ ஸுஃப்யான் வருவோர் போவோரிடமெல்லாம் நபியவர்களின் செய்தியைப் பற்றி துருவித் துருவி விசாரித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் இரவில் அபூ ஸுஃப்யானும், ஹக்கீம் இப்னு ஸாமும், புதைல் இப்னு வரக்காவும் நிலவரங்களை அறிந்து கொள்வதற்காக விசாரித்துக் கொண்டே மக்காவை விட்டு வெளியேறினார்கள். அன்றிரவுதான் நபியவர்கள் மர்ருள் ளஹ்ரானில் படையுடன் தங்கியிருந்தார்கள்.

அந்த நிகழ்ச்சியைப் பற்றி அப்பாஸ் (ரழி) கூறுவதைக் கேட்போம்:

''நான் நபியவர்களது கோவேறு கழுதையின் மீது இரவின் இருளில் சென்று கொண்டிருந்தேன். அபூஸுஃப்யான் மற்றும் புதைல் ஆகிய இருவரும் பேசிக் கொண்டது காதில் கேட்டது. ''இன்றைய இரவில் எரியும் நெருப்பைப் போன்றும், இங்குக் கூடியிருக்கும் படையைப் போன்றும் நான் வேறு எப்போதும் பார்த்ததில்லை'' என்று அபூஸுஃயான் புதைலிடம் கூறினார். அதற்கு புதைல் ''இங்கு வந்திருப்பது குஜாஆவின் படையாக இருக்கலாம். போர்தான் இவர்களைத் தீயாக ஆக்கிவிட்டது. நம்மீது போர்தொடுக்க கிளம்பிய இவர்கள் இவ்வாறு நெருப்பு மூட்டியிருக்கின்றனர்'' என்றார். ''இல்லை குஜாஆவின் எண்ணிக்கை மிகக் குறைவு; அவர்கள் வீரமில்லாதவர்கள் இது அவர்களின் நெருப்பாகவோ படையாகவோ இருக்க முடியாது'' என்று அபூஸுஃப்யான் கூறினார்.

நான் அபூஸுஃப்யானின் குரலைப் புரிந்து கொண்டு ''ஹன்ளலாவின் தந்தையே!'' என்று அழைத்தேன். (இது அவரது புனைப் பெயராகும்) அவரும் எனது குரலைப் புரிந்துகொண்டு ''ஃபழ்லின் தந்தையே!'' (இது அப்பாஸின் புனைப் பெயராகும்) என்று அழைத்தார். நான் 'ஆம்! நான்தான்' என்று கூறினேன். அதற்கவர் (என்ன! இந்நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர் எனும் பொருளில்) ''உங்களுக்கு என்னவாயிற்று. எனது தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும்'' என்று கூறினார். ''இதோ அல்லாஹ்வின் தூதர் மக்களுடன் வந்திருக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! குறைஷிகள் அழிந்தே விட்டனர்'' என்று நான் கூறினேன்.

''தப்பிப்பதற்கு வழி என்ன? எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று அபூ ஸுஃப்யான் கேட்டார். அதற்கு நான் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபியவர்களிடம் நீ சிக்கினால் உன்னை அவர்கள் கொலை செய்து விடுவார்கள். இந்தக் கோவேறு கழுதையில் என் பின்னே ஏறிக்கொள். நான் உன்னை நபியவர்களிடம் அழைத்துச் சென்று உனக்காக நபி (ஸல்) அவர்களிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று கூறினேன். அவரும் எனக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டார். மற்ற அவரது இரு நண்பர்களும் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டனர்.

நான் அவரை அழைத்து வந்து கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒவ்வொரு நெருப்புக்கு அருகிலும் செல்லும்போதெல்லாம் ''இவன் யார்?'' என விசாரித்துக் கொண்டே வந்தனர். முஸ்லிம்களும் நபியின் கோவேறு கழுதையின் மீது நான் வாகனிப்பதைப் பார்த்து, ''இதோ... இவர்தான் நபியுடைய தந்தையின் சகோதரர் ஆவார். இது நபியின் கோவேறு கழுதையாகும்'' என்று பேசிக் கொண்டார்கள். இவ்வாறே நான் உமர் இப்னு கத்தாப் (ரழி) மூட்டியிருந்த நெருப்புக்கருகில் சென்றபோது ''அவர் இது யாரென்று கேட்டுக் கொண்டே என்னை நோக்கி எழுந்து வந்தார்.'' வாகனத்தின் பின்னால் அபூஸுஃப்யானைப் பார்த்தவுடன் ''இவர்தான் அல்லாஹ்வின் எதிரி அபூ ஸுஃப்யான். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! எவ்வித ஒப்பந்தமும் நமக்கு மத்தியில் இல்லாமல் இருக்கும் இவ்வேளையில் அல்லாஹ் உன்னை என்னிடம் சிக்க வைத்து விட்டான்'' என்று கூறிக்கொண்டே கொல்வதற்கு அனுமதி வேண்டி நபியிடம் விரைந்தார்.

நான் சுதாரித்துக் கொண்டு கழுதையை உதைத்து வேகமாக ஓட்டிக் கொண்டு நபியிடம் சென்றடைந்தேன். கழுதையிலிருந்து இறங்கி நபியின் கூடாரத்திற்குள் செல்லும் போதே உமரும் கூடாரத்திற்குள் நுழைந்து விட்டார். அவர் ''அல்லாஹ்வின் தூதரே! இதோ அபூ ஸுஃப்யான்! எனக்கு அனுமதி தாருங்கள். நான் அவனைக் கொன்று விடுகிறேன்'' என்று கூறினார். ''அல்லாஹ்வின் தூதரே! நான் இவருக்கு அடைக்கலம் கொடுத்து விட்டேன்'' என்று கூறி நபிக்கருகில் அமர்ந்து கொண்டு அவர்களது தலையை எனது நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன். மேலும் ''இன்றிரவு என்னைத் தவிர வேறு யாரும் நபியிடம் பேச அனுமதிக்க மாட்டேன்'' என்று கூறினேன். ஆனால் உமர் (ரழி) அபூ ஸுஃப்யான் விஷயத்தில் மிகப் பிடிவாதமாக இருந்தார்கள்.

நான் ''உமரே! சற்று பொறுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமது 'அதீ' கிளையைச் சேர்ந்தவராக இவர் இருந்திருந்தால் நீ இவ்வாறு கூறமாட்டாய்'' என்று கூறினேன். அதற்கவர் ''அப்பாஸே! நீங்கள் சற்றுப் பொறுங்கள். எனது தந்தை இஸ்லாமை ஏற்றுக் கொள்வதை விட நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதுதான் எனக்கு மிக விருப்பமானதாகும். அதாவது என் தந்தை முஸ்லிமாகுவதை விட நீங்கள் முஸ்லிமாகுவதுதான் எனக்கு அதிக விருப்பமானதாகும், ஏனெனில், என் தந்தை முஸ்லிமானால் நபிக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட நீங்கள் முஸ்லிமானால் நபிக்கு அதிகம் மகிழ்ச்சி ஏற்படும்'' என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் ''அப்பாஸே! நீர் இவரை அழைத்துச் சென்று உமது கூடாரத்தில் தங்க வைத்து காலையில் அழைத்து வாருங்கள்'' என்று கூறினார்கள். காலையில் நான் அவரை அழைத்துக் கொண்டு நபியிடம் சென்றேன். அவரைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ''அபூ ஸுஃப்யானே! உனக்கு என்ன கேடு நேர்ந்தது. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று நீ இன்னமும் தெரிந்து கொள்ளவில்லையா?'' எனக் கேட்டார்கள். ''எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் எவ்வளவு பெரிய பொறுமைசாலி; நீங்கள் மிக கண்ணியமிக்கவர்கள் உறவுகளை அதிகம் பேணுகிறீர்கள் அல்லாஹ்வுடன் வேறொரு இறைவன் இருந்திருந்தால் அவர் இன்று எனக்கு ஏதாவது நிச்சயம் பயனளித்திருப்பார்'' என அபூஸுஃப்யான் கூறினார்.

அதற்கு நபியவர்கள் ''அபூ ஸுஃப்யானே! உமக்கு என்ன கேடு நேர்ந்தது. நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீ தெரிந்து கொள்வதற்கு இன்னுமா உனக்கு நேரம் வரவில்லை?'' என்றார்கள். ''எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் எவ்வளவு பெரிய பொறுமைசாலி. நீங்கள் மிக கண்ணியமிக்கவர்கள் உறவுகளை அதிகம் பேணுகிறீர்கள், ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு சற்று சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது'' என்று அபூ ஸுஃபயான் கூறினார். இதைக் கேட்ட அப்பாஸ் (ரழி) ''உனக்கென்ன கேடு! நீ கொல்லப்படுவதற்கு முன் இஸ்லாமை ஏற்றுக்கொள். லாயிலாஹஇல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் என்று சாட்சி சொல்லிவிடு!'' என்று கூறினார். அவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு ஏகத்துவ சாட்சியும் மொழிந்தார்.

