ரஹீக் அல் மக்தூம் (முஹம்மத் நபி வரலாறு

Friday, January 23, 2015

[ரஹீக் 006] – அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்

நபி (ஸல்) அவர்கள் தங்களது ஏகத்துவ அழைப்பைத் தொடங்கிய காலகட்டத்தில் அரபிய தீபகற்பத்தில் ஆட்சி செய்தவர்கள் இரு வகையினராக இருந்தனர்.

1) முடிசூட்டப்பட்டவர்கள்: ஆனால் இவர்களில் பலர் தனித்து இயங்கும் சுதந்திரம் பெறவில்லை. மாறாக, ஒரு பேரரசுக்குக் கீழ் கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருந்தனர்.

2) குடும்பம் மற்றும் கோத்திரங்களின் தலைவர்கள்: முடிசூட்டப்பட்ட அரசர்களுக்குரிய தனித்தன்மையும் உரிமையும் இவர்களுக்கும் இருந்தன. இவர்களில் பெரும்பாலோர் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டனர். மற்றும் சிலர் ஏதாவது ஓர் அரசரின் பிரதிநிதியாக செயல்பட்டனர்.

முடியரசர்களின் விபரம் பின்வருமாறு: யமன் நாட்டு அரசர்கள், ஷாம் நாட்டு அரசர்கள், (இவர்களை கஸ்ஸானின் குடும்பத்தவர்கள் என வரலாற்றில் கூறப்படுகிறது) ஹீரா நாட்டு அரசர்கள். இவர்களைத்தவிர வேறு சில அரசர்களும் இருந்தனர். அவர்களுக்கு முறையாக முடிசூட்டப்படவில்லை. இந்த அரசர்கள் மற்றும் தலைவர்கள் பற்றி சுருக்கமாகக் காண்போம்.

அ) யமன் நாடு (ஏமன்)

‘அல் அரபுல் ஆபா’ எனும் அரபியர்கள் ‘ஸபா கூட்டத்தினர்’ என யமனில் புகழ் பெற்றிருந்த மிகப்பழமையானவர்கள். அவர்கள் கி.மு. 25 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்ததாக ‘அவ்ர்’ எனும் நகரில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் சான்றுகள் கிடைத்துள்ளன. கி.மு. 11 ஆம் நூற்றாண்டில் அவர்களது ஆட்சியும் ஆதிக்கமும் செழிப்படைய ஆரம்பித்தது.

அவர்களது காலத்தைப் பின்வருமாறு பிரிக்கலாம்:

1) கி.மு. 1300 லிருந்து கி.மு. 620 வரை

இக்காலகட்டத்தில் அவர்களது நாடு ‘மயீனிய்யா’ என அழைக்கப்பட்டது. நஜ்ரானுக்கும் ஹழர மவ்த்துக்குமிடையே உள்ள ‘ஜவ்ஃப்’ எனும் பகுதியில் அவர்களது ஆட்சி தோன்றி வளர்ச்சி பெற்று ஹிஜாஸின் வட பகுதியான ‘மஆன்’ மற்றும் ‘உலா’ வரை பரவியிருந்தது.

மயீனியா அரசாங்கத்தின் ஆதிக்கம் அரபிய நாடுகளின் எல்லைகளுக்கு வெளியேயும் விரிவடைந்திருந்ததாக கூறப்படுகிறது. வணிகமே அவர்களது முக்கிய வாழ்வாதாரமாகத் திகழ்ந்தது. அவர்கள்தான் மஃரப் நகரில் யமனுடைய வரலாற்றில் புகழ்பெற்ற மிகப்பெரும் அணைக்கட்டைக் கட்டினார்கள். அதனால் அவர்களது நிலங்கள் செழிப்படைந்தன. ஆயினும், அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாமல் பாவங்கள் புரிந்தனர். இதைப்பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

… அவர்கள் (அல்லாஹ்வை) நினைப்பதையே மறந்து (தாங்களாகவே பாவம் செய்து) அழிந்துபோகும் மக்களாகி விட்டார்கள். (அல்குர்ஆன் 25 : 18)

இக்காலக்கட்டத்தில் அவர்களது அரசர்கள் ‘மக்பு ஸபஃ’ எனும் புனைப்பெயரால் அழைக்கப்பட்டனர். அவர்களது தலைநகரம் ஸிர்வாஹ் ஆகும். மஃப் எனும் நகலிருந்து வட மேற்கில் 50 கிலோ மீட்டர் தொலைவிலும் ஸன்ஆவுக்குக் கிழக்கே 142 கிலோ மீட்டர் தொலைவிலும் அந்நகரத்தின் சிதிலங்கள் காணக்கிடைக்கின்றன. அந்நகரம் இன்று ‘குரைபா’ எனும் பெயரில் அறியப்படுகிறது. இவ்வரசர்களின் எண்ணிக்கை 22 லிருந்து 26 வரை இருந்தது.

2) கி.மு. 620லிருந்து கி.மு. 115 வரை

யமன் நாட்டு அரசாட்சி இக்காலக்கட்டத்தில் ‘ஸபா’ என அழைக்கப்பட்டது. இக்காலத்தில் ஆட்சி செய்தவர்கள் ‘மக்ப்’ என்ற தங்களது புனைப் பெயரைத் தவிர்த்து விட்டார்கள். அதன் ஆட்சியாளர்களை ஸபா மன்னர்கள் என அழைக்கப்பட்டது. ‘ஸிர்வா’ என்ற நகருக்கு பதிலாக ‘மஃரப்’ என்ற நகரை தங்களது தலைநகராக்கிக் கொண்டனர். மஃரப் நகரத்தின் சிதைந்த கட்டடங்கள் ‘ஸன்ஆ’ நகரின் கிழக்கே 192 கிலோ மீட்டர் தொலைவில் இன்றும் காணப்படுகின்றன.

3) கி.மு. 115லிருந்து கி.பி. 300 வரை

இக்காலக்கட்டத்தில் அந்நாடு ‘முதலாம் ஹிம்யரிய்யா அரசு’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ஏனெனில், ஹிம்யர் குலத்தவர் ஸபாவை வெற்றி கொண்டு தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். முன்பு அந்நாட்டை ஆட்சி செய்தவர்கள் ‘ஸபா’ அரசர்கள் மற்றும் ‘தூரைதான்’ அரசர்களென அழைக்கப்பட்டனர். இம்மன்னர்கள் ‘மஃரப்’க்கு பதிலாக ரைதான் என்பதை தங்களது தலைநகராக அமைத்துக் கொண்டனர். ரைதான் நகருக்கு ‘ளிஃபார்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. அந்நகரின் சிதைவுகள் ‘யர்யம்’க்கு சமீபமாக மதூர் எனும் மலையின் அருகாமையில் காணப்படுகின்றன. இக்காலத்தில்தான் ஸபா அரசுக்கு அழிவும் வீழ்ச்சியும் ஆரம்பமாயின. அவர்களின் வணிகங்களும் நசிந்தன.

அதற்குரிய காரணங்களாவன: 1) ‘நிப்த்’ இனத்தவர் ஹிஜாஸின் வடபகுதியில் தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்தினர். 2) ரோமர்கள் மிஸ்ர் (எகிப்து), ஷாம் (சிரியா) மற்றும் ஹிஜாஸின் வடபகுதியை ஒட்டியுள்ள நகரங்களில் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்தி யமன் நாட்டு அரசர்களின் வியாபாரத்திற்கான கடல்மார்க்கத்தையும் அடைத்து விட்டனர். 3) அவர்களது கோத்திரங்களுக்குள் சண்டை சச்சரவுகள் தோன்றின. ஆக, இம்மூன்று காரணங்களால் அவர்களது ஆட்சி வீழ்ச்சி கண்டது. மேலும், கஹ்தான் வமிசத்தவர்கள் யமன் நாட்டை துறந்து தூரமான நாடுகளில் குடிபெயர்ந்தனர்.

