ரஹீக் அல் மக்தூம் (முஹம்மத் நபி வரலாறு

Thursday, January 29, 2015

[ரஹீக் 008] – அறியாமைக் கால அரபியச் சமுதாயம்

இதுவரை அரபிய தீபகற்பத்தில் நிலவிய அரசியல் மற்றும் மதக் கோட்பாடுகளை அறிந்தோம். இப்போது அதன் சமூக அமைப்பு, பொருளாதாரம் மற்றும் பண்பாடுகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்.

சமுதாய அமைப்பு

அரபியர்களில் பலதரப்பட்ட வகுப்பினர் இருந்தனர். அவர்களில் உயர்மட்ட குடும்பங்களில் ஆண்கள் தனது குடும்பப் பெண்களுடன் உயர்வான நடத்தையைக் கொண்டிருந்தார்கள். அக்குடும்பங்களில் பெண்கள் சுய அதிகாரத்துடனும் கௌரவத்துடனும் திகழ்ந்தனர். பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வாளேந்தி போர் செய்யவும் அவர்கள் துணிந்திருந்தனர்.

ஓர் ஆண் தனது கொடைத்தன்மை, வீரம், வலிமையைக் கூறி தன்னைப் புகழ்ந்துக்கொள்ள நினைக்கும்போது தனது கவிதைகளில் பெண்ணை விளித்து பேசுவது போல பேசுவார். சில சந்தர்ப்பங்களில் பெண் விரும்பினால் தங்களது குலத்தாரிடையே காணப்படும் பிளவுகளை சரிசெய்து அமைதி நிலவச் செய்திடுவாள். அவள் நினைத்தால் மக்களிடையே போர் நெருப்பை மூட்டிவிடுவாள். எனினும், எவ்விதக் கருத்து வேறுபாடுமின்றி ஆண் குடும்பத் தலைவனாக விளங்கினான். அவனே முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தான். அவர்களிடையே ஆண், பெண் தொடர்பு என்பது அப்பெண்களுடைய காப்பாளர்களின் அனுமதி பெற்று திருமணத்தின் மூலமே ஏற்படுத்தப்பட்டது. தங்கள் குடும்ப ஆண்களை மீறி செயல்பட, பெண்கள் அதிகாரமற்றவர்களாக இருந்தார்கள்.

ஆனால், கீழ்மட்ட மக்களிடத்தில் ஆண், பெண் இணைந்து வாழ்வதற்கு பல்வேறு நடைமுறைகள் காணப்பட்டன. அவை அனைத்தும் வெட்கமற்ற இழிவான ஈனத்தனமான பழக்க வழக்கங்களாகவே இருந்தன. இது குறித்து அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:

திருமணங்கள் அறியாமைக் காலத்தில் நான்கு வகைகளாக இருந்தன.

முதல் வகை: இன்று மக்களிடையே நடைமுறையிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி ‘மஹ்ர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.

இரண்டாம் வகை: ஒருவர் தம் மனைவியிடம் ”நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்தவுடன் இன்ன நபருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்!” என்று கூறி அனுப்பி விடுவார். அதன்பின் அந்த மனிதர் மூலம் கர்ப்பமானது தெரியும்வரை அவர் தன் மனைவியுடன் சேராமல் விலகி இருப்பார். அந்த மனிதர் மூலம் அவள் கர்ப்பமாகி விட்டாளெனத் தெரியவந்தால் தன் விருப்பத்திற்கேற்ப கணவர் அவளுடன் சேர்ந்து கொள்வார். திடகாத்திரமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலேயே இவ்வாறு செய்து வந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ழாவு’ என்று அரபியில் பெயர் கூறப்படும்.

மூன்றாம் வகை: பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரே பெண்ணுடன் உறவு கொள்வார்கள். அவள் கர்ப்பமாகி குழந்தை பிரசவித்த சில நாட்களுக்குப் பின் அவர்கள் அனைவரையும் தன்னிடம் வரச் சொல்வாள். அவர்கள் அனைவரும் எவ்வித மறுப்புமின்றி அவளிடம் ஒன்று கூடுவார்கள். அவர்களிடம் அவள்: ”நீங்கள் செய்தது உங்களுக்குத் தெரிந்ததே! (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்து விட்டது” என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) ”இது உன் குழந்தையே” என தான் விரும்பியவன் பெயரைக் குறிப்பிடுவாள். அக்குழந்தை அந்த நபரிடம் ஒப்படைக்கப்படும். அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

நான்காம் வகை: பலர் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வர். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க மாட்டாள். இப்பெண்கள் விலை மாதர்கள் ஆவர். இவர்கள் தங்களது வீட்டு வாசலில் கொடியை நட்டு வைத்திருப்பார்கள். பலர் அங்கு வந்து போவார்கள். இதில் ஒருத்தி கர்ப்பமாகிக் குழந்தை பெற்றால் மக்கள் ஒன்று கூடி அங்க அடையாளங்களை வைத்து குழந்தையின் தந்தையை கண்டறியும் முகக்குறி நிபுணர்களை அழைத்து வருவார்கள். அந்த நிபுணர்கள் ஆராய்ந்து தந்தையை முடிவு செய்து அம்மனிதனுடன் அந்தக் குழந்தையை இணைத்து விடுவார்கள். அவனிடம் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டு அவனுடைய மகன் என்று பெயர் சொல்லி அழைக்கப்படும். அதைத் தன் குழந்தையல்ல என்று அவனும் மறுக்க மாட்டான்.

அல்லாஹ் சத்திய மார்க்கத்துடன் முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பியபோது இன்று மக்களின் வழக்கிலுள்ள இஸ்லாமியத் திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத்திருமணங்கள் அனைத்தையும் தகர்த்து விட்டான். (ஸஹீஹுல் புகாரி, ஸுனன் அபூதாவூது)

சிலசமயம் இரு வகுப்பாரிடையே போர் நடைபெறும். அதில், தோல்வி அடைந்தவர்களின் பெண்களை வெற்றிபெற்ற பிரிவினர் சிறைபிடித்து தங்களது அடிமைகளாக்கி அனுபவிப்பார்கள். இதில் பிறக்கும் குழந்தைகளின் பெயர்கள் காலம் முழுவதும் அடிமைகளான அவர்களது தாய்மார்களின் பெயர்களுடன் சேர்த்து அழைக்கப்படும் அவமானம் இருந்து வந்தது.

அறியாமைக் காலத்தில் ஆண்கள் எவ்வித வரம்புமின்றி பல பெண்களை மணந்து கொண்டனர். இஸ்லாம் அதை தடுத்து நான்கு பெண்களுக்கு மேல் மணமுடிக்கக் கூடாது என வரையறுத்தது. மேலும், இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மணந்து கொண்டனர். தங்களது தந்தை இறந்துவிட்டால் அல்லது விவாகரத்து செய்துவிட்டால் அவன் மனைவியை (மாற்றாந்தாயை) மணந்து கொள்ளும் பழக்கமும் அவர்களிடையே காணப்பட்டது. இவ்விரண்டையும் இஸ்லாம் தடை செய்தது. (பார்க்க அல்குர்ஆன் 4 : 22, 23). அவ்வாறே விவாகரத்து செய்வதில் குறிப்பிட்ட முறை எதுவுமின்றி விரும்பிய நேரத்தில் தலாக் (விவாகரத்து) கூறி விரும்பிய நேரத்தில் மனைவியரை திரும்ப அழைத்துக் கொண்டனர். இதை தடை செய்து மூன்று முறைக்கு மேல் இவ்வாறு செய்யலாகாது என இஸ்லாம் வரையறுத்தது. (ஸுனன் அபூதாவூது)

சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் விபசாரம் பரவியிருந்தது. சிலர் மட்டும் இந்த இழிசெயலை வெறுத்து கௌரவத்துடன் வாழ்ந்தனர். அடிமைப் பெண்களின் நிலைமை சுதந்திர பெண்களின் நிலைமையைவிட மிக மோசமாக இருந்தது. அந்த அறியாமைக்கால மக்களில் பெரும்பாலோர் விபசாரத்தை ஒரு குற்றச் செயலாகவே கருதவில்லை.

இது குறித்து நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் ஒரு மனிதர் எழுந்து ”அல்லாஹ்வின் தூதரே! இன்னவன் என் மகனாவான். அறியாமைக் காலத்தில் நான் அவனது தாயுடன் விபசாரம் செய்துள்ளேன் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”இஸ்லாமிய மார்க்கத்தில் இவ்வாறான உரிமைக் கோரலுக்கு வாய்ப்பில்லை. அறியாமைக் கால செயல்களெல்லாம் முடிந்துபோய் விட்டன. இப்போது குழந்தை அதனுடைய தாயின் கணவனையே சாரும். விபசாரம் புரிந்தவனைக் கல்லால் எறிந்து கொல்லப்படும்” என்று கூறினார்கள். (ஸுனன் அபூதாவூது)

ஸஅது இப்னு அபீ வக்காஸ், அப்து இப்னு ஜம்ஆ ஆகிய இருவருக்கிடையே ஜம்ஆவின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்த அப்துர் ரஹ்மான் இப்னு ஜம்ஆவின் விஷயத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் மிகப் பிரபலமானதாகும். (பார்க்க ஸஹீஹுல் புகாரி 2053, 2218…)

அரபியர்கள் தங்களது பிள்ளைகளுடன் கொண்டிருந்த தொடர்பு பலவகைகளில் அமைந்திருந்தது. அவர்களில் சிலர் தங்களது பிள்ளைகளை உயிருக்குயிராக நேசித்தனர். இதைப் பற்றி ஒரு கவிஞர் கூறுவதாவது:

”நமது குழந்தைகள் புவியில் தவழும் நமது ஈரக்குலைகளாவர்.”

தற்காலத்தைப் போன்றே, அக்காலத்தில் சிலர் பெண் பிள்ளைகளை அவமானமாகக் கருதியும் செலவுக்குப்பயந்தும் உயிருடன் புதைத்தனர். மேலும் சிலர், வறுமைக்கு அஞ்சி தங்களின் ஆண் குழந்தைகளையும் கொலை செய்தனர். (பார்க்க அல்குர்ஆன் (6 : 151), (16 : 58, 59), (17 : 31), (81 : 8) எனினும் இப்பழக்கம் பரவலாகக் காணப்படவில்லை. காரணம், எதிரிகளுடன் போரிடுவதற்கு அவர்களுக்கு ஆண் மக்களின் தேவை அதிகமாக இருந்தது.

அரபியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்குள் மிக நெருக்கமான உறவு வைத்திருந்தனர். குலப்பெருமைக்காகவே வாழவும் குலப்பெருமைக்காகவே சாகவும் துணிந்தனர். ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் சமூகப் பித்தும் இனவெறியும் கொண்டு அலைந்தனர். இனவாதமும் இரத்த பந்தமான குடும்பப் பாரம்பரியமும் அவர்களது சமூக அமைப்பின் அஸ்திவாரமாகத் திகழ்ந்தன. அவர்களிடையே அறியப்பட்ட ”உன் சகோதரன் அநியாயக்காரனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு நீ உதவி செய்” என்ற பழமொழியின் வெளிப்படையான பொருளுக்கேற்பவே அவர்கள் நடந்து வந்தார்கள். ஆனால், இஸ்லாம் இப்பழமொழிக்கு நேரடிப் பொருள் கொள்வதை மாற்றி அநியாயக்காரனை அவனுடைய அநியாயத்திலிருந்து தடுப்பதுதான் அவனுக்குச் செய்யும் உதவி என பொருள் தந்தது. எனினும், சில நேரங்களில் தலைமைத்துவத்தை அடைவதற்காக ஒரே வமிசத்தில் தோன்றியவர்கள் கூட தங்களுக்குள் வாளெடுத்துப் போரிட்டுக் கொண்டனர். எடுத்துக்காட்டாக அவ்ஸ்-கஸ்ரஜ், அப்ஸ்-துப்யான், பக்ர்-தக்லிப் கோத்திரத்தினர் தலைமைப் பதவிக்காக தங்களுக்குள் பகைவர்களாக இருந்தனர்.

பல மாறுபட்ட கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் தொடர்பற்றவர்களாக பிரிந்து வாழ்ந்தனர். குடும்பச் சண்டையிலேயே தங்கள் ஆற்றல்களை இழந்தனர். சில நேரங்களில் அவர்கள் கொண்டிருந்த மத நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் அவர்களுக்கிடையில் இருந்த பகைமையின் வேகத்தை குறைத்தன. மற்றும் சில நேரங்களில் சமாதான ஒப்பந்தங்களும் நட்பு ஒப்பந்தங்களும் பல மாறுபட்ட கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கிடையே நெருக்கமான உறவை ஏற்படுத்தின. புனித மாதங்கள் அவர்களுக்கு அருளாகவும் வாழ்வுக்கும் வியாபாரத்திற்கும் பேருதவியாகவும் அமைந்திருந்தன. புனித மாதங்களை அவர்கள் கண்ணியப்படுத்தி வந்ததால் அம்மாதங்களில் மட்டும் அவர்கள் முழு நிம்மதியுடனும் பாதுகாப்புடனும் இருந்தனர்.

அபூரஜா அல் உதாதி (ரழி) கூறுகிறார்: ”ரஜபு மாதம் வந்துவிட்டால் நாங்கள் ஈட்டிகளின் கூர்மையை அகற்றும் மாதம் வந்துவிட்டது” என்று கூறி ஈட்டி, அம்புகளின் முனையை அகற்றிவிடுவோம். இவ்வாறே மற்ற புனித மாதங்களிலும் நடந்து கொள்வோம். (ஸஹீஹுல் புகாரி. ஃபத்ஹுல் பாரி)

சுருங்கக்கூறின் சமூக அமைப்பு தரங்கெட்டு உருக்குலைந்து இருந்தது. மூட நம்பிக்கைகள் மிகைத்திருந்தன. அறியாமை அவர்களை ஆட்டிப் படைத்தது. மனிதர்கள் கால்நடைகளாக வாழ்ந்தனர். பெண்கள் விற்பனைப் பொருளாக்கப்பட்டு ஜடமாகவே பாவிக்கப்பட்டனர். சமூகங்களுக்கிடையில் உறவுகள் துண்டிக்கப்பட்டிருந்தன. குடிமக்களைச் சுரண்டி தங்களது கருவூலங்களை நிரப்பிக்கொள்வது அல்லது எதிரிகளின் மீது தாக்குதல் நடத்துவதே ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்தது.

நமது நோக்கமல்ல.

சமூக நிலைமைக்கேற்ப பொருளாதாரம் அமைந்திருந்தது. அரபியர்களின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்யும்போது இக்கருத்து நமக்குத் தெரியவரும். அவர்களது வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வியாபாரமே பெரும் துணையாக இருந்தது. அமைதியும் பாதுகாப்பும் இருந்தால்தான் வியாபாரப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பது தெரிந்ததே! ஆனால், அரபிய தீபகற்பத்தில் புனித மாதங்களைத் தவிர ஏனைய மாதங்களில் அந்த அமைதியும் பாதுகாப்பும் இருக்கவில்லை. இப்புனித மாதங்களில்தான் உக்காள், தில்மஜாஸ், மஜன்னா போன்ற அரபியர்களின் பெயர் போன வியாபாரச் சந்தைகள் நடைபெற்றன.

அரபியர்களிடம் தொழில் துறைகளைப் பற்றிய அறிவு காணப்படவில்லை. துணி நெய்தல், தோல் பதனிடுதல் போன்ற சில தொழில் யமன், ஹீரா மற்றும் ‘மஷாஃபுஷ் ஷாம்’ ஆகிய பகுதிகளில் மட்டும் காணப்பட்டன. அரபிய தீபகற்பத்தின் உட்புறத்தின் சில பகுதிகளில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நடைபெற்று வந்தன. அரபியப் பெண்கள் அனைவரும் நெசவுத் தொழில் செய்தனர். எனினும், அனைத்து செல்வங்களும் போர்களில் செலவழித்து வீணடிக்கப்பட்டன. அவர்களிடையே வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடியது. அணிவதற்கான ஆடைகள் கூட இல்லாமல் தவித்தனர்.

பண்பாடுகள்

அக்கால மக்களிடையே செம்மையான சிந்தனையோ பகுத்தறிவோ இல்லை என்பதால் அக்காலத்தை ”அறியாமைக்காலம்” என வருணிக்கப்பட்டது. ஏற்க இயலாத செயல்பாடுகளும் இழிவான நடத்தைகளும் குடி கொண்டிருந்தன. அதே நேரத்தில் வியக்கத்தக்க சில அரிய பண்புகளும் அவர்களிடம் குடிகொண்டிருந்தன.

அவையாவன:

1) கொடைத் தன்மை மற்றும் தயாளத்தன்மை: அவர்கள் கொடைத் தன்மையில் ஒருவரையொருவர் போட்டியிட்டனர். இந்தக் கொடைத் தன்மையைக் கொண்டே தங்களது பெரும்பாலான கவிகளில் தங்களையும் பிறரையும் புகழ்ந்து கொண்டனர்.

கடுமையான குளிரும் பஞ்சமும் நிலவி வரும் காலத்தில் ஒருவரிடம் விருந்தினர் ஒருவர் வருகிறார். அம்மனிதரிடம் தனது குடும்பத்தின் தேவைக்காக இருக்கும் ஓர் ஒட்டகையைத் தவிர வேறொன்றுமில்லாத நிலையிலும் அந்த ஒட்டகையை அறுத்து விருந்தினரை உபசரிக்க அவரைத் தூண்டுமளவு அவர்களிடம் விருந்தோம்பல் குணம் மிகைத்திருந்தது.

அவ்வாறே அவர்களில் இயலாத ஒருவர் நஷ்டஈடு வழங்க வேண்டியிருந்தால் அது தங்களது சக்திக்கு மீறியதாக இருப்பினும் அந்தத் தொகையைத் தான் தருவதாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள். இதனால், பிறர் உயிர் பறிக்கப்படுவதிலிருந்து பாதுகாத்தார்கள். இதைத் தங்களுக்குப் பெருமையாகக் கருதினார்கள்.

அவர்களிடமிருந்த தர்ம சிந்தனையின் விளைவாக மது அருந்துவதை பெருமைக்குரியதாக கருதினர். அது ஒரு சிறப்பான செயல் என்பதற்காக அதனை அவர்கள் நேசிக்கவில்லை. மாறாக, மது அருந்துவது தர்மம் செய்வதற்கான ஒரு வழியாக இருக்கிறது. செல்வத்தை வாரி இறைப்பதை மனதிற்கு எளிதாக்குகிறது என்பதால் அதை நேசித்தனர். அதனாலேயே திராட்சைக் கொடிக்கு ‘கரம்’ (கொடை) என்றும் அதிலிருந்து பிழியப்பட்ட மதுவுக்கு ‘பின்துல் கரம்’ (கொடையின் புதல்வி) எனவும் பெயரிட்டிருந்தனர். எனவேதான், மது அருந்துவதை பெருமைப்படுத்தியும் புகழ்ந்தும் பல அரபுக்கவிதைகள் அறியாமைக் காலத்தில் இயற்றப்பட்டதை நாம் பார்க்கிறோம்.

இதுபற்றி அன்தரா இப்னு ஷத்தாத் அல் அபஸீ தனது கவிதைத் தொகுப்பில் கூறுகிறார்:

”மதிய வேளைக்குப் பின் வடிகட்டியுடன் உள்ள

மஞ்சள் நிறக் கண்ணாடி கெண்டியிலிருந்து

அடையாளமிடப்பட்ட தெளிவான கண்ணாடிக் கிண்ணத்தில் ஊற்றி

இடக்கையால் மது அருந்தினேன்.

நான் குடித்தால் என் செல்வங்கள் அனைத்தையும் வாரி இறைப்பேன்.

ஆனால் எனது கண்ணியத்தை கரைபடியாது காப்பேன்.

மது மயக்கம் தெளிந்த பின்னும் வாரி வழங்குவதில் ஒரு குறையும் வைக்கமாட்டேன்.

இத்தகைய என் பண்பாடும் பெருந்தன்மையும் உனக்குத் தெரிந்ததே!”

சூதாடுவதையும் தங்களது கொடைத்தன்மையின் வெளிப்பாடாக அவர்கள் கருதினார்கள். ஏனெனில், சூதாட்டத்தில் வெற்றி பெறுபவர், தான் செலவிட்டதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதத்தை ஏழை, எளியோருக்கு கொடுத்து விடுவார். இதனாலேயே மது அருந்துவதிலும் சூதாடுவதிலும் எப்பலனுமே இல்லை என்று குர்ஆன் மறுக்கவில்லை. மாறாக, அதன் பலனைவிட அதன் தீய விளைவுதான் அதிகம் என்று கூறுகிறது.

(நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: ”அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன மனிதர்களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றிலுள்ள பாவம் அவற்றின் பயனை விட மிகப் பெரிது.” (அல்குர்ஆன் 2 : 219)

2) ஒப்பந்தங்களை நிறைவேற்றல்: அவர்கள் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதிலும் வாக்குகளைக் காப்பாற்றுவதிலும் மிக உறுதியாக இருந்தனர். தங்களது பிள்ளைகள் கொலை செய்யப்பட்டாலும் தங்களது வீடுகள் தகர்க்கப்பட்டாலும் அது குறித்து சிறிதும் இலட்சியம் செய்யாமல் தங்களது ஒப்பந்தத்தை நிறைவேற்றினர். இதற்கு ஹானி இப்னு மஸ்வூத் ஷைபானி, ஸமவ்அல் இப்னு ஆதியா போன்றவர்களின் சம்பவங்கள் சான்றாகும். (இதிலுள்ள ஹானியின் சம்பவம் ‘ஹீரா நாட்டில் ஆட்சி’ என்ற தலைப்பில் சென்றுள்ளது.)

அடுத்து ஸமவ்அல் இப்னு ஆதியா பற்றிய சம்பவமாவது: ஸமவ்அலிடம் இம்ரவுல் கைஸ் சில கவச ஆடைகளை அமானிதமாகக் கொடுத்திருந்தார். ‘ஹாஸ்’ என்ற கஸ்ஸானிய மன்னன் அதனை அபகரிக்க நாடினான். ஸமவ்அல் தீமாவிலுள்ள தனது கோட்டையில் தஞ்சம் புகுந்தான். அவருடைய பிள்ளைகளில் ஒருவர் கோட்டைக்கு வெளியில் மாட்டிக்கொண்டார். அவரை மன்னன் ஹாஸ் பணயமாகப் பிடித்துக்கொண்டு கவச ஆடைகளை கொடுக்காவிட்டால் பிள்ளையைக் கொன்று விடுவேன் என மிரட்டினான். ஸமவ்அல் கொடுக்க மறுத்து தன் கண்ணெதிரே தன் பிள்ளை கொல்லப்படுவதையும் சகித்துக்கொண்டார்.