மக்கா நோக்கி இஸ்லாமியப் படை

அன்றைய காலைப் பொழுதில், அதாவது ஹிஜ்ரி 8, ரமழான் மாதம் பிறை 17 செவ்வாய்க் கிழமை காலையில் நபி (ஸல்) மர்ருள் ளஹ்ரானிலிருந்து மக்கா நோக்கிப் புறப்படலானார்கள். வழி குறுகலாக உள்ள 'கத்முல் ஜபல்' என்ற இடத்தில் அபூஸுஃப்யானை நிறுத்தி வை. அல்லாஹ்வின் படை அவரைக் கடந்து செல்வதைப் பார்க்கட்டும் என்று நபி (ஸல்) அப்பாஸுக்கு ஆணை பிறப்பித்தார்கள். அப்பாஸும் அவ்வாறே செய்தார். தங்களிடமுள்ள கொடிகளுடன் ஒவ்வொரு கோத்திரத்தாரும் அபூஸுஃப்யானைக் கடந்து சென்றபோதெல்லாம் இவர்கள் யாரென்று அப்பாஸிடம் விசாரிப்பார். அப்பாஸ் (ரழி) (உதாரணமாக) ''சுலைம்'' என்று கூறுவார். அதற்கு அபூஸுஃப்யான் ''எனக்கும் சுலைம் கோத்திரத்தாருக்கும் என்ன உறவு இருக்கிறது?'' என்று கூறுவார். இவ்வாறே ஒவ்வொரு கோத்திரத்தாரையும் அபூஸுஃப்யான் விசாரிக்க அதற்கு அப்பாஸ் (ரழி) பதில் கூறிக்கொண்டிருந்தார்கள்.

இறுதியாக நபியவர்கள் தனது அடர்ந்த படையில் முஹாஜிர் அன்சாரிகளுடன் சென்றார்கள். நபி (ஸல்) மத்தியிலிருக்க தோழர்கள் நபியைச் சுற்றி ஆயுதமேந்தியிருந்தார்கள். அக்கூட்டத்தில் ஆயுதங்களைத் தவிர வேறொன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை. இக்காட்சியைப் பார்த்த அபூஸுஃப்யான் ஆச்சரியமடைந்து ''ஸுப்ஹானல்லாஹ்! அப்பாஸே! இவர்கள் யார்?'' என்று கேட்டார். ''இக்குழுவில் அல்லாஹ்வின் தூதர் தனது முஹாஜிர் மற்றும் அன்சாரி தோழர்களுடன் செல்கிறார்கள்'' என்று அப்பாஸ் (ரழி) பதிலளித்தார். இதைக் கேட்ட அபூஸுஃப்யான் ''நிச்சயமாக இவர்களை யாராலும் எதிர்க்க முடியாது. ஓ அபுல் ஃபழ்லே! உமது சகோதரர் உடைய மகனின் ஆட்சி இன்று கொடி கட்டிப் பறக்கிறதே!'' என்று கூறினார். அதற்கு அப்பாஸ் (ரழி) ''அபூ ஸுஃப்யானே! இதுதான் நபித்துவமாகும் (சாதாரண அரசாங்கமல்ல)'' என்று கூறினார். ''ஆம்! சரிதான்'' என்று அபூஸுஃப்யான் (ரழி) கூறினார்.

ஸஅது இப்னு உபாதா (ரழி) அன்சாரிகளின் கொடியை ஏந்தியிருந்தார். அவர் அபூ ஸுஃப்யானுக்கு அருகில் வந்தபோது ''இன்றைய தினம் கடுமையான போராட்ட நாளாகும். இன்றைய தினம் மானமரியாதை எடுக்கப்படும். இன்றைய தினம் அல்லாஹ் குறைஷிகளைக் கேவலப்படுத்தி விட்டான்'' என்று கூறினார். இந்த வார்த்தை அபூஸுஃப்யானுக்குப் பெரும் பயத்தை ஏற்படுத்தியது. அபூஸுஃப்யானுக்கு அருகில் நபி (ஸல்) வந்தபோது ''அல்லாஹ்வின் தூதரே! ஸஅது என்ன கூறினார் என்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட வில்லையா?'' என்று கேட்டார். ''அவர் என்ன கூறினார்?'' என்று நபி (ஸல்) கேட்க, ''இன்னின்னதை அவர் பேசினார்'' என அபூ ஸுஃப்யான் (ரழி) விளக்கினார்.

நபியுடன் இருந்த உஸ்மான் மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) ஆகிய இருவரும் ''அல்லாஹ்வின் தூதரே! மேலும், அவர் குறைஷிகளைக் கொன்று குவித்து விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்'' என்றனர். அதற்கு நபி (ஸல்) அவ்வாறு நடக்காது. இன்றைய தினம் கஅபாவை மகிமைப்படுத்தும் தினமாகும். இன்றைய தினம் அல்லாஹ் குறைஷிகளுக்குக் கண்ணியமளித்த தினமாகும்'' என்று கூறிவிட்டு ஒருவரை ஸஅதிடம் அனுப்பி அவரிடமுள்ள கொடியை வாங்கி அவரது மகன் கைசிடம் கொடுத்து விட்டார்கள். அதாவது, கொடி ஸஅதிடம்தான் இருக்கிறது என்று பொருளாகும். ஆனால் சிலர், அந்தக் கொடியை ஜுபைரிடம் நபி (ஸல்) கொடுத்தார்கள் என்கின்றனர்.

குறைஷிகளின் அதிர்ச்சி

நபி (ஸல்) அபூஸுஃப்யானைக் கடந்து சென்றவுடன் அப்பாஸ் (ரழி) அபூஸுஃப்யானிடம் ''உடனடியாக நீ உன் கூட்டத்தனரிடம் சென்று அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அறிவிப்புச் செய்!'' எனக் கூறினார். அபூஸுஃப்யான் (ரழி) மக்கா நோக்கி விரைந்து சென்று மக்காவாசிகளிடம் மிக உரக்க சப்தமிட்டு 'குறைஷிகளே! இதோ... முஹம்மது வந்துவிட்டார். அவர்களை உங்களால் எதிர்க்க முடியாது. எனவே, பாதுகாப்புத் தேடி எனது வீட்டிற்குள் நுழைந்து விடுங்கள். என் வீட்டில் நுழைந்தவர்கள் எல்லாம் பாதுகாப்புப் பெறுவர்' என்று முழக்கமிட்டார். அபூஸுஃப்யானின் இந்நிலையைக் கண்ட அவரது மனைவி அவரது மீசையை பிடித்திழுத்து ''கெண்டைக்கால் கொழுத்த இந்த திமிர் பிடித்தவனைக் கொன்று விடுங்கள்! கூட்டத்திற்குத் தலைவனாக இருப்பதற்கு இவன் தகுதியற்றவன்' என்று கூறினார்.

ஆனால், அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காத அபூஸுஃப்யான் (ரழி) ''மக்களே! உங்களுக்கென்ன கேடு நேர்ந்தது! எனது பேச்சைக் கேளுங்கள்! இவளது பேச்சை கேட்டு நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். உங்களால் அறவே எதிர்க்க முடியாத படையைக் கொண்டு முஹம்மது உங்களிடம் வந்திருக்கிறார். எனது வீட்டுக்குள் வந்துவிடுங்கள். என் வீட்டில் நுழைந்தவர்கள் பாதுகாப்புப் பெறுவர்'' என்று கூறினார். அதற்கு ''அல்லாஹ் உன்னை நாசமாக்குவானாக! எங்களுக்கெல்லாம் உமது ஒரு வீடு எப்படி போதுமாகும்?'' என்று மக்கள் கேட்டனர். ''யார் தனது வீட்டுக்குள் சென்று கதவைத் தாழிட்டு கொள்கிறாரோ அவரும் பாதுகாப்புப் பெறுவார். யார் மஸ்ஜிதுல் ஹராமிற்குள் செல்வாரோ அவரும் பாதுகாப்பு பெறுவார்'' என்று அபூஸுஃப்யான் கூறினார். இதைக் கேட்ட மக்கள் அனைவரும் தங்களது வீடுகளையும், பள்ளிகளையும் நோக்கி ஓடினர்.

ஆனால், அதே சமயத்தில் குறைஷிகள் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு சிலரை ஒன்று சேர்த்து, அவர்களை முஹம்மதுடன் சண்டை செய்ய நாம் அனுப்புவோம். சண்டையில் நமக்கு வெற்றி கிடைத்தால் அதுதான் நமது நோக்கம். சண்டையில் நமக்கு தோல்வி ஏற்பட்டால் இந்த வாலிபர்களின் இழப்புக்காக அவர்களின் குடும்பத்தினர் நம்மிடம் எதைக் கேட்கிறார்களோ அதைக் கொடுத்து விடுவோம் என்று முடிவு செய்தனர்.

இதற்கேற்ப பல கோத்திரத்திலிருந்தும் சில குறைஷி அறிவீனர்கள் இக்ரிமா இப்னு அபூ ஜஹ்ல், ஸஃப்வான் இப்னு உமையா, ஸஹ்ல் இப்னு அம்ர் ஆகியோருடன் 'கந்தமா' என்ற இடத்தில் ஒன்று சேர்ந்து கொண்டு முஸ்லிம்களை எதிர்க்க ஆயத்தமானார்கள். அப்படையில் மாஷ் இப்னு கைஸ் என்பவனும் இருந்தான். இதற்கு முன் இவன் தனது வீட்டில் எப்போதும் ஆயுதங்களைத் தயார்படுத்திக் கொண்டே இருந்தான். ஒருநாள் அவனது மனைவி அவனிடம் ''எதற்காக நீ இவ்வாறு தயார் செய்கிறாய்'' என்று கேட்டாள். அதற்கவன் ''முஹம்மது மற்றும் அவரது தோழர்களுடன் நான் சண்டை செய்ய இதைத் தயார் செய்கிறேன்'' என்று கூறினான். ''முஹம்மது மற்றும் அவரது தோழர்கள் முன் எதுவும் தாக்குப்பிடிக்காது (அவர்களை எவராலும் எதிர்க்க முடியாது). அவர்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது'' என்று மனைவி கூறினாள். ஆனால் அவன் ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்களின் சிலரைச் சிறைபிடித்து வந்து உனக்கு பணியாளர்களாக நான் அமர்த்துவேன்'' என்று கூறிவிட்டு தன்னைப் பற்றி பெருமையாக கவிதை பாடினான்,

அவர்கள் இன்று முன்வந்தால் நான் எங்ஙனம் விலகுவது

என்னிடம் முழு போராயுதமும் சிறு ஈட்டியும்

குத்தி குலை எடுக்கும் இருபுறம் கூரான வாளும் உள்ளன.