4) கி.பி. 300லிருந்து இஸ்லாம் நுழையும்வரை

இக்காலக்கட்டத்தில் அந்நாடு ‘இரண்டாம் ஹிம்யரிய்யா அரசு’ என அழைக்கப்பட்டது. அப்போது ஆட்சி செய்தவர்கள் ஸபஃ, தூரைதான், ஹழர மவ்த், யம்னுத் அரசர்கள் என அழைக்கப்பட்டனர். இக்காலத்தில் உள்நாட்டு குழப்பங்கள், குடும்பச் சண்டைகள், புரட்சிகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. அதன் காரணமாக அவர்களது அரசாட்சி முடிவுக்கு வந்தது. இக்காலத்தில் ரோமர்கள் ‘அத்ன்’ நகரைக் கைப்பற்றினர். ஹம்தான் மற்றும் ஹிம்யர் குலத்தவடையே இருந்த போட்டியைப் பயன்படுத்திக் கொண்டு ரோமர்களின் உதவியுடன் ஹபஷியர்கள் முதன் முதலாக கி.பி. 340ல் யமன் நாட்டை கைப்பற்றினர். இவர்களின் ஆட்சி கி.பி. 378 வரை நீடித்தது. அதற்குப்பின் அந்நாடு ஹபஷியர்களின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரமடைந்தது. கி.பி. 450 அல்லது 451ல் மாபெரும் வெள்ளப் பிரளயம் ஏற்பட்டு அவர்களது நகரங்கள் பெருத்த சேதம் அடைந்ததால், நகரங்களைத் துறந்து பல இடங்களுக்குச் சென்று குடியேறினர். இவ்வெள்ளப் பிரளயத்தை ‘சைலுல் அரிம்’ என மேன்மைமிகு குர்ஆன் கூறுகிறது.

கி.பி. 523ம் ஆண்டில் யமன் நாட்டை ஆட்சி செய்த ‘தூ நுவாஸ்’ என்ற யூதக் கொடுங்கோலன் நஜ்ரான் வாழ் கிருஸ்துவர்கள் மீது கொடூரமான தாக்குதலைத் தொடுத்தான். அவர்களை பலவந்தமாக கிருஸ்துவ மதத்திலிருந்து மாற்றிட முனைந்தான். அவர்கள் மறுத்ததன் காரணமாக பெரும் அகழ்களைத் தோண்டி நெருப்புக் குண்டத்தை வளர்த்து, அதனுள் அவர்களை வீசி எறிந்தான். இது குறித்து அல்லாஹ் தனது அருள்மறையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்:

விறகுகள் போட்டு எரிக்கும் நெருப்பு அகழ் தோண்டியவர்கள் அழிக்கப் பட்டார்கள்…. (அல்குர்ஆன் 85 : 4-7)

இச்சம்பவத்தால் கிறிஸ்துவர்கள் மிகவும் கொதிப்படைந்து பழிவாங்கத் துடித்தனர். எனவே, ரோமானிய அரசர்களின் தலைமைக்கு கீழ் ஒன்றிணைந்து யமன் நாட்டின் மீது போர் புரிய ஆயத்தமாயினர்.

ரோம் மன்னர்கள் ஹபஷியர்களைத் தூண்டிவிட்டு அவர்களுக்கென கப்பல் மற்றும் படகுகளைத் தயார்செய்து கொடுத்தார்கள். அதன் காரணமாக ‘அர்யாத்’ என்பவன் தலைமையில் ஹபஷாவிலிருந்து 70,000 வீரர்கள் யமன் வந்திறங்கி கி.பி 525ம் ஆண்டு அதனை இரண்டாவது முறையாக கைப்பற்றினர். அர்யாத் கி.பி 549 வரை ஹபஷா மன்னன் கவர்னராக இருந்தான். அர்யாத்தின் தளபதிகளில் ஒருவனான ‘அப்ரஹா இப்னு ஸப்பாஹ் அல் அஷ்ரம்’ என்பவன் அர்யாதை வஞ்சகமாகக் கொலை செய்துவிட்டு ஹபஷா மன்னன் ஒப்புதலுடன் தன்னை அரசனாக அறிவித்துக் கொண்டான். இந்த அப்ரஹாதான் இறையில்லமான கஅபாவை இடிக்க படையைத் திரட்டியவன். அவனும் அவனது யானைப் படையினரும் ‘அஸ்ஹாபுல் ஃபீல்’ என அறியப்படுகின்றனர். அந்நிகழ்ச்சிக்குப்பின் ஸன்ஆ திரும்பிய அவனை அல்லாஹ் அழித்தொழித்தான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் ‘யக்ஸூம்’ என்பவனும் அதற்குப் பிறகு இரண்டாவது மகன் ‘மஸ்ரூக்’ என்பவனும் யமனை ஆட்சி செய்தனர். இந்த இருவரும் தங்களது தந்தையைவிட குடிமக்களைக் கொடுமை செய்யும் மிகக் கொடிய கொடுங்கோலர்களாக இருந்தனர்.

யானை சம்பவத்திற்குப்பின் கி.பி. 575ல் யமனியர், மஅதீ கப ஸைஃப் இப்னு தூ யஜின் அல்ஹிம்யரின் தலைமையின் கீழ் பாரசீகர்களின் உதவியுடன் யமனை ஆக்கிரமித்திருந்த ஹபஷியர்களை எதிர்த்துப் போரிட்டு அவர்களை யமனிலிருந்து வெளியேற்றி, அதைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவரைத் தங்களது அரசராகவும் ஏற்றுக் கொண்டனர். ‘மஅதீ கப’ தனக்கு ஊழியம் செய்யவும் பயணங்களில் துணையாக இருப்பதற்காகவும் ஒரு ஹபஷிப் படையைத் தன்னுடன் வைத்திருந்தார். அவரை அவர்கள் திடீரெனத் தாக்கி வஞ்சகமாகக் கொன்று விட்டனர். அவரது மரணத்துடன் ‘தூ யஜின்’ குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது.

அதன்பிறகு பாரசீக மன்னர்களின் அதிகாரத்தின் கீழ் யமன் நாடு வந்தது. பாரசீக மன்னர்கள் ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து ஆட்சி செய்தனர். அவர்களில் முதலாமவர் வஹ்ருஜ், பிறகு மிர்ஜ்பான் இப்னு வஹ்ருஜ், பிறகு அவரது மகன் தீன்ஜான், பிறகு குஸ்ரு இப்னு தீன்ஜான், பிறகு பாதான். இவரே பாரசீக மன்னர்களில் இறுதியானவர். இவர் கி.பி. 628ல் இஸ்லாமை ஏற்றார். இத்துடன் யமன் மீதான பாரசீகர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

ஆ) ஹீரா நாடு

இராக்கையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ‘கூரூஷுல் கபீர்’ என்பவன் தலைமையின் கீழ் கி.மு. 557லிருந்து கி.மு. 529 வரை பாரசீகர்கள் ஆட்சி செய்தனர். அவர்களை எவராலும் வீழ்த்த முடியவில்லை. இறுதியாக, பாரசீகர்களின் அரசரான ‘தாரா’ என்பவரை ‘இஸ்கந்தருல் மக்தூனி’ என்பவர் கி.மு. 326ல் தோற்கடித்தார். மேலும் பாரசீகர்களின் ஆதிக்கத்தையும் வலிமையையும் முறியடித்து அவர்களது நகரங்களை சின்னா பின்னமாக்கினார். பிறகு தவாயிஃப் என்ற பெயருடைய அரசர்கள் அந்நாட்டை பல பகுதிகளாகக் பிரித்து கி.பி. 230 வரை ஆட்சி செய்தனர். இவர்களது ஆட்சி காலத்தில் கஹ்தான் கோத்திரத்தினர் இராக்கின் சில கிராம பகுதிகளைக் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து அவர்களுக்குப் போட்டியாக அத்னான் கோத்திரத்தார்களும் ஃபுராத் நதிக்கரையின் சில பகுதிகளில் குடியேறினர்.

இவ்வாறு குடிபெயர்ந்தவர்களில் முதலாவது அரசராக இருந்தவர் கஹ்தான் வமிசத்தை சேர்ந்த ‘மாலிக் இப்னு ஃபஹ்ம் அத்தனூகி’ என்பவராவார். ‘அன்பார்’ அல்லது அதற்கு அருகிலுள்ள பகுதி அவரது ஆட்சியின் தலைமையகமாகத் திகழ்ந்தது. அவருக்குப் பிறகு அவரது சகோதரர் அம்ரு இப்னு ஃபஹ்ம் ஆட்சி செய்தார். சிலர் ‘அப்ரஷ், வழ்ழாஹ்’ என்று அழைக்கப்பட்ட ‘ஜுதைமா இப்னு ஃபஹ்ம்’ என்ற அவரது சகோதரர் ஆட்சி செய்தார் எனக் கூறுகின்றனர்.