3) சுயகௌரவம் மற்றும் அநீதத்தை சகித்துக் கொள்ளாத் தன்மை: இப்பண்புகள் அவர்களிடம் கட்டுக்கடங்கா வீரத்தையும் அதிரடி ரோஷத்தையும் வேகமாக உணர்ச்சி வசப்படுவதையும் தூண்டின. எவருடைய சொல்லாவது தனக்கு கௌரவக் குறைவை அல்லது இழிவை ஏற்படுத்துகிறது என அறிந்தால் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள். தங்களது உயிரைப் பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாமல் வாளாலும், அம்புகளாலும் அதற்கு பதிலடி கொடுப்பார்கள்.

4) செயலில் உறுதியுடன் இருத்தல்: அம்மக்கள் ஒரு செயல் தங்களது பெருமைக்கும் உயர்வுக்கும் காரணமாக அமையும் என நம்பினால் அதை செயல்படுத்துவதிலிருந்து அவர்களை எந்தவொரு சக்தியும் தடுத்துவிட முடியாது. தங்களது உயிரைக் கொடுத்தாவது அதனை அவர்கள் செய்து முடிப்பார்கள்.

5) நிதானித்தல், சகித்தல், அமைதி காத்தல்: இப்பண்புகளும் அவர்களிடம் அமைந்திருந்தன. எனினும், வீரமும் போர் மீதான ஆர்வமும் மிகுந்திருந்ததால் இப்பண்புகள் மிக அரிதாகவே காணப்பட்டன.

6) எளிமையை விரும்பிப் பகட்டை வெறுத்தல்: அவர்களிடம் இப்பண்பும் காணப்பட்டது. அதனால் அவர்கள் உண்மை, நேர்மை, வாய்மை போன்றவற்றை நேசித்து மோசடி, ஏமாற்றுதல் போன்ற இழிகுணங்களை வெறுத்தனர்.

உலகின் ஏனைய பகுதிகளைப் பார்க்கிலும் அரபிய தீபகற்பத்துக்குப் புவியியல் ரீதியான முக்கியத்துவம் அமைந்திருந்தது. அத்துடன் அம்மக்களிடம் இருந்த மேற்கூறிய சில அரிய பண்புகளும் இருந்தன. இதன் காரணமாகவே இறுதி இறைத்தூதை சுமப்பதற்கும் மனித குலத்தை சீர்படுத்தி நேர்வழி நோக்கி அழைத்துச் செல்வதற்கும் அரபியர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.

அந்த மக்களிடம் அமைந்திருந்த இந்த பண்புகளில் சில தீமைகளை, துன்பங்களை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தாலும் அடிப்படையில் அவை மிக உயரிய பண்புகளாகவே இருந்தன. அதனைச் சற்று சீரமைக்கும்போது மனித குலத்துக்கு அந்த பண்புகளால் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன இஸ்லாம் அந்த சீர்திருத்தத்தையே செய்தது.

அவர்களிடமிருந்த மிக உயரிய பண்புகளில் ”ஒப்பந்தங்களை நிறைவேற்றுதல்” என்ற நற்பண்புக்கு அடுத்ததாக ”உயர்வான காரியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருத்தல்” என்ற பண்பு மக்களுக்கு மிக நன்மை பயக்கக் கூடியதாகும். ஏனெனில், தீமைகளையும் குழப்பங்களையும் களைந்து நீதியையும் நன்மையையும் நிலை நிறுத்துவதற்கு இந்த பண்பு மிக அவசியமாக இருக்கிறது.

மேற்கூறப்பட்டவை மட்டுமின்றி இன்னும் பல அரிய பண்புகளும் உயரிய குணங்களும் அவர்களிடம் இருந்தன. அவை அனைத்தையும் இங்கு கூறுவது நமது நோக்கமல்ல.

சுட்டி: ரஹீக் ஆடியோ

Monday, January 26, 2015

[ரஹீக் 007] – அரபியர்களின் சமய நெறிகள்

நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்ததியினர் மக்காவில் குடியேறி அரபிய தீபகற்பம் முழுவதிலும் பரவிய காலம்தொட்டு அரபியர்களில் பெரும்பாலோர் இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தை முழுமையாகக் கடைபிடித்து வந்தனர். காலங்கள் செல்லச் செல்ல அல்லாஹ்வின் வழிகாட்டல்களையும் போதனைகளையும் சிறிது சிறிதாக மறக்க ஆரம்பித்தனர். எனினும், அவர்களிடையே ஓரிறைக் கொள்கையும் மார்க்கத்தின் உயர்ந்த நெறிகளும் ஓரளவு நிலைத்திருந்தன. குஜாஆ கோத்திரத்தின் தலைவனான அம்ரு இப்னு லுஹய் சமய சம்பந்தப்பட்ட செயல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்தான். மக்களுக்கிடையில் நற்செயல்களை பரப்பி, தான தர்மங்கள் செய்து வந்தான். எனவே, மக்கள் பெரிதும் மதித்து அவனை ஓர் இறைநேசராகக் கருதினர்.

அவன் ஒருமுறை ஷாம் நாட்டுக்குச் சென்றான். அங்கு மக்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் இந்த சிலை வணக்க வழிபாடு அவனைப் பெரிதும் கவர்ந்தது. ஷாம் நாடு, நபிமார்கள் மற்றும் வேதங்கள் அருளப்பட்ட பகுதியாக இருந்ததால் அந்தச் சிலை வணக்கமும் உண்மையான ஒன்றாகத்தான் இருக்கும் என அவன் எண்ணினான். எனவே, அவன் மக்கா திரும்பியபோது ‘ஹுபுல்’ என்ற சிலையைக் கொண்டு வந்து கஅபாவின் நடுவில் அதை வைத்து விட்டான். அந்தச் சிலையைக் கடவுளாக ஏற்று அல்லாஹ்வுக்கு இணைவைக்குமாறு மக்காவாசிகளுக்கு அழைப்பு விடுத்தான். அவர்களும் அதை ஏற்று அல்லாஹ்வுக்கு இணை வைத்தனர். மக்காவாசிகள் இறை இல்லம் கஅபாவை நிர்வகிப்பவர்களாகவும், புனித நகரமான மக்காவில் வசிப்பவர்களாக இருப்பதாலும் அவர்களையே தங்களது முன்னோடிகளாக எடுத்துக் கொண்டு ஹிஜாஸ் பகுதியின் ஏனைய மக்களும் சிலை வழிபாட்டில் அவர்களைப் பின்பற்றினர்.

‘ஹுபுல்’ என்பது செந்நிறக் கல்லில் மனித உருவாகச் செதுக்கப்பட்ட ஒரு சிலை! அதன் வலது கரம் உடைந்திருந்தது. அதற்கு குறைஷிகள் தங்கத்தினால் கை செய்து அணிவித்தனர். இதுதான் மக்கா இணைவைப்பாளர்களின் முதல் சிலையாகும். இதை மிகுந்த மகத்துவமிக்கதாகவும் புனிதமிக்கதாகவும் குறைஷிகள் கருதினர். (கிதாபுல் அஸ்னாம்)

ஹுபுல் மட்டுமின்றி, மனாத் என்பதும் அவர்களின் பழங்கால சிலைகளில் ஒன்றாகும். அது செங்கடலின் ஓரத்தில் அமைந்துள்ள ‘குதைத்’ என்ற நகரின் அருகாமையிலுள்ள ‘முஷல்லல்’ என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. (முஷல்லல் என்பது ஒரு மலைமேடு அதன் அடிவாரத்தில் குதைத் உள்ளது – ஸஹீஹுல் புகாரி) இதை ஹுதைல் மற்றும் குஜாஆ கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்.

தாயிஃப் நகரத்தில் ‘லாத்’ எனும் சிலையை ஸகீஃப் கோத்திரத்தினர் வணங்கி வந்தனர். (கிதாபுல் அஸ்னாம்)

‘தாத்த இர்க்’ என்ற நகரின் ‘நக்லா ஷாமிய்யா’ என்ற பள்ளத்தாக்கில் ‘உஜ்ஜா’ என்ற சிலை இருந்தது. இதை குறைஷி, கினானா மற்றும் பல கோத்திரத்தினர் வணங்கி வந்தனர். (கிதாபுல் அஸ்னாம்)

இம்மூன்று சிலைகளும் அரபியர்களிடம் மிகப் பெரிய மதிப்புமிக்க சிலைகளாக இருந்தன. இதுமட்டுமின்றி அவர்களிடையே ஷிர்க் (இணைவைத்தல்) அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு ஊரிலும் சிலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தன.

அம்ரு இப்னு லுஹய்ம்க்கு தகவல் கொடுக்கும் ஒரு ஜின் இருந்தது. அது அவனிடம் நபி நூஹ் (அலை) அவர்களின் காலத்து சிலைகளான வத், ஸுவாஃ, யகூஸ், நஸ்ர் போன்றவை ஜித்தா நகரத்தில் புதைந்திருக்கின்றன என்று கூறியது. அவன் ஜித்தா வந்து அந்த சிலைகளைத் தோண்டியெடுத்து மக்காவிற்குக் கொண்டு வந்தான். ஹஜ்ஜுடைய காலத்தில் கஅபாவை தரிசிக்க வந்திருந்த பல்வேறு கோத்திரத்தினருக்குப் பிரித்துக் கொடுத்தான். அவர்கள் அவற்றை தங்களது பகுதிகளுக்கு எடுத்துச் சென்று வணங்க ஆரம்பித்தனர் என்று சிலர் கூறுகின்றனர்.

‘வத்’ சிலையை இராக் நாட்டுக்கு அருகிலுள்ள ‘தவ்மதுல் ஜந்தல்’ என்ற பகுதியிலுள்ள ‘ஜர்ஷ்’ என்ற இடத்தில் கல்பு கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்.

‘ஸுவாஃ’ சிலையை ஹிஜாஜ் பகுதியின் மக்கா நகரருகில் ‘ருஹாத்’ என்ற இடத்தில் ஹுதைல் இப்னு முத்கா என்ற கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்.

‘யகூஸ்’ சிலையை ஸபா பகுதியில் ‘ஜுர்ஃப்’ என்ற இடத்தில் முராது வமிசத்தின் கூதைஃப் என்ற கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்.

‘யஊக்’ சிலையை யமன் நாட்டில் ‘கய்வான்’ என்ற ஊரில் ஹம்தான் கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்.

‘நஸ்ர்’ சிலையை தில் கிலா கோத்திரத்தைச் சேர்ந்த ஹிம்யர் குடும்பத்தினர் தங்களது ஊரில் வைத்து வணங்கி வந்தனர். (ஸஹீஹுல் புகாரி, ஃபத்ஹுல் பாரி, கிதாபுல் அஸ்னாம்)

இந்த சிலைகளுக்கென பிரமாண்டமான ஆலயங்களை அமைத்தனர். இறையில்லமான கஅபாவை கண்ணியப்படுத்தியதைப் போன்று அந்த ஆலயங்களையும் கண்ணியப்படுத்தினர். அந்த ஆலயங்களுக்கு பூசாரிகளும் பணியாளர்களும் இருந்தனர். கஅபாவிற்குக் காணிக்கை அளித்ததைப் போன்று அந்த ஆலயங்களுக்கும் காணிக்கை செலுத்தி வந்தனர். அத்துடன் அனைத்தையும் விட கஅபாவே மிக உயர்வானது என்பதையும் ஒப்புக்கொள்ளவே செய்தனர். (இப்னு ஹிஷாம்)

இன்னும் பல கோத்திரத்தாரும் இதே வழியைப் பின்பற்றி சிலைகளைக் கடவுள்களாக ஏற்று அவற்றுக்கென ஆலயங்களை உருவாக்கினார்கள். அவற்றில் ‘துல் கலஸா’ என்ற சிலையை தவ்ஸ், கஷ்அம் மற்றும் புஜைலா கோத்திரத்தார் யமன் நாட்டில் உள்ள ‘தபாலா’ என்ற ஊரில் வணங்கி வந்தனர்.

‘ஃபில்ஸ்’ என்ற சிலையை ‘தய்’ கோத்திரத்தாரும் அவர்களை ஒட்டி ஸல்மா, அஜா என்ற இரு மலைகளுக்கிடையில் வசித்து வந்தவர்களும் வணங்கி வந்தனர். இதைத் தவிர்த்து அவர்களுக்கு மேலும் பல கோயில்கள் இருந்தன. யமன் மற்றும் ஹிம்யர்வாசிகள் ‘ரியாம்’ என்ற கோயிலையும் ரபிஆ கோத்திரத்தினர் ‘ரழா’ என்ற ஒரு கோயிலையும் வைத்திருந்தனர். மேலும் பக்ர், தக்லிப் கோத்திரத்தார் தங்களுக்கென சிறு கோயில்களையும் ‘ஸன்தாத்’ என்ற நகரில் இயாத் வமிசத்தவர்கள் தங்களுக்கென சிறு கோயில்களையும் ஏற்படுத்தியிருந்தனர். (இப்னு ஹிஷாம்)

மேலும் தவ்ஸ் கோத்திரத்தாருக்கு ‘துல் கஃப்ஃபைன்’ என்ற சிலை இருந்தது. கினானாவின் மக்களான மாலிக், மலிகான் மற்றும் பக்ருக்கு ‘ஸஃது’ எனும் சிலையும், உத்ராவுக்கு ‘ஷம்ஸ்’ என்ற சிலையும் கவ்லானுக்கு ‘உம்யானிஸ்’ எனும் சிலையும் குலதெய்வங்களாக விளங்கின. (இப்னு யிஷாம்)

இவ்வாறு அரபிய தீபகற்பத்தின் பல பகுதிகளுக்கும் சிலை வணக்கக் கலாச்சாரம் பரவியது. முதலில் ஒவ்வொரு கோத்திரத்தாருக்கும் பிறகு ஒவ்வொரு வீட்டிற்குமென தனித்தனிச் சிலைகள் இருந்தன. சங்கைமிக்க கஅபாவையும் சிலைகளால் நிரப்பினர். நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்டபோது கஅபாவைச் சுற்றிலும் 360 சிலைகள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் தங்களது கரத்திலிருந்த தடியால் அவைகளைக் குத்தி கீழே தள்ளினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களின் உத்தரவின்படி அவைகள் கஅபாவிலிருந்து வெளியேற்றப்பட்டு எரிக்கப்பட்டன. மேலும், கஅபாவின் உட்புறத்தில் சிலைகளும் உருவப்படங்களும் இருந்தன. அவற்றில் நபி இப்றாஹீம் (அலை) மற்றும் நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் தங்களது கரங்களில் அம்புகளைப் பற்றியவாறு இருப்பதுபோன்ற உருவப் படங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் புனித கஅபாவிலிருந்து நீக்கி அழிக்கப்பட்டன. (ஸஹீஹுல் புகாரி)

மக்கள் இதுபோன்ற வழிகேட்டில் நீடித்து வந்தார்கள். அதுபற்றி அபூ ரஜா உதாதீ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ”நாங்கள் கற்களை வணங்கி வந்தோம். நாங்கள் வணங்கும் கல்லைவிட அழகிய கல்லைக் கண்டால் கையிலிருப்பதை தூக்கி எறிந்துவிட்டு புதியதை எடுத்து வணங்குவோம். எங்களுக்கு வணங்குவதற்கான கல் கிடைக்கவில்லையெனில் மண்ணைக் குவியலாக்கி அதன்மேல் ஆட்டின் பாலைக்கறந்து அதை வலம் வருவோம்.” (ஸஹீஹுல் புகாரி)

ஆக, இணை வைத்தலும், சிலை வணக்கமும் அந்த அறியாமைக் காலத்தில் மிக உயரிய நெறியாகப் பின்பற்றப்பட்டது. அத்துடன் அவர்கள் தாங்கள் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை முழுமையாக பின்பற்றி நடப்பதாகவும் எண்ணிக்கொண்டனர்.

அவர்களிடையே சிலைவணக்கம் மற்றும் இணைவைத்தல் உருவானதற்கான அடிப்படை என்னவெனில் அவர்கள் மலக்குகளையும், ரஸூல்மார்களையும், நபிமார்களையும், அல்லாஹ்வின் நல்லடியார்களையும், இறைநேசர்களையும் அல்லாஹ்வுக்கு மிக நெருங்கியவர்கள்; அவனிடம் மிகுந்த அந்தஸ்தும் கௌரவமும் பெற்றவர்கள் எனக் கருதினர். அவர்களிடமிருந்து பல்வேறு அற்புதங்கள் வெளிப்பட்டதைக் கண்ட அம்மக்கள் தனக்கு மட்டுமே உரித்தான சில ஆற்றல்களை அல்லாஹ் அந்த சான்றோர்களுக்கும் அருளியுள்ளான் என்றும் நம்பினர். அச்சான்றோர்கள் இத்தகைய ஆற்றல்களாலும் தங்களுக்கு அல்லாஹ்விடமுள்ள கண்ணியத்தினாலும் அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையே நடுவர்களாக இருக்கத் தகுதி பெற்றவர்கள்; யாருக்கும் எதையும் அல்லாஹ்விடம் நேரடியாக கேட்டுப் பெறத் தகுதியில்லை இச்சான்றோர் மூலமாகவே அல்லாஹ்வை அணுக முடியும்; அவர்களே அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள்; அவர்களது அந்தஸ்தைக் கருத்திற்கொண்டு அல்லாஹ் அவர்களது சிபாரிசுகளைக் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வான்; அவர்கள் மூலமாகவே அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவர்கள்தான் அல்லாஹ்விடம் அடியார்களை மிக நெருக்கமாக்கிவைக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்றும் எண்ணினார்கள்.

இந்த எண்ணம் நாளடைவில் உறுதியான நம்பிக்கையாக வலுப்பெற்றது. அவர்களைத் தங்களது பாதுகாவலர்களாகக் கருதி அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையே நடுவர்களாக்கிக் கொண்டனர். அவர்களது நேசத்தைப் பெற்றுத் தரும் வழிமுறைகளென தாங்கள் கருதிய அனைத்தையும் கொண்டு அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்தனர். அச்சான்றோர்களுக்காக அவர்களின் உருவப்படங்களையும் சிலைகளையும் உருவாக்கினர். அவற்றுள் சில உண்மையாய் உருவப்படங்களாக இருந்தன. சில உருவப் படங்களை தங்களது கற்பனைக்கு ஏற்றவாறு வரைந்தனர். இந்த உருவப் படங்களுக்கும் சிலைகளுக்கும் அரபி மொழியில் ‘அஸ்னாம்’ என்று கூறப்படும்.

சிலர் சான்றோர்களுக்கென உருவப் படங்கள், சித்திரங்கள் எதையும் வரையாமல் அவர்களது அடக்கத்தலங்களையும் அவர்கள் வசித்த, ஓய்வெடுத்த, தங்கிய இடங்களையும் புனித ஸ்தலங்களாக ஏற்படுத்திக் கொண்டனர். அந்த ஸ்தலங்களுக்குக் காணிக்கைகளையும் நேர்ச்சைகளையும் சமர்ப்பித்தனர். மேலும், அவ்விடங்களில் பணிவுடனும் மரியாதையுடனும் நடந்து பல கிரியைகளைச் செய்தனர். இவ்வாறான இடங்களுக்கும் சமாதிகளுக்கும் அரபியில் ‘அவ்ஸான்’ என்று கூறப்படும்.

அவர்கள் அஸ்னாம் மற்றும் அவ்ஸான்களுக்குச் செய்து வந்த சடங்குகளில் பெரும்பாலானவற்றை அம்ரு இப்னு லுஹய்ம் தான் உருவாக்கித் தந்தான். அவன் உருவாக்கித் தந்த அனைத்தும் ”அழகிய அனுஷ்டானங்கள் (பித்அத் ஹஸனா)” எனவும், அவை இப்றாஹீம் (அலை) அவர்களது மார்க்கத்திற்கு எவ்வகையிலும் முரணானதல்ல எனவும் அம்மக்கள் நம்பினர்.

அவர்கள் அவ்ஸான் மற்றும் அஸ்னாம் ஆகியவற்றை வணங்கிய முறைகளாவது:

1) அச்சிலைகளை வணங்கி வழிபாடுகள் செய்து அவற்றிடம் அபயம் தேடினர். தங்களது நெருக்கடியான காலக்கட்டத்தில் பாதுகாவலுக்காக அதனைப் பெயர் கூறி அழைத்தனர். அவை அல்லாஹ்விடம் சிபாரிசு செய்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு வேண்டி வந்தனர்.

2) அவற்றை நாடி பயணித்தனர்; வலம் சுற்றி வந்தனர்; பணிவை காட்டி அவற்றின் முன் சிரம் பணிந்தனர்.

3) அவற்றுக்கு தங்களது நேர்ச்சைகளை நிறைவேற்றினர். அச்சிலைகளுக்கு முன் அமைக்கப்பட்ட பலி பீடங்களில் தங்களது பிராணிகளை அறுத்து பலி கொடுத்தனர். எங்கு பிராணிகளை அறுத்தாலும் அச்சிலைகளின் பெயர் கூறியே அறுத்தனர்.