இஸ்லாமியப் படை 'தூதுவா'வை அடைகிறது

நபி (ஸல்) அவர்கள் படைக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தார்கள். 'தூதுவா' என்ற இடம் வந்தவுடன் அல்லாஹ் தனக்களித்த இவ்வெற்றியை எண்ணி அவனுக்குப் பணிந்தவர்களாக தலையைத் தாழ்த்தியும் நுழைந்தார்கள். அவர்களது தாடியின் முடி அவர்கள் அமர்ந்திருந்த கஜவா பெட்டியின் கம்பை தொட்டுக் கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் இவ்விடத்தை அடைந்தவுடன் தங்களது படையை நிறுத்தி அதைப் பல பிரிவுகளாக அமைத்தார்கள். அதாவது, வலப்பக்கம் உள்ள படைக்கு காலிது இப்னு வலீதை (ரழி) தளபதியாக்கினார்கள். இப்படையில் அஸ்லம், சுலைம், கிஃபார், முஸைனா, ஜுஹைனா மற்றும் பல அரபி கோத்திரங்கள் இருந்தனர். உங்களுடன் குறைஷிகளில் எவராவது போர் புரிய வந்தால் அவரை வெட்டி வீசிவிடுங்கள். மக்காவின் கீழ்ப்புறமாகச் சென்று எனது வருகைக்காக ஸஃபா மலையில் எதிர்பார்த்திருங்கள் என்று நபி (ஸல்) கூறியனுப்பினார்கள்.

இடப்பக்கம் உள்ள படைக்கு ஜுபைர் இப்னு அவ்வாமை (ரழி) தளபதியாக்கி அவருக்கு ஒரு கொடியை வழங்கினார்கள். மக்காவின் மேல்புறமுள்ள 'கதா' என்ற இடத்தின் வழியாக மக்காவுக்குள் நுழைந்து 'ஹுஜ்ன்' என்ற இடத்தில் கொடியை நாட்டி தங்கள் வருகைக்காக காத்திருக்க வேண்டும் என்று அவருக்கு ஆணையிட்டார்கள்.

கால்நடையாக வந்த வீரர்களுக்கும் ஆயுதமின்றி வந்த வீரர்களுக்கும் அபூ உபைதாவை (ரழி) தளபதியாக்கி 'பத்னுல் வாதி' வழியாக மக்காவுக்குள் நுழையுமாறு அவருக்கு ஆணையிட்டார்கள்.

இஸ்லாமியப் படை மக்காவுக்குள் நுழைகிறது

நபி (ஸல்) கூறிய வழியில் இஸ்லாமியப் படையின் ஒவ்வொரு பிரிவும் புறப்பட ஆரம்பித்தது. காலித் (ரழி) மற்றும் அவரது படையினரும் தங்களை எதிர்த்த முஷ்ரிக்குகளை வெட்டி வீழ்த்தினர். காலிதின் படையிலிருந்த குர்ஸ் இப்னு ஜாபிர் ஃபிஹ், குனைஸ் இப்னு காலித் இப்னு ரபிஆ (ரழி) ஆகிய இருவரும் படையை விட்டு வழிதவறி வேறொரு வழியில் சென்றனர். இவ்விருவரையும் குறைஷிகள் கொன்று விட்டனர். 'கன்தமா' என்ற இடத்தில் ஒன்று சேர்ந்திருந்த குறைஷி வீணர்கள் காலிதின் படையை எதிர்த்தனர். ஆனால், முஸ்லிம் வீரர்கள் எதிர்த்துத் தாக்கியதில் பன்னிரெண்டு முஷ்ரிக்குகள் கொல்லப்பட்டனர். இதைப் பார்த்து கதிகலங்கிய முஷ்ரிக்குகள் உயிர் பிழைக்க தப்பித்து ஓடலானார்கள். இவ்வாறு புறமுதுகுக் காட்டி ஓடியவர்களில் முஸ்லிம்களுடன் சண்டை செய்வதற்காக நீண்ட காலமாக ஆயுதத்தைத் தயார் செய்து வைத்திருந்த மாஸ் இப்னு கைஸும் ஒருவனாவான். தப்பித்து ஓடிய இவன் தனது வீட்டினுள் ஒளிந்து கொண்டு ''விரைவாகக் கதவை தாழிட்டுக் கொள்!'' என்று கத்தினான். அவனைப் பார்த்த அவனது மனைவி ''என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தாயே! அந்த வீராப்பெல்லாம் இப்போது எங்கே போய்விட்டது?'' என்று கேட்டார். அதற்கு அவன் பாடிய கவிதைகளாவது:

''ஃகன்தமா போர்க்கள நாளை நீ கண்டிருந்தால்....

நீ என்னைப் பழித்து ஒரு சொல் கூட உதிர்க்க மாட்டாய்.

ஸஃப்வான் ஓட் இக்ரிமாவும் ஓட ஓட,

உருவிய வாள்கள் எங்களை வரவேற்றன

முன் கைகளையும் தலைகளையும் வெட்டி அவை சாய்த்தன

அங்கு வீரர்களின் முழக்கங்கள், கர்ஜனைகள்,

முக்கல் முனகல் இதைத் தவிர வேறெதையும் கேட்க முடியவில்லை......''

காலித் (ரழி) இவ்வாறு மக்காவுக்குள் நுழைந்து ஸஃபா மலையில் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தார்.

இது ஒருபுறமிருக்க ஜுபைர் (ரழி), இன்றைய 'ஃபத்ஹ்' பள்ளிவாசலுக்கருகில் உள்ள 'ஹஜுன்' என்ற இடத்தில் நபி (ஸல்) தன்னிடம் கொடுத்த கொடியை நட்டுவிட்டு அவ்விடத்தில் ஒரு கூடாரம் அமைத்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களின் வருகைக்காக அங்கேயே காத்திருந்தார்கள்.

நபியவர்கள் சங்கைமிகு பள்ளிக்குள் நுழைகிறார்கள் சிலைகளை அகற்றுகிறார்கள்

நபி (ஸல்) அங்கிருந்து புறப்பட்டார்கள். அவர்களைச் சுற்றி முன்னும் பின்னும் முஹாஜிர்களும் அன்சாரிகளும் புடைசூழ அணிவகுத்துச் சென்றனர். இந்நிலையில் பள்ளிக்குள் நுழைந்து ஹஜ்ருல் அஸ்வதை நெருங்கிச் சென்று, அதைத் தங்களது கையால் தொட்டு முத்தமிட்டு கஅபாவைத் தவாஃப் செய்தார்கள். தங்களது கையில் இருந்த வில்லால் கஅபாவைச் சுற்றி இருந்த 360 சிலைகளை

''சத்தியம் வந்தது அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்'' (அல்குர்ஆன் 17:81)

என்ற வசனத்தை ஓதியவர்களாகக் குத்திக் கீழே தள்ளினார்கள். சிலைகளெல்லாம் முகம் குப்புற கீழே விழுந்தன. நபியவர்கள் வாகனத்தின் மீது இருந்து கொண்டே தவாஃப் செய்தார்கள். இஹ்ராம் அணியாமல் இருந்ததால் தவாஃப் மட்டுமே செய்தார்கள். தவாஃபை முடித்தவுடன் உஸ்மான் இப்னு தல்ஹா (ரழி) அவர்களை அழைத்து அவரிடம் இருந்து கஅபாவின் சாவியைப் பெற்று அதைத் திறக்கக் கூறினார்கள். நபி (ஸல்) உள்ளே நுழைந்து வரையப்பட்ட பல படங்களைப் பார்த்தார்கள். அப்படங்களில் நபி இப்றாஹீம், நபி இஸ்மாயீல் (அலை) ஆகிய இருவரும் அம்புகளைக் கொண்டு குறி பார்க்கும் வகையில் வரையப்பட்ட படமும் இருந்தது. இதனைக் கண்ட நபி (ஸல்) ''அல்லாஹ் இவ்வாறு வரைந்தவர்களை நாசமாக்குவானாக! இவ்விருவரும் ஒரு காலமும் அம்புகளைக் கொண்டு குறி பார்த்ததே கிடையாது'' என்றார்கள். மேலும், கஅபாவுக்குள் மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெண் புறாவின் உருவம் இருந்தது. அதையும் நபி (ஸல்) தங்களது கைகளால் உடைத்தார்கள். நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க அங்கு வரையப்பட்டிருந்த மற்ற உருவப் படங்களும் அழிக்கப்பட்டன.

நபியவர்கள் கஅபாவில் தொழுகிறார்கள், குறைஷிகளிடம் உரையாற்றுகிறார்கள்!