கி.பி. 226-ஆம் ஆண்டு ஸாஸானியா அரசை உருவாக்கிய ‘அர்துஷீர் இப்னு பாபக்’ என்ற மன்னன் காலத்தில் இரண்டாவது முறையாக பாரசீகர்கள் இராக் நாட்டை கைப்பற்றினர். அம்மன்னர் பாரசீகர்களை ஒன்றிணைத்து நாட்டின் எல்லைப் புறங்களில் வாழ்ந்து வந்த அரபியர்களை அடக்கி அவர்கள் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார். ஹீரா நாட்டவர்களும் அன்பார் நகரத்தை சேர்ந்தவர்களும் அவருக்குக் கீழ்ப்படிந்தார்கள். ஆனால், குழாஆ கோத்திரத்தினர் தங்களது ஊர்களைத் துறந்து ஷாம் நாட்டுக்கு குடிபெயர்ந்தனர்.

அர்தஷீருடைய காலத்தில் ஹீரா மற்றும் இராக்கில் வாழ்ந்த கிராமத்தவர்கள் மற்றும் அரபிய தீபகற்பத்தில் வாழ்ந்த ரபீஆ, முழர் ஆகியோர் மீது ‘ஜுதைமத்துல் வழ்ழாஹ்’ என்பவர் ஆதிக்கம் செலுத்தினார். அதாவது அரபியர்கள் மீது நேரடியாக ஆட்சி செய்வதும் அவர்களின் தாக்குதல்களிலிருந்து தனது நாட்டைக் காப்பதும் அர்தஷீருக்கு மிகுந்த சிரமமாகத் தோன்றியது. ஆகவே, அரபியர்களிலேயே ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை அரசராக்கினால் அவர் தனக்கு உறுதுணையாகவும் உதவியாகவும் அமைவார் என எண்ணினார். மேலும், தன்னை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ரோமர்களை எதிர்கொள்ள அந்த அரபிகளின் உதவியைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமெனவும் திட்டமிட்டார். அதுமட்டுமின்றி ரோமர்களுக்கு உதவி செய்துவரும் ஷாம் நாட்டு அரபியர்களை இராக்கின் அரபியர்களை கொண்டு தடுக்க நாடினார். ஆகவேதான் அரபியராகிய ஜுதைமாவை மேற்கூறிய பகுதிகளுக்கு அர்தஷீர் அரசராக்கினார். தனது ஆட்சியை எதிர்க்கும் அரபிய பழங்குடி மக்களை அடக்கி வைக்க ஜுதைமாவுக்கு பாரசீக ராணுவப்படை ஒன்றையும் அவர் வழங்கினார். ஜுதைமா கி.பி. 268-ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

ஜுதைமா மரணமான பின்பு, அதாவது மன்னர் ‘கிஸ்ரா ஸாபூர் இப்னு அர்தஷீருடைய’ ஆட்சிக் காலத்தில் அம்ரு இப்னு அதீ இப்னு நஸ்ர் அல்லக்மி கி.பி. 268 முதல் 288 வரை ஹீராவையும் அன்பாரையும் ஆட்சி செய்தார். லக்ம் கோத்திர அரசர்களிலும் ஹீராவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்களிலும் இவரே முதன்மையானவர். இவரையடுத்து லக்ம் கோத்திர அரசர்கள் பலர் தொடர்ந்து ஹீராவை ஆண்டு வந்தனர். இறுதியாக (கி.பி. 448 முதல் 531 வரை) ‘குபாத் இப்னு ஃபைரோஜ்’ பாரசீக மன்னரானார். இவரது ஆட்சியின்போது ‘மஜ்தக்’ என்பவன் தோன்றி முறையற்ற பாலியல் உறவின் பக்கம் மக்களை அழைத்தான். மன்னர் குபாத் மற்றும் அவனது குடிமக்களில் அதிகமானவர்கள் அவனை பின்பற்றினர். பிறகு குபாத், ஹீராவின் மன்னரான முன்திர் இப்னு மாவுஸ் ஸமாவை (கி.பி. 512-554) இழிவான இவ்வழிமுறையை ஏற்குமாறு அழைத்தான். அவர் அதை முற்றிலுமாக மறுத்துவிட்டார். அதனால் அவரை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக மஜ்தக்கின் வழியை பின்பற்றிய ‘ஹாஸ் இப்னு அம்ர் இப்னு ஹஜர் அல் கின்தீ’ என்பவனை அரசனாக்கினான்.

குபாதுக்குப் பிறகு ‘அனூஷேர்வான்’ (கி.பி. 531-578) என்பவர் மன்னரானார். இவர் இந்த தவறான வழியை முற்றிலும் வெறுத்தார். மஜ்தக் மற்றும் அவனது வழியை பின்பற்றியவர்களைக் கொலை செய்தார். ஹாஸ் இப்னு அம்ரை நீக்கிவிட்டு மீண்டும் முன்திரை ஹீராவின் அரசராக்கினார். ஹாஸ் இப்னு அம்ரை கைது செய்ய முயன்றபோது அவன் ‘கல்பு’ கோத்திரத்தாரிடம் சென்று அடைக்கலமாகி மரணம் வரை அங்கேயே தங்கிவிட்டான். முன்திர் இப்னு மாவுஸ் ஸமாவுக்குப் பிறகும் அவரது குடும்பத்தாரிடமே ஆட்சி இருந்தது. அவரது மகன் நுஃமான் இப்னு முன்திர் கி.பி. 583 லிருந்து 605 வரை ஆட்சி செய்தார். அப்போது ‘ஜைது இப்னு அதீ’ என்பவன் கூறிய தவறான தகவலால் நுஃமான் மீது கோபமடைந்து அவரைத் தேடிவர கிஸ்ரா வீரர்களை அனுப்பி வைத்தார். நுஃமான் ரகசியமாக வெளியேறி ஷைபான் கோத்திரத்தின் தலைவரான ஹானி இப்னு மஸ்வூதிடம் அடைக்கலம் பெற்று அவரிடம் தனது குடும்பத்தினரையும் செல்வங்களையும் ஒப்படைத்துவிட்டு கிஸ்ராவிடம் திரும்பினார். கிஸ்ரா அவரை மரணமடையும் வரை சிறையில் அடைத்தார்.

அதன்பிறகு நுஃமானுக்குப் பதிலாக ‘இயாஸ் இப்னு கபீஸா அத்தாம்’ என்பவரை ஹீராவின் அரசராக்கினார். ஹானி இப்னு மஸ்வூதிடம் நுஃமான் கொடுத்து வைத்திருந்ததை மீட்டு வருமாறு, இயாஸுக்கு கிஸ்ரா உத்தரவிட்டார். கிஸ்ராவின் உத்தரவிற்கிணங்க இயாஸ் சிலரை ஹானியிடம் அனுப்பியபோது ஹானி, நுஃமானின் அமானிதத்தை தர முற்றிலும் மறுத்துவிட்டு கிஸ்ராவுடன் போரை பிரகடனப்படுத்தினார். அதைக் கண்ட இயாஸ் தன்னிடமிருந்த கிஸ்ராவின் படை பட்டாளங்களை அழைத்துக் கொண்டு ஹானியிடம் போர் புரிய பயணமானார். ‘தீ கார்’ என்னுமிடத்தில் இரு படைகளுக்குமிடையே மிகக் கடுமையான போர் நடந்தது. இறுதியில் ஷைபான் கோத்திரத்தினர் வெற்றிபெற்றனர். பாரசீகர்கள் படுதோல்வி அடைந்தனர். இதுவே அரபியர்கள் அரபியரல்லாதவர்கள் மீது கொண்ட முதல் வெற்றியாகும். இந்நிகழ்ச்சி நபி (ஸல்) அவர்கள் பிறந்த பிறகு நடைபெற்றது.

இப்போர் நடைபெற்ற காலம் குறித்து வரலாற்று ஆசிரியர்களுக்கிடையே மாறுபட்ட பல கருத்துகள் இருக்கின்றன.

1) நபி (ஸல்) அவர்கள் பிறந்த சிறிது காலத்திலேயே இப்போர் நடைபெற்றது ஹீராவிற்கு இயாஸ் இப்னு கபீஸா கவர்னராகப் பொறுப்பேற்ற எட்டாவது மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள் என்று சிலர் கூறுகின்றனர்.

2) நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்குச் சிறிது காலத்திற்கு முன்னால் இப்போர் நிகழ்ந்தது என்று சிலர் கூறுகின்றனர். இதுவே ஏற்கத்தக்கது.