அவர்களின் இந்த இருவகை உயிர்ப்பலிகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்:

… (பூஜை செய்வதற்காக) நியமிக்கப்பட்டவைகளில் அறுக்கப்பட்டவைகளும் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன் 5 : 3)

(நம்பிக்கையாளர்களே! அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். (அல்குர்ஆன் 6 : 121)

4) அவர்கள் அச்சிலைகளுக்கு செலுத்திய வணக்க வழிபாடுகளில் ஒன்று ”தங்களின் கற்பனைக்கு தகுந்தவாறு உணவு, குடிபானம் ஆகியவற்றில் சிலவற்றை அச்சிலைகளுக்காக ஒதுக்கி வைத்து விடுவார்கள். அவ்வாறே தங்களது வேளாண்மை மற்றும் கால்நடைகளில் சிலவற்றை அச்சிலைகளுக்காக ஒதுக்கி விடுவார்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவெனில், அல்லாஹ்வுக்காகவும் சிலவற்றை ஒதுக்குவார்கள். பிறகு பல காரணங்களைக் கூறி அவை அனைத்தையும் சிலைகளுக்கே கொடுத்து விடுவார்கள். ஆனால், சிலைகளுக்காக ஒதுக்கியவற்றில் எதையும் அல்லாஹ்வுக்கென்று எடுக்க மாட்டார்கள். இதைப் பற்றியே அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகின்றான்:

விவசாயம், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற அல்லாஹ் உற்பத்தி செய்பவற்றில் ஒரு பாகத்தை தங்கள் விருப்பப்படி குறிப்பிட்டு ”இது அல்லாஹ்வுக்கு என்றும் (மற்றொரு பாகத்தை) இது எங்களுடைய தெய்வங்களுக்கு” என்றும் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேருவதில்லை. எனினும், அல்லாஹ்வுக்கென குறிப்பிட்டவை (நல்லவையாயிருந்தால்) அவர்களுடைய தெய்வங்களுக்கே சேர்ந்து விடுகின்றன! அவர்கள் செய்யும் இத்தீர்மானம் மிகக் கெட்டது. (அல்குர்ஆன் 6 : 136)

5) தங்களின் விவசாயங்கள் மற்றும் கால்நடைகளில் சிலவற்றை அந்த சிலைகளுக்காக நேர்ச்சை செய்தனர். இதைப் பற்றி பின்வரும் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:

(அன்றி அவர்கள் தங்கள்) ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு) ”இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி நாங்கள் விரும்புகிற (புரோகிதர்கள், குருமார்கள் ஆகிய) வர்களைத் தவிர (மற்றெவரும்) அதனைப் புசிக்கக்கூடாது” என்று (தங்கள் மூடக் கொள்கையின்படி) அவர்கள் கூறுகின்றனர். தவிர, அவ்வாறே வேறு சில) ஆடு, மாடு, ஒட்டகங்களின் முதுகுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. (அவற்றின் மீது ஏறுவதும், சுமையேற்றுவதும் கூடாது) என்றும், (வேறு) சில ஆடு, மாடு, ஒட்டகங்களை(க் குறிப்பிட்டு அவற்றை அறுக்கும்பொழுது) அவற்றின் மீது அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறக்கூடாது என்றும் (அல்லாஹ் கட்டளை இட்டிருப்பதாக) அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களுடைய இப்பொய்க் கூற்றுக்குத் தக்க கூலியை (அல்லாஹ்) பின்னர் அவர்களுக்குக் கொடுப்பான். (அல்குர்ஆன் 6 : 138)

6) பஹீரா, ஸாம்பா, வஸீலா, ஹாம் என்ற பெயர்களில் தங்களின் கால்நடைகளை சிலைகளுக்காக நேர்ச்சை செய்து விட்டனர்.

இவற்றைப் பற்றி ஸயீது இப்னுல் முஸய்யப் அவர்கள் கூறுகிறார்கள்:

பஹீரா: இவை சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட பிராணிகள். அதன் பாலை கறக்க மாட்டார்கள்.

ஸாம்பா: இவை சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட பிராணிகள். அதன் மேல் சுமைகளை ஏற்ற மாட்டார்கள்.

வஸீலா: தொடர்ந்து இரண்டு பெண் குட்டிகள் ஈன்ற ஒட்டகங்களைத் தங்களின் சிலைகளுக்காக நேர்ந்து விடுவார்கள். இந்த ஒட்டகங்கள் வஸீலா எனப்படும்.

ஹாம்: பத்து பெண் ஒட்டகைகளுடன் உறவுகொண்ட ஆண் ஒட்டகையை சிலைகளுக்காக நேர்ந்து விடுவார்கள். அதில் எவ்வித சுமையையும் ஏற்றமாட்டார்கள். இத்தகைய ஆண் ஒட்டகத்திற்கு ஹாம் எனப்படும். (ஸஹீஹுல் புகாரி)

மேற்கூறப்பட்ட கூற்றுக்கு சற்று மாற்றமாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: தொடர்ந்து பத்து பெண் குட்டிகளை ஈன்ற ஒட்டகத்தை சிலைகளுக்காக விட்டு விடுவார்கள். அதன் மீது எவ்விதச் சுமையையும் ஏற்றமாட்டார்கள். எவரும் அதை வாகனமாக்கி பயணிக்கவும் மாட்டார்கள். அதன் முடிகளை வெட்ட மாட்டார்கள். அதன் பாலை விருந்தினருக்கு மட்டுமே அளிப்பார்கள். இத்தகைய ஒட்டகத்திற்கு ‘ஸாம்பா’ என்று கூறப்படும். அதன் பிறகு இந்த ஸாம்பா ஒட்டகம் ஒரு பெண் குட்டியை ஈன்றால் அந்தக் குட்டியின் காதுகளை வெட்டிவிட்டு அதை அதன் தாயுடன் விட்டுவிடுவார்கள். அதன் மீதும் எவரும் பயணிக்க மாட்டார்கள். அதன் பாலை விருந்தினரைத் தவிர வேறு எவரும் அருந்தமாட்டார்கள். இந்தக் குட்டிக்கு ‘பஹீரா’ எனப்படும்.

வஸீலா: தொடர்ச்சியாக ஐந்து பிரசவங்களில் இரண்டிரண்டாக பத்து பெண் குட்டிகளை ஈன்ற ஆட்டுக்குச் சொல்லப்படும். அதன் பிறகு அந்த ஆடு ஈனும் குட்டி உயிருள்ளதாகப் பிறந்தால் அதனை ஆண்கள் மட்டும் புசிப்பார்கள். இறந்த நிலையில் பிறந்தால் ஆண், பெண் இருவரும் புசிப்பார்கள்.

ஹாம்: இது ஓர் ஆண் ஒட்டகையின் பெயராகும். அதன் உறவின் மூலம் இடையில் ஆண் குட்டிகளின்றி தொடர்படியாக பத்து பெண் குட்டிகள் ஈன்றிருந்தால் அந்த ஆண் ஒட்டகையின் மீது எவரும் சவாரி செய்ய மாட்டார்கள். அதன் முடிகளை வெட்ட மாட்டார்கள். அதை ஒட்டக மந்தையினுள் பெண் ஒட்டகைகளுடன் இணைவதற்காக அதை சுதந்திரமாக விட்டுவிடுவார்கள். இதைத் தவிர வேறு எதற்காகவும் அதனை பயன்படுத்தமாட்டார்கள்.

இதுபற்றி அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்:

பஹீரா. ஸாம்பா, வஸீலா, ஹாம் (போன்ற) இவையெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்தியவை அல்ல. எனினும், நிராகரிப்பவர்கள்தான் (இவைகள் அல்லாஹ் ஏற்படுத்தியவை என) அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களில் பலர் (உண்மையை) விளங்காதவர்களாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன் 5 : 103)

அன்றி, அவர்கள் (வேறு சிலவற்றைக் குறிப்பிட்டு) ”இந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் வயிற்றிலிருப்பவை எங்களுடைய ஆண்களுக்கு (மட்டும்) சொந்தமானவை. எங்களுடைய பெண்களுக்கு அவை தடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை செத்துப் பிறந்தால் அவற்றில் அவர்களுக்கும் பங்குண்டு” (அப்போது பெண்களும் புசிக்கலாம்.) என்றும் கூறுகின்றனர். ஆகவே, அவர்களுடைய இக்கூற்றிற்குரிய தண்டனையை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுத்தே தீருவான். நிச்சயமாக அவன் மிக்க ஞானமுடையவனாகவும், (அனைவரையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 6 : 139)

இவையல்லாத வேறு பல விளக்கங்களும் இக்கால்நடைகளைப் பற்றி விவரிக்கப்படுகிறது. (இப்னு ஹிஷாம்)

இந்தக் கால்நடைகள் அனைத்தும் அவர்களின் தெய்வங்களுக்குரியது என்ற ஸயீது இப்னுல் முஸய்யப் அவர்களின் கருத்தை முன்னர் பார்த்தோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நான் அம்ரு இப்னு ஆமிர் இப்னு லுஹய் அல் குஜாயியைப் பார்த்தேன். அவன் தனது குடலை நரக நெருப்பில் இழுத்துக் கொண்டிருக்கின்றான்.” (ஸஹீஹுல் புகாரி)

ஏனெனில், நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய நேரான மார்க்கத்தை சீர்குலைத்த முதல் வழிகேடன் அவனே. அவன்தான் சிலைகளை நிறுவினான். ஸாயிபா, பஹீரா, வஸீலா, ஹாம் ஆகிய பெயர்களில் சிலைகளுக்குக் கால்நடைகளை நேர்ச்சை செய்யும் பழக்கங்களை உருவாக்கினான். (ஃபத்ஹுல் பாரி)

அரபியர்கள் செய்த இவ்வாறான செயல்கள் அனைத்துக்கும் காரணம் என்னவெனில், அச்சிலைகள் தங்களை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கி வைக்கும்; அவனிடத்தில் தங்களை சேர்த்து வைக்கும்; தங்களுக்காக அல்லாஹ்விடத்தில் சிபாரிசு செய்யும் என நம்பிக்கை கொண்டிருந்ததுதான்.

இதைப்பற்றியே அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

எவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குப் பாதுகாவலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், ”அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவேயன்றி நாம் இவற்றை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). (அல்குர்ஆன் 39 : 3)

(இணைவைப்பவர்கள்) தங்களுக்கு யாதொரு நன்மையும் தீமையும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதுடன் ”இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை” என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 10 : 18)

மூடநம்பிக்கைகள்

அரபியர் அம்புகள் மூலம் குறிபார்ப்பவர்களாக இருந்தனர். அந்த அம்புகள் மூன்று வகையாக இருக்கும்.

முதல் வகை: இதில் மூன்று அம்புகள் வைக்கப்பட்டிருக்கும். ஒன்றில் ‘ஆம்!’ எனவும் மற்றொன்றில் ‘வேண்டாம்’ எனவும் எழுதப்பட்டு, மூன்றாவதில் எதுவும் எழுதப்படாமல் இருக்கும். திருமணம், பயணம் போன்ற முக்கியமானவற்றில் முடிவெடுப்பதற்காக அவற்றில் ஒன்றை எடுப்பார்கள். அவற்றில் ‘ஆம்!’ என்று எழுதப்பட்ட அம்பு வந்தால் அச்செயலைச் செய்வார்கள். ‘வேண்டாம்’ என்று எழுதப்பட்ட அம்பு வந்தால் அச்செயலை அவ்வருடம் தள்ளிப்போட்டு அடுத்த வருடம் செய்வார்கள். எதுவும் எழுதப்படாத அம்பு வந்தால் முந்திய இரண்டில் ஒன்று வரும்வரை திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

இரண்டாவது வகை: இந்த அம்புகளில் குற்றப் பரிகாரம் நஷ்டஈடு போன்ற விபரங்கள் எழுதப்பட்டிருக்கும்.

மூன்றாவது வகை: இந்த அம்புகளில் ‘மின்கும்’ (உங்களில் உள்ளவர்) என்று எழுதப்பட்ட ஓர் அம்பும் ‘மின்கைகும்’ (உங்களில் உள்ளவர் அல்லர்) என்று எழுதப்பட்ட ஓர் அம்பும், ‘முல்ஸக்’ (இணைக்கப்பட்டவர்) என்று எழுதப்பட்ட ஓர் அம்பும் என மூன்று அம்புகள் இருக்கும். அவர்களில் எவருக்கேனும் ஒருவரது வமிசம் பற்றி சந்தேகம் எழுந்தால் அவரை 100 திர்ஹம் 100 ஒட்டகைகளுடன் ‘ஹுபுல்’ என்ற சிலையிடம் அழைத்து வருவார்கள். தாங்கள் கொண்டு வந்த நாணயங்களையும் ஒட்டகங்களையும் அம்புகளுக்குப் பொறுப்பான பூசாரியிடம் கொடுத்து குறி கேட்பார்கள். பூசாரி அம்பை எடுப்பார். அப்போது ‘மின்கும்’ என எழுதப்பட்ட அம்பு வந்தால், அவரைத் தங்களது இனத்தைச் சேர்ந்தவராக ஒப்புக் கொள்வார்கள். ‘மின்கைகும்’ என்ற அம்பு வந்தால் அவரைத் தங்களுடன் நட்புகொண்ட கோத்திரத்தைச் சேர்ந்தவராகக் கருதுவார்கள். ‘முல்ஸக்’ என எழுதப்பட்ட அம்பு வந்தால் அவர் அதே நிலையில் நீடிப்பார். அதாவது அவருக்கு எந்த வமிசப் பரம்பரையும் கிடையாது. எந்த நட்பு கோத்திரத்தை சேர்ந்தவராகவும் அவரைக் கருத மாட்டார்கள். (இப்னு ஹிஷாம்)

இதுபோன்றே அம்புகள் மூலம் சூதாடும் ஒரு பழக்கமும் அவர்களது வழக்கத்தில் இருந்தது. அதாவது, அவர்கள் ஓர் ஒட்டகையை கடனாக வாங்கி வருவார்கள். பிறகு அதை அறுத்து 28 அல்லது 10 பங்குகளாகப் பிரிப்பார்கள். அவர்களிடம் இரண்டு அம்புகள் இருக்கும். ஒன்றில் ‘ராபிஹ்’ என்றும் இரண்டாவதில் ‘குஃப்ல்’ என்றும் அரபியில் எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொருவரின் பெயரையும் கூறி அம்புகளை உருவும்போது ‘ராபிஹ்’ என்ற அம்பு வந்தால் அவர் பணம் கொடுக்காமல் இறைச்சியில் அவருக்குரிய பங்கை மட்டும் எடுத்துக் கொள்வார். ‘குஃப்ல்’ என்ற அம்பு வந்தால் அவர் தோல்வியடைந்தவர் ஆவார். அவருக்கு இறைச்சியில் பங்கு எதுவும் கிடைக்காது. ஆனால், அந்த முழு ஒட்டகைக்கான விலையையும் அவரே கொடுக்க வேண்டும்.

மேலும் சோதிடன், குறிகாரன், நட்சத்திர ராசிபலன் கூறுபவன், காணாமல் போனதை கண்டுபிடித்துத் தருபவன் ஆகியோரின் பேச்சுகளிலும் ஆருடங்களிலும் அம்மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

கான்: உலகில் நடக்க இருக்கும் செய்திகள் மற்றும் இரகசியங்கள் தனக்குத் தெரியும் என்று வாதிடுபவன். அவர்களில் தங்களுக்கு ஜின் செய்தி கொண்டு வருகிறது என்று கூறுபவரும் தனது அறிவாற்றலின் மூலம் மறைவானவற்றை அறிவோம் என்று கூறுபவரும் உள்ளனர்.

அர்ராஃப்: தன்னிடம் வருபவர்களின் சொல், செயல் நிலைகளை ஆராய்ந்து செய்திகளைக் கூறுபவன். எடுத்துக்காட்டாக திருடுபோன பொருள்கள் எங்கிருக்கிறது? திருடியவன் யார்? காணாமல் போன பொருள் எங்கிருக்கிறது? போன்ற விபரங்கள் அனைத்தையும் தன்னால் அறிந்து கொள்ளமுடியும் என்று கூறுபவனைப் போல!

முநஜ்ஜிம்: நட்சத்திரம் மற்றும் கோள்களின் சுழற்சியைக் கவனித்து உலகின் நிலைமைகளையும் வருங்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் தன்னால் அறியமுடியும் எனக் கூறுபவன்.

இந்த முநஜ்ஜிம்களின் கூற்றை அவர்கள் நம்புவது உண்மையில் நட்சத்திரத்தை நம்புவதாகும். அவர்கள் நட்சத்திரங்களின் மீது நம்பிக்கை கொண்டிருந்ததின் காரணமாக, மழை பொழிந்தால் அம்மழை பருவ நட்சத்திரத்தின் காரணமாகவே பொழிந்தது என்று கூறுபவர்களாக இருந்தனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அவர்களிடையே துற்குறி மற்றும் சகுனம் பார்க்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. அவர்களுடைய வழக்கத்தில் ஒன்று, ஏதாவதொரு காரியத்தை செய்ய நினைத்தால் ஒரு பறவையை அல்லது மானை விரட்டுவார்கள். அது வலப்புறமாகச் சென்றால் அதை நற்சகுனமாகக் கருதி தான் விரும்பியிருந்த காரியத்தை செயல்படுத்துவார்கள். இடப்புறமாகச் சென்றால் அதை அபசகுணமாகக் கருதி செயல்படுத்த மாட்டார்கள். இவ்வாறே அவர்கள் சென்று கொண்டிருக்கும் பாதையில் ஏதேனும் பிராணிகளோ, பறவைகளோ குறுக்கிட்டால் அதிலும் சகுனம் பார்ப்பார்கள்.

அவ்வாறே அவர்கள் முயலின் கெண்டைக்கால் பகுதியை தங்களது இல்லங்களில் தொங்க விடுவார்கள். (நம் நாட்டில் நரிப்பல், புலிப்பல் மயில் இறகு போன்றவற்றை பயன்படுத்துவதுபோல) சில நாள்கள், மாதங்கள், பிராணிகள், வீடுகள், பெண்கள் ஆகியவற்றிலும் அபசகுனம் பார்த்தனர். மேலும், தொற்று நோய் இருப்பதாகவும் நம்பினர். மேலும் ‘ஹாம்மா’ என்பதும் அவர்களது நம்பிக்கையாக இருந்தது. அதாவது, ”ஒருவன் கொலை செய்யப்பட்டால் கொலையாளியிடம் பழி தீர்க்கப்படாதவரை அவனது ஆன்மா சாந்தியடையாமல் வீடுகளின் மேல் ஆந்தை உருவில் பறந்துகொண்டு ”தாகம்! தாகம்! என் தாகத்தைத் தணியுங்கள்! என் தாகத்தைத் தணியுங்கள்” என கூச்சலிட்டுக் கொண்டிருக்கும். கொலையாளியை பழிவாங்கினால் மட்டுமே ஆன்மா சாந்தியடையும்” எனவும் நம்பிக்கை கொண்டிருந்தனர். (ஸஹீஹுல் புகாரி)

அறியாமைக்கால அரபியர்களிடம் இவ்வாறான மூட நம்பிக்கைகள் நிறைந்திருந்தபோதிலும் இப்றாஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின் சில நெறிமுறைகளும் அவர்களிடையே எஞ்சியிருந்தன. அந்த மார்க்கத்தை அவர்கள் முற்றிலுமாக புறக்கணித்து விடவில்லை. எடுத்துக்காட்டாக, இறையில்லமான கஅபாவை கண்ணியப்படுத்துதல், அதனை வலம் வருவது, ஹஜ், உம்ரா செய்வது, அரஃபா முஜ்தலிஃபாவில் தங்குவது, அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுதல் போன்ற நற்செயல்கள் அவர்களிடம் நிலைபெற்றிருந்தன. எனினும், அந்த நற்செயல்களில் பல மூட நம்பிக்கைகளையும் புகுத்தியிருந்தனர்.

அந்த மூடநம்பிக்கைகளில் சில,

1) குறைஷிகள் இவ்வாறு கூறி வந்தனர்: நாங்கள் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்ததிகள்; புனித மக்காவின் பூர்வகுடிகள்; சங்கைமிகு கஅபாவின் நிர்வாகிகள். ஆகவே ”எங்களைப் போன்ற அந்தஸ்தோ உரிமைகளோ வேறு அரபியர் எவருக்கும் கிடையாது” என்றனர். அவர்கள் தங்களுக்கு ‘ஹும்ஸ்’ எனப் பெயரிட்டுக் கொண்டனர். ஹஜ் காலங்களில் நாங்கள் ஹரமின் எல்லையை விட்டு வெளியேறி ஹில் (ஹரம் அல்லாத) பகுதிகளுக்குச் செல்லக் கூடாது என்று கூறி அவர்கள் ஹஜ் காலத்தில் அரஃபாவில் தங்க மாட்டார்கள். முஜ்தலிஃபாவில் இருந்தே திரும்பி விடுவார்கள். இதனைத் தடை செய்து அல்லாஹ் பின்வரும் குர்ஆன் வசனத்தை இறக்கினான்,

பின்னர் மனிதர்கள் திரும்புகின்ற இடத்திலிருந்தே நீங்களும் திரும்பிவிடுங்கள். (அல்குர்ஆன் 2 : 199) (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)

2) அவர்கள் கூறினார்கள்: ஹும்ஸ் ஆகிய எங்களுக்குப் பாலாடைக் கட்டி செய்வதும் நெய் உருக்குவதும் இஹ்ராமுடைய நிலையில் தடை செய்யப்பட்டது. மேலும், இஹ்ராமில் இருக்கும் போது கம்பளிக் கூடாரங்களில் நுழைய மாட்டோம். தோலினால் ஆன கூடாரங்களைத் தவிர மற்ற கூடாரங்களில் நிழலுக்காக ஒதுங்கமாட்டோம். (இப்னு ஹிஷாம்)

3) ஹரமுக்கு வெளியிலிருந்து ஹஜ் மற்றும் உம்ராவுக்கு வருபவர்கள் தங்களது பகுதியிலிருந்து கொண்டு வந்த உணவு மற்றும் பானங்களை ஹரமுக்குள் உண்ணவோ பருகவோ கூடாது. ஹரமின் பகுதியில் கிடைப்பதையே உண்ண வேண்டும். (இப்னு ஹிஷாம்)

4) ஹரமின் வெளிப் பகுதியிலிருந்து வருபவர்கள் கஅபாவை வலம் வரும்போது ‘ஹும்ஸ்’கள் கொடுக்கும் ஆடைகளை அணிந்தே வலம் வருவதை ஆரம்பிக்க வேண்டும். இதற்காக வெளியிலிருந்து வரும் ஆண்களுக்கு குறைஷி ஆண்களும், அதே போன்று பெண்களுக்குக் குறைஷிப் பெண்களும் ஆடைகளை நன்மையைக் கருதி இலவசமாகக் கொடுத்து வந்தனர். ஆடைகள் கிடைக்காத பட்சத்தில் ஆண்கள் நிர்வாணமாக வலம் வருவார்கள். பெண்கள் தங்களது அனைத்து ஆடைகளையும் களைந்துவிட்டு முன்பகுதி திறந்துள்ள ஒரு மேல் சட்டையை மட்டும் அணிந்துகொண்டு வலம் வருவார்கள். அப்போது அப்பெண்கள் இக்கவிதையைக் கூறுவார்கள்.