நபி (ஸல்) கஅபாவுக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டார்கள். நபியுடன் உஸாமா, பிலால் (ரழி) ஆகிய இருவரும் உள்ளே உடனிருந்தனர். கஅபாவின் வாயிலுக்கு நேர் திசையிலுள்ள சுவரை நோக்கி வந்து மூன்று முழங்கள் சுவருக்கும் தனக்குமிடையே இடைவெளி விட்டு நின்று கொண்டார்கள்.

கஅபா அப்போது ஆறு தூண்கள் மீது அமைக்கப்பட்டிருந்தது. நபி (ஸல்) தனது இடப்புறத்தில் இரண்டு தூண்கள், வலப்புறத்தில் ஒரு தூண் தனக்குப் பின் மூன்று தூண்கள் இருக்குமாறு அமைத்து (நின்று) கொண்டு தொழுதார்கள். தொழுத பின் கஅபாவுக்குள் சுற்றி வந்து ஒவ்வொரு மூலையிலும் (லாஇலாஹஇல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்) இறைவனை புகழ்ந்து, மேன்மைப் படுத்தினார்கள். பின்னர் கதவைத் திறந்தார்கள். குறைஷிகள் அனைவரும் பள்ளிக்குள் திரண்டு வரிசையாக நின்று கொண்டு நபி (ஸல்) என்ன செய்யப் போகிறார்கள் என எதிர்பார்த்திருந்தனர்.

நபி (ஸல்) கஅபா வாசலுடைய நிலைப்படியை பிடித்துக் கொண்டு நின்றார்கள். கீழே பள்ளியில் எதிர்பார்த்துக் காத்து நிற்கும் குறைஷிகளை நோக்கி பின்வருமாறு உரை நிகழ்த்தினார்கள். ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு எவ்விதத் துணையுமில்லை. அவன் தனது வாக்கை நிலைநாட்டினான். தன் அடியாருக்கு உதவி செய்தான். அவனே ராணுவங்கள் அனைத்தையும் தனியாகத் தோற்கடித்தான். இதுவரை நடைமுறையில் இருந்து வந்த அல்லாஹ்வின் இந்த இல்லத்தை பராமரிப்பது, ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவது ஆகிய இவ்விரண்டைத் தவிர ஏனைய அனைத்து சிறப்புகளையும் மற்ற பொருள் அல்லது உயிர் சம்பந்தப்பட்ட அனைத்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் எனது இவ்விரண்டு கால்களுக்குக் கீழ் புதைத்து விட்டேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தவறாகக் கொலை செய்து விடுதல் என்பது 'ஷிப்ஹுல் அம்தை'ப் போன்றுதான். (சாட்டை அல்லது கைத்தடி போன்ற கொலை செய்யப் பயன்படாத ஆயுதங்களால் தாக்கும் போது ஏற்படும் எதிர்பாராத கொலைக்கு 'ஷிபஹுல் அம்து' எனப்படும்.) இதற்குக் கடுமையான குற்றப் பரிகாரம் கொடுக்கப்பட வேண்டும். (அதாவது, 100 பெண் ஒட்டகங்கள் கொடுக்க வேண்டும். அதில் 40 சினை ஒட்டகங்களாக இருக்க வேண்டும்.) குறைஷிக் கூட்டமே! அறியாமைக் காலத்தில் நீங்கள் கடைப்பிடித்த மூடத்தனமான பழக்க வழக்கங்களையும் முன்னோர்களைக் கொண்டு பெருமையடித்து வந்ததையும் இப்பொழுது உங்களை விட்டு அல்லாஹ் போக்கி விட்டான் மக்கள் அனைவரும் ஆதமிடமிருந்து வந்தவர்கள். ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவர். பின்பு அடுத்து வரும் திருவசனத்தை ஓதிக் காட்டினார்கள்:

மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிகக் கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 49:13)

உங்களை எவ்விதத்திலும் பழிக்கப்படாது

மேற்கூறிய திருவசனத்தை ஓதிக் காட்டிய பின்பு ''குறைஷிக் கூட்டத்தினரே! நான் உங்களிடம் எவ்விதம் நடந்து கொள்வேன் எனக் கருதுகிறீர்கள்?'' என நபி (ஸல்) கேட்க, ''நல்லமுறையில் நடந்து கொள்வீர்கள். நீங்கள் எங்களுக்குச் சிறந்த சகோதரராகவும், எங்களில் சிறந்த சகோதரன் மகனாகவும் இருக்கின்றீர்கள்'' என பதில் கூறினர். நபி (ஸல்) ''நான் உங்களுக்கு யூஸுஃப் நபி தனது சகோதரருக்குக் கூறியதைப் போன்றுதான் கூறுவேன். உங்களை எவ்விதத்திலும் பழிக்கப்படாது. நீங்கள் மன்னிக்கப்பட்டவர்கள். நீங்கள் செல்லலாம்'' என்று கூறினார்கள்.

கஅபாவின் சாவியை உரியவரிடம் வழங்குதல்

உரைக்குப் பின்பு நபி (ஸல்) கீழிறங்கி வந்து பள்ளியில் அமர்ந்தார்கள். உஸ்மான் இப்னு தல்ஹாவிடமிருந்து கஅபாவின் சாவியை அலீ (ரழி) வாங்கியிருந்தார். அச்சாவியை எடுத்துக் கொண்டு அலீ (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! ஹாஜிகளுக்கு நீர் புகட்டும் பொறுப்பு எங்களுக்கு இருப்பதுடன் கஅபாவைப் பராமரிக்கும் பொறுப்பையும் எங்களுக்கு வழங்குங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்!'' என்றார்கள். இவ்விஷயத்தைக் கூறியவர் அப்பாஸ் (ரழி) என்றும் ஓர் அறிவிப்பில் வந்துள்ளது. நபி (ஸல்) ''உஸ்மான் இப்னு தல்ஹா எங்கே?'' என்று கேட்டு அவரை அழைத்து வரக் கூறி ''உஸ்மானே! இதோ உனது சாவியைப் பெற்றுக் கொள். இன்றைய தினம் நன்மை மற்றும் நேர்மையின் தினமாகும்'' என்று கூறினார்கள்.

'தபகாத்' என்ற நூலில் இப்னு ஸஅத் (ரழி) குறிப்பிடுகிறார்: நபி (ஸல்) உஸ்மானிடம் சாவியை வழங்கும்போது, ''இதை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். இது உங்களிடம் காலம் காலமாக இருந்து வரட்டும். அநியாயக்காரனைத் தவிர வேறெவரும் உங்களிடமிருந்து இதனைப் பறிக்க மாட்டான். உஸ்மானே! நிச்சயமாக அல்லாஹ் உங்களை தனது வீட்டிற்கு நம்பிக்கைக்குரிய பொறுப்பாளியாக நியமித்திருக்கின்றான். இந்த கஅபாவின் மூலம் நல்வழியில் உங்களுக்குக் கிடைக்கும் பொருட்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

கஅபாவின் மேல் பிலால் அதான் கூறுகிறார்

தொழுகை நேரம் வந்ததும் பிலாலுக்கு (பாங்கு) அதான் ஒலிக்கும்படி நபி (ஸல்) கட்டளை இட்டார்கள். கஅபாவின் முற்றத்தில் அபூஸுஃப்யான் இப்னு ஹர்ஃப், அத்தாபு இப்னு உஸைது, ஹாரிஸ் இப்னு ஹிஷாம் ஆகிய பெருந்தலைவர்கள் வீற்றிருந்தனர். அதனைக் கேட்ட அத்தாபு ''திண்ணமாக அல்லாஹ் எனது தந்தை உஸைதைக் கண்ணியப்படுத்தி காப்பாற்றி விட்டான். இதுபோன்ற சப்தத்தை அவர் கேட்கவில்லை. அப்படிக் கேட்டிருந்தால் அவர் கடுங்கோபம் கொண்டிருப்பார்'' எனக் கூறினார். அதற்கு ஹாரிஸ், ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த அதானில் சொல்லப்படும் விஷயம் உண்மை என்று நான் அறிந்திருந்தால் அதனைப் பின்பற்றி இருப்பேன்.'' இதனையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அபூஸுஃப்யான் ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இது விஷயமாக நான் ஏதும் பேசமாட்டேன். அப்படி ஏதேனும் நான் பேசிவிட்டால் இந்தப் பொடிக் கற்கள் கூட என்னைப் பற்றிய செய்தியைத் தெரிவித்து விடும்.'' இவர்களின் இவ்வுரையாடலுக்குப் பின் அவர்களிடம் சென்ற நபி (ஸல்) ''நீங்கள் பேசியது எனக்கு நன்கு தெரியும்'' என்று கூறிவிட்டு, அவர்கள் பேசியவற்றை அவர்களிடமே விவரமாகக் கூறினார்கள்.

இதனைக் கேட்ட ஹாஸும் அத்தாபும் (ரழி) ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்களுடன் இருந்த வேறு யாருக்கும் இவ்விஷயம் தெரியவே தெரியாது. அவ்வாறிருக்க யாராவது உங்களுக்கு இதனைப் பற்றி சொல்லியிருக்கலாம் என்று எங்ஙனம் நாங்கள் கூற இயலும்? எனவே நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என சாட்சிக் கூறுகிறோம்'' என்றனர்.