3) நபித்துவம் கிடைக்கப் பெற்றதற்கு சிறிது காலத்திற்கு பிறகு இப்போர் நிகழ்ந்தது என்று சிலர் கூறுகின்றனர்.

4) நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்றதற்கு பிறகு இப்போர் நிகழ்ந்தது என்றும் சிலர் கூறுகின்றனர்.

5) பத்ர் யுத்தத்திற்குப் பிறகு இப்போர் நடைபெற்றது என்றும் சிலர் கூறுகின்றனர். மற்றும் பல கருத்துக்களும் கூறப்படுகின்றன.

இயாஸுக்குப் பிறகு ‘ஆஜாதிபா இப்னு மாஹ்பியான் இப்னு மஹ்ரா பந்தாத்’ என்ற பாரசீகரை ஹீராவின் கவர்னராக கிஸ்ரா நியமித்தார். அவர் பதினேழு ஆண்டுகள் (கி.பி. 614-631) ஆட்சி செய்தார். பிறகு கி.பி. 632ல் ‘லக்ம்’ கோத்திரத்தார்களிடம் ஆட்சி திரும்பியது. அவர்களில் ‘மஃரூர்’ என்றழைக்கப்பட்ட முன்திர் இப்னு நுஃமான் என்பவர் ஆட்சி பொறுப்பேற்றார். எனினும், அவரது ஆட்சி எட்டு மாதங்களே நீடித்தது. காலித் இப்னு வலீத் (ரழி) முஸ்லிம்களின் படையுடன் சென்று அந்நாட்டை வெற்றி கொண்டார்கள்.

இ) ஷாம் நாடு (ஸிரியா)

அரபியர்கள் பல்வேறு பகுதிகளுக்கும் குடிபெயர்ந்து கொண்டிருந்த காலத்தில் குழாஆ கோத்திரத்தின் ‘பனூ ஸுலைஹ் இப்னு ஹுல்வான்’ குடும்பத்தினர் ஷாம் நாட்டின் ‘மஷாஃப்’ என்ற பகுதிகளில் குடியேறினர். ‘ழஜாம்மா’ எனப் பிரபலமடைந்த ‘ழஜ்அம் இப்னு ஸலீஹ்’ என்ற பிரிவினர் மேற்கூறப்பட்ட பனூ ஸுலைஹ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பாலைவனங்களில் வழிப்பறி செய்து கொண்டிருந்த கிராமத்து அரபியர்களைத் தடுக்கவும், பாரசீகர்களை எதிர்க்கவும் ழஜாம்மாக்களை ரோமர்கள் பயன்படுத்தினர். அதற்காக அவர்களில் ஒருவருக்கு அரச பதவியும் வழங்கினர். பல ஆண்டுகள் இவர்களது குடும்ப ஆட்சி தொடர்ந்தது. இவர்களில் ‘ஜியாது இப்னு ஹபூலா’ என்பவர் புகழ்பெற்ற அரசராவார்.

ழஜாம்மாவினன் ஆட்சிக் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து அதன் இறுதிவரை நீடித்தது. அதற்கு பிறகு கஸ்ஸானியர், ழஜாம்மாவினர் மீது போர் தொடுத்து ஆட்சியைக் கைப்பற்றினர். இதைக் கண்ட ரோமர்கள் ஷாம் நாட்டு அரபியர்களுக்கு கஸ்ஸானியர்களை அரசர்களாக நியமித்தனர். இவர்களது தலைநகரமாக புஸ்ரா விளங்கியது. ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு யர்மூக் போர் நடைபெறும் வரை கஸ்ஸானியர்கள் ரோமர்களின் கவர்னர்களாகவே ஷாம் நாட்டில் ஆட்சி செய்தனர். அந்தக் கவர்னர்களில் இறுதியானவரான ‘ஜபலா இப்னு அய்ஹம்’ என்பவர் அமீருல் முஃமினீன் உமர் (ரழி) அவர்களின் காலத்தில் முஸ்லிம்களுக்கு அடிபணிந்தார். (இது குறித்த மேல் விவரங்களை தபரி, இப்னு கல்தூன், மஸ்ஊதி, இப்னு குதைபா, இப்னுல் அஸீர் ஆகிய நூல்களில் காணலாம்.)

ஈ) ஹிஜாஸ் பகுதியில் அதிகாரம்

இஸ்மாயீல் (அலை) அவர்கள் தங்களின் வாழ்நாள் வரை மக்கா நகரின் தலைவராகவும் இறையில்லமான கஅபாவின் நிர்வாகியாகவும் இருந்தார்கள். அவர்கள் 137வது வயதில் மரணமடைந்தார்கள். (ஸிஃப்ருத் தக்வீன், தபரி)

இஸ்மாயீல் (அலை) அவர்கள் 130வது வயதில் மரணமானார்கள் என்ற ஒரு கூற்றும் கூறப்படுகிறது. (தபரி, யாகூபி)

இஸ்மாயீல் (அலை) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்களுடைய பிள்ளைகளில் ஒருவர் மக்காவை நிர்வகித்தார் என்றும், சிலர் முதலாவதாக நாபித் பிறகு கைதார் என இருவரும் நிர்வகித்தனர் என்றும் கூறுகின்றனர். அவர்களுக்குப் பின் அவ்விருவரின் தாய்வழி பாட்டனாரான முழாழ் இப்னு அம்ர் ஜுர்ஹுமி தலைவரானார். இவ்வாறு இஸ்மாயீல் (அலை) அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து ஜுர்ஹும் கோத்திரத்துக்கு தலைமைத்துவம் மாறியது. ஆனால், இஸ்மாயீல் (அலை) அவர்கள் தங்களது தந்தையுடன் இறையாலயத்தை கட்டியவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் பரம்பரையினருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது. எனினும் தலைமைத்துவம் மற்றும் அதிகாரத்தில் அவர்களுக்கு எவ்விதப் பங்கும் இருக்கவில்லை. (இப்னு ஹிஷாம்)

நாட்கள் நகர்ந்தன. காலங்கள் கடந்தன. இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய சந்ததிகளின் நிலைமைகளை எடுத்துக் கூறுமளவுக்கு பெரிதாக இல்லை. ‘புக்த் நஸ்ர்’ என்ற மன்னன் தோன்றுவதற்குச் சிறிது காலம் முன்பு ஜுர்ஹும் கோத்திரத்தினர் முற்றிலும் நலிந்துவிட்டனர். அக்காலத்தில் மக்காவில் அத்னான் வமிசத்தவன் அரசியல் ஆதிக்கம் வளரத் தொடங்கியது. புக்துநஸ்ருக்கும் அரபியர்களுக்குமிடையே ‘தாத் இர்க்’ என்ற இடத்தில் நடைபெற்ற போரில் அரபியப் படையின் தளபதியாக ஜுர்ஹும் கோத்திரத்தினர் இருக்கவில்லை. மாறாக, இப்படைக்கு அத்னான் தளபதியாக இருந்தார். (தபரி)

பிறகு புக்து நஸ்ர் கி.பி. 587ல் இரண்டாவது முறையாக போர் தொடுத்தபோது அத்னானியர்கள் யமன் நாட்டுக்குத் தப்பிச் சென்றனர். அச்சந்தர்ப்பத்தில் இஸ்ரவேலர்களின் நபியான ‘யர்மியாஹ்’ அவர்களின் தோழர் ‘பர்கியா’ என்பவர் அத்னானின் மகன் ‘மஅத்’தை ஷாம் நாட்டிலுள்ள ஹர்ரான் நகருக்கு அழைத்துச் சென்றார். புக்து நஸ்ருடைய காலத்துக்குப் பின் மஅத் மக்கா திரும்பினார். அங்கு ஜுர்ஹும் கோத்திரத்தில் ‘ஜவ்ஷம் இப்னு ஜுல்ஹுமா’ என்பவர் மட்டுமே மீதமிருந்தார். அவரது மகளை மஅத் மணந்து கொண்டார். இருவருக்கும் நஜார் என்பவர் பிறந்தார். (தபரி, ஃபத்ஹுல் பாரி)

ஜுர்ஹும் கோத்திரத்தினரின் நிலைமை மக்காவில் மிக மோசமடைந்து, பொருளாதார நெருக்கடிக்கு ஆளாயினர். கஅபாவை தரிசிக்க வந்தவர்களை இம்சித்து கஅபாவின் செல்வங்களையும் சூறையாடினர். (தபரி)

இச்செயல் அத்னானியர்களுக்கு மிகுந்த வெறுப்பை உண்டாக்கியது. குஜாஆ கோத்திரத்தினர் மக்காவுக்கு அருகிலுள்ள ‘மர்ருள் ளஹ்ரான்’ என்ற இடத்தில் குடியேறியபோது ஜுர்ஹும் கோத்திரத்தினர் மீது அத்னானியர்கள் கொண்டிருந்த வெறுப்பை பயன்படுத்திக் கொண்டனர். அத்னானியர்களின் ஒரு பிரிவினரான ‘பனூ பக்ரு இப்னு அப்து மனாஃப்’ குடும்பத்தாரின் உதவியுடன் குஜாஆவினர் ஜுர்ஹும் கோத்திரத்தார் மீது போர் தொடுத்து, அவர்களை மக்காவிலிருந்து வெளியேற்றி, அதைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பாதிவரை அவர்களது ஆட்சியே மக்காவில் நீடித்தது.