”இன்று (உடலின்) சில பகுதிகளோ அல்லது முழுப் பகுதியோ வெளிப்படுகிறது. அவற்றில் எது வெளிப்படுகிறதோ அதைக் காண்பது எவருக்கும் முறையற்றது.”

இச்செயலைக் கண்டித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தை அருளினான்:

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 7 : 31)

அதேநேரத்தில் யாரேனும் ஓர்ஆண் அல்லது பெண் தங்களை மேன்மையானவர்களாக கருதி இரவல் ஆடை வாங்காமல் தாங்கள் கொண்டு வந்த ஆடையிலேயே வலம் வந்துவிட்டால் அது முடிந்தவுடன் அந்த ஆடையை எறிந்து விடுவார்கள். வேறு யாரும் அதனைப் பயன்படுத்த மாட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)

5) அவர்கள் இஹ்ராம் அணிந்த பிறகு தங்களது வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் வீட்டு தலைவாசல் வழியாக நுழையாமல் பின்பக்கச் சுவரை உடைத்து வழி ஏற்படுத்திக் கொண்டு அதன் வழியாகவே போவார்கள், வருவார்கள். இந்த மூடத்தனமான செயலை மிகவும் உயர்ந்த நற்செயல் என அவர்கள் கருதினார்கள். இதை கண்டித்து பின்வரும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான்:

(நம்பிக்கையாளர்களே! இஹ்ராம் கட்டிய) நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் பின்புறமாக வந்து விடுவதனால் நல்லவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். எனினும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றாரோ அவரே நல்லவர். ஆதலால், நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்களின் வழியாக(வே) வாருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்தும் நடந்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடையலாம். (அல்குர்ஆன் 2 : 189) (ஸஹீஹுல் புகாரி)

இணைவைத்தல், சிலை வணக்கம், மூட நம்பிக்கைகள், மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவையே அரபிய தீபகற்பத்தில் பரவி இருந்தன. இது தவிர யூத, கிருஸ்துவ, மஜூஸி, ஸாபி போன்ற மதங்கள் அரபிய தீபகற்பத்தில் ஆங்காங்கே காணப்பட்டன.

இரண்டு கட்டங்களில் யூதர்கள் அரபிய தீபகற்பத்தில் ஊடுருவினர்.

1) ஃபலஸ்தீனத்தை ‘புக்து நஸ்ரு’ என்ற மன்னன் கி.மு. 587 ஆம் ஆண்டு கைப்பற்றி அங்கு வாழ்ந்த யூதர்களை நெருக்கடிக்குள்ளாக்கினான். யூதர்களின் நகரங்களை அழித்து அவர்களது வசிப்பிடங்களை நாசமாக்கினான். மேலும், அவர்களில் அதிகமானோரை பாபில் நகருக்கு கைதிகளாக்கிக் கொண்டு சென்றான். இதனால் அவர்களில் ஒரு பிரிவினர் ஃபலஸ்தீனத்தை துறந்து ஹிஜாஸின் வட பகுதிகளில் குடியேறினர்.

2) கி.பி. 70 ஆம் ஆண்டில் ‘டைடஸ்’ என்ற ரோமானிய மன்னன் ஃபலஸ்தீனை கைப்பற்றினான். அவன் யூதர்களையும் அவர்களது வசிப்பிடங்களையும் அழித்தொழித்தான். அதன் விளைவாக ஏராளமான யூதர்கள் ஹிஜாஸ் பகுதியிலுள்ள மதீனா, கைபர், தீமா ஆகிய நகரங்களில் குடியேறினர். அங்கு தங்களுக்கென சிறந்த வசிப்பிடங்களையும் கோட்டைக் கொத்தளங்களையும் ஏற்படுத்திக் கொண்டனர். இந்த யூதர்களால் அரபியர்களிடையே யூத மதம் பரவ ஆரம்பித்தது. இஸ்லாமின் வருகைக்கு முன்பும் இஸ்லாமுடைய வருகையின் ஆரம்ப காலக்கட்டத்திலும் நடந்த அரசியல் சார்ந்த அனைத்து நிகழ்வுகளிலும் யூத மதத்திற்குக் குறிப்பிடத் தகுந்த முக்கியத்துவம் இருந்தது. இஸ்லாம் தோன்றியபோது இருபதுக்கும் மேற்பட்ட யூத கோத்திரங்கள் அரபிய தீபகற்பத்தில் இருந்தன. அவற்றில் பிரபலமானவை கைபர், நழீர், முஸ்தலக், குரைளா, கைனுகாஃ ஆகிய கோத்திரங்களாகும். (ஸஹீஹுல் புகாரி, வஃபாவுல் வஃபா)

‘துப்பான் அஸ்அத் அபூ கரப்’ என்பவனால் யூதமதம் யமன் நாட்டிலும் நுழைந்தது. இவன் மதீனாவின் மீது போர் தொடுத்தான். பிறகு அங்கே, யூதர்கள் மூலம் யூத மதத்தைத் தழுவினான். குரைளா குடும்பத்தைச் சார்ந்த இரு யூத அறிஞர்களை அவன் தன்னுடன் யமன் நாட்டுக்கு அழைத்துச் சென்றான். அதிலிருந்து யமனில் யூதமதம் பரவியது. அபூ கரபுக்குப் பிறகு அவனது மகன் யூஸுப் தூ நுவாஸ் யமனின் அரசனானான். அவன் நஜ்ரான் பகுதியிலிருந்த கிறிஸ்துவர்கள் மீது படையெடுத்து அவர்களை யூத மதத்திற்கு மாறும்படி நிர்ப்பந்தித்தான். அவர்கள் மறுத்துவிடவே பெரும் அகழிகளைத் தோண்டி அதை நெருப்புக் குண்டமாக ஆக்கி அதில் ஆண், பெண், குழந்தைகள் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைவரையும் தூ நவாஸ் வீசி எறிந்தான். அதில் ஏறத்தாழ இருபதாயிரத்திலிருந்து நாற்பதாயிரம் கிறிஸ்துவர்கள் வரை கொல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சி கி.பி. 523ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. (இப்னு ஹிஷாம்)

இதைப் பற்றி அல்லாஹ் தனது அருள்மறையில் இவ்வாறு குறிப்பிடுகிறான்:

அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்.) அது, விறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்.) அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில், நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள். (அல்குர்ஆன் 85 : 4 – 7)

கிறிஸ்துவ மதம்: ஹபஷியர் மற்றும் சில ரோமானிய குழுக்களின் ஆக்கிரமிப்புகளால் அரபிய நாடுகளுக்குள் இம்மதம் புகுந்தது. ஹபஷிகள் யமன் நாட்டை முதன்முறையாக கி.பி. 340 ஆம் ஆண்டில் கைப்பற்றினர். அவர்களது ஆக்கிரமிப்பு நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை. கி.பி. 370லிருந்து 378 வரையுள்ள காலத்தில் அவர்கள் யமனிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். எனினும், கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதில் அவர்கள் வெறிகொண்டு அலைந்தனர். ஹபஷியர்களின் ஆக்கிரமிப்பு காலத்தில் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த ‘ஃபீம்யூன்’ எனும் ஓர் இறைநேசர் நஜ்ரான் வந்தடைந்தார். அங்கு வசிப்பவர்களை கிறிஸ்துவத்தைத் தழுவ அழைத்தார். அவன் வாய்மையையும் அவரது நேரிய மார்க்கத்தையும் கண்ட அம்மக்கள் ஆர்வத்துடன் கிறிஸ்துவத்தில் இணைந்தனர். (இப்னு ஹிஷாம்)

நஜ்ரானில் வசித்த கிறிஸ்துவர்களை மன்னன் தூ நுவாஸ் நெருப்பு அகழியில் எரித்துக் கொன்றானல்லவா! அதற்குப் பழிவாங்கும் முகமாக ஹபஷியர்கள் இரண்டாவது முறையாக கி.பி 525ஆம் ஆண்டில் யமனைக் கைப்பற்றினர். அப்போது ‘அப்ரஹா அல் அஷ்ரம்’ என்பவன் யமனை ஆட்சி செய்தான். அவன் கிறிஸ்துவத்தை தீவிரமாக பரப்புவதில் மிகுந்த ஆர்வம் காட்டினான். அவன் யமனில் ஒரு கிறிஸ்துவ கோயிலைக் கட்டினான். கஅபாவை ஹஜ்ஜு செய்யச்செல்லும் அரபியர்கள் ஹஜ்ஜுக்காக கஅபா செல்வதைத் தடுத்து, தான் கட்டிய கோயிலைத் தரிசிக்க வரவேண்டும்; கஅபாவை இடித்துத் தகர்த்திட வேண்டுமென விரும்பினான். ஆனால் கடுந்தண்டனையால் அல்லாஹ் அவனை அழித்துவிட்டான்.

மற்றொரு புறம், ரோம் பகுதிகளை ஒட்டியிருந்த காரணத்தால் கஸ்ஸானிய அரபியர்கள், தங்லிப், தய்ம் வமிசத்தைச் சேர்ந்த அரபியர்களும் கிறிஸ்துவ மதத்தைத் தழுவினர். இதைத்தவிர ஹீராவின் சில அரசர்களும் கிறிஸ்துவத்தைத் தழுவினர்.

மஜூஸிய்யா: (நெருப்பை வணங்கும் மதம்) இது பெரும்பாலும் பாரசீகத்தை ஒட்டியிருந்த அரபியர்களிடம் காணப்பட்டது. இராக், பஹ்ரைன், அல் அஹ்ஸா, ஹஜர் மற்றும் அரபிய வளைகுடா பகுதிகளில் வசித்து வந்த அரபியர்களும் இதைப் பின்பற்றினர். இது மட்டுமின்றி யமன் நாட்டை பாரசீகர்கள் கைப்பற்றியிருந்த காலத்தில் யமனியர் பலர் மஜூஸி மதத்தில் இணைந்தனர்.

ஸாபியிய்யா: இது நட்சத்திரங்களை வணங்கும் மதம். அதாவது, கோள்களும் நட்சத்திரங்களும் தான் இவ்வுலகை இயக்கி வருகின்றன என்று நம்பிக்கை கொள்ளும் மதமாகும். இராக் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியும், தொல்பொருள் ஆராய்ச்சியும் இது இப்றாஹீம் (அலை) அவர்களின் கல்தானி இனத்தவர் மதமாக இருந்தது என தெரிவிக்கின்றன. முற்காலத்தில் ஷாம் மற்றும் யமன் நாடுகளில் அதிகமானவர்கள் இம்மதத்தையே பின்பற்றினர். எனினும், யூத மற்றும் கிறிஸ்துவ மதங்கள் தோன்றி வலிமை பெற்றபோது ஸாபியிய்யா மதத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காண ஆரம்பித்து, அதன் வளர்ச்சி பெரிதும் குன்றியது. எஞ்சியிருந்த இம்மதத்தைச் சேர்ந்தவர்கள் மஜூஸிகளுடன் கலந்து வாழ்ந்தனர். அல்லது அரபிய வளைகுடா பகுதிகளிலும் இராக்கிலும் வாழ்ந்து வந்தனர். யமன் நாட்டிலுள்ள ஹீரா பகுதியின் வழியாக இம்மதத்தை பின்பற்றியவர்களின் கலாச்சாரம் அரபியர்களிடமும் பரவியது. அவ்வாறே பாரசீகர்களுடன் வியாபாரத் தொடர்பு கொண்டிருந்ததன் காரணமாக அவர்களின் மதக் கலாச்சாரம் குறைஷியர்களில் சிலரிடமும் காணப்பட்டது.

சமயங்களின் நிலைமைகள்

இஸ்லாமியப் பேரொளி பிரகாசிக்கத் தொடங்கியபோது இம்மதங்களையே அரபியர்கள் பின்பற்றிக் கொண்டிருந்தனர். அதற்கு முன்பிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக இம்மதங்கள் வீழ்ச்சியடைய ஆரம்பித்தன. ‘நாங்களே நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தில் நிலைத்திருக்கிறோம்’ என வாய்ப்பந்தல் கட்டியிருந்த முஷ்ரிக்குகள் உண்மையில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கச் சட்ட ஏவல்களையும் விலக்கல்களையும் பின்பற்றுவதிலிருந்து வெகுதூரம் விலகியிருந்தனர். அவர்கள் கற்றுத் தந்த நற்பண்புகளை முழுதும் புறக்கணித்து வாழ்ந்தனர். அவர்களிடையே குற்றங்கள் மலிந்து, சிலை வணங்கிகளிடம் இருக்கும் மூட நம்பிக்கைகளும் வழிகேடுகளும் கால ஓட்டத்தில் அவர்களின் மதச் சடங்குகளாக மாறின. இச்சடங்குகளும் மூட நம்பிக்கைகளும் அவர்களது சமய, சமூக, அரசியல் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின.

யூத மதம் முற்றிலும் முகஸ்துதியாகவும், சர்வாதிகாரமாகவும் மாறியிருந்தது. அம்மதத் துறவிகளும் அதன் தலைவர்களும் கடவுளர்களாக விளங்கினர். மார்க்க சட்டங்கள் என்ற பெயரால் வாழ்க்கையை நெருக்கடியாக்கி தங்கள் விருப்பத்திற்கேற்ப மக்களைக் கசக்கிப் பிழிந்தனர். மக்களிடையே இறை நிராகரிப்பும், சமூகச் சீர்கேடுகளும் பரவிக் கிடந்தாலும், நேரிய மார்க்கம் சிதைக்கப்பட்டு சீர்கெட்டிருந்தாலும், அதைப் பற்றிச் சிறிதும் கவலையின்றி தலைமைத்துவத்தை தக்க வைத்துக் கொள்வதிலும் செல்வங்களை சேகரிப்பதிலுமே கவனம் செலுத்தினார்கள். எத்தகைய உயர் போதனைகளைக் கற்று அதனைப் பின்பற்றி வாழ வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டிருந்தானோ அவையனைத்திற்கும் சமாதி கட்டினர்.

கிறிஸ்துவ மதம் சிலைவணங்கும் மதமாக மாறியது. அல்லாஹ்வுக்கும் மனிதர்களுக்குமிடையே புதுமையானதொரு கலப்படத்தை கிறிஸ்துவ மதம் போதித்தது. அந்த மதத்தைப் பின்பற்றிய அரபியிடம் அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், அதன் போதனைகள் வாழ்க்கை நெறிக்கு ஏற்றதாக இருக்கவில்லை. அம்மக்களுக்கு அதிலிருந்து விலகுவதும் சிரமமாக இருந்தது.

அரபியர்களின் ஏனைய மதக்கோட்பாடுகள் சிலைவணங்கிகளின் மதக்கோட்பாடுகளுக்கு ஒத்திருந்தன. அவர்களின் இதயங்கள், கொள்கைகள், மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் கூட ஒன்றுபட்டிருந்தன.

சுட்டி: ரஹீக் ஆடியோ

Friday, January 23, 2015

[ரஹீக் 006] – அரபு நாட்டில் ஆட்சி அதிகாரம்

நபி (ஸல்) அவர்கள் தங்களது ஏகத்துவ அழைப்பைத் தொடங்கிய காலகட்டத்தில் அரபிய தீபகற்பத்தில் ஆட்சி செய்தவர்கள் இரு வகையினராக இருந்தனர்.

1) முடிசூட்டப்பட்டவர்கள்: ஆனால் இவர்களில் பலர் தனித்து இயங்கும் சுதந்திரம் பெறவில்லை. மாறாக, ஒரு பேரரசுக்குக் கீழ் கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருந்தனர்.

2) குடும்பம் மற்றும் கோத்திரங்களின் தலைவர்கள்: முடிசூட்டப்பட்ட அரசர்களுக்குரிய தனித்தன்மையும் உரிமையும் இவர்களுக்கும் இருந்தன. இவர்களில் பெரும்பாலோர் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டனர். மற்றும் சிலர் ஏதாவது ஓர் அரசரின் பிரதிநிதியாக செயல்பட்டனர்.

முடியரசர்களின் விபரம் பின்வருமாறு: யமன் நாட்டு அரசர்கள், ஷாம் நாட்டு அரசர்கள், (இவர்களை கஸ்ஸானின் குடும்பத்தவர்கள் என வரலாற்றில் கூறப்படுகிறது) ஹீரா நாட்டு அரசர்கள். இவர்களைத்தவிர வேறு சில அரசர்களும் இருந்தனர். அவர்களுக்கு முறையாக முடிசூட்டப்படவில்லை. இந்த அரசர்கள் மற்றும் தலைவர்கள் பற்றி சுருக்கமாகக் காண்போம்.

அ) யமன் நாடு (ஏமன்)

‘அல் அரபுல் ஆபா’ எனும் அரபியர்கள் ‘ஸபா கூட்டத்தினர்’ என யமனில் புகழ் பெற்றிருந்த மிகப்பழமையானவர்கள். அவர்கள் கி.மு. 25 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்ததாக ‘அவ்ர்’ எனும் நகரில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் சான்றுகள் கிடைத்துள்ளன. கி.மு. 11 ஆம் நூற்றாண்டில் அவர்களது ஆட்சியும் ஆதிக்கமும் செழிப்படைய ஆரம்பித்தது.

அவர்களது காலத்தைப் பின்வருமாறு பிரிக்கலாம்:

1) கி.மு. 1300 லிருந்து கி.மு. 620 வரை

இக்காலகட்டத்தில் அவர்களது நாடு ‘மயீனிய்யா’ என அழைக்கப்பட்டது. நஜ்ரானுக்கும் ஹழர மவ்த்துக்குமிடையே உள்ள ‘ஜவ்ஃப்’ எனும் பகுதியில் அவர்களது ஆட்சி தோன்றி வளர்ச்சி பெற்று ஹிஜாஸின் வட பகுதியான ‘மஆன்’ மற்றும் ‘உலா’ வரை பரவியிருந்தது.

மயீனியா அரசாங்கத்தின் ஆதிக்கம் அரபிய நாடுகளின் எல்லைகளுக்கு வெளியேயும் விரிவடைந்திருந்ததாக கூறப்படுகிறது. வணிகமே அவர்களது முக்கிய வாழ்வாதாரமாகத் திகழ்ந்தது. அவர்கள்தான் மஃரப் நகரில் யமனுடைய வரலாற்றில் புகழ்பெற்ற மிகப்பெரும் அணைக்கட்டைக் கட்டினார்கள். அதனால் அவர்களது நிலங்கள் செழிப்படைந்தன. ஆயினும், அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாமல் பாவங்கள் புரிந்தனர். இதைப்பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

… அவர்கள் (அல்லாஹ்வை) நினைப்பதையே மறந்து (தாங்களாகவே பாவம் செய்து) அழிந்துபோகும் மக்களாகி விட்டார்கள். (அல்குர்ஆன் 25 : 18)

இக்காலக்கட்டத்தில் அவர்களது அரசர்கள் ‘மக்பு ஸபஃ’ எனும் புனைப்பெயரால் அழைக்கப்பட்டனர். அவர்களது தலைநகரம் ஸிர்வாஹ் ஆகும். மஃப் எனும் நகலிருந்து வட மேற்கில் 50 கிலோ மீட்டர் தொலைவிலும் ஸன்ஆவுக்குக் கிழக்கே 142 கிலோ மீட்டர் தொலைவிலும் அந்நகரத்தின் சிதிலங்கள் காணக்கிடைக்கின்றன. அந்நகரம் இன்று ‘குரைபா’ எனும் பெயரில் அறியப்படுகிறது. இவ்வரசர்களின் எண்ணிக்கை 22 லிருந்து 26 வரை இருந்தது.

2) கி.மு. 620லிருந்து கி.மு. 115 வரை

யமன் நாட்டு அரசாட்சி இக்காலக்கட்டத்தில் ‘ஸபா’ என அழைக்கப்பட்டது. இக்காலத்தில் ஆட்சி செய்தவர்கள் ‘மக்ப்’ என்ற தங்களது புனைப் பெயரைத் தவிர்த்து விட்டார்கள். அதன் ஆட்சியாளர்களை ஸபா மன்னர்கள் என அழைக்கப்பட்டது. ‘ஸிர்வா’ என்ற நகருக்கு பதிலாக ‘மஃரப்’ என்ற நகரை தங்களது தலைநகராக்கிக் கொண்டனர். மஃரப் நகரத்தின் சிதைந்த கட்டடங்கள் ‘ஸன்ஆ’ நகரின் கிழக்கே 192 கிலோ மீட்டர் தொலைவில் இன்றும் காணப்படுகின்றன.

3) கி.மு. 115லிருந்து கி.பி. 300 வரை

இக்காலக்கட்டத்தில் அந்நாடு ‘முதலாம் ஹிம்யரிய்யா அரசு’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ஏனெனில், ஹிம்யர் குலத்தவர் ஸபாவை வெற்றி கொண்டு தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். முன்பு அந்நாட்டை ஆட்சி செய்தவர்கள் ‘ஸபா’ அரசர்கள் மற்றும் ‘தூரைதான்’ அரசர்களென அழைக்கப்பட்டனர். இம்மன்னர்கள் ‘மஃரப்’க்கு பதிலாக ரைதான் என்பதை தங்களது தலைநகராக அமைத்துக் கொண்டனர். ரைதான் நகருக்கு ‘ளிஃபார்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. அந்நகரின் சிதைவுகள் ‘யர்யம்’க்கு சமீபமாக மதூர் எனும் மலையின் அருகாமையில் காணப்படுகின்றன. இக்காலத்தில்தான் ஸபா அரசுக்கு அழிவும் வீழ்ச்சியும் ஆரம்பமாயின. அவர்களின் வணிகங்களும் நசிந்தன.

அதற்குரிய காரணங்களாவன: 1) ‘நிப்த்’ இனத்தவர் ஹிஜாஸின் வடபகுதியில் தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்தினர். 2) ரோமர்கள் மிஸ்ர் (எகிப்து), ஷாம் (சிரியா) மற்றும் ஹிஜாஸின் வடபகுதியை ஒட்டியுள்ள நகரங்களில் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்தி யமன் நாட்டு அரசர்களின் வியாபாரத்திற்கான கடல்மார்க்கத்தையும் அடைத்து விட்டனர். 3) அவர்களது கோத்திரங்களுக்குள் சண்டை சச்சரவுகள் தோன்றின. ஆக, இம்மூன்று காரணங்களால் அவர்களது ஆட்சி வீழ்ச்சி கண்டது. மேலும், கஹ்தான் வமிசத்தவர்கள் யமன் நாட்டை துறந்து தூரமான நாடுகளில் குடிபெயர்ந்தனர்.