'ஸலாத்துல் ஃபத்ஹ்' அல்லது 'ஸலாத்துஷ் ஷுக்ர்'

அன்றைய தினம் நபி (ஸல்) உம்மு ஹானி பின்த் அபூதாலிப் (ரழி) அவர்களின் வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு எட்டு ரகஅத்துகள் தொழுதார்கள். அல்லாஹ் அவர்களுக்களித்த வெற்றியை முன்னிட்டு நன்றி செலுத்தும் பொருட்டு தொழுத தொழுகை என்பதால் இந்தத் தொழுகையை 'ஸலாத்துல் ஃபத்ஹ்' (வெற்றிக்கான தொழுகை) அல்லது 'ஸலாத்துஷ் ஷுக்ர்' (நன்றி தொழுகை) என்று கூறலாம். ஆனால் சிலர், நபி (ஸல்) இத்தொழுகையைத் தொழுத நேரம் 'ழுஹா' (முற்பகல்) நேரமாக இருந்ததால் இதனை 'ஸலாத்துழ் ழுஹா' என எண்ணிக் கொள்கின்றனர்.

உம்மு ஹானி (ரழி) தனது கணவன் இரண்டு சகோதரர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு வழங்கியிருந்தார். இவ்விருவரையும் கொன்றுவிட அலீ (ரழி) விரும்பினார்கள். ஆனால், இவ்விருவரையும் வீட்டிற்குள் வைத்துக் கொண்டே உம்மு ஹானி (ரழி) வீட்டைத் தாழிட்டு விட்டார்கள். நபி (ஸல்) வீடு வந்தவுடன் அவ்விருவருக்காக பாதுகாப்புக் கோரினார்கள். அதற்கு நபி (ஸல்) ''உம்மு ஹானியே! நீங்கள் பாதுகாப்புத் தந்தவர்களுக்கு நாமும் பாதுகாப்பை வழங்குகிறோம்'' என்று கூறினார்கள்.

பெருங்குற்றவாளிகளைக் கொல்ல கட்டளையிடுதல்

நபி (ஸல்) இன்றைய தினம் ஒன்பது கொடுங்காஃபிர்களை அவர்கள் கஅபாவின் திரைக்குள் நுழைந்தாலும் கொல்லப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். அவர்களின் பெயர்கள்: 1) அப்துல் உஜ்ஜா இப்னு கதல், 2) அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபூ சரஹ், 3) இக்ரிமா இப்னு அபூஜஹ்ல், 4) ஹாரிஸ் இப்னு நுஃபைசல் இப்னு துஹப், 5) மகீஸ் இப்னு சுபாபஹ், 6) ஹபார் இப்னு அல் அஸ்வத், 7, 8) இப்னு கத்தலின் இரண்டு அடிமைப் பாடகிகள், 9) அப்துல் முத்தலிப் வம்சத்திற்குச் சொந்தமான 'சாரா' எனும் அடிமை. இப்பெண்ணிடம்தான் ஹாதிப் அனுப்பிய ராணுவ இரகசிய கடிதம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களைப் பற்றியுள்ள குறிப்புகள் அடுத்து வருகின்றன.

அப்துல்லாஹ் இப்னு ஸஅதை உஸ்மான் (ரழி) அழைத்து வந்து சிபாரிசு செய்ய நபி (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். எனவே, அவர் உயிர் பாதுகாக்கப்பட்டது. இவர் இதற்கு முன் ஒருமுறை இஸ்லாமை ஏற்று ஹிஜ்ரத் செய்து மதீனா வந்திருந்தார். சில காலங்கள் அங்கு தங்கிய பின் இஸ்லாமை விட்டு வெளியேறி மக்கா வந்துவிட்டார். இவர் நபியின் அவையில் தான் இப்போது முஸ்லிமாகி விடுவதாக அறிவித்தார். ஆனால், தங்களது தோழர்களில் யாராவது ஒருவர் அவரை கொன்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நபி (ஸல்) இருந்ததால் அவரது இஸ்லாமை ஏற்க தயக்கம் காட்டினார்கள். பின்பு சிறிது நேரம் கழித்து அவரது இஸ்லாமை நபி (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். அப்துல் உஜ்ஜா இப்னு கத்தல் கஅபாவின் திரையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டான். நபித்தோழர் ஒருவர் நபியிடம் வந்து ''என்ன செய்வது?'' என்று கேட்டார். ''அவனைக் கொன்று விடவேண்டியதுதான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியவுடன் அவர் அவனைக் கொன்று விட்டார்.

மகீஸ் இப்னு சபாபா- இவன் ஏற்கனவே முஸ்லிமாக இருந்தான். ஓர் அன்சாரித் தோழரை கொன்றுவிட்டு மதம் மாறி முஷ்ரிக்குகளுடன் சேர்ந்து கொண்டான். இவனை நுபைலா இப்னு அப்துல்லாஹ் (ரழி) என்பவர் கொன்றொழித்தார்.

ஹாரிஸ் இப்னு நுஃபைல்- இவன் மக்காவில் நபியவர்களை அதிகம் துன்புறுத்திக் கொண்டிருந்தான். இவனை அலீ (ரழி) கொன்றார்கள்.

ஹப்பார் இப்னு அஸ்வத்- இவர்தான் நபி (ஸல்) அவர்களின் மகள் ஜைனப் (ரழி) ஹிஜ்ரத் செய்து மதீனா சென்றபோது வழிமறித்து தனது ஈட்டியால் குத்தினார். இதனால் அவர்கள் அமர்ந்திருந்த (கஜாவா) ஒட்டகத் தொட்டியிலிருந்து கீழே விழுந்தார்கள். அவர்களது வயிற்றில் காயமேற்பட்டு கரு கலைந்துவிட்டது. இவர் மக்கா வெற்றியின்போது அங்கிருந்து தப்பி ஓடினார். பின்பு சில காலம் கழித்து இஸ்லாமை ஏற்றார்.

மற்ற இப்னு கத்லுடைய இரு அடிமைப் பாடகிகளில் ஒருத்தி கொலையுண்டாள். மற்றவள் முஸ்லிம் ஒருவரால் அடைக்கலம் தரப்பட்டு பின்னர் இஸ்லாமை ஏற்றார். அவ்வாறே 'சாரா' என்ற அடிமைப் பெண்ணும் அடைக்கலமாகி இஸ்லாமைத் தழுவினார்.

அறிஞர் இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: ஹாரிஸ் இப்னு துலாத்தில் அல்குஸாயீ என்பவனையும் கொல்லும்படி நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். எனவே, அவனை அலீ (ரழி) கொன்றொழித்தார்கள் என அபூ மஃஷக் (ரழி) கூறுகிறார்.

பிரபல கவிஞர் கஅப் இப்னு ஜுஹைரையும் கொல்லும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள். ஆனால், இவர் நபி (ஸல்) அவர்கள் சமூகம் வந்து இஸ்லாமை ஏற்று தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டார். இவரைப் பற்றிய விரிவான செய்தி பின்னால் வரவிருக்கின்றது.

இவ்வாறே ஹம்ஜா (ரழி) அவர்களைக் கொலை செய்த வஹ்ஷியையும் கொன்றுவிட கட்டளையிடப்பட்டது. பின்னர் இஸ்லாமைத் தழுவியதால் மன்னிக்கப்பட்டது. அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பாவும் கொலைப் பட்டியலில் இருந்தார். அவரும் இஸ்லாமை ஏற்றதால் மன்னிக்கப்பட்டார். இப்னு கதலின் அடிமைப் பெண் அர்னப் என்பவளும் கொலையுண்டாள் என இமாம் ஹாகிம் (ரஹ்) குறிப்பிடுகின்றார். கொலையுண்டவர்களில் உம்மு ஸஅத் என்பவரும் உண்டு என இப்னு இஸ்ஹாக் (ரஹ்) குறிப்பிடுகின்றார். இந்த கணக்கின்படி எட்டு ஆண்களும் ஆறு பெண்களும் இப்பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். ஆனால், இங்கு கூறப்பட்ட அர்னப், உம்மு ஸஅத் இருவரும் இப்னு கத்தலின் இரண்டு பாடகிகளாக இருக்கலாம். அவ்விருவருடைய பெயர்கள் அல்லது புனைப் பெயர்களில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் தனித் தனியாகக் கூறப்பட்டிருக்கலாம். (இப்னு ஹஜர் (ரஹ்) கூற்று முடிவுற்றது.) (ஃபத்ஹுல் பாரி)

ஸஃப்வான் இப்னு உமய்யா, ஃபழாலா இப்னு உமைய்யா இஸ்லாமைத் தழுவுதல்

ஸஃப்வான் குறைஷிகளின் பெருந்தலைவர்களில் ஒருவராக இருந்தும் அவரைக் கொல்ல வேண்டுமென்று நபி (ஸல்) கட்டளையிடவில்லை. இருப்பினும் அவர் பயந்து மக்காவிலிருந்து ஓட்டம் பிடித்தார். அவருடைய முன்னாள் நண்பர் உமைர் இப்னு வஹப் அல் ஜும நபியிடம் அவருக்காக (பாதுகாப்பு) அபயம் தேடினார். நபி (ஸல்) அதனை ஏற்று மக்காவுக்குள் வரும்போது தாம் அணிந்திருந்த தலைப்பாகையைக் கொடுத்தனுப்பினார்கள். உமைர் (ரழி) அதனை பெற்றுக் கொண்டு ஸஃப்வானைத் தேடிப் புறப்பட்டார். 'ஜுத்தா' எனும் கடற்கரையில் யமன் நோக்கிய பயணத்திற்கு ஸஃப்வான் ஆயத்தமான போது உமைர் (ரழி) அவரைச் சந்தித்து நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார். ஸஃப்வான் நபியிடம் தனக்கு இரண்டு மாத கால அவகாசம் வேண்டுமெனக் கோரினார். அதற்கு நபி (ஸல்) நான்கு மாத கால அவகாசம் தருவதாக மொழிந்தார்கள். சில நாட்களுக்கு பின் ஸஃப்வான் இஸ்லாமைத் தழுவினார். இவருடைய மனைவியோ இவருக்கு முன்பே இஸ்லாமை ஏற்றிருந்தார். நபி (ஸல்) இருவரையும் பழைய திருமண உறவைக் கொண்டே சேர்த்து வைத்தார்கள்.