ஜுர்ஹும் கூட்டத்தினர் மக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டபோது ஜம்ஜம் கிணற்றை அடையாளம் தெரியாத வகையில் பல பொருள்களைப் போட்டு நிரப்பி மறைத்து விட்டனர். வரலாற்றாசிரியரான இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்:

‘அம்ர் இப்னு ஹாஸ் இப்னு முழாழ் ஜுர்ஹுமீ’ என்பவர் கஅபாவிலிருந்த இரண்டு தங்க மான் சிலைகளையும், அஸ்வத் கல்லையும் ஜம்ஜம் கிணற்றினுள் போட்டு மூடிவிட்டார். அவரும் அவரைச் சேர்ந்த ஜுர்ஹும் கோத்திரத்தாரும் யமன் நாட்டுக்குச் சென்று குடியேறினர். மக்காவை விட்டுப் பிரிந்ததையும் அதன் அதிகாரம் கை நழுவிப் போனதையும் எண்ணி அவர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.

இது குறித்து அம்ர் இக்கவிதையை பாடினார்:

ஹஜூன், ஸஃபா இடையே நேசருமில்லை

மக்காவில் இராக்கதை பேசுபவரும் இல்லை

மாறாக, நாங்களே அங்கு வசித்து வந்தோம்;

ஆனால் எங்களை காலங்களின் மாற்றங்களும்

ஆபத்து நிறைந்த விதிகளும் அழித்துவிட்டன. (இப்னு ஹிஷாம், தபரி)

நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலம் நபி ஈஸா (அலை) அவர்களது பிறப்புக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாகும். ஜுர்ஹும் கோத்திரத்தினர் ஏறக்குறைய இரண்டாயிரத்து நூறு ஆண்டுகள் மக்காவில் வசித்து அதனை ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்கள் தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர்.

குஜாஆவினர் மக்காவைக் கைப்பற்றிய பிறகு பக்ர் கோத்திரத்தாரை இணைத்துக் கொள்ளாமல் தனியாகவே தங்களது ஆட்சியை நிறுவிக் கொண்டனர். எனினும், பக்ர் கோத்திரத்தை சேர்ந்த முழர் குடும்பத்தாருக்கு மட்டும் மூன்று பொறுப்புகள் கிட்டின.

முதலாவது: ஹஜ்ஜுக்கு வருபவர்களை அரஃபாவிலிருந்து முஜ்தலிஃபாவுக்கு அழைத்து வருவது மற்றும் ஹஜ்ஜின் கடைசி தினமான 13வது நாளன்று மினாவிலிருந்து பயணமாவதற்கு அனுமதியளித்தல்.

இப்பொறுப்புகள் இல்யாஸ் இப்னு முழர் வமிசத்தில் அல் கவ்ஸ் இப்னு முர்ரா குடும்பத்தாருக்குக் கிட்டின. இவர்கள் ‘ஸூஃபா’ என அழைக்கப்பட்டனர். இவர்களது சிறப்பு என்னவெனில், ஸூஃபாவைச் சேர்ந்த ஒருவர் அகபாவில் கல் எறியாதவரை வேறு யாரும் எறியமாட்டார்கள். மக்கள் கல்லெறிந்து முடித்து மினாவிலிருந்து வெளியேறுவதாயிருந்தால் கணவாயின் இருபுறங்களையும் ஸூஃபாவினர் மூடிவிடுவார்கள். அவர்கள் முதலில் வெளியேறிச் சென்ற பிறகே மற்றவர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். ஸூஃபாவினர் இறந்துவிட்ட பிறகு தமீம் கிளையைச் சேர்ந்த ஸஅது இப்னு ஜைது மனாத் குடும்பத்தினருக்கு இப்பொறுப்பு கிடைத்தது.

இரண்டாவது: துல்ஹஜ் பிறையின் 10ஆம் நாள் முஜ்தலிஃபாவிலிருந்து மினாவுக்கு மக்களை அழைத்துச் செல்லும் பொறுப்பு அத்வான் குடும்பத்தார்களிடம் இருந்தது.

மூன்றாவது: (போர் புரிய தடை செய்யப்பட்ட) புனித மாதங்களை சூழ்நிலைக்கேற்ப முன் பின்னாக மாற்றிக் கொள்ளும் அதிகாரம், ‘ஃபுகைம் இப்னு அதீ’ என்ற கினானா குடும்பத்தாரிடம் இருந்தது. (இப்னு ஹிஷாம்)

குஜாஆவினரின் ஆதிக்கம் மக்காவில் முன்னூறு ஆண்டுகள் இருந்தது. (யாகூத், ஃபத்ஹுல் பாரி)

இவர்களின் காலத்தில் அத்னான் வமிசத்தைச் சேர்ந்தவர்கள் நஜ்த், இராக், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சென்று குடியேறினர். மக்காவில் குறைஷியைச் சேர்ந்த சில குடும்பத்தார்கள் மட்டும் ஆங்காங்கே பிரிந்து வாழ்ந்தனர். அவர்களுக்கு மக்கா மற்றும் புனித கஅபாவின் அதிகாரம் எதுவும் இருக்கவில்லை. இந்நிலையில் ‘குஸய் இப்னு கிலாப்’ என்பவர் குறைஷியர்களில் தோன்றினார். (இப்னு ஹிஷாம்)

குஸய்யின் சுருக்கமான வரலாறு

‘குஸய்யின்’ சிறு வயதிலேயே அவரது தந்தை மரணமாகிவிட்டார். அவரது தாயை உத்ரா குடும்பத்தைச் சேர்ந்த ‘ரபீஆ இப்னு ஹராம்’ என்பவர் மணமுடித்தார். அவர் தனது மனைவியையும் குஸய்யையும் ஷாம் நாட்டிலுள்ள தனது ஊருக்கு அழைத்து வந்தார். குஸய் வாலிபராகி மக்கா திரும்பினார். அந்நேரத்தில் மக்காவின் நிர்வாகியாக குஜாஆ கோத்திரத்தைச் சேர்ந்த ‘ஹுலைல் இப்னு ஹப்ஷிய்யா’ என்பவர் இருந்தார். ஹுலைலின் மகள் ‘ஹுப்பா’ என்பவரை குஸய் மணமுடித்தார். (இப்னு ஹிஷாம்)

சில நாட்களுக்குப் பிறகு ஹுலைல் காலமானார். அப்போது குஜாஆ மற்றும் குறைஷியருக்கிடையில் சண்டை மூண்டது. இதில் குஸய்யும் அவரைச் சேர்ந்தவர்களும் மக்காவின் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

இச்சண்டை மூண்டதற்குரிய காரணங்களைப் பற்றி மூன்று கருத்துக்கள் கூறப்படுகின்றன.

1) குஸய் மக்காவில் நன்கு புகழ்பெற்றார். அவரது செல்வங்களும் குடும்பங்களும் பெருகின. தனது மாமனார் ஹுலைல் மரணமான பிறகு குஜாஆ மற்றும் பக்ர் கோத்திரத்தாரை விட தானே கஅபாவையும் மக்காவையும் நிர்வகிப்பதற்குத் தகுதியானவர்; அதுமட்டுமின்றி, குறைஷியர்தான் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் தலைமைத்துவம் மிக்கவர்கள் என எண்ணினார். ஆகவே, குஜாஆ மற்றும் பக்ர் கோத்திரத்தாரை மக்காவிலிருந்து வெளியேற்றுவதற்கு கினானா மற்றும் குறைஷி கோத்திரத்தாரிடம் குஸய்ம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களும் அதை ஒப்புக்கொள்ளவே இவர்கள் அவர்கள் மீது போர் தொடுத்தனர்.