4) கி.பி. 300லிருந்து இஸ்லாம் நுழையும்வரை

இக்காலக்கட்டத்தில் அந்நாடு ‘இரண்டாம் ஹிம்யரிய்யா அரசு’ என அழைக்கப்பட்டது. அப்போது ஆட்சி செய்தவர்கள் ஸபஃ, தூரைதான், ஹழர மவ்த், யம்னுத் அரசர்கள் என அழைக்கப்பட்டனர். இக்காலத்தில் உள்நாட்டு குழப்பங்கள், குடும்பச் சண்டைகள், புரட்சிகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. அதன் காரணமாக அவர்களது அரசாட்சி முடிவுக்கு வந்தது. இக்காலத்தில் ரோமர்கள் ‘அத்ன்’ நகரைக் கைப்பற்றினர். ஹம்தான் மற்றும் ஹிம்யர் குலத்தவடையே இருந்த போட்டியைப் பயன்படுத்திக் கொண்டு ரோமர்களின் உதவியுடன் ஹபஷியர்கள் முதன் முதலாக கி.பி. 340ல் யமன் நாட்டை கைப்பற்றினர். இவர்களின் ஆட்சி கி.பி. 378 வரை நீடித்தது. அதற்குப்பின் அந்நாடு ஹபஷியர்களின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரமடைந்தது. கி.பி. 450 அல்லது 451ல் மாபெரும் வெள்ளப் பிரளயம் ஏற்பட்டு அவர்களது நகரங்கள் பெருத்த சேதம் அடைந்ததால், நகரங்களைத் துறந்து பல இடங்களுக்குச் சென்று குடியேறினர். இவ்வெள்ளப் பிரளயத்தை ‘சைலுல் அரிம்’ என மேன்மைமிகு குர்ஆன் கூறுகிறது.

கி.பி. 523ம் ஆண்டில் யமன் நாட்டை ஆட்சி செய்த ‘தூ நுவாஸ்’ என்ற யூதக் கொடுங்கோலன் நஜ்ரான் வாழ் கிருஸ்துவர்கள் மீது கொடூரமான தாக்குதலைத் தொடுத்தான். அவர்களை பலவந்தமாக கிருஸ்துவ மதத்திலிருந்து மாற்றிட முனைந்தான். அவர்கள் மறுத்ததன் காரணமாக பெரும் அகழ்களைத் தோண்டி நெருப்புக் குண்டத்தை வளர்த்து, அதனுள் அவர்களை வீசி எறிந்தான். இது குறித்து அல்லாஹ் தனது அருள்மறையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்:

விறகுகள் போட்டு எரிக்கும் நெருப்பு அகழ் தோண்டியவர்கள் அழிக்கப் பட்டார்கள்…. (அல்குர்ஆன் 85 : 4-7)

இச்சம்பவத்தால் கிறிஸ்துவர்கள் மிகவும் கொதிப்படைந்து பழிவாங்கத் துடித்தனர். எனவே, ரோமானிய அரசர்களின் தலைமைக்கு கீழ் ஒன்றிணைந்து யமன் நாட்டின் மீது போர் புரிய ஆயத்தமாயினர்.

ரோம் மன்னர்கள் ஹபஷியர்களைத் தூண்டிவிட்டு அவர்களுக்கென கப்பல் மற்றும் படகுகளைத் தயார்செய்து கொடுத்தார்கள். அதன் காரணமாக ‘அர்யாத்’ என்பவன் தலைமையில் ஹபஷாவிலிருந்து 70,000 வீரர்கள் யமன் வந்திறங்கி கி.பி 525ம் ஆண்டு அதனை இரண்டாவது முறையாக கைப்பற்றினர். அர்யாத் கி.பி 549 வரை ஹபஷா மன்னன் கவர்னராக இருந்தான். அர்யாத்தின் தளபதிகளில் ஒருவனான ‘அப்ரஹா இப்னு ஸப்பாஹ் அல் அஷ்ரம்’ என்பவன் அர்யாதை வஞ்சகமாகக் கொலை செய்துவிட்டு ஹபஷா மன்னன் ஒப்புதலுடன் தன்னை அரசனாக அறிவித்துக் கொண்டான். இந்த அப்ரஹாதான் இறையில்லமான கஅபாவை இடிக்க படையைத் திரட்டியவன். அவனும் அவனது யானைப் படையினரும் ‘அஸ்ஹாபுல் ஃபீல்’ என அறியப்படுகின்றனர். அந்நிகழ்ச்சிக்குப்பின் ஸன்ஆ திரும்பிய அவனை அல்லாஹ் அழித்தொழித்தான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் ‘யக்ஸூம்’ என்பவனும் அதற்குப் பிறகு இரண்டாவது மகன் ‘மஸ்ரூக்’ என்பவனும் யமனை ஆட்சி செய்தனர். இந்த இருவரும் தங்களது தந்தையைவிட குடிமக்களைக் கொடுமை செய்யும் மிகக் கொடிய கொடுங்கோலர்களாக இருந்தனர்.

யானை சம்பவத்திற்குப்பின் கி.பி. 575ல் யமனியர், மஅதீ கப ஸைஃப் இப்னு தூ யஜின் அல்ஹிம்யரின் தலைமையின் கீழ் பாரசீகர்களின் உதவியுடன் யமனை ஆக்கிரமித்திருந்த ஹபஷியர்களை எதிர்த்துப் போரிட்டு அவர்களை யமனிலிருந்து வெளியேற்றி, அதைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அவரைத் தங்களது அரசராகவும் ஏற்றுக் கொண்டனர். ‘மஅதீ கப’ தனக்கு ஊழியம் செய்யவும் பயணங்களில் துணையாக இருப்பதற்காகவும் ஒரு ஹபஷிப் படையைத் தன்னுடன் வைத்திருந்தார். அவரை அவர்கள் திடீரெனத் தாக்கி வஞ்சகமாகக் கொன்று விட்டனர். அவரது மரணத்துடன் ‘தூ யஜின்’ குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது.

அதன்பிறகு பாரசீக மன்னர்களின் அதிகாரத்தின் கீழ் யமன் நாடு வந்தது. பாரசீக மன்னர்கள் ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து ஆட்சி செய்தனர். அவர்களில் முதலாமவர் வஹ்ருஜ், பிறகு மிர்ஜ்பான் இப்னு வஹ்ருஜ், பிறகு அவரது மகன் தீன்ஜான், பிறகு குஸ்ரு இப்னு தீன்ஜான், பிறகு பாதான். இவரே பாரசீக மன்னர்களில் இறுதியானவர். இவர் கி.பி. 628ல் இஸ்லாமை ஏற்றார். இத்துடன் யமன் மீதான பாரசீகர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

ஆ) ஹீரா நாடு

இராக்கையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ‘கூரூஷுல் கபீர்’ என்பவன் தலைமையின் கீழ் கி.மு. 557லிருந்து கி.மு. 529 வரை பாரசீகர்கள் ஆட்சி செய்தனர். அவர்களை எவராலும் வீழ்த்த முடியவில்லை. இறுதியாக, பாரசீகர்களின் அரசரான ‘தாரா’ என்பவரை ‘இஸ்கந்தருல் மக்தூனி’ என்பவர் கி.மு. 326ல் தோற்கடித்தார். மேலும் பாரசீகர்களின் ஆதிக்கத்தையும் வலிமையையும் முறியடித்து அவர்களது நகரங்களை சின்னா பின்னமாக்கினார். பிறகு தவாயிஃப் என்ற பெயருடைய அரசர்கள் அந்நாட்டை பல பகுதிகளாகக் பிரித்து கி.பி. 230 வரை ஆட்சி செய்தனர். இவர்களது ஆட்சி காலத்தில் கஹ்தான் கோத்திரத்தினர் இராக்கின் சில கிராம பகுதிகளைக் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து அவர்களுக்குப் போட்டியாக அத்னான் கோத்திரத்தார்களும் ஃபுராத் நதிக்கரையின் சில பகுதிகளில் குடியேறினர்.

இவ்வாறு குடிபெயர்ந்தவர்களில் முதலாவது அரசராக இருந்தவர் கஹ்தான் வமிசத்தை சேர்ந்த ‘மாலிக் இப்னு ஃபஹ்ம் அத்தனூகி’ என்பவராவார். ‘அன்பார்’ அல்லது அதற்கு அருகிலுள்ள பகுதி அவரது ஆட்சியின் தலைமையகமாகத் திகழ்ந்தது. அவருக்குப் பிறகு அவரது சகோதரர் அம்ரு இப்னு ஃபஹ்ம் ஆட்சி செய்தார். சிலர் ‘அப்ரஷ், வழ்ழாஹ்’ என்று அழைக்கப்பட்ட ‘ஜுதைமா இப்னு ஃபஹ்ம்’ என்ற அவரது சகோதரர் ஆட்சி செய்தார் எனக் கூறுகின்றனர்.

கி.பி. 226-ஆம் ஆண்டு ஸாஸானியா அரசை உருவாக்கிய ‘அர்துஷீர் இப்னு பாபக்’ என்ற மன்னன் காலத்தில் இரண்டாவது முறையாக பாரசீகர்கள் இராக் நாட்டை கைப்பற்றினர். அம்மன்னர் பாரசீகர்களை ஒன்றிணைத்து நாட்டின் எல்லைப் புறங்களில் வாழ்ந்து வந்த அரபியர்களை அடக்கி அவர்கள் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார். ஹீரா நாட்டவர்களும் அன்பார் நகரத்தை சேர்ந்தவர்களும் அவருக்குக் கீழ்ப்படிந்தார்கள். ஆனால், குழாஆ கோத்திரத்தினர் தங்களது ஊர்களைத் துறந்து ஷாம் நாட்டுக்கு குடிபெயர்ந்தனர்.

அர்தஷீருடைய காலத்தில் ஹீரா மற்றும் இராக்கில் வாழ்ந்த கிராமத்தவர்கள் மற்றும் அரபிய தீபகற்பத்தில் வாழ்ந்த ரபீஆ, முழர் ஆகியோர் மீது ‘ஜுதைமத்துல் வழ்ழாஹ்’ என்பவர் ஆதிக்கம் செலுத்தினார். அதாவது அரபியர்கள் மீது நேரடியாக ஆட்சி செய்வதும் அவர்களின் தாக்குதல்களிலிருந்து தனது நாட்டைக் காப்பதும் அர்தஷீருக்கு மிகுந்த சிரமமாகத் தோன்றியது. ஆகவே, அரபியர்களிலேயே ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை அரசராக்கினால் அவர் தனக்கு உறுதுணையாகவும் உதவியாகவும் அமைவார் என எண்ணினார். மேலும், தன்னை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ரோமர்களை எதிர்கொள்ள அந்த அரபிகளின் உதவியைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமெனவும் திட்டமிட்டார். அதுமட்டுமின்றி ரோமர்களுக்கு உதவி செய்துவரும் ஷாம் நாட்டு அரபியர்களை இராக்கின் அரபியர்களை கொண்டு தடுக்க நாடினார். ஆகவேதான் அரபியராகிய ஜுதைமாவை மேற்கூறிய பகுதிகளுக்கு அர்தஷீர் அரசராக்கினார். தனது ஆட்சியை எதிர்க்கும் அரபிய பழங்குடி மக்களை அடக்கி வைக்க ஜுதைமாவுக்கு பாரசீக ராணுவப்படை ஒன்றையும் அவர் வழங்கினார். ஜுதைமா கி.பி. 268-ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

ஜுதைமா மரணமான பின்பு, அதாவது மன்னர் ‘கிஸ்ரா ஸாபூர் இப்னு அர்தஷீருடைய’ ஆட்சிக் காலத்தில் அம்ரு இப்னு அதீ இப்னு நஸ்ர் அல்லக்மி கி.பி. 268 முதல் 288 வரை ஹீராவையும் அன்பாரையும் ஆட்சி செய்தார். லக்ம் கோத்திர அரசர்களிலும் ஹீராவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்களிலும் இவரே முதன்மையானவர். இவரையடுத்து லக்ம் கோத்திர அரசர்கள் பலர் தொடர்ந்து ஹீராவை ஆண்டு வந்தனர். இறுதியாக (கி.பி. 448 முதல் 531 வரை) ‘குபாத் இப்னு ஃபைரோஜ்’ பாரசீக மன்னரானார். இவரது ஆட்சியின்போது ‘மஜ்தக்’ என்பவன் தோன்றி முறையற்ற பாலியல் உறவின் பக்கம் மக்களை அழைத்தான். மன்னர் குபாத் மற்றும் அவனது குடிமக்களில் அதிகமானவர்கள் அவனை பின்பற்றினர். பிறகு குபாத், ஹீராவின் மன்னரான முன்திர் இப்னு மாவுஸ் ஸமாவை (கி.பி. 512-554) இழிவான இவ்வழிமுறையை ஏற்குமாறு அழைத்தான். அவர் அதை முற்றிலுமாக மறுத்துவிட்டார். அதனால் அவரை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக மஜ்தக்கின் வழியை பின்பற்றிய ‘ஹாஸ் இப்னு அம்ர் இப்னு ஹஜர் அல் கின்தீ’ என்பவனை அரசனாக்கினான்.

குபாதுக்குப் பிறகு ‘அனூஷேர்வான்’ (கி.பி. 531-578) என்பவர் மன்னரானார். இவர் இந்த தவறான வழியை முற்றிலும் வெறுத்தார். மஜ்தக் மற்றும் அவனது வழியை பின்பற்றியவர்களைக் கொலை செய்தார். ஹாஸ் இப்னு அம்ரை நீக்கிவிட்டு மீண்டும் முன்திரை ஹீராவின் அரசராக்கினார். ஹாஸ் இப்னு அம்ரை கைது செய்ய முயன்றபோது அவன் ‘கல்பு’ கோத்திரத்தாரிடம் சென்று அடைக்கலமாகி மரணம் வரை அங்கேயே தங்கிவிட்டான். முன்திர் இப்னு மாவுஸ் ஸமாவுக்குப் பிறகும் அவரது குடும்பத்தாரிடமே ஆட்சி இருந்தது. அவரது மகன் நுஃமான் இப்னு முன்திர் கி.பி. 583 லிருந்து 605 வரை ஆட்சி செய்தார். அப்போது ‘ஜைது இப்னு அதீ’ என்பவன் கூறிய தவறான தகவலால் நுஃமான் மீது கோபமடைந்து அவரைத் தேடிவர கிஸ்ரா வீரர்களை அனுப்பி வைத்தார். நுஃமான் ரகசியமாக வெளியேறி ஷைபான் கோத்திரத்தின் தலைவரான ஹானி இப்னு மஸ்வூதிடம் அடைக்கலம் பெற்று அவரிடம் தனது குடும்பத்தினரையும் செல்வங்களையும் ஒப்படைத்துவிட்டு கிஸ்ராவிடம் திரும்பினார். கிஸ்ரா அவரை மரணமடையும் வரை சிறையில் அடைத்தார்.

அதன்பிறகு நுஃமானுக்குப் பதிலாக ‘இயாஸ் இப்னு கபீஸா அத்தாம்’ என்பவரை ஹீராவின் அரசராக்கினார். ஹானி இப்னு மஸ்வூதிடம் நுஃமான் கொடுத்து வைத்திருந்ததை மீட்டு வருமாறு, இயாஸுக்கு கிஸ்ரா உத்தரவிட்டார். கிஸ்ராவின் உத்தரவிற்கிணங்க இயாஸ் சிலரை ஹானியிடம் அனுப்பியபோது ஹானி, நுஃமானின் அமானிதத்தை தர முற்றிலும் மறுத்துவிட்டு கிஸ்ராவுடன் போரை பிரகடனப்படுத்தினார். அதைக் கண்ட இயாஸ் தன்னிடமிருந்த கிஸ்ராவின் படை பட்டாளங்களை அழைத்துக் கொண்டு ஹானியிடம் போர் புரிய பயணமானார். ‘தீ கார்’ என்னுமிடத்தில் இரு படைகளுக்குமிடையே மிகக் கடுமையான போர் நடந்தது. இறுதியில் ஷைபான் கோத்திரத்தினர் வெற்றிபெற்றனர். பாரசீகர்கள் படுதோல்வி அடைந்தனர். இதுவே அரபியர்கள் அரபியரல்லாதவர்கள் மீது கொண்ட முதல் வெற்றியாகும். இந்நிகழ்ச்சி நபி (ஸல்) அவர்கள் பிறந்த பிறகு நடைபெற்றது.

இப்போர் நடைபெற்ற காலம் குறித்து வரலாற்று ஆசிரியர்களுக்கிடையே மாறுபட்ட பல கருத்துகள் இருக்கின்றன.

1) நபி (ஸல்) அவர்கள் பிறந்த சிறிது காலத்திலேயே இப்போர் நடைபெற்றது ஹீராவிற்கு இயாஸ் இப்னு கபீஸா கவர்னராகப் பொறுப்பேற்ற எட்டாவது மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள் என்று சிலர் கூறுகின்றனர்.

2) நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்குச் சிறிது காலத்திற்கு முன்னால் இப்போர் நிகழ்ந்தது என்று சிலர் கூறுகின்றனர். இதுவே ஏற்கத்தக்கது.

3) நபித்துவம் கிடைக்கப் பெற்றதற்கு சிறிது காலத்திற்கு பிறகு இப்போர் நிகழ்ந்தது என்று சிலர் கூறுகின்றனர்.

4) நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா சென்றதற்கு பிறகு இப்போர் நிகழ்ந்தது என்றும் சிலர் கூறுகின்றனர்.

5) பத்ர் யுத்தத்திற்குப் பிறகு இப்போர் நடைபெற்றது என்றும் சிலர் கூறுகின்றனர். மற்றும் பல கருத்துக்களும் கூறப்படுகின்றன.

இயாஸுக்குப் பிறகு ‘ஆஜாதிபா இப்னு மாஹ்பியான் இப்னு மஹ்ரா பந்தாத்’ என்ற பாரசீகரை ஹீராவின் கவர்னராக கிஸ்ரா நியமித்தார். அவர் பதினேழு ஆண்டுகள் (கி.பி. 614-631) ஆட்சி செய்தார். பிறகு கி.பி. 632ல் ‘லக்ம்’ கோத்திரத்தார்களிடம் ஆட்சி திரும்பியது. அவர்களில் ‘மஃரூர்’ என்றழைக்கப்பட்ட முன்திர் இப்னு நுஃமான் என்பவர் ஆட்சி பொறுப்பேற்றார். எனினும், அவரது ஆட்சி எட்டு மாதங்களே நீடித்தது. காலித் இப்னு வலீத் (ரழி) முஸ்லிம்களின் படையுடன் சென்று அந்நாட்டை வெற்றி கொண்டார்கள்.

இ) ஷாம் நாடு (ஸிரியா)

அரபியர்கள் பல்வேறு பகுதிகளுக்கும் குடிபெயர்ந்து கொண்டிருந்த காலத்தில் குழாஆ கோத்திரத்தின் ‘பனூ ஸுலைஹ் இப்னு ஹுல்வான்’ குடும்பத்தினர் ஷாம் நாட்டின் ‘மஷாஃப்’ என்ற பகுதிகளில் குடியேறினர். ‘ழஜாம்மா’ எனப் பிரபலமடைந்த ‘ழஜ்அம் இப்னு ஸலீஹ்’ என்ற பிரிவினர் மேற்கூறப்பட்ட பனூ ஸுலைஹ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பாலைவனங்களில் வழிப்பறி செய்து கொண்டிருந்த கிராமத்து அரபியர்களைத் தடுக்கவும், பாரசீகர்களை எதிர்க்கவும் ழஜாம்மாக்களை ரோமர்கள் பயன்படுத்தினர். அதற்காக அவர்களில் ஒருவருக்கு அரச பதவியும் வழங்கினர். பல ஆண்டுகள் இவர்களது குடும்ப ஆட்சி தொடர்ந்தது. இவர்களில் ‘ஜியாது இப்னு ஹபூலா’ என்பவர் புகழ்பெற்ற அரசராவார்.

ழஜாம்மாவினன் ஆட்சிக் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து அதன் இறுதிவரை நீடித்தது. அதற்கு பிறகு கஸ்ஸானியர், ழஜாம்மாவினர் மீது போர் தொடுத்து ஆட்சியைக் கைப்பற்றினர். இதைக் கண்ட ரோமர்கள் ஷாம் நாட்டு அரபியர்களுக்கு கஸ்ஸானியர்களை அரசர்களாக நியமித்தனர். இவர்களது தலைநகரமாக புஸ்ரா விளங்கியது. ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு யர்மூக் போர் நடைபெறும் வரை கஸ்ஸானியர்கள் ரோமர்களின் கவர்னர்களாகவே ஷாம் நாட்டில் ஆட்சி செய்தனர். அந்தக் கவர்னர்களில் இறுதியானவரான ‘ஜபலா இப்னு அய்ஹம்’ என்பவர் அமீருல் முஃமினீன் உமர் (ரழி) அவர்களின் காலத்தில் முஸ்லிம்களுக்கு அடிபணிந்தார். (இது குறித்த மேல் விவரங்களை தபரி, இப்னு கல்தூன், மஸ்ஊதி, இப்னு குதைபா, இப்னுல் அஸீர் ஆகிய நூல்களில் காணலாம்.)