ஃபழாலா- இவர் மிக்க துணிச்சலானவர். நபி (ஸல்) அவர்களைக் கொல்வதற்காகக் கிளம்பினார். நபியவர்களின் அருகில் வந்தவுடன் இவர் என்ன எண்ணத்தில் வந்துள்ளார் என்பதை வெளிச்சமாக்கிக் காட்டினார்கள். இதைச் செவிமடுத்த ஃபழாலா இவர் உண்மையான திருத்தூதர்தான் என விளங்கி இஸ்லாமை ஏற்றார்.

நபியவர்களின் சொற்பொழிவு

மக்கா வெற்றி கொண்ட இரண்டாம் நாள் மக்களுக்கு நபி (ஸல்) சொற்பொழிவாற்றினார்கள். அல்லாஹ்வை அவனுக்குரிய சிறப்புகள், தன்மைகள் ஆகியவற்றால் புகழ்ந்து மேன்மைப்படுத்திய பின் உரை நிகழ்த்தத் தொடங்கினார்கள். ''மக்களே! நிச்சயமாக அல்லாஹ் வானங்கள், பூமியை படைத்த அன்றே மக்காவுக்கு அளப்பெரும் கண்ணியம் வழங்கியிருப்பதால் மறுமை நாள் வரை கண்ணியம் பொருந்தியதாகவே கருதப்பட வேண்டும். அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பிக்கை கொண்டுள்ள யாரும் அங்குக் கொலை புரிவதோ, மரம் செடி கொடிகளை அகற்றுவதோ கூடாது. நபி இங்கு போர் புரிந்தார்கள் என்று முன்னுதாரணம் காட்டினால் நீங்கள் அவருக்குச் சொல்லுங்கள், நிச்சயமாக அல்லாஹ் அவனது தூதருக்குத்தான் இந்த சிறப்புத் தகுதியை வழங்கியிருக்கின்றான் உங்களுக்கு அந்த உரிமையோ தகுதியோ அவன் வழங்கவில்லை. மேலும் எனக்குப் பகல்பொழுதின் ஒரு குறிப்பிட்ட குறுகிய நேரத்திற்குத்தான் அனுமதிக்கப்பட்டது. அதன்பின் அதற்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியம் நேற்று அதற்குரிய கண்ணியத்தைப் போன்றே இன்று முதல் மீண்டும் திரும்பிவிட்டது. இங்குள்ளவர்கள் இங்கு வராதவர்களுக்குத் தெரிவித்து விடட்டும்''.

நபி (ஸல்) அவர்களின் உரையைப் பற்றி வரும் மற்றொரு அறிவிப்பில் பின்வரும் அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

''அங்குள்ள முட்களை ஒடிக்கவோ, அங்குள்ள வேட்டைப் பிராணிகளை அங்கிருந்து விரட்டவோ, அங்கு கீழே கிடக்கும் பொருட்களை எடுக்கவோ கூடாது. ஆயினும், அதை உரியவரிடம் சேர்த்து வைக்கவும் மக்களிடம் தெரிவிக்கவும் எடுக்க அனுமதி உண்டு. இங்குள்ள புற்களைக் களையக் கூடாது.'' அப்பொழுது அப்பாஸ் (ரழி) அவர்கள் 'இத்கிர்' என்ற செடியை களைந்து கொள்ள அனுமதி தாருங்கள். இது எங்கள் கொல்லர்களுக்கும் மற்ற வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது'' எனக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) இத்கிர் செடியை எடுத்து பயன்படுத்த அனுமதி அளித்தார்கள்.

குஜாஆ கிளையினர் மக்கா வெற்றியின் போது லைஸ் கிளையைச் சேர்ந்த ஒருவரைக் கொன்று விட்டனர். இதற்கு முன் அறியாமைக் காலத்தில் லைஸ் கிளையினர் குஜாஆ கிளையினரில் ஒருவரைக் கொன்றிருக்கின்றனர். அதற்குப் பழிவாங்கும் முகமாக இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். இது தொடர்பாக நபி (ஸல்) இவ்வுரையில் குறிப்பிட்டுக் கூறினார்கள்:

''குஜாஆ சமூகத்தினரே! கொலை புரிதலைக் கைவிடுங்கள். கொலை புரிவது பயன்தக்கதாக இருந்தால் இதற்கு முன்னர் புரிந்த கொலைகளே உங்களுக்குப் போதும். இதற்குப் பிறகு அந்த மாபாதகச் செயலை செய்யாதீர்கள். நீங்கள் கொன்று விட்டவர்களுக்குரிய தியத்தை (கொலைக்கான நஷ்டஈட்டை) இன்று நான் நிறைவேற்றுகிறேன். இதற்குப் பின் யாராவது கொலை செய்யப்பட்டால் கொலையுண்டவரின் உறவினர் இரண்டு வாய்ப்புகளில் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒன்று, கொலையாளியைப் பழிக்குப் பழி கொல்வது அல்லது அவரிடமிருந்து தியத் வசூல் செய்து கொள்வது.'' யமன் வாசியான 'அபூ ஷாஹ்' என்பவர் ''அல்லாஹ்வின் தூதரே! இதனை எனக்கு எழுதிக் கொடுங்கள்'' என்றார். ''இதனை இவருக்கு எழுதி வழங்குங்கள்'' என நபி (ஸல்) தோழர்களுக்குக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஸுனன் அபூதாவூது, இப்னு ஹிஷாம்)

நபியவர்களைப் பற்றி அன்சாரிகள் அஞ்சுதல்

அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு மக்காவில் வெற்றி அளித்தான். இப்புனித நகரம் அவர்களது சொந்த ஊர் அவர்கள் பிறந்த ஊர் அவர்களுக்கு பிடித்தமான ஊர் என்பது தெரிந்ததே! நபியவர்கள் ஸஃபா மலையில் தங்களது கைகளை உயர்த்தி துஆச் செய்து கொண்டிருந்தார்கள். அந்நேரத்தில் அல்லாஹ் தனது இந்த ஊரை நபியவர்களுக்கு கைவசப்படுத்தித் தந்தான். எனவே, அவர்கள் இங்கேயே தங்கி விடுவார்களோ? என அன்சாரிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

தங்களது பிரார்த்தனையை முடித்த பின்பு ''நீங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?'' என நபி (ஸல்) அன்சாரிகளிடம் வினவினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! ஒன்றுமில்லை'' என அவர்கள் கூறினர். நபி (ஸல்) மீண்டும் மீண்டும் கேட்கவே இறுதியில் தங்களிடையே என்ன பேசினோம் என்பதை தெரிவித்தனர். அதற்கு நபி (ஸல்) ''அல்லாஹ் காப்பாற்றுவானாக! நான் வாழ்ந்தால் உங்களுடன் வாழ்வேன். மரணித்தால் உங்களுடனே மரணிப்பேன்'' என்று கூறினார்கள்.

பைஆ வாங்குதல்

அல்லாஹ் இஸ்லாமை ஓங்கச் செய்து, நபியும் முஸ்லிம்களும் மக்காவை வெற்றி கொள்ளும்படி செய்தான். இதைப் பார்த்த மக்காவாசிகள் இஸ்லாமே உண்மை மார்க்கம். வெற்றி பெற இஸ்லாமைத் தவிர வேறு வழியில்லை என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொண்டனர். எனவே, இஸ்லாமை ஏற்று நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்வதற்கு ஒன்று கூடினர். நபி (ஸல்) ஸஃபா மலைக் குன்றுக்கு மேல் அமர்ந்து கொண்டு இதற்காக தயாரானார்கள். கீழே உமர் (ரழி) அமர்ந்து கொண்டார்கள். நபியவர்கள் மக்களிடமிருந்து இஸ்லாமிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். தங்களால் இயன்ற அளவு செவிமடுப்போம் கட்டுப்படுவோம் என மக்கள் பைஆ செய்தனர்.