2) கஅபா மற்றும் மக்காவை நிர்வகிக்க வேண்டும் என குஸய்ம்க்கு ஹுலைல் தனது மரண நேரத்தில் கட்டளையிட்டார். ஆனால் அதற்கு குஜாஆவினர் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இரு தரப்பினடையே போர் மூண்டது.

3) ஹுலைல் தனது மகள் ஹுப்பாவிற்கு கஅபாவை நிர்வகிக்கும் அதிகாரத்தை வழங்கினார். அவள் சார்பாக அப்பொறுப்பை நிறைவேற்றுவதற்கு குஜாஆ வமிசத்தைச் சேர்ந்த ‘அபூ குபுஷான்’ என்பவரை குஸய் நியமித்தார். அவர் ஹுப்பாவுக்கு பதிலாக கஅபாவை நிர்வகித்து வந்தார். அவர் சற்று புத்தி சுவாதீனமற்றவராக இருந்தார். ஹுலைல் மரணமடைந்த பிறகு குஸய் அபூ குபுஷானுக்கு சில ஒட்டகங்கள் அல்லது சில மதுப் பீப்பாய்கள் கொடுத்து கஅபாவின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். இதை குஜாஆவினர் ஒப்புக் கொள்ளவில்லை. குஸய் கஅபாவை நிர்வகிக்கக்கூடாது என தடுத்தனர். இதனால் குஸய் மக்காவிலிருந்து குஜாஆவினரை வெளியேற்றுவதற்காக குறைஷி மற்றும் கினானா கோத்திரத்தினரின் உதவியை நாடினார். அவர்களும் அதற்கிணங்கியதால் இரு தரப்பினருக்கிடையே போர் மூண்டது. (ஃபத்ஹுல் பாரி, மஸ்வூதி)

காரணங்கள் எதுவாக இருப்பினும் நிகழ்வுகள் பின்வருமாறு அமைந்தன:

ஹுலைல் மரணமடைந்த பிறகும் ஸூஃபாக்கள் தங்களின் மேற்கூறப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றி வந்தனர். ஒருநாள் குறைஷி மற்றும் கினானா கோத்திரத்தினரை குஸய் தன்னுடன் அழைத்துக் கொண்டு ‘ஸூஃபா’க்கள் கூடியிருந்த கணவாய்க்கு வந்து ”இந்த பொறுப்புக்கு உங்களைவிட நாங்களே அதிக உரிமையுள்ளவர்கள்” என்று கூறினார். இரு பிரிவினருக்கும் இடையில் வாய் சண்டை மூண்டு கைகலப்பு ஏற்பட்டது. இறுதியில் ஸூஃபாக்களை தோற்கடித்து குஸய் விரட்டிவிட்டார். இது குஜாஆ மற்றும் பக்ர் கோத்திரத்தாருக்கு பிடிக்காததால் குஸய்யிடமிருந்து விலகிச் சென்றார்கள். இதையறிந்த குஸய் அவர்களுக்கு எதிராகப் படையைத் திரட்டி அவர்கள் மீது போர் தொடுத்தார். இரு பிரிவினருக்குமிடையே மிகக் கடுமையான போர் மூண்டு இருதரப்பிலும் பெருத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டது. ஒரு வழியாக இரு தரப்பினரும் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள முன்வந்தனர். அவ்வுடன்படிக்கைக்கு பக்ர் கோத்திரத்தைச் சேர்ந்த ‘யஃமுர் இப்னு அவ்ஃப்’ என்பவரைத் தலைவராக்கினர்.

”மக்காவை ஆட்சி செய்யவும், கஅபாவை நிர்வகிக்கவும் குஜாஆ கோத்திரத்தாரைவிட குஸய்ம்க்கே அதிக தகுதி உண்டு குஸய்யினால் ஏற்பட்ட அனைத்து கொலைகளும் மன்னிக்கப்பட்டவை அவ்வாறே குஜாஆ மற்றும் பக்ர் கோத்திரத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு அவர்கள் நஷ்டஈடு வழங்க வேண்டும். கஅபாவின் நிர்வாகத்தை குஸய்யிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று யஃமூர் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பின் காரணமாக அவருக்கு ‘ஷத்தாக் – அநீதத்தைத் தகர்த்தவர்’ என்ற புனைப்பெயர் வந்தது. (இப்னு ஹிஷாம்)

ஆக, குஜாஆவினர் கஅபாவை நிர்வகித்த காலம் 300 ஆண்டுகளாகும். கி.பி. 5ஆம் நூற்றாண்டின் மத்தியில் அதாவது கி.பி. 440ல் குஸய் மக்காவையும் கஅபாவையும் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவந்தார். (ஃபத்ஹுல் பாரி)

இதன் காரணமாக மக்கா நகரின் முழு தலைமைத்துவம் குஸய்ம்க்கும், அவருக்குப் பின்னர் குறைஷி கோத்திரத்தாருக்கும் கிடைத்தது. அரபிய தீர்பகற்பத்தின் பல பகுதிகளிலிருந்து அரபியர் தரிசிக்க வரும் கஅபாவின் மதத் தலைவராக குஸய் விளங்கினார்.

அதன்பிறகு பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த குறைஷி கோத்திரத்தாரை மக்காவுக்கு வரவழைத்து ஒவ்வொரு குறைஷி குடும்பத்துக்கும் இடங்களைப் பிரித்துக் கொடுத்து அவர்களது வாழ்க்கை வசதிகளைக் குஸய் மேம்படுத்திக் கொடுத்தார். அவ்வாறே ஆலு ஸஃப்வான், பனூ அத்வான், முர்ரா இப்னு அவ்ஃப் போன்றோருக்கு அவர்களிடம் இருந்த பொறுப்பை அவர்களுக்கே வழங்கினார். புனித மாதங்களை தங்களது வசதிக்கேற்ப முன்பின்னாக மாற்றியமைத்துக் கொள்ளும் வழக்கத்தை அவரும் பின்பற்றினார். ஏனெனில், இவ்வாறான சடங்குகள் அனைத்தும் மாற்றத்தகாத மார்க்க சடங்குகள் என அவர் நம்பியிருந்தார். (இப்னு ஹிஷாம்)

குறைஷியர்களுக்காக கஅபாவின் வடக்குப் பகுதியில் ‘தாருந் நத்வா’ எனும் ஒரு சங்கத்தை நிறுவியது குஸய் செய்த நற்செயல்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. அது குறைஷியர்கள் ஒன்று சேர்ந்து அவர்களின் பிரச்சனைகளை விவாதித்துத் தீர்வு காணுமிடமாகவும், அவர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் மன்றமாகவும் விளங்கியதால், அவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. அதனுடைய வாசல் கஅபாவை நோக்கி அமைந்திருந்தது. (இப்னு ஹிஷாம், இக்பாருல் கிராம் பி அக்பால் மஸ்ஜிதில் ஹராம்)

குஸய்யின் சாதனைகள்

1) தாருந் நத்வாவின் தலைமை

குறைஷியர்கள் தங்களுக்கு நிகழும் முக்கியப் பிரச்சனைகள் குறித்து இங்கு தான் ஆலோசனை நடத்துவார்கள். மேலும், தங்களின் பெண் பிள்ளைகளுக்கு இதனைத் திருமண மண்டபமாக பயன்படுத்தினார்கள். இந்த தாருந் நத்வாவின் தலைவராக குஸய் விளங்கினார்.

2) கொடி

பிற சமுதாயத்துடன் போர் செய்வதாக இருந்தால் அதற்கான சிறிய அல்லது பெரியகொடி, குஸய் அல்லது அவரது பிள்ளைகளின் கரத்தில் கொடுக்கப்பட்டு தாருந் நத்வாவில் நடப்படும்.

3) வழிநடத்துதல்

மக்காவிலிருந்து வியாபாரம் அல்லது வேறு நோக்கங்களுக்காக வெளியில் செல்லும் பயணக் கூட்டங்களுக்கு குஸய் அல்லது அவரது பிள்ளைகளில் ஒருவர் தலைமை வகிப்பார்.

4) கஅபாவை நிர்வகித்தல்

கஅபாவின் வாயிலைத் திறப்பது, மூடுவது, பராமரிப்பது, வழிபாடுகள் நடத்துவது அனைத்தையும் குஸய் மேற்கொள்வார்.