ஈ) ஹிஜாஸ் பகுதியில் அதிகாரம்

இஸ்மாயீல் (அலை) அவர்கள் தங்களின் வாழ்நாள் வரை மக்கா நகரின் தலைவராகவும் இறையில்லமான கஅபாவின் நிர்வாகியாகவும் இருந்தார்கள். அவர்கள் 137வது வயதில் மரணமடைந்தார்கள். (ஸிஃப்ருத் தக்வீன், தபரி)

இஸ்மாயீல் (அலை) அவர்கள் 130வது வயதில் மரணமானார்கள் என்ற ஒரு கூற்றும் கூறப்படுகிறது. (தபரி, யாகூபி)

இஸ்மாயீல் (அலை) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்களுடைய பிள்ளைகளில் ஒருவர் மக்காவை நிர்வகித்தார் என்றும், சிலர் முதலாவதாக நாபித் பிறகு கைதார் என இருவரும் நிர்வகித்தனர் என்றும் கூறுகின்றனர். அவர்களுக்குப் பின் அவ்விருவரின் தாய்வழி பாட்டனாரான முழாழ் இப்னு அம்ர் ஜுர்ஹுமி தலைவரானார். இவ்வாறு இஸ்மாயீல் (அலை) அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து ஜுர்ஹும் கோத்திரத்துக்கு தலைமைத்துவம் மாறியது. ஆனால், இஸ்மாயீல் (அலை) அவர்கள் தங்களது தந்தையுடன் இறையாலயத்தை கட்டியவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் பரம்பரையினருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது. எனினும் தலைமைத்துவம் மற்றும் அதிகாரத்தில் அவர்களுக்கு எவ்விதப் பங்கும் இருக்கவில்லை. (இப்னு ஹிஷாம்)

நாட்கள் நகர்ந்தன. காலங்கள் கடந்தன. இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய சந்ததிகளின் நிலைமைகளை எடுத்துக் கூறுமளவுக்கு பெரிதாக இல்லை. ‘புக்த் நஸ்ர்’ என்ற மன்னன் தோன்றுவதற்குச் சிறிது காலம் முன்பு ஜுர்ஹும் கோத்திரத்தினர் முற்றிலும் நலிந்துவிட்டனர். அக்காலத்தில் மக்காவில் அத்னான் வமிசத்தவன் அரசியல் ஆதிக்கம் வளரத் தொடங்கியது. புக்துநஸ்ருக்கும் அரபியர்களுக்குமிடையே ‘தாத் இர்க்’ என்ற இடத்தில் நடைபெற்ற போரில் அரபியப் படையின் தளபதியாக ஜுர்ஹும் கோத்திரத்தினர் இருக்கவில்லை. மாறாக, இப்படைக்கு அத்னான் தளபதியாக இருந்தார். (தபரி)

பிறகு புக்து நஸ்ர் கி.பி. 587ல் இரண்டாவது முறையாக போர் தொடுத்தபோது அத்னானியர்கள் யமன் நாட்டுக்குத் தப்பிச் சென்றனர். அச்சந்தர்ப்பத்தில் இஸ்ரவேலர்களின் நபியான ‘யர்மியாஹ்’ அவர்களின் தோழர் ‘பர்கியா’ என்பவர் அத்னானின் மகன் ‘மஅத்’தை ஷாம் நாட்டிலுள்ள ஹர்ரான் நகருக்கு அழைத்துச் சென்றார். புக்து நஸ்ருடைய காலத்துக்குப் பின் மஅத் மக்கா திரும்பினார். அங்கு ஜுர்ஹும் கோத்திரத்தில் ‘ஜவ்ஷம் இப்னு ஜுல்ஹுமா’ என்பவர் மட்டுமே மீதமிருந்தார். அவரது மகளை மஅத் மணந்து கொண்டார். இருவருக்கும் நஜார் என்பவர் பிறந்தார். (தபரி, ஃபத்ஹுல் பாரி)

ஜுர்ஹும் கோத்திரத்தினரின் நிலைமை மக்காவில் மிக மோசமடைந்து, பொருளாதார நெருக்கடிக்கு ஆளாயினர். கஅபாவை தரிசிக்க வந்தவர்களை இம்சித்து கஅபாவின் செல்வங்களையும் சூறையாடினர். (தபரி)

இச்செயல் அத்னானியர்களுக்கு மிகுந்த வெறுப்பை உண்டாக்கியது. குஜாஆ கோத்திரத்தினர் மக்காவுக்கு அருகிலுள்ள ‘மர்ருள் ளஹ்ரான்’ என்ற இடத்தில் குடியேறியபோது ஜுர்ஹும் கோத்திரத்தினர் மீது அத்னானியர்கள் கொண்டிருந்த வெறுப்பை பயன்படுத்திக் கொண்டனர். அத்னானியர்களின் ஒரு பிரிவினரான ‘பனூ பக்ரு இப்னு அப்து மனாஃப்’ குடும்பத்தாரின் உதவியுடன் குஜாஆவினர் ஜுர்ஹும் கோத்திரத்தார் மீது போர் தொடுத்து, அவர்களை மக்காவிலிருந்து வெளியேற்றி, அதைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பாதிவரை அவர்களது ஆட்சியே மக்காவில் நீடித்தது.

ஜுர்ஹும் கூட்டத்தினர் மக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டபோது ஜம்ஜம் கிணற்றை அடையாளம் தெரியாத வகையில் பல பொருள்களைப் போட்டு நிரப்பி மறைத்து விட்டனர். வரலாற்றாசிரியரான இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்:

‘அம்ர் இப்னு ஹாஸ் இப்னு முழாழ் ஜுர்ஹுமீ’ என்பவர் கஅபாவிலிருந்த இரண்டு தங்க மான் சிலைகளையும், அஸ்வத் கல்லையும் ஜம்ஜம் கிணற்றினுள் போட்டு மூடிவிட்டார். அவரும் அவரைச் சேர்ந்த ஜுர்ஹும் கோத்திரத்தாரும் யமன் நாட்டுக்குச் சென்று குடியேறினர். மக்காவை விட்டுப் பிரிந்ததையும் அதன் அதிகாரம் கை நழுவிப் போனதையும் எண்ணி அவர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.

இது குறித்து அம்ர் இக்கவிதையை பாடினார்:

ஹஜூன், ஸஃபா இடையே நேசருமில்லை

மக்காவில் இராக்கதை பேசுபவரும் இல்லை

மாறாக, நாங்களே அங்கு வசித்து வந்தோம்;

ஆனால் எங்களை காலங்களின் மாற்றங்களும்

ஆபத்து நிறைந்த விதிகளும் அழித்துவிட்டன. (இப்னு ஹிஷாம், தபரி)

நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலம் நபி ஈஸா (அலை) அவர்களது பிறப்புக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாகும். ஜுர்ஹும் கோத்திரத்தினர் ஏறக்குறைய இரண்டாயிரத்து நூறு ஆண்டுகள் மக்காவில் வசித்து அதனை ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்கள் தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர்.

குஜாஆவினர் மக்காவைக் கைப்பற்றிய பிறகு பக்ர் கோத்திரத்தாரை இணைத்துக் கொள்ளாமல் தனியாகவே தங்களது ஆட்சியை நிறுவிக் கொண்டனர். எனினும், பக்ர் கோத்திரத்தை சேர்ந்த முழர் குடும்பத்தாருக்கு மட்டும் மூன்று பொறுப்புகள் கிட்டின.

முதலாவது: ஹஜ்ஜுக்கு வருபவர்களை அரஃபாவிலிருந்து முஜ்தலிஃபாவுக்கு அழைத்து வருவது மற்றும் ஹஜ்ஜின் கடைசி தினமான 13வது நாளன்று மினாவிலிருந்து பயணமாவதற்கு அனுமதியளித்தல்.

இப்பொறுப்புகள் இல்யாஸ் இப்னு முழர் வமிசத்தில் அல் கவ்ஸ் இப்னு முர்ரா குடும்பத்தாருக்குக் கிட்டின. இவர்கள் ‘ஸூஃபா’ என அழைக்கப்பட்டனர். இவர்களது சிறப்பு என்னவெனில், ஸூஃபாவைச் சேர்ந்த ஒருவர் அகபாவில் கல் எறியாதவரை வேறு யாரும் எறியமாட்டார்கள். மக்கள் கல்லெறிந்து முடித்து மினாவிலிருந்து வெளியேறுவதாயிருந்தால் கணவாயின் இருபுறங்களையும் ஸூஃபாவினர் மூடிவிடுவார்கள். அவர்கள் முதலில் வெளியேறிச் சென்ற பிறகே மற்றவர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். ஸூஃபாவினர் இறந்துவிட்ட பிறகு தமீம் கிளையைச் சேர்ந்த ஸஅது இப்னு ஜைது மனாத் குடும்பத்தினருக்கு இப்பொறுப்பு கிடைத்தது.

இரண்டாவது: துல்ஹஜ் பிறையின் 10ஆம் நாள் முஜ்தலிஃபாவிலிருந்து மினாவுக்கு மக்களை அழைத்துச் செல்லும் பொறுப்பு அத்வான் குடும்பத்தார்களிடம் இருந்தது.

மூன்றாவது: (போர் புரிய தடை செய்யப்பட்ட) புனித மாதங்களை சூழ்நிலைக்கேற்ப முன் பின்னாக மாற்றிக் கொள்ளும் அதிகாரம், ‘ஃபுகைம் இப்னு அதீ’ என்ற கினானா குடும்பத்தாரிடம் இருந்தது. (இப்னு ஹிஷாம்)

குஜாஆவினரின் ஆதிக்கம் மக்காவில் முன்னூறு ஆண்டுகள் இருந்தது. (யாகூத், ஃபத்ஹுல் பாரி)

இவர்களின் காலத்தில் அத்னான் வமிசத்தைச் சேர்ந்தவர்கள் நஜ்த், இராக், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சென்று குடியேறினர். மக்காவில் குறைஷியைச் சேர்ந்த சில குடும்பத்தார்கள் மட்டும் ஆங்காங்கே பிரிந்து வாழ்ந்தனர். அவர்களுக்கு மக்கா மற்றும் புனித கஅபாவின் அதிகாரம் எதுவும் இருக்கவில்லை. இந்நிலையில் ‘குஸய் இப்னு கிலாப்’ என்பவர் குறைஷியர்களில் தோன்றினார். (இப்னு ஹிஷாம்)

குஸய்யின் சுருக்கமான வரலாறு

‘குஸய்யின்’ சிறு வயதிலேயே அவரது தந்தை மரணமாகிவிட்டார். அவரது தாயை உத்ரா குடும்பத்தைச் சேர்ந்த ‘ரபீஆ இப்னு ஹராம்’ என்பவர் மணமுடித்தார். அவர் தனது மனைவியையும் குஸய்யையும் ஷாம் நாட்டிலுள்ள தனது ஊருக்கு அழைத்து வந்தார். குஸய் வாலிபராகி மக்கா திரும்பினார். அந்நேரத்தில் மக்காவின் நிர்வாகியாக குஜாஆ கோத்திரத்தைச் சேர்ந்த ‘ஹுலைல் இப்னு ஹப்ஷிய்யா’ என்பவர் இருந்தார். ஹுலைலின் மகள் ‘ஹுப்பா’ என்பவரை குஸய் மணமுடித்தார். (இப்னு ஹிஷாம்)

சில நாட்களுக்குப் பிறகு ஹுலைல் காலமானார். அப்போது குஜாஆ மற்றும் குறைஷியருக்கிடையில் சண்டை மூண்டது. இதில் குஸய்யும் அவரைச் சேர்ந்தவர்களும் மக்காவின் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

இச்சண்டை மூண்டதற்குரிய காரணங்களைப் பற்றி மூன்று கருத்துக்கள் கூறப்படுகின்றன.

1) குஸய் மக்காவில் நன்கு புகழ்பெற்றார். அவரது செல்வங்களும் குடும்பங்களும் பெருகின. தனது மாமனார் ஹுலைல் மரணமான பிறகு குஜாஆ மற்றும் பக்ர் கோத்திரத்தாரை விட தானே கஅபாவையும் மக்காவையும் நிர்வகிப்பதற்குத் தகுதியானவர்; அதுமட்டுமின்றி, குறைஷியர்தான் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் தலைமைத்துவம் மிக்கவர்கள் என எண்ணினார். ஆகவே, குஜாஆ மற்றும் பக்ர் கோத்திரத்தாரை மக்காவிலிருந்து வெளியேற்றுவதற்கு கினானா மற்றும் குறைஷி கோத்திரத்தாரிடம் குஸய்ம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களும் அதை ஒப்புக்கொள்ளவே இவர்கள் அவர்கள் மீது போர் தொடுத்தனர்.

2) கஅபா மற்றும் மக்காவை நிர்வகிக்க வேண்டும் என குஸய்ம்க்கு ஹுலைல் தனது மரண நேரத்தில் கட்டளையிட்டார். ஆனால் அதற்கு குஜாஆவினர் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இரு தரப்பினடையே போர் மூண்டது.

3) ஹுலைல் தனது மகள் ஹுப்பாவிற்கு கஅபாவை நிர்வகிக்கும் அதிகாரத்தை வழங்கினார். அவள் சார்பாக அப்பொறுப்பை நிறைவேற்றுவதற்கு குஜாஆ வமிசத்தைச் சேர்ந்த ‘அபூ குபுஷான்’ என்பவரை குஸய் நியமித்தார். அவர் ஹுப்பாவுக்கு பதிலாக கஅபாவை நிர்வகித்து வந்தார். அவர் சற்று புத்தி சுவாதீனமற்றவராக இருந்தார். ஹுலைல் மரணமடைந்த பிறகு குஸய் அபூ குபுஷானுக்கு சில ஒட்டகங்கள் அல்லது சில மதுப் பீப்பாய்கள் கொடுத்து கஅபாவின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். இதை குஜாஆவினர் ஒப்புக் கொள்ளவில்லை. குஸய் கஅபாவை நிர்வகிக்கக்கூடாது என தடுத்தனர். இதனால் குஸய் மக்காவிலிருந்து குஜாஆவினரை வெளியேற்றுவதற்காக குறைஷி மற்றும் கினானா கோத்திரத்தினரின் உதவியை நாடினார். அவர்களும் அதற்கிணங்கியதால் இரு தரப்பினருக்கிடையே போர் மூண்டது. (ஃபத்ஹுல் பாரி, மஸ்வூதி)

காரணங்கள் எதுவாக இருப்பினும் நிகழ்வுகள் பின்வருமாறு அமைந்தன:

ஹுலைல் மரணமடைந்த பிறகும் ஸூஃபாக்கள் தங்களின் மேற்கூறப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றி வந்தனர். ஒருநாள் குறைஷி மற்றும் கினானா கோத்திரத்தினரை குஸய் தன்னுடன் அழைத்துக் கொண்டு ‘ஸூஃபா’க்கள் கூடியிருந்த கணவாய்க்கு வந்து ”இந்த பொறுப்புக்கு உங்களைவிட நாங்களே அதிக உரிமையுள்ளவர்கள்” என்று கூறினார். இரு பிரிவினருக்கும் இடையில் வாய் சண்டை மூண்டு கைகலப்பு ஏற்பட்டது. இறுதியில் ஸூஃபாக்களை தோற்கடித்து குஸய் விரட்டிவிட்டார். இது குஜாஆ மற்றும் பக்ர் கோத்திரத்தாருக்கு பிடிக்காததால் குஸய்யிடமிருந்து விலகிச் சென்றார்கள். இதையறிந்த குஸய் அவர்களுக்கு எதிராகப் படையைத் திரட்டி அவர்கள் மீது போர் தொடுத்தார். இரு பிரிவினருக்குமிடையே மிகக் கடுமையான போர் மூண்டு இருதரப்பிலும் பெருத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டது. ஒரு வழியாக இரு தரப்பினரும் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள முன்வந்தனர். அவ்வுடன்படிக்கைக்கு பக்ர் கோத்திரத்தைச் சேர்ந்த ‘யஃமுர் இப்னு அவ்ஃப்’ என்பவரைத் தலைவராக்கினர்.

”மக்காவை ஆட்சி செய்யவும், கஅபாவை நிர்வகிக்கவும் குஜாஆ கோத்திரத்தாரைவிட குஸய்ம்க்கே அதிக தகுதி உண்டு குஸய்யினால் ஏற்பட்ட அனைத்து கொலைகளும் மன்னிக்கப்பட்டவை அவ்வாறே குஜாஆ மற்றும் பக்ர் கோத்திரத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு அவர்கள் நஷ்டஈடு வழங்க வேண்டும். கஅபாவின் நிர்வாகத்தை குஸய்யிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று யஃமூர் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பின் காரணமாக அவருக்கு ‘ஷத்தாக் – அநீதத்தைத் தகர்த்தவர்’ என்ற புனைப்பெயர் வந்தது. (இப்னு ஹிஷாம்)

ஆக, குஜாஆவினர் கஅபாவை நிர்வகித்த காலம் 300 ஆண்டுகளாகும். கி.பி. 5ஆம் நூற்றாண்டின் மத்தியில் அதாவது கி.பி. 440ல் குஸய் மக்காவையும் கஅபாவையும் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவந்தார். (ஃபத்ஹுல் பாரி)

இதன் காரணமாக மக்கா நகரின் முழு தலைமைத்துவம் குஸய்ம்க்கும், அவருக்குப் பின்னர் குறைஷி கோத்திரத்தாருக்கும் கிடைத்தது. அரபிய தீர்பகற்பத்தின் பல பகுதிகளிலிருந்து அரபியர் தரிசிக்க வரும் கஅபாவின் மதத் தலைவராக குஸய் விளங்கினார்.

அதன்பிறகு பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த குறைஷி கோத்திரத்தாரை மக்காவுக்கு வரவழைத்து ஒவ்வொரு குறைஷி குடும்பத்துக்கும் இடங்களைப் பிரித்துக் கொடுத்து அவர்களது வாழ்க்கை வசதிகளைக் குஸய் மேம்படுத்திக் கொடுத்தார். அவ்வாறே ஆலு ஸஃப்வான், பனூ அத்வான், முர்ரா இப்னு அவ்ஃப் போன்றோருக்கு அவர்களிடம் இருந்த பொறுப்பை அவர்களுக்கே வழங்கினார். புனித மாதங்களை தங்களது வசதிக்கேற்ப முன்பின்னாக மாற்றியமைத்துக் கொள்ளும் வழக்கத்தை அவரும் பின்பற்றினார். ஏனெனில், இவ்வாறான சடங்குகள் அனைத்தும் மாற்றத்தகாத மார்க்க சடங்குகள் என அவர் நம்பியிருந்தார். (இப்னு ஹிஷாம்)

குறைஷியர்களுக்காக கஅபாவின் வடக்குப் பகுதியில் ‘தாருந் நத்வா’ எனும் ஒரு சங்கத்தை நிறுவியது குஸய் செய்த நற்செயல்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. அது குறைஷியர்கள் ஒன்று சேர்ந்து அவர்களின் பிரச்சனைகளை விவாதித்துத் தீர்வு காணுமிடமாகவும், அவர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் மன்றமாகவும் விளங்கியதால், அவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. அதனுடைய வாசல் கஅபாவை நோக்கி அமைந்திருந்தது. (இப்னு ஹிஷாம், இக்பாருல் கிராம் பி அக்பால் மஸ்ஜிதில் ஹராம்)

குஸய்யின் சாதனைகள்

1) தாருந் நத்வாவின் தலைமை

குறைஷியர்கள் தங்களுக்கு நிகழும் முக்கியப் பிரச்சனைகள் குறித்து இங்கு தான் ஆலோசனை நடத்துவார்கள். மேலும், தங்களின் பெண் பிள்ளைகளுக்கு இதனைத் திருமண மண்டபமாக பயன்படுத்தினார்கள். இந்த தாருந் நத்வாவின் தலைவராக குஸய் விளங்கினார்.

2) கொடி

பிற சமுதாயத்துடன் போர் செய்வதாக இருந்தால் அதற்கான சிறிய அல்லது பெரியகொடி, குஸய் அல்லது அவரது பிள்ளைகளின் கரத்தில் கொடுக்கப்பட்டு தாருந் நத்வாவில் நடப்படும்.

3) வழிநடத்துதல்

மக்காவிலிருந்து வியாபாரம் அல்லது வேறு நோக்கங்களுக்காக வெளியில் செல்லும் பயணக் கூட்டங்களுக்கு குஸய் அல்லது அவரது பிள்ளைகளில் ஒருவர் தலைமை வகிப்பார்.

4) கஅபாவை நிர்வகித்தல்

கஅபாவின் வாயிலைத் திறப்பது, மூடுவது, பராமரிப்பது, வழிபாடுகள் நடத்துவது அனைத்தையும் குஸய் மேற்கொள்வார்.

5) ஹாஜிகளின் தாகம் தீர்த்தல்

தொட்டிகளில் நீரை நிரப்பி அதில் உலர்ந்த திராட்சை மற்றும் பேரீத்தம் பழங்களைப் போட்டு சுவையூட்டி அந்த மதுரமான நீரை மக்கா வருபவர்களுக்கு குஸய் குடிக்க வழங்குவார்.

6) ஹாஜிகளுக்கு விருந்தளித்தல்

குறைஷியர்களிடம் ஹஜ்ஜுடைய காலங்களில் வரி வசூலித்து அதன்மூலம் ஹாஜிகளுக்கு குஸய் விருந்தோம்பல் புரிவார். இவ்விருந்தில் வசதியற்ற ஹஜ் பயணிகள் கலந்துகொள்வார்கள். (இப்னு ஹிஷாம், யஃகூபி)

இவை அனைத்தும் குஸய்ம்க்கு அமைந்திருந்த சிறப்புகளாகும். அவரது பிள்ளைகளில் அப்துத்தார் என்பவர் மூத்தவராக இருந்தார். ஆனால், அவரை விட இளையவரான அப்து மனாஃப் மக்களிடையே மிகுந்த செல்வாக்கும் மரியாதையும் உடையவராகத் திகழ்ந்தார். இது அப்துத்தாருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்துத்தாரை குஸய் அழைத்து ”மக்கள் உன்னைவிட உனது சகோதரனை எவ்வளவுதான் உயர்வாக்கினாலும் நான் உன்னையே அவர்களுக்குத் தலைவராக்குவேன்” என்று கூறி தன்னிடமுள்ள அனைத்து சிறப்புகளையும் பொறுப்புகளையும் அப்துத்தாருக்கே தரவேண்டுமென உயில் எழுதினார். குஸய்யின் எந்த முடிவுக்கும் மக்கள் மாறுசெய்ய மாட்டார்கள். அவர் வாழும்போதும், மரணத்துக்குப் பின்னும் அவரது கட்டளையைப் பின்பற்றுவதே மார்க்கம் என அனைவரும் கருதினர்.