'அல்மதாக்' என்ற நூலில் வருவதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆண்களிடம் பைஆ பெற்ற பின்பு பெண்களிடம் வாங்கினார்கள். அப்போது நபி (ஸல்) ஸஃபாவின் மீதும், அதற்குக் கீழே உமரும் அமர்ந்திருந்தனர். நபி (ஸல்) ஒவ்வொரு விஷயமாகக் கூற அதனை உமர் (ரழி) அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். இந்நேரத்தில் அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா நபியவர்களிடம் வந்தார். உஹுத் போரில் வீரமரணம் எய்திய ஹம்ஜாவுடைய உடலைச் சின்னாபின்னமாக்கிய தனது செயலுக்கு நபி (ஸல்) என்ன செய்வார்களோ என்று அஞ்சியதால் தன்னை முழுதும் மறைத்துக் கொண்டு வந்தார். நபி (ஸல்) ''நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டீர்கள் என்று எனக்கு வாக்குத் தர வேண்டும்'' என்று கூற, உமர் (ரழி) பெண்களுக்கு அதை எடுத்துரைத்தார்கள். அடுத்து, ''நீங்கள் திருடக் கூடாது'' என்றார்கள். அதற்கு, ''அபூஸுஃப்யான் ஒரு கஞ்சன். நான் அவருடைய பொருளில் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாமா?'' என ஹிந்த் வினவினார். ''நீ எதனை எடுத்துக் கொண்டாயோ அது உனக்கு ஆகுமானதே'' என்று அபூஸுஃப்யான் கூறினார்.

நபி (ஸல்) இவர்களின் உரையாடலைக் கேட்டு புன்னகை புரிந்து ''கண்டிப்பாக நீ ஹிந்த் தானே'' என்றார்கள். அதற்கவர் ''ஆம்! நான் ஹிந்த்தான். சென்று போன என்னுடைய பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வும் தங்களை பொறுத்தருள்வான்!!'' என்று கூறினார்.

''நீங்கள் விபசாரம் செய்யக் கூடாது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். ''ஒரு சுதந்திரமானவள் விபச்சாரம் புரிவாளா?'' என ஹிந்த் ஆச்சரியப்பட்டார்.

''உங்களின் பிள்ளைகளை நீங்கள் கொல்லக் கூடாது'' என நபி (ஸல்) கூறினார்கள். அதற்கு ஹிந்து, ''நாங்கள் எங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்த்தோம் அவர்கள் பெரியவர்களானதும் நீங்கள் அவர்களைக் கொன்று குவித்தீர்களே! என்ன நடந்தது என்று உங்களுக்கும் அவர்களுக்கும்தான் தெரியும்'' என்று கூறினார். உமர் (ரழி) சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து சிரித்து மல்லாந்து விழுந்தார். அதைக் கண்டு நபி (ஸல்) புன்னகைத்தார்கள். ஹிந்த் இவ்வாறு கூறக் காரணம்: பத்ரு படைக்களத்தில் அவருடைய மகன் ஹன்ளலா இப்னு அபூ ஸுஃப்யான் கொல்லப்பட்டிருந்தார். அடுத்து, ''நீங்கள் அவதூறு கூறலாகாது'' என நபி (ஸல்) கூறவே, ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவதூறு கூறுதல் மிகக் கெட்ட பண்பாகும். நீங்கள் நல்லவற்றையும், நற்குணங்களையுமே எங்களுக்கு கூறுகிறீர்கள்!'' என ஹிந்த் பதிலுரைத்தார்.

''நீங்கள் நல்ல விஷயங்களில் எனக்கு மாறு செய்யக் கூடாது'' என நபி (ஸல்) கூறவே, ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! தங்களுக்கு மாறுபுரியும் எண்ணத்தில் நாங்கள் இங்கு அமர்ந்திருக்கவில்லை'' என்று ஹிந்த் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின் வீடு திரும்பிய ஹிந்த் வீட்டினுள் வைத்திருந்த சிலைகளைப் பார்த்து ''நாங்கள் இதுவரை உங்களால் ஏமாற்றப்பட்டிருந்தோம்'' எனக் கூறியவாறு அவற்றை உடைத்தெறிந்தார். (மதாக்குத் தன்ஜீல்)

ஹிந்த்தை பற்றி ஸஹீஹுல் புகாரியிலும் ஒரு நிகழ்ச்சி பதியப்பட்டுள்ளது. ''ஹிந்த் நபியவர்களிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே! இவ்வுலகில் யாருமே பெற்றிராத கேவலத்தை உங்களைச் சார்ந்தவர்கள் பெற வேண்டும் என நான் ஒரு காலத்தில் பிரியப்பட்டேன். இன்று, இவ்வுலகில் யாருமே கண்டிராத கண்ணியத்தை தாங்கள் அடைய வேண்டும் என மிக ஆசைப்படுகிறேன்'' என்று கூறினார். ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்னும் என்ன சொல்லப் போகிறாய்?'' என்று நபி (ஸல்) கேட்டார்கள். அவர் ''அல்லாஹ்வின் தூதரே! அபூ ஸுஃப்யான் கஞ்சராக உள்ளார். அவருடைய செல்வத்திலிருந்து என் பிள்ளைகளுக்கு உணவளித்தல் குற்றமாகுமா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) ''அதனை நன்மையாகவே கருதுகிறேன்'' என்று கூறினார்கள்.

மக்காவில் நபியவர்களின் செயல்பாடுகள்

நபி (ஸல்) மக்காவில் 19 நாட்கள் தங்கியிருந்தார்கள். அக்காலக் கட்டத்தில் இஸ்லாமை எடுத்துரைத்தார்கள். அதன் சட்டதிட்டங்களை விவரித்தார்கள். மக்களுக்கு நேர்வழி மற்றும் இறை அச்சத்தை போதித்தார்கள். ஹரமின் எல்லைகளில் அடையாளக் கம்பங்களை புதுபிக்கும் பணியை குஜாஆ வமிசத்தவரான அபூஉஸைதுக்கு வழங்கினார்கள். அவர் நபி (ஸல்) கட்டளைப்படி அவற்றை செய்து முடித்தார். மேலும், இஸ்லாமிய அழைப்புப் பணிக்காகவும், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிலைகளை உடைத்தெறிவதற்காகவும் தோழர்களின் குழுக்களை அனுப்பினார்கள். அவை அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டன. நபியவர்களின் அறிவிப்பாளர், ''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் வீடுகளிலுள்ள சிலைகளை உடைத்தெறிய வேண்டும்'' என்று அறிவித்துக் கொண்டிருந்தார்.

படைப் பிரிவுகளும் குழுக்களும்

1) 'நக்லா' என்ற இடத்தில் 'உஜ்ஜா' என்ற சிலை இருந்தது. இதுவே குறைஷிகளுடைய சிலைகளில் மகத்துவம் மிக்கதாக இருந்தது. ஷைபான் கிளையினர் அந்தச் சிலையின் பூசாரிகளாக இருந்தனர். மக்காவில் வெற்றிப் பணிகள் முடிந்து முழு அமைதி நிலவிய பின்பு (ஹிஜ்ரி 8) ரமழான் மாதம் முடிய ஐந்து நாட்கள் மீதமிருக்கும், நபி (ஸல்) காலித் இப்னு வலீதை முப்பது வீரர்களுடன் அந்தச் சிலையை உடைத்தெறிய அனுப்பினார்கள். அதை உடைத்து வந்த காலிதிடம் ''ஏதாவது அங்கு கண்டீர்களா?'' என்று நபி (ஸல்) கேட்க, அவர் ''நான் எதையும் காணவில்லை'' என்றார். ''அப்படியானால் நீ அதனைச் சரியாக உடைக்கவில்லை. திரும்பச் சென்று அதனை உடைத்து வா!'' என்று அனுப்பி வைத்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் இப்பேச்சைக் கேட்டு வெகுண்டெழுந்த காலித் (ரழி) வாளை உருவியவாறு தனது தோழர்களுடன் உஜ்ஜாவை நோக்கி பறந்தார். அச்சிலையருகே சென்றவுடன் தலைவிரி கோலமாக நிர்வாண நிலையில் கருத்த பெண் உருவம் ஒன்று காலிதை நோக்கி வந்தது. அங்குள்ள பூசாரி உஜ்ஜாவின் பெயரைக் கூறி சப்தமிட்டு அழைத்தான். காலித் (ரழி) தன் முன் தோன்றிய அவ்வுருவத்தை இரண்டாகப் பிளந்தார். பின்பு நபியவர்களிடம் திரும்பி வந்து நடந்த நிகழ்ச்சியை விவரித்தார். ''ஆம்! அதுதான் உஜ்ஜா. இனி, உங்கள் ஊர்களில் யாரும் அதனை வணங்குவதிருந்து நிராசையடைந்து விட்டது'' என நபி (ஸல்) நவின்றார்கள்.

2) மக்காவின் வட கிழக்கே 150 கி.மீ. தொலைவில் 'ருஹாத்' என்னுமிடத்தில் ஹுதைல் கிளையினர் வணங்கும் 'சுவா' என்ற சிலை இருந்தது. அதனை உடைக்கும்படி இதே ரமழான் மாதத்தில் அம்ர் இப்னு ஆஸை நபி (ஸல்) அனுப்பினார்கள். அம்ரு சிலையருகே வந்தவுடன் அதன் பூசாரி ''நீ எதற்கு வந்துள்ளாய்?'' என வினவினான். ''இச்சிலையை உடைத்து வர நபி (ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள்'' என அம்ர் பதில் தந்தார். பூசாரி, ''உன்னால் அது முடியாது'' என்று வீராப்பு பேசினான். அம்ரு (ரழி) ''ஏன் முடியாது?'' என்றார். ''உன்னால் அதனை நெருங்கவே முடியாது'' என்றான். ''இன்னுமாடா வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கிறாய்? உனக்கென்ன கேடு? அது கேட்குமா? அதனால் பார்க்கத்தான் முடியுமா?'' என்று கூறியவாறு சிலையருகே வந்து அதனை அம்ருப்னு ஆஸ் (ரழி) உடைத்துத் தள்ளினார். அந்தக் கோயிலையும் அங்குள்ள உண்டியலையும் உடைத்து பார்க்கும்படி தோழர்களுக்குக் கட்டளையிட்டார். ஆயினும் எதுவுமே கிட்டவில்லை. ''இப்பொழுது உன் கருத்து என்ன?'' என பூசாரியிடம் அம்ரு (ரழி) வினவ ''நான் அல்லாஹ்விடம் சரணடைந்தேன். இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன்'' என பூசாரி கூறினார்.