5) ஹாஜிகளின் தாகம் தீர்த்தல்

தொட்டிகளில் நீரை நிரப்பி அதில் உலர்ந்த திராட்சை மற்றும் பேரீத்தம் பழங்களைப் போட்டு சுவையூட்டி அந்த மதுரமான நீரை மக்கா வருபவர்களுக்கு குஸய் குடிக்க வழங்குவார்.

6) ஹாஜிகளுக்கு விருந்தளித்தல்

குறைஷியர்களிடம் ஹஜ்ஜுடைய காலங்களில் வரி வசூலித்து அதன்மூலம் ஹாஜிகளுக்கு குஸய் விருந்தோம்பல் புரிவார். இவ்விருந்தில் வசதியற்ற ஹஜ் பயணிகள் கலந்துகொள்வார்கள். (இப்னு ஹிஷாம், யஃகூபி)

இவை அனைத்தும் குஸய்ம்க்கு அமைந்திருந்த சிறப்புகளாகும். அவரது பிள்ளைகளில் அப்துத்தார் என்பவர் மூத்தவராக இருந்தார். ஆனால், அவரை விட இளையவரான அப்து மனாஃப் மக்களிடையே மிகுந்த செல்வாக்கும் மரியாதையும் உடையவராகத் திகழ்ந்தார். இது அப்துத்தாருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்துத்தாரை குஸய் அழைத்து ”மக்கள் உன்னைவிட உனது சகோதரனை எவ்வளவுதான் உயர்வாக்கினாலும் நான் உன்னையே அவர்களுக்குத் தலைவராக்குவேன்” என்று கூறி தன்னிடமுள்ள அனைத்து சிறப்புகளையும் பொறுப்புகளையும் அப்துத்தாருக்கே தரவேண்டுமென உயில் எழுதினார். குஸய்யின் எந்த முடிவுக்கும் மக்கள் மாறுசெய்ய மாட்டார்கள். அவர் வாழும்போதும், மரணத்துக்குப் பின்னும் அவரது கட்டளையைப் பின்பற்றுவதே மார்க்கம் என அனைவரும் கருதினர்.

அவரது மரணத்திற்குப் பின் அவரது பிள்ளைகள் தந்தை செய்த மரணநேர கட்டளைப்படி எவ்வித கருத்து வேறுபாடுமின்றி பொறுப்புகளை நிறைவேற்றினர். அப்து மனாஃபின் மரணத்திற்குப் பிறகு அவரது பிள்ளைகள் தங்களின் தந்தையின் சகோதரர் அப்துத் தாருடைய பிள்ளைகளுடன் மேற்கூறப்பட்ட பொறுப்புகளை பெறுவதில் சச்சரவு செய்தனர். இதனால் குறைஷியர்கள் இரண்டாகப் பிரிந்து சண்டைக்கு ஆயத்தமாயினர். எனினும், போரைத் தவிர்த்து சமாதானம் செய்துகொள்ள அனைவரும் விரும்பி தங்களுக்குள் அந்த பொறுப்புகளைப் பிரித்துக் கொண்டனர். ஹாஜிகளுக்கு நீர் புகட்டுவது, அவர்களுக்கு விருந்தளிப்பது மற்றும் பயணம் செல்லும் குழுவினருக்கு தலைமை வகிப்பது என மூன்று பொறுப்புகள் அப்து மனாஃபின் மக்களுக்குக் கிட்டின. தாருந் நத்வாவிற்கு தலைமை வகிப்பது, கொடி பிடிப்பது மற்றும் கஅபாவை பராமரிப்பது ஆகிய பொறுப்புகள் அப்துத்தாருடைய மக்களுக்குக் கிடைத்தன.

தாருந் நத்வாவின் தலைமைத்துவம் மட்டும் இரு பிரிவினருக்கும் பொதுவாக இருந்தது என்றும் சிலர் கூறுகின்றனர்.

பிறகு அப்து மனாஃபுடைய மக்கள் சீட்டு குலுக்கிப் போட்டு தங்களுக்குக் கிடைத்த பொறுப்புகளை தங்கள் குடும்பங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். அதன் அடிப்படையில் ஹாஜிகளுக்கு நீர் புகட்டுதல் மற்றும் அவர்களுக்கு விருந்தளிக்கும் பொறுப்புகள் ஹாஷிமுக்கு கிடைத்தன. வியாபாரக் குழுவினருக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பு அப்து ஷம்ஸுக்கு கிட்டியது. ஹாஷிம் தனது பொறுப்புகளை வாழ்நாள் முழுவதும் சிறப்பாக நிறைவேற்றினார். அவரது மரணத்திற்குப் பின் அவரது சகோதரர் முத்தலிப் இப்னு அப்து மனாஃப் பொறுப்பேற்றார். முத்தலிபின் மரணத்திற்குப் பிறகு ஹாஷிமுடைய மகன் அப்துல் முத்தலிப் பொறுப்பேற்றார். இந்த அப்துல் முத்தலிப் தான் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் ஆவார். அப்துல் முத்தலிபின் மரணத்திற்குப் பிறகு அவரது பிள்ளைகள் பொறுப்புகளை நிறைவேற்றினர். இறுதியில் மக்கா, முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் வந்தபோது அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு அப்பொறுப்புகள் கிட்டின.

சிலர், குஸய்தான் தனது பிள்ளைகளுக்கிடையில் பொறுப்புகளை பங்கிட்டுக் கொடுத்தார். அந்த அடிப்படையிலேயே அப்பொறுப்புகளை அவரது பிள்ளைகள் நிறைவேற்றி வந்தனர் என்று கூறுகின்றனர். உண்மை நிலையை அல்லாஹ்வே அறிந்தவன். (இப்னு ஹிஷாம்)

குறைஷிகள் தங்களிடையே பங்கிட்டுக் கொண்ட மேற்கூறப்பட்ட பொறுப்புகளுடன் வேறு சில பதவிகளையும் உருவாக்கி, அவற்றைத் தங்களுக்கிடையே பங்கிட்டு ஒரு சிறிய அரசாங்கத்தை நிறுவிக்கொண்டனர். அது இன்றைய ஜனநாயக அரசு, தேர்தல், பாராளுமன்றம் ஆகிய நடைமுறைகளுக்கு ஒத்திருந்தது. அவர்கள் வகித்த பதவிகள் பின்வருமாறு:

1) நற்குறி, துற்குறி (சாஸ்த்திரங்கள், சகுனங்கள்) பார்ப்பதும், அனுமதி பெறுவதும், சிலைகளுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் அம்புகளைக் கொண்டு குறி சொல்லும் அதிகாரமும் ஜுமஹ் குடும்பத்தாருக்கு இருந்தன.

2) சிலைகளுக்கு அளிக்கப்படும் காணிக்கைகள் மற்றும் நேர்ச்சைகளைப் பெற்று பாதுகாத்து பராமரித்தல்; சண்டை, சச்சரவுகள் மிக்க வழக்குகளில் தீர்ப்பு சொல்வது ஆகிய இரு பொறுப்புகளும் ஸஹ்ம் குடும்பத்தாருக்கு இருந்தன.

3) அஸத் குடும்பத்தாருக்கு, ஆலோசனை கூறும் பொறுப்பு!

4) தைம் குடும்பத்தாருக்கு, அபராதம் மற்றும் தண்டப் பரிகாரம் வழங்கும் பொறுப்பு!

5) உமய்யா குடும்பத்தாருக்கு, சமுதாயக்கொடி ஏந்திச் செல்லும் பொறுப்பு!

6) மக்ஜூம் குடும்பத்தாருக்கு, ராணுவங்களையும் அதற்குத் தேவையான குதிரைகளையும் நிர்வகிக்கும் பொறுப்பு!

7) அதீ குடும்பத்தாருக்கு, தூது கொண்டு செல்லும் பொறுப்பு! (இப்னு ஹிஷாம்)

உ) ஏனைய அரபியர்களின் ஆட்சி அதிகாரம்

கஹ்தானியர், அத்னானியர் நாடு துறந்ததையும் அவர்கள் அரபு நாடுகளை தங்களுக்கிடையில் பிரித்துக் கொண்டதையும் முன்பு கண்டோம். இவர்களில் ஹீரா நாட்டுக்கு அருகிலிருந்தவர்கள் ஹீராவின் அரபிய மன்னருக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தனர். ஷாம் நாட்டில் வசித்தவர்கள் கஸ்ஸானிய அரசர்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தனர். எனினும், கட்டுப்பாடு என்பது வெறும் பெயரளவில்தான் இருந்தது. இவ்விரண்டைத் தவிர தீபகற்பத்தின் ஏனைய கிராமப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் முழுச் சுதந்திரம் பெற்றவர்களாக எவருக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்து வந்தனர்.