அவரது மரணத்திற்குப் பின் அவரது பிள்ளைகள் தந்தை செய்த மரணநேர கட்டளைப்படி எவ்வித கருத்து வேறுபாடுமின்றி பொறுப்புகளை நிறைவேற்றினர். அப்து மனாஃபின் மரணத்திற்குப் பிறகு அவரது பிள்ளைகள் தங்களின் தந்தையின் சகோதரர் அப்துத் தாருடைய பிள்ளைகளுடன் மேற்கூறப்பட்ட பொறுப்புகளை பெறுவதில் சச்சரவு செய்தனர். இதனால் குறைஷியர்கள் இரண்டாகப் பிரிந்து சண்டைக்கு ஆயத்தமாயினர். எனினும், போரைத் தவிர்த்து சமாதானம் செய்துகொள்ள அனைவரும் விரும்பி தங்களுக்குள் அந்த பொறுப்புகளைப் பிரித்துக் கொண்டனர். ஹாஜிகளுக்கு நீர் புகட்டுவது, அவர்களுக்கு விருந்தளிப்பது மற்றும் பயணம் செல்லும் குழுவினருக்கு தலைமை வகிப்பது என மூன்று பொறுப்புகள் அப்து மனாஃபின் மக்களுக்குக் கிட்டின. தாருந் நத்வாவிற்கு தலைமை வகிப்பது, கொடி பிடிப்பது மற்றும் கஅபாவை பராமரிப்பது ஆகிய பொறுப்புகள் அப்துத்தாருடைய மக்களுக்குக் கிடைத்தன.

தாருந் நத்வாவின் தலைமைத்துவம் மட்டும் இரு பிரிவினருக்கும் பொதுவாக இருந்தது என்றும் சிலர் கூறுகின்றனர்.

பிறகு அப்து மனாஃபுடைய மக்கள் சீட்டு குலுக்கிப் போட்டு தங்களுக்குக் கிடைத்த பொறுப்புகளை தங்கள் குடும்பங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். அதன் அடிப்படையில் ஹாஜிகளுக்கு நீர் புகட்டுதல் மற்றும் அவர்களுக்கு விருந்தளிக்கும் பொறுப்புகள் ஹாஷிமுக்கு கிடைத்தன. வியாபாரக் குழுவினருக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பு அப்து ஷம்ஸுக்கு கிட்டியது. ஹாஷிம் தனது பொறுப்புகளை வாழ்நாள் முழுவதும் சிறப்பாக நிறைவேற்றினார். அவரது மரணத்திற்குப் பின் அவரது சகோதரர் முத்தலிப் இப்னு அப்து மனாஃப் பொறுப்பேற்றார். முத்தலிபின் மரணத்திற்குப் பிறகு ஹாஷிமுடைய மகன் அப்துல் முத்தலிப் பொறுப்பேற்றார். இந்த அப்துல் முத்தலிப் தான் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் ஆவார். அப்துல் முத்தலிபின் மரணத்திற்குப் பிறகு அவரது பிள்ளைகள் பொறுப்புகளை நிறைவேற்றினர். இறுதியில் மக்கா, முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் வந்தபோது அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு அப்பொறுப்புகள் கிட்டின.

சிலர், குஸய்தான் தனது பிள்ளைகளுக்கிடையில் பொறுப்புகளை பங்கிட்டுக் கொடுத்தார். அந்த அடிப்படையிலேயே அப்பொறுப்புகளை அவரது பிள்ளைகள் நிறைவேற்றி வந்தனர் என்று கூறுகின்றனர். உண்மை நிலையை அல்லாஹ்வே அறிந்தவன். (இப்னு ஹிஷாம்)

குறைஷிகள் தங்களிடையே பங்கிட்டுக் கொண்ட மேற்கூறப்பட்ட பொறுப்புகளுடன் வேறு சில பதவிகளையும் உருவாக்கி, அவற்றைத் தங்களுக்கிடையே பங்கிட்டு ஒரு சிறிய அரசாங்கத்தை நிறுவிக்கொண்டனர். அது இன்றைய ஜனநாயக அரசு, தேர்தல், பாராளுமன்றம் ஆகிய நடைமுறைகளுக்கு ஒத்திருந்தது. அவர்கள் வகித்த பதவிகள் பின்வருமாறு:

1) நற்குறி, துற்குறி (சாஸ்த்திரங்கள், சகுனங்கள்) பார்ப்பதும், அனுமதி பெறுவதும், சிலைகளுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் அம்புகளைக் கொண்டு குறி சொல்லும் அதிகாரமும் ஜுமஹ் குடும்பத்தாருக்கு இருந்தன.

2) சிலைகளுக்கு அளிக்கப்படும் காணிக்கைகள் மற்றும் நேர்ச்சைகளைப் பெற்று பாதுகாத்து பராமரித்தல்; சண்டை, சச்சரவுகள் மிக்க வழக்குகளில் தீர்ப்பு சொல்வது ஆகிய இரு பொறுப்புகளும் ஸஹ்ம் குடும்பத்தாருக்கு இருந்தன.

3) அஸத் குடும்பத்தாருக்கு, ஆலோசனை கூறும் பொறுப்பு!

4) தைம் குடும்பத்தாருக்கு, அபராதம் மற்றும் தண்டப் பரிகாரம் வழங்கும் பொறுப்பு!

5) உமய்யா குடும்பத்தாருக்கு, சமுதாயக்கொடி ஏந்திச் செல்லும் பொறுப்பு!

6) மக்ஜூம் குடும்பத்தாருக்கு, ராணுவங்களையும் அதற்குத் தேவையான குதிரைகளையும் நிர்வகிக்கும் பொறுப்பு!

7) அதீ குடும்பத்தாருக்கு, தூது கொண்டு செல்லும் பொறுப்பு! (இப்னு ஹிஷாம்)

உ) ஏனைய அரபியர்களின் ஆட்சி அதிகாரம்

கஹ்தானியர், அத்னானியர் நாடு துறந்ததையும் அவர்கள் அரபு நாடுகளை தங்களுக்கிடையில் பிரித்துக் கொண்டதையும் முன்பு கண்டோம். இவர்களில் ஹீரா நாட்டுக்கு அருகிலிருந்தவர்கள் ஹீராவின் அரபிய மன்னருக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தனர். ஷாம் நாட்டில் வசித்தவர்கள் கஸ்ஸானிய அரசர்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தனர். எனினும், கட்டுப்பாடு என்பது வெறும் பெயரளவில்தான் இருந்தது. இவ்விரண்டைத் தவிர தீபகற்பத்தின் ஏனைய கிராமப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் முழுச் சுதந்திரம் பெற்றவர்களாக எவருக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்து வந்தனர்.

இந்த இரண்டு கோத்திரத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கெனத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு கோத்திரமும் ஒரு சிறிய அரசாங்கத்தைப் போன்று இருந்தது. குலவெறியும், தங்களது ஆதிக்கப் பகுதிகளை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதும் இவர்களது அரசியல் அடிப்படை நோக்கமாக இருந்தது.

அரசர்களுக்கு இணையாக கோத்திரத் தலைவர்களுக்கு மதிப்பு இருந்தது. சண்டையிடுவதிலும், சமாதானம் செய்து கொள்வதிலும் மக்கள் தங்களது தலைவர்களின் முடிவை எவ்விதத் தயக்கமுமின்றி ஏற்று வந்தனர். தலைவர்களின் உத்தரவும் அதிகாரமும் பேரரசர்களின் உத்தரவுக்கும் அதிகாரத்துக்கும் ஒத்திருந்தது. அவர் ஏதேனும் ஒரு சமுதாயத்தினர் மீது கோபம் கொண்டால் எவ்வித கேள்வியுமின்றி ஆயிரக்கணக்கான வாள்கள் அந்த சமுதாயத்தினருக்கு எதிராக உயர்த்தப்படும். எனினும், அவர்கள் தலைமைக்காக தங்களது தந்தையுடைய சகோதரர்களின் (தந்தையின் உடன்பிறந்தார்) பிள்ளைகளிடமே போட்டியிட்டுக் கொண்டனர். இதன் விளைவாக மக்களிடையே புகழ்பெறும் நோக்கில் செலவிடுதல், விருந்தினரை உபசரித்தல், தர்ம சிந்தனையுடனும் விவேகத்துடனும் நடந்துகொள்ளுதல், எதிரிகளிடம் வீரத்தையும் வலிமையையும் வெளிப்படுத்துதல் போன்றவைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தனர். அவ்வாறே அக்காலத்தில் சமூகங்களின் பிரதிநிதிகளாகத் திகழ்ந்த கவிஞர்களிடம் புகழைப் பெற்று போட்டியாளர்களிடையே தங்களது மதிப்பை உயர்த்திக்கொள்ள பெரிதும் முயன்றனர்.

தலைவர்களுக்கென சில சிறப்பு உரிமைகள் இருந்தன. அவர்கள் மிர்பாஃ, ஸஃபிய், நஷீத்தா, ஃபுழூல் என்ற பெயர்களில் மக்களது செல்வங்களை அனுபவித்து வந்தனர்.

இதுகுறித்து ஒரு கவிஞர் கூறுகிறார்:

”எமது வெற்றிப் பொருளில் கால் பங்கும், நீ விரும்பி எடுத்துக் கொண்டதும், வழியில் கிடைத்த பொருளும், பங்கிட முடியாத மிஞ்சிய பொருளும் உனக்கே சொந்தமானது. எங்களில் உனது அதிகாரமே செல்லுபடியானது.”

மிர்பாஃ: இது போரில் கிடைக்கும் வெற்றிப் பொருளில் நான்கில் ஒரு பகுதி.

ஸஃபிய்: வெற்றிப் பொருளை (கனீமத்) பங்கீடு செய்வதற்கு முன், தலைவர்கள் தங்களுக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்வது.

நஷீத்தா: இது போருக்குச் செல்லும் வழியில் தலைவருக்குக் கிடைக்கும் பொருள்கள்.

ஃபுழூல்: இது வெற்றிப் பொருளில் பங்கீடு செய்ய இயலாத வகையில் மீதமாகும் பொருள்கள். ஒட்டகைகள், குதிரைகள் போன்று!

அரசியல் பின்னணி

அரபிய அரசர்களைப் பற்றி அலசிய நாம் அவர்களது அரசியல் பின்னணிகளைப் பற்றியும் அலசுவது அவசியம்! அரபிய தீபகற்பத்தில் அந்நிய நாடுகளுடன் ஒட்டியிருந்த மூன்று எல்லை பகுதிகளிலும் அரசியல் நிலைமை மிகவும் தலைகீழாக இருந்தது. அம்மக்களில் சிலர் அடிமைகளாகவும், சிலர் சுதந்திரமானவர்களாகவும் இருந்தார்கள். தலைவர்களாக இருந்த அந்நியர்கள் செல்வங்கள் அனைத்திற்கும் உரிமை கொண்டாடினர். சுமைகள் அனைத்தையும் குடிமக்கள் மீது சுமத்தினர். சுருங்கக் கூறின் குடிமக்கள் தங்களது அரசாங்கத்திற்கு விவசாய நிலங்களைப் போன்றிருந்தனர். அரசாங்கத்திற்கு பணி செய்வதும் பயனளிப்பதுமே அவர்களது கடமையாக இருந்தது. அரசர்கள் தங்களது ஆசாபாசம், பாவம், அநீதம் போன்ற தீய செயல்களுக்கு மக்களைப் பயன்படுத்தினர். குடிமக்களுக்கு நாலாதிசைகளில் இருந்தும் அநீதி இழைக்கப்பட்டது. அவர்கள் தங்களது அறியாமையால் செய்வதறியாது நிலைதடுமாறி நின்றனர். எவரிடமும் முறையிடுவதற்குக் கூட வலிமையற்று தங்கள் மீது இழைக்கப்படும் அநீதங்களை சகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அக்கால அரசாங்கம் ஒரு சர்வாதிகாரமாகவே இருந்தது. மக்களின் உரிமைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன பாழாக்கப்பட்டன.

இந்தப் பகுதிகளுக்கு அருகில் வாழ்ந்த மக்களும் தடுமாற்றத்தில் இருந்தனர். அவர்கள் சில சமயம் இராக் வாசிகளுடனும், சில சமயம் ஷாம் வாசிகளுடனும் சேர்ந்து கொள்வார்கள்.

அரபிய தீபகற்பத்தின் உட்பகுதியில் வசித்துக் கொண்டிருந்த கோத்திரத்தாரும் ஒற்றுமையின்றி பிரிந்து வாழ்ந்து வந்தனர். அவர்களிடையே சமய மற்றும் இன ரீதியான மோதல்களும், சச்சரவுகளும் மிகைத்திருந்தன. அதைப் பற்றி அவர்களில் ஒரு கவிஞர் கூறுகிறார்:

”நான் கூட கஜிய்யா குலத்தவனே! கஜிய்யா வழிகெட்டால்…

நானும் வழிகெடுவேன். அவர்கள் நேர்வழி நடப்பின் நானும் நேர்வழி நடப்பேன்.”

அவர்களை வழி நடத்துவதற்கோ, சிரமமான காலங்களில் ஆலோசனை கூறி உதவி செய்வதற்கோ அவர்களுக்கென ஆட்சியாளர் யாரும் இருக்கவில்லை.

அதே நேரத்தில் ஹிஜாஸ் பகுதியின் ஆட்சியாளர்களை மக்கள் மிகுந்த கண்ணியத்துடன் நோக்கினர். அவர்களையே தங்களது சமய மற்றும் சமூக வழிகாட்டிகளாகக் கருதினர். உண்மையில் ஹிஜாஸ் பகுதி அரசாங்கம் அக்காலத்தில் சமய மற்றும் சமூக வழிகாட்டியாக இருந்தது. அந்த ஆட்சியாளர்கள் ஏனைய அரபியர்களை சமயத்தின் பெயரால் ஆண்டு வந்தனர். இறையில்லம் கஅபாவையும், அங்கு வருபவர்களின் தேவைகளையும் அவர்களே நிர்வகித்து வந்ததால் அப்பகுதி அனைத்திலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை அமல்படுத்தி வந்தனர். இன்றைய காலத்தைப் போன்று தங்களது ஆட்சியாளர்களை தாங்களாகவே தேர்ந்தெடுக்கும் வழமையை அவர்கள் கொண்டிருந்தனர். எனினும் பிரச்சனைகளை சமாளிக்க முடியாத அளவு பலவீனமானதாகவே அவர்களது ஆட்சி இருந்தது. ஹபஷிகள் தொடுத்த போரில் இவர்கள் பலவீனமானதிலிருந்து இதை தெரிந்து கொள்ளலாம்.

சுட்டி: ரஹீக் ஆடியோ

Tuesday, January 20, 2015

[ரஹீக் 005] – அரபியர்கள் வாழ்ந்த இடங்களும் அரபியச் சமுதாயங்களும்

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு’ என்பது மனித சமுதாயத்திற்காக அவர்கள் கொண்டு வந்த இறைத்தூதைக் குறிக்கும் சொல்லாகும். தான் கொண்டு வந்த இறைத்தூதை தங்களின் சொல், செயல், வழிகாட்டல், ஒழுக்க மாண்புகள் ஆகியவற்றின் மூலம் மனித குலத்திற்கு எடுத்துரைத்தார்கள். அந்த இறைத்தூதுத்துவத்தால் மனித வாழ்வின் அளவுகோல்களை முற்றிலுமாக மாற்றினார்கள்; தீமைகளைக் களைந்து நன்மைகளை போதித்தார்கள். இருளைவிட்டு மக்களை அகற்றி ஒளியை நோக்கி அழைத்து வந்தார்கள். படைப்பினங்களை வணங்குவதிலிருந்து மனிதனை முழுமையாக விடுவித்து, படைப்பாளனாகிய ஒரே இறைவனை வணங்கும்படி செய்தார்கள். சுருங்கக்கூறின், இவ்வுலகில் நெறி தவறி வாழ்ந்த மனிதனின் வாழ்க்கைப் பாதையை மாற்றி செம்மையான அழகிய பாதையில் அவனை வாழச்செய்தார்கள்.

நமது இக்கருத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் முஹம்மது (ஸல்) அவர்கள் தூதராக அனுப்பப்படுவதற்கு முன் இருந்த நிலைமைகளையும், அவர்கள் தூதராக அனுப்பப்பட்ட பின் ஏற்பட்ட மாற்றங்களையும் முன் நிறுத்தி பார்ப்பது அவசியம்.

இதனால் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமின் பக்கம் மக்களை அழைப்பதற்கு முன்பிருந்த அரபிய சமுதாயங்கள், அவர்களது கலாச்சாரங்கள்; மேலும், அக்காலத்தில் இருந்த சிற்றரசர்கள், பேரரசர்கள், சமுதாய அமைப்புகள், அவர்களது மத நம்பிக்கைகள், சமூக பழக்க வழக்கங்கள், சடங்குகள் மற்றும் அவர்களது அரசியல், பொருளியல் ஆகியவற்றை குறித்து சில பிரிவுகளில் சுருக்கமாக ஆய்வு செய்வதும் அவசியம்.

இவற்றுள் ஒவ்வொன்றையும் பற்றி கூறுவதற்கு நாம் தனித்தனி பிரிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றோம். இப்போது அந்த பிரிவுகளைப் பார்ப்போம்.

அரபியர்கள் வாழ்ந்த இடங்கள்

‘அரப்’ என்ற சொல்லுக்கு பாலைவனம், பொட்டல் பூமி, (மரம், செடி கொடிகள், தண்ணீர் இல்லாத) வறட்சியான நிலப்பரப்பு எனப் பல அர்த்தங்கள் உள்ளன. நீண்ட காலமாக அரபிய தீபகற்பத்துக்கும் (இன்றைய ஸவூதி) அங்கு வசிப்பவர்களுக்கும் இப்பெயர் கூறப்படுகிறது.

அரபிய தீபகற்பத்தின் மேற்கே செங்கடலும் ஸனாஃ நாடும், கிழக்கே அரபிய வளைகுடாவும் இராக்கின் சில பகுதிகளும், தெற்கே அரபிக் கடலும் (இது இந்தியப் பெருங்கடல் வரை தொடர்கிறது). வடக்கே ஷாம் (சிரியா) மற்றும் இராக்கின் சில நகரங்களும் இருக்கின்றன. இதன் பரப்பளவு 10,00,000 சதுர கிலோ மீட்டரிலிருந்து 13,00,000 சதுர கிலோ மீட்டர் வரையிலாகும்.

அரபிய தீபகற்பத்துக்கு புவியியல் ரீதியாகவும் அதன் இயற்கை அமைப்பாலும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அதன் உட்புற எல்லைகள் நாலா திசைகளிலும் மணற்பாங்கான பாலைவனத்தால் சூழப்பட்டுள்ளன.

அரபியர் அல்லாத வெளிநாட்டவர்கள் தங்களது ஆதிக்கத்தை அந்நாட்டில் செலுத்துவதற்கு இப்புவியியல் அமைப்பு பெரும் தடையாக இருந்தது. அதன் காரணமாக அந்நாட்டு மக்கள் எல்லாக் காலங்களிலும் தங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் சுதந்திரமானவர்களாகவே திகழ்ந்தார்கள். அவர்களுக்கு அருகாமையில் மாபெரும் இரு வல்லரசுகள் (ரோம்-பாரசீகம்) இருந்தும் அவை இப்பகுதியில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்த முடியாமல் போனதற்கு இந்த இயற்கையான புவியியல் அமைப்பே காரணம்!

அரபிய தீபகற்பத்தின் எல்லைகள் பெயர் பெற்ற பல கண்டங்களுக்கு நடுவில் அமைந்திருக்கின்றன. அவை கடற்பரப்புகள், சமவெளிகள் மூலம் அந்த கண்டங்களுடன் இணைந்திருக்கின்றன. அதன் வடமேற்குப் பகுதி ஆப்பிரிக்கா கண்டத்துடனும், வடகிழக்குப் பகுதி ஐரோப்பா கண்டத்துடனும், கிழக்குப் பகுதி மத்திய ஆசிரியா, தெற்கு ஆசியா மற்றும் தூர கிழக்கு நாடுகளுடனும் இணைந்துள்ளது. அவ்வாறே, ஒவ்வொரு கண்டமும் கடல் மார்க்கமாக அரபிய தீபகற்பத்துடன் இணைகிறது. அக்கண்டங்களிலிருந்து வரும் கப்பல்கள் அரபிய தீபகற்பத்தின் துறைமுகங்களில் தங்கிச் செல்கின்றன.

இப்புவியியல் அமைப்பின் காரணமாக, தெற்கு-வடக்கு பகுதிகள் மக்கள் வந்து ஒதுங்கும் இடமாகவும், வியாபாரம், பண்பாடு, சமயம் மற்றும் கலைகளின் பரிமாற்ற மையமாகவும் திகழ்ந்தன.

அரபியச் சமுதாயங்கள்

வரலாற்றாசிரியர்கள் அரபிய சமுதாயத்தை வமிசாவளி அடிப்படையில் மூன்றாக பிரிக்கின்றனர்.

1) அல் அரபுல் பாயிதா

இவர்கள் பண்டைக் கால அரபியர்களான ஆது, ஸமூது, தஸ்மு, ஜதீஸ், இம்லாக், உமைம், ஜுர்ஹும், ஹழூர், வபார், அபீல், ஜாஸிம், ஹழ்ர மவ்த் ஆகிய வமிசத்தினர் ஆவர். முதல் வகையைச் சேர்ந்த இவர்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டதால் இவர்களுடைய வரலாற்று குறிப்புகள் ஏதும் தெரியவில்லை.

2) அல் அரபுல் ஆபா

இவர்கள் எஷ்ஜுப் இப்னு யஃருப் இப்னு கஹ்தானின் சந்ததியினர் ஆவர். கஹ்தான் வமிச அரபியர் என்றும் இவர்களை அழைக்கப்படும்.

3) அல் அரபுல் முஸ்தஃபா

இவர்கள் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினராவர். இவர்களை அத்னான் வமிச அரபிகள் என்றும் அழைக்கப்படும்.

மேற்கூறப்பட்ட அல் அரபுல் ஆபா என்பவர்கள் கஹ்தான் வமிசத்தில் வந்த யமன் வாசிகள். இவர்களது கோத்திரங்கள் ஸபா இப்னு யஷ்ஜுப் இப்னு யஃருப் இப்னு கஹ்தான் என்பவன் வழி வந்தவையாகும். இந்த கோத்திரங்களில் 1) ஹிம்யர் இப்னு ஸபா, 2) கஹ்லான் இப்னு ஸபா என்ற இரண்டு கோத்திரத்தினர் மட்டும் பிரபலமானவர்கள். ஹிம்யர், கஹ்லான் இருவரைத் தவிர ஸபாவுக்கு பதினொன்று அல்லது பதினான்கு பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்கும் அவர்களது வழி வந்தவர்களுக்கும் ‘ஸபா வமிசத்தினர்’ என்றே கூறப்பட்டது. அவர்களுக்கென தனிப் பெயர் கொண்ட கோத்திரங்கள் ஏதும் உருவாகவில்லை.