3) 'குதைத்' என்ற ஊரருகே 'முஷல்லல்' என்ற இடத்தில் 'மனாத்' எனும் சிலை இருந்தது. அதனை 'அவ்ஸ்', 'கஸ்ரஜ்', 'கஸ்ஸான்' மற்றும் சில குலத்தவர் வணங்கிக் கொண்டிருந்தனர். அதனை இடித்து வர ஸஅத் இப்னு ஜைத் அஷ்ஹலி (ரழி) என்பவரின் தலைமையில் இருபது பேர் கொண்ட படையை இதே மாதத்தில் நபி (ஸல்) அனுப்பினார்கள். ஸஅது (ரழி) அங்கு சென்றபோது அங்குள்ள பூசாரி ''நீ எந்த நோக்கத்தில் வந்திருக்கின்றாய்?'' என்று வினவ ''மனாத்தை உடைக்க வந்துள்ளேன்'' என்று பதிலளித்தார். ''நீ விரும்பியதைச் செய்து கொள்'' என பூசாரி மறுமொழி கூறினார். ஸஅது அச்சிலையருகே வந்தபோது கருநிற பெண்ணொருத்தி தலைவிரி கோலமாக மார்பில் அடித்துக் கொண்டு வெளியேறி வந்தாள். அதைக் கண்ட பூசாரி ''மனாத்தே! நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்! இதோ உனது எதிரிகள் உன்னை ஒழித்துக் கட்ட வந்து விட்டனர்'' எனக் கூக்குரலிட, ஸஅது (ரழி) அச்சிலையை வெட்டிச் சாய்த்தார். அங்கும் உண்டியல்களில் எதுவும் காணப்படவில்லை.

4) உஜ்ஜா சிலையை உடைத்துவிட்டுத் திரும்பிய காலித் (ரழி) அவர்களுக்கு ஜுதைமா சமூகத்தாரை இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைக்கும் மற்றொரு பணியை நபி (ஸல்) வழங்கினார்கள். அதே ஆண்டு ஷவ்வால் மாதம் 350 தோழர்களுடன் புறப்பட்ட அப்படையில் முஹாஜிர்களும், அன்சாரிகளும், ஸுலைம் கூட்டத்தினரும் கலந்திருந்தனர். ஜுதைமா கூட்டத்தாரை அணுகி இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும்படி கூறியதும் அம்மக்கள் இஸ்லாமை ஏற்று ''முஸ்லிமாக மாறினோம்'' என்று கூறத் தெரியாமல், ''மதம் மாறினோம்'' என்று கூறினர். இதனை தவறாகப் புரிந்து கொண்ட காலித் (ரழி) அவர்களில் சிலரைக் கொன்றுவிட்டு மற்றும் சிலரைச் சிறைபிடித்து ஒவ்வொரு கைதிகளையும் படை வீரர்களிடம் ஒப்படைத்தார்கள். அங்கு தங்கியிருக்கும்போது ஒரு நாள் ''ஒவ்வொரு படைவீரரும் தங்களுடைய கைதிகளைக் கொன்று விடுக'' என காலித் (ரழி) கட்டளை பிறப்பித்தார்கள். அப்படையில் பங்கு கொண்ட மூத்த நபித்தோழர்களான இப்னு உமர் (ரழி) போன்றோர் அங்ஙனம் கொலை புரிவதற்கு மறுத்து விட்டனர். இவ்விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. ''அல்லாஹ்வே! காலித் செய்துவிட்ட இக்காரியத்திலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்'' என இருமுறை வருத்தமாகக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

படையில் கலந்திருந்த ஸுலைம் கூட்டத்தார் மட்டும் தளபதி காலிதின் ஆணைக்கிணங்கி கைதிகளைக் கொன்று விட்டனர். கொல்லப்பட்டவர்களின் சொந்தங்களுக்கு தியத் வழங்குவதற்காக நபி (ஸல்) அலீயை அனுப்பி வைத்தார்கள்.

இப்பிரச்சனையில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபுக்கும் காலிதுக்கும் பேச்சு முற்றிப்போய் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்த நபி (ஸல்), ''காலிதே! கொஞ்சம் பொறுங்கள்! எனது தோழர்களை விட்டுவிடுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உஹுத் மலை தங்கமாக மாறி அதனை முழுவதும் அல்லாஹ்வுடைய பாதையில் நீ செலவு செய்தாலும், அவர்கள் ஒரு காலை அல்லது ஒரு மாலை அல்லாஹ்வின் பாதையில் சென்ற நன்மையை உம்மால் அடைய முடியாது'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இதுவே மக்கா வெற்றியின் சுருக்கமான வரலாறு. இப்போர் முஸ்லிம்களுக்கு நிரந்தர வெற்றியை நிர்ணயித்தது மட்டுமல்ல இம்மாபெரும் போராட்டம் இறைநிராகரிப்புடைய கோட்டையை சுவடு தெரியாமல் நிர்மூலமாக்கியது. அரபு தீபகற்பத்தில் இறைநிராகரிப்பின் வாடையே வீசாமல் அழித்தொழித்து விட்டது. முழு அரபுலகமே முஸ்லிம்களுக்கும் முஷ்ரிக்குகளுக்கும் இடையே நடைபெற்று வந்த போர்களின் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. ஏனெனில், ஹரமை நிச்சயமாக சத்தியவாதிகள் (உண்மையாளர்கள்) மட்டுமே கைப்பற்ற முடியும் என்பதை நன்றாக அறிந்திருந்தனர். கஅபாவை அழிப்பதற்கு யானைப் படையுடன் வந்த அப்ரஹாவும் அவனது படையினரும் அடையாளம் தெரியாது சின்னா பின்னமாகி தின்னப்பட்ட வைக்கோல் போன்று ஆன அவர்களின் வீழ்ச்சி வரலாறு, சத்தியத்தில் உள்ளவர் மட்டுமே கஅபாவை வெற்றி கொள்ள முடியும் என்ற உறுதியான நம்பிக்கையை கடந்த ஐம்பது ஆண்டு காலமாக அவர்களின் உள்ளத்தில் வேரூன்றச் செய்திருந்தது.

இது மட்டுமல்ல! இதற்கு முன் ஏற்பட்ட ஹுதைபிய்யா சமாதான ஒப்பந்தம் மகத்தான மக்கா வெற்றியின் தொடக்கமாக அமைந்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பின் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து பழைய உறவுகளைப் புதுப்பித்து மெருகேற்றிக் கொண்டனர். இஸ்லாமிய மார்க்கத்தை மற்றவருக்கும் எடுத்து விளக்கிக் கூறினர். அதனைப் பற்றி தங்களிடையேயும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். இந்நாள் வரை மக்காவில் திரைமறைவில் இஸ்லாமிய நெறியைக் கடைபிடித்து வாழ்ந்த முஸ்லிம்கள், இஸ்லாமை ஏற்றுக் கொண்டதை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்திக் கொண்டதுடன் மற்றவர்களையும் மார்க்கத்தின் பக்கம் அழைக்க, பெரும்பாலானவர்கள் இஸ்லாமியப் பூங்காவிற்குள் இன்முகத்துடன் நுழைந்தனர். இதுவரை நடந்த போர்களில் முஸ்லிம் படையினர் எண்ணிக்கை மூவாயிரம், நான்காயிரத்தைத் தாண்டாத நிலை. ஆனால், ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் நடந்த மக்கா போரிலோ பத்தாயிரம் வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போர் மக்களின் அறிவுக் கண்களைத் திறந்தது. இஸ்லாமை ஏற்பதற்கு குறுக்கிட்ட தடைக் கல்லைத் தகர்த்தெறிந்தது.

அரபு தீபகற்பத்தில் முழு அளவில் அரபுலகத்தை அரசியல் மற்றும் மார்க்க ரீதியாக தங்களது கட்டுப்பாட்டில் முஸ்லிம்கள் கொண்டு வந்தனர். ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு சாதாகமான சூழ்நிலை இம்மகத்தான வெற்றியால் முழுமை பெற்றது. இதன்பின் ஏற்பட்ட கால நிலைமைகள் அனைத்தும் முஸ்லிம்களுக்கே சாதகமாக அமைந்தன. அங்கு அனைத்தையும் முஸ்லிம்கள் தங்களது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். முஸ்லிம்களின் நற்பண்புகளால் கவரப்பட்ட ஏனைய அரபு வமிசத்தினர், இஸ்லாமில் இணைய ஆர்வம் காட்டினர். அதிலிருந்து தடுத்து வந்த தீய சக்திகளும் அழிந்துவிட்டதால் இஸ்லாமை ஏற்றுக் கொள்வது அவர்களுக்கு இலகுவானது. அவர்களும் நபித்தோழர்களுடன் சேர்ந்து இஸ்லாமைப் பரப்புவதற்காக புறப்பட்டனர். இந்த அழைப்புப் பணிக்காக வரும் ஈராண்டுகளில் அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டது.