இந்த இரண்டு கோத்திரத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கெனத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு கோத்திரமும் ஒரு சிறிய அரசாங்கத்தைப் போன்று இருந்தது. குலவெறியும், தங்களது ஆதிக்கப் பகுதிகளை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதும் இவர்களது அரசியல் அடிப்படை நோக்கமாக இருந்தது.

அரசர்களுக்கு இணையாக கோத்திரத் தலைவர்களுக்கு மதிப்பு இருந்தது. சண்டையிடுவதிலும், சமாதானம் செய்து கொள்வதிலும் மக்கள் தங்களது தலைவர்களின் முடிவை எவ்விதத் தயக்கமுமின்றி ஏற்று வந்தனர். தலைவர்களின் உத்தரவும் அதிகாரமும் பேரரசர்களின் உத்தரவுக்கும் அதிகாரத்துக்கும் ஒத்திருந்தது. அவர் ஏதேனும் ஒரு சமுதாயத்தினர் மீது கோபம் கொண்டால் எவ்வித கேள்வியுமின்றி ஆயிரக்கணக்கான வாள்கள் அந்த சமுதாயத்தினருக்கு எதிராக உயர்த்தப்படும். எனினும், அவர்கள் தலைமைக்காக தங்களது தந்தையுடைய சகோதரர்களின் (தந்தையின் உடன்பிறந்தார்) பிள்ளைகளிடமே போட்டியிட்டுக் கொண்டனர். இதன் விளைவாக மக்களிடையே புகழ்பெறும் நோக்கில் செலவிடுதல், விருந்தினரை உபசரித்தல், தர்ம சிந்தனையுடனும் விவேகத்துடனும் நடந்துகொள்ளுதல், எதிரிகளிடம் வீரத்தையும் வலிமையையும் வெளிப்படுத்துதல் போன்றவைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தனர். அவ்வாறே அக்காலத்தில் சமூகங்களின் பிரதிநிதிகளாகத் திகழ்ந்த கவிஞர்களிடம் புகழைப் பெற்று போட்டியாளர்களிடையே தங்களது மதிப்பை உயர்த்திக்கொள்ள பெரிதும் முயன்றனர்.

தலைவர்களுக்கென சில சிறப்பு உரிமைகள் இருந்தன. அவர்கள் மிர்பாஃ, ஸஃபிய், நஷீத்தா, ஃபுழூல் என்ற பெயர்களில் மக்களது செல்வங்களை அனுபவித்து வந்தனர்.

இதுகுறித்து ஒரு கவிஞர் கூறுகிறார்:

”எமது வெற்றிப் பொருளில் கால் பங்கும், நீ விரும்பி எடுத்துக் கொண்டதும், வழியில் கிடைத்த பொருளும், பங்கிட முடியாத மிஞ்சிய பொருளும் உனக்கே சொந்தமானது. எங்களில் உனது அதிகாரமே செல்லுபடியானது.”

மிர்பாஃ: இது போரில் கிடைக்கும் வெற்றிப் பொருளில் நான்கில் ஒரு பகுதி.

ஸஃபிய்: வெற்றிப் பொருளை (கனீமத்) பங்கீடு செய்வதற்கு முன், தலைவர்கள் தங்களுக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்வது.

நஷீத்தா: இது போருக்குச் செல்லும் வழியில் தலைவருக்குக் கிடைக்கும் பொருள்கள்.

ஃபுழூல்: இது வெற்றிப் பொருளில் பங்கீடு செய்ய இயலாத வகையில் மீதமாகும் பொருள்கள். ஒட்டகைகள், குதிரைகள் போன்று!

அரசியல் பின்னணி

அரபிய அரசர்களைப் பற்றி அலசிய நாம் அவர்களது அரசியல் பின்னணிகளைப் பற்றியும் அலசுவது அவசியம்! அரபிய தீபகற்பத்தில் அந்நிய நாடுகளுடன் ஒட்டியிருந்த மூன்று எல்லை பகுதிகளிலும் அரசியல் நிலைமை மிகவும் தலைகீழாக இருந்தது. அம்மக்களில் சிலர் அடிமைகளாகவும், சிலர் சுதந்திரமானவர்களாகவும் இருந்தார்கள். தலைவர்களாக இருந்த அந்நியர்கள் செல்வங்கள் அனைத்திற்கும் உரிமை கொண்டாடினர். சுமைகள் அனைத்தையும் குடிமக்கள் மீது சுமத்தினர். சுருங்கக் கூறின் குடிமக்கள் தங்களது அரசாங்கத்திற்கு விவசாய நிலங்களைப் போன்றிருந்தனர். அரசாங்கத்திற்கு பணி செய்வதும் பயனளிப்பதுமே அவர்களது கடமையாக இருந்தது. அரசர்கள் தங்களது ஆசாபாசம், பாவம், அநீதம் போன்ற தீய செயல்களுக்கு மக்களைப் பயன்படுத்தினர். குடிமக்களுக்கு நாலாதிசைகளில் இருந்தும் அநீதி இழைக்கப்பட்டது. அவர்கள் தங்களது அறியாமையால் செய்வதறியாது நிலைதடுமாறி நின்றனர். எவரிடமும் முறையிடுவதற்குக் கூட வலிமையற்று தங்கள் மீது இழைக்கப்படும் அநீதங்களை சகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அக்கால அரசாங்கம் ஒரு சர்வாதிகாரமாகவே இருந்தது. மக்களின் உரிமைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன பாழாக்கப்பட்டன.

இந்தப் பகுதிகளுக்கு அருகில் வாழ்ந்த மக்களும் தடுமாற்றத்தில் இருந்தனர். அவர்கள் சில சமயம் இராக் வாசிகளுடனும், சில சமயம் ஷாம் வாசிகளுடனும் சேர்ந்து கொள்வார்கள்.

அரபிய தீபகற்பத்தின் உட்பகுதியில் வசித்துக் கொண்டிருந்த கோத்திரத்தாரும் ஒற்றுமையின்றி பிரிந்து வாழ்ந்து வந்தனர். அவர்களிடையே சமய மற்றும் இன ரீதியான மோதல்களும், சச்சரவுகளும் மிகைத்திருந்தன. அதைப் பற்றி அவர்களில் ஒரு கவிஞர் கூறுகிறார்:

”நான் கூட கஜிய்யா குலத்தவனே! கஜிய்யா வழிகெட்டால்…

நானும் வழிகெடுவேன். அவர்கள் நேர்வழி நடப்பின் நானும் நேர்வழி நடப்பேன்.”

அவர்களை வழி நடத்துவதற்கோ, சிரமமான காலங்களில் ஆலோசனை கூறி உதவி செய்வதற்கோ அவர்களுக்கென ஆட்சியாளர் யாரும் இருக்கவில்லை.

அதே நேரத்தில் ஹிஜாஸ் பகுதியின் ஆட்சியாளர்களை மக்கள் மிகுந்த கண்ணியத்துடன் நோக்கினர். அவர்களையே தங்களது சமய மற்றும் சமூக வழிகாட்டிகளாகக் கருதினர். உண்மையில் ஹிஜாஸ் பகுதி அரசாங்கம் அக்காலத்தில் சமய மற்றும் சமூக வழிகாட்டியாக இருந்தது. அந்த ஆட்சியாளர்கள் ஏனைய அரபியர்களை சமயத்தின் பெயரால் ஆண்டு வந்தனர். இறையில்லம் கஅபாவையும், அங்கு வருபவர்களின் தேவைகளையும் அவர்களே நிர்வகித்து வந்ததால் அப்பகுதி அனைத்திலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை அமல்படுத்தி வந்தனர். இன்றைய காலத்தைப் போன்று தங்களது ஆட்சியாளர்களை தாங்களாகவே தேர்ந்தெடுக்கும் வழமையை அவர்கள் கொண்டிருந்தனர். எனினும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாத அளவு பலவீனமானதாகவே அவர்களது ஆட்சி இருந்தது. ஹபஷிகள் தொடுத்த போரில் இவர்கள் பலவீனமானதிலிருந்து இதை தெரிந்து கொள்ளலாம்.

சுட்டி: ரஹீக் ஆடியோ

No comments:

Post a Comment