அ) ஹிம்யர் கோத்திரமும் அதன் உட்பிரிவுகளும்

1) குழாஆ: பஹ்ராஃ, பலிய்ம், அல்கைன், கல்ப், உத்ரா, வபரா ஆகிய குடும்பத்தினர் குழாஆவிலிருந்து உருவானவர்கள்.

2) ஸகாஸிக்: இவர்கள் ஜைது இப்னு வாம்லா இப்னு ஹிம்யர் என்பவன் சந்ததியினர் ஆவர். இதில் ஹிம்யரின் பேரரான ஜைது என்பவர் ‘ஸகாஸிக்’ என்ற புனைப் பெயரால் அழைக்கப்பட்டார். (பின்னால் கூறப்படவுள்ள கஹ்லான் வம்சத்தில் தோன்றிய கின்தா என்ற பிரிவில் கூறப்படும் ஸகாஸிக் என்பவர் வேறு. இங்கு கூறப்பட்டுள்ள ஜைது ஸகாஸிக் என்பவர் வேறு.)

3) ஜைது அல் ஜம்ஹூர்: இதில் ஹிம்யர் அஸ்ஙர் (சின்ன ஹிம்யர்), ஸபா அஸ்ஙர் (சின்ன ஸபா), ஹழுர், தூ அஸ்பா ஆகிய குடும்பங்கள் உருவாகின.

ரோமர்கள் அக்காலத்தில் மிஸ்ர், ஷாம் ஆகிய இரு நாடுகளையும் கைப்பற்றி கஹ்லான் வமிசத்தினரின் கடல் மற்றும் தரைவழி வியாபாரங்களைத் தடுத்தனர். இதனால் கஹ்லான் வமிசத்தினரின் வணிகங்கள் பெருமளவு நசிந்தன. இதனாலும் அவர்கள் யமனிலிருந்து குடிபெயர்ந்து போயிருக்கலாம். அத்தோடு ஸபா பகுதியில் ‘அல்அரீம்’ என்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனாலும் சில காலத்திற்குப்பிறகு அவர்கள் யமனிலிருந்து குடிபெயர்ந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு கஹ்லான் வமிசத்தினர் யமன் நாட்டை விட்டு வெளியேறியதற்கு சிலர் சில காரணங்களை கூறினாலும், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்பிருந்தே இவர்களின் வணிகங்கள் நசிந்து போயிருந்தன. தொடர்ந்து ஸபா நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாயங்களும், கால்நடைகளும் முழுமையாக அழிந்துவிட்டதால் ஸபா பகுதியில் இவர்களால் வாழ்க்கையைத் தொடர முடியவில்லை. இதனாலும் அவர்கள் அங்கிருந்து வெளியேறி இருக்கலாம் என சிலர் குறிப்பிடுகின்றனர்.

மேன்மைமிகு குர்ஆனில் ‘ஸபா’ எனும் அத்தியாயத்தில் இடம்பெற்றிருக்கும் 15-19 ஆகிய வசனங்கள் இவர்களின் கூற்றை உறுதி செய்கிறது.

மேற்கூறப்பட்ட இரு காரணங்களை தவிர மற்றொரு காரணமும் இருந்ததாக தெரிய வருகிறது. அதாவது கஹ்லான், ஹிம்யர் இரு வமிசத்தினர் இடையில் சண்டை சச்சரவுகள் தோன்றின. இதனால் கஹ்லான் வமிசத்தினர் தங்களது நாட்டைத் துறந்து அமைதியான இடத்தை நோக்கி சென்று விட்டனர். வணிகங்கள் நசிந்து விட்டது மட்டும் காரணமாக இருந்திருந்தால் ஹிம்யர் வமிசத்தினரும் ஸபாவில் இருந்து வெளியேறி இருப்பார்கள். ஆனால், அவர்கள் வெளியேறவில்லை. இதிலிருந்து இவ்விரு வம்சத்தினருக்கும் இடையே இருந்த பகைமையும் ஒரு காரணம் எனத் தெரிய வருகிறது.

நாடு துறந்த கஹ்லான் வமிசத்தினர் நான்கு வகைப்படுவர்:

1) அஜ்து கிளையினர்

இவர்கள் தங்களின் தலைவர் ‘இம்ரான் இப்னு அம்ர் முஜைக்கியாஃ’ என்பவன் ஆலோசனைக்கிணங்க நாடு துறந்தனர். இவர்கள் யமன் நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று சுற்றிப் பார்த்து, தங்களுக்கு விருப்பமான பகுதிகளில் தங்கினர். இவ்வமிசத்தில் யார் எங்கு தங்கினர் என்ற விபரங்கள் பின்வருமாறு:

இம்ரான் இப்னு அம்ர் என்பவர் தனது குடும்பத்துடன் ‘உமான்’ (ஓமன்) நாட்டில் சென்று தங்கினார். இவர்களை உமான் நாட்டு அஜ்து வமிசத்தினர் என்று சொல்லப்படுகின்றது.

நஸ்ர் இப்னு அஜ்து குடும்பத்தினர் ‘துஹாமா’ என்ற இடத்திற்குச் சென்று தங்கினர். இவர்களை ஷனூஆ அஜ்து வமிசத்தினர் எனக் கூறப்படும்.

ஸஃலபா இப்னு அம்ர் முஜைகியாஃ என்பவர் ஹி ஜாஸ் பகுதிக்குச் சென்று ‘ஸஃலபியா’ மற்றும் ‘தூ கார்’ என்ற இடங்களுக்கிடையில் தனது குடும்பத்துடன் தங்கினார். அவரது பிள்ளைகள் பேரன்கள் பெரியவர்களாகி நன்கு வலிமை பெற்றவுடன் அங்கிருந்து புறப்பட்டு மதீனா நகர் வந்து தங்கினார். இந்த ஸஃலபாவுடைய மகன் ஹாஸாவின் பிள்ளைகள்தான் அவ்ஸ், கஸ்ரஜ் என்ற இருவரும். இவ்விருவல் இருந்தே அவ்ஸ், கஸ்ரஜ் என்ற இரு வமிசங்கள் தோன்றின.

அஜ்து வமிசத்தை சேர்ந்த ஹாஸா இப்னு அம்ர் குடும்பத்தினர் ஹிஜாஸ் பகுதியில் ‘மர்ருல் ளஹ்ரான்’ என்னும் இடத்தில் தங்கினர். சிறிது காலத்திற்குப் பின் மக்கா மீது படையெடுத்து அங்கு வசித்த ஜுர்ஹும் வமிசத்தவர்களை வெளியேற்றி விட்டு மக்காவை தங்களது ஊராக ஆக்கிக் கொண்டனர். இந்த ஹாஸாவின் வமிசத்திற்கு ‘குஜாஆ’ என்ற பெயரும் உண்டு.

ஜஃப்னா இப்னு அம்ர் என்பவர் தனது குடும்பத்துடன் சிரியா சென்று தங்கினார். இவரது சந்ததியினர்தான் வருங்காலத்தில் சிரியாவை ஆட்சி செய்த கஸ்ஸானிய மன்னர்கள் ஆவர். சிரியா வருவதற்கு முன் ஜஃப்னா இப்னு அம்ர் ஹிஜாஸ் பகுதியில் உள்ள ‘கஸ்ஸான்’ என்ற கிணற்றுக்கருகில் குடியேறி சில காலம் தங்கியிருந்தனர். இதன் காரணமாகவே பிற்காலத்தில் இவர்களுக்கு ‘கஸ்ஸானியர்’ என்ற பெயரும் வந்தது.

கஅப் இப்னு அம்ர், ஹாஸ் இப்னு அம்ர், அவ்ஃப் இப்னு அம்ர் போன்ற சிறிய சிறிய குடும்பத்தவர்களும் மேற்கூறப்பட்ட பெரியகோத்திரங்களுடன் இணைந்து ஹிஜாஸ் மற்றும் சிரியாவில் குடிபெயர்ந்தனர்.

2) லக்ம் மற்றும் ஜுதாம்

இவர்கள் கிழக்கு மற்றும் வடக்கு நாடுகளில் குடிபெயர்ந்தனர். லக்ம் வமிசத்தில் வந்த நஸ்ர் இப்னு ரபீஆ என்பவன் சந்ததியினர்தான் ‘ஹீரா’ நாட்டை ஆண்ட அரசர்கள். அந்த அரசர்களை ‘முனாதிரா’ என்று அழைக்கப்பட்டது.

3) பனூ தைய்

அஜ்து வமிசத்தினர் யமனிலிருந்து குடிபெயர்ந்தவுடன் இந்த கோத்திரத்தினரும் அரபிய தீபகற்பத்தின் வடக்கு பகுதிக்குச் சென்று அஜஃ, சல்மா என்ற இரு மலைகளுக்கிடையில் குடியேறினர். பிற்காலத்தில் அந்த மலைகளுக்கு ‘தைய் மலைகள்’ என்ற பெயர் வந்தது.

4) கின்தா

இந்த கோத்திரத்தினர் பஹ்ரைனில் குடியேறினர். அங்கு அவர்களுக்குப் பல சிரமங்கள் ஏற்படவே மீண்டும் யமன் நாட்டில் ‘ஹழ்ர மவ்த்’ எனும் நகரில் குடியேறினர். அங்கும் அவர்களுக்கு சிரமங்கள் ஏற்படவே, அரபிய தீபகற்பத்தின் நஜ்து பகுதியில் குடியேறி ஒரு பெரும் அரசாங்கத்தை நிறுவினர். ஆனால், சில காலங்களுக்குள்ளாகவே அவர்களது அரசாங்கம் அழிந்து சுவடுகள் தெரியாமல் போயிற்று.

ஹிம்யர் வமிசத்தைச் சேர்ந்த ‘குழாஆ’ என்ற கோத்திரத்தார் யமனிலிருந்து வெளியேறி ‘மஷாஃபுல் இராக்’ என்ற பகுதியில் ‘பாதியத்துஸ் ஸமாவா’ என்னும் ஊரில் குடியேறினர். குழாஆ வமிசத்தைச் சேர்ந்த சில பிரிவினர் ‘மஷாஃபுஷ் ஷாம்’ என்ற பகுதியிலும் ஹிஜாஸ் மாநிலத்தின் வடக்குப் பகுதியிலும் குடியேறினர்.

இதற்கு முன் கூறப்பட்ட அல் அரபுல் முஸ்தஃபாவின் முதன் முதலான பாட்டனார் நபி இப்றாஹீம் (அலை) ஆவார்கள். நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் இராக் நாட்டில் ஃபுராத் நதியின் மேற்கு கரையில் கூஃபாவிற்கு அருகாமையில் உள்ள ‘உர்’ என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பம், உர் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களின் சமய சமூக பண்பாடுகள் குறித்து பல விரிவான தகவல்கள் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சிகள் மூலம் கிடைத்துள்ளன.

இப்றாஹீம் (அலை) அவர்கள் தனது ஊரிலிருந்து வெளியேறி ஹாரான் அல்லது ஹர்ரான் எனும் ஊரில் குடியேறினார்கள். சில காலத்திற்குப் பின் அங்கிருந்தும் புறப்பட்டு ஃபலஸ்தீனம் நாட்டில் குடியேறினார்கள். ஃபலஸ்தீனை தனது அழைப்புப் பணிக்கு மையமாக ஆக்கிக்கொண்டு அங்கும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் வாழ்ந்த மக்களை ஒரே இறைவனின் பக்கம் அழைத்தார்கள். ஒரு முறை மனைவி சாராவுடன் அழைப்புப் பணிக்காக அருகிலுள்ள ஓர் ஊருக்குச் சென்றார்கள். அன்னை சாரா மிக அழகிய தோற்றமுடையவராக இருந்ததை அறிந்த அவ்வூரின் அநியாயக்கார அரசன், அவர்களை அழைத்து வரச்செய்து அவர்களுடன் தவறான முறையில் நடக்க முயன்றான். அன்னை சாரா அவனிடமிருந்து தன்னை பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டினார். அவன் சாராவை நெருங்க முடியாதபடி அல்லாஹ் அவனை ஆக்கிவிட்டான். அல்லாஹ்விடம் சாரா மிக மதிப்பிற்குரியவர்; மேலும், நல்லொழுக்கச் சீலர் என்பதை இதன் மூலம் அறிந்த அந்த அநியாயக்காரன், சாராவின் சிறப்பை மெச்சி அல்லது அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள சாராவுக்கு பணி செய்ய ஓர் அழகிய அடிமைப் பெண்ணை வழங்கினான். சாரா அவர்கள் அப்பெண்ணை தனது கணவர் இப்றாஹீமுக்கு வழங்கி விட்டார்கள். அப்பெண்மணிதான் அன்னை ஹாஜர் ஆவார். (ஸஹீஹுல் புகாரி)

இந்நிகழ்ச்சிக்குப் பின் இப்றாஹீம் (அலை) தங்களின் வசிப்பிடமான ஃபலஸ்தீனத்திற்குத் திரும்பினார்கள். அங்கு ஹாஜரின் மூலமாக ‘இஸ்மாயீல்’ என்ற மேன்மைக்குரிய ஒரு மகனை, அல்லாஹ் இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு வழங்கினான். பிறகு அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க இப்றாஹீம் (அலை) தங்களது மகன் இஸ்மாயீல் (அலை) மற்றும் ஹாஜரை அழைத்துக் கொண்டு மக்கா வந்தார்கள்.

அக்காலத்தில் அங்கு இறை இல்லமான ‘கஅபா’ கட்டடமாக இருக்கவில்லை. கஅபா இருந்த இடம் சற்று உயரமான குன்றைப்போல் இருந்தது. வெள்ளம் வரும்போது கஅபா இருந்த அந்த மேட்டுப் பகுதியின் வலது இடது இரு ஓரங்களைத் தண்ணீர் அரித்து வந்தது. கஅபத்துல்லாஹ்வின் அருகிலிருந்த ஓர் அடர்த்தியான மர நிழலில் அவ்விருவரையும் அமர வைத்து, சிறிது பேரீத்தங்கனிகள் இருந்த ஒரு பையையும், தண்ணீர் உள்ள ஒரு துருத்தியையும் அவ்விருவருக்காக வழங்கிவிட்டு, இப்றாஹீம் (அலை) ஃபலஸ்தீனம் திரும்பினார்கள். சில நாட்களில் அவ்விருவரின் உணவான பேரீத்தங்கனிகளும் தண்ணீரும் தீர்ந்துவிட்டன. அல்லாஹ் தனது அருளினால் பசியையும் தாகத்தையும் போக்கும் அற்புதமான ‘ஜம்ஜம்’ ஊற்றை அவ்விருவருக்காக தோன்றச் செய்தான். (ஸஹீஹுல் புகாரி)

இக்காலத்தில் இரண்டாவது ஜுர்ஹும் என்ற யமன் கோத்திரத்தினர் மக்கா வழியே வரும்போது (தண்ணீர் இருப்பதைப் பார்த்து) அங்கு வசிக்க விரும்பி அன்னை ஹாஜரிடம் அனுமதி பெற்று தங்கினர். சில வரலாற்று ஆசிரியர்கள் ”இந்த இரண்டாவது ஜுர்ஹும் வமிசத்தினர் முன்பிருந்தே மக்காவைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்குகளில் வசித்து வந்தனர் என்றும் மக்காவில் அன்னை ஹாஜர் குடியேறி, ஜம்ஜம் கிணறு தோன்றியவுடன் தாங்கள் வசித்து வந்த பள்ளத்தாக்குகளை விட்டு வெளியேறி மக்காவில் குடியேறினர்” என்றும் கூறுகிறார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இமாம் புகாரி (ரஹ்) தங்களது நூலில் இச்சம்பவம் பற்றி குறிப்பிட்டிருப்பதை ஆராய்ந்தால் நாம் முதலில் கூறிய கூற்றே மிகச் சரியானது என்பதை அறிந்து கொள்ளலாம். இமாம் புகாரி (ரஹ்) கூறியிருப்பதாவது:

இப்றாஹீம் (அலை) தமது மனைவியையும் பிள்ளையையும் மக்காவில் தங்க வைப்பதற்கு முன்பே மக்கா வழியாக இரண்டாவது ஜுர்ஹும் கோத்திரத்தார் போக வர இருந்தார்கள். அன்னை ஹாஜர் மக்காவில் வந்து தங்கி தண்ணீர் வசதியும் ஏற்பட்டபின், அதாவது இஸ்மாயீல் (அலை) வாலிபமடைவதற்கு முன்பு இவர்கள் குடியேறியுள்ளார்கள். இவ்வாறே ஸஹீஹுல் புகாரியில் வந்துள்ளது. இதிலிருந்து இவர்கள் மக்காவின் எப்பகுதியிலும் இதற்கு முன் குடியிருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. அதே நேரம், தான் விட்டு வந்த மனைவி மற்றும் மகனை சந்திக்க நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் சென்று வந்தார்கள். மொத்தம் எத்தனை முறை சந்திக்கச் சென்றார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் நான்கு முறை சென்றதற்கான உறுதிமிக்கச் சான்றுகள் உள்ளன.

அந்த நான்கு முறைகள் வருமாறு:

1) இதைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கூறியிருக்கின்றான். நபி இப்றாஹீம் (அலை), அவர்கள் தமது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்து அல்லாஹ்வுக்கு தியாகம் செய்வதுபோல் கனவு ஒன்று கண்டார்கள். அக்கனவை அல்லாஹ்வின் கட்டளை என்று உணர்ந்து அதை நிறைவேற்ற மக்கா வந்தார்கள். இது குறித்து பின்வரும் குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) முகங்குப்புறக் கிடத்தியபோது நாம் ”இப்றாஹீமே!” என நாம் அழைத்து ”உண்மையாகவே நீங்கள் உங்களுடைய கனவை மெய்யாக்கி வைத்துவிட்டீர்கள் என்றும், நன்மை செய்பவருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்” என்றும் கூறி, ”நிச்சயமாக இது மகத்தானதொரு பெரும் சோதனையாகும்” (என்றும் கூறினோம்). ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம். (அல்குர்ஆன் 37 : 103-107)

இஸ்ஹாக்கைவிட இஸ்மாயீல் (அலை) பதிமூன்று ஆண்டுகள் மூத்தவர் என்று தவ்றாத்’ வேதத்தில் ‘தக்வீன்’ என்ற அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவத்தைப் பற்றி விவரிக்கும் குர்ஆன் வசனங்களிலிருந்து இந்நிகழ்ச்சி இஸ்ஹாக் (அலை) பிறப்பதற்கு முன் நடந்திருக்க வேண்டும் என்றே தெரிகிறது. ஏனெனில், மேன்மைமிகு குர்ஆனில் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்துப் பலியிட முயன்ற நிகழ்ச்சி முழுதும் கூறப்பட்ட பிறகு அதையடுத்தே இஸ்ஹாக் (அலை) பிறப்பார் என்ற நற்செய்தி கூறப்பட்டுள்ளது.

ஆக, இதிலிருந்து இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுப்பதற்காக நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் ஒருமுறை மக்கா சென்றுள்ளார்கள் என்பதும், அப்போது இஸ்மாயீல் (அலை) வாலிபமடையவில்லை என்பதும் தெரிய வருகிறது.

மற்ற மூன்று பயணங்களைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் வாயிலாக இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதின் சுருக்கமாவது:

2) இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஜுர்ஹும் கோத்திரத்தாரிடம் அரபி மொழியைக் கற்றார்கள். அவர்களின் ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளை ஜுர்ஹும் கோத்திரத்தார் பெரிதும் விரும்பி தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இஸ்மாயீலுக்கு மணமுடித்து வைத்தார்கள். இத்திருமணத்திற்கு பிறகே அன்னை ஹாஜர் அவர்கள் இறந்தார்கள்.

இப்றாஹீம் (அலை) அவர்கள் மீண்டும் மனைவியையும் மகனையும் சந்திப்பதற்கு மக்கா வந்தபோது மனைவி இறந்த செய்தியைத் தெரிந்து கொண்டார்கள். இஸ்மாயீல் (அலை) அப்போது மக்காவில் இல்லை. இஸ்மாயீல் (அலை) அவர்களின் மனைவியிடம் தனது மகனைப் பற்றியும் அவ்விருவரின் வாழ்க்கை, சுகநலன்கள் பற்றியும் விசாரித்தார்கள். அப்பெண்ணோ தங்களது இல்லற நெருக்கடியையும் வறுமையையும் பற்றி முறையிட்டார். அதைக் கேட்ட நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் ”இஸ்மாயீல் வந்தால், தனது வீட்டு வாசல் நிலையை மாற்ற வேண்டும் என்று நான் கூறியதாக, அவரிடம் நீ சொல்!” என்று சொல்லிவிட்டு சென்றார்கள். இஸ்மாயீல் (அலை) வீடு திரும்பியவுடன் அப்பெண் நடந்த நிகழ்ச்சியை விவத்தார். தனது தந்தை கூறிய கருத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அப்பெண்ணை இஸ்மாயீல் (அலை) மணவிலக்கு செய்துவிட்டார். அதற்குப் பிறகு ஜுர்ஹும் கோத்திரத்தாரின் தலைவர் ‘முழாத் இப்னு அம்ர்’ என்பவன் மகளைத் திருமணம் செய்தார்.

3) இஸ்மாயீல் (அலை) அவர்கள் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டபின் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் மக்கா வந்தார்கள். அப்போதும் இஸ்மாயீல் (அலை) வீட்டில் இல்லை. நபி இப்றாஹீம் (அலை) தனது மருமகளிடம் மகனைப் பற்றியும் குடும்ப நிலையைப் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு ”அல்லாஹ்வின் அருளால் நாங்கள் நலமுடன் இருக்கிறோம்” என்று அவர் பதிலளித்தார். அதைக் கேட்ட நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் ”இஸ்மாயீல் (அலை) வந்தால் தனது வீட்டு வாசலின் நிலையை தக்க வைத்துக் கொள்ளட்டும் என்று நான் கூறியதாக, இஸ்மாயீலிடம் சொல்!” என்று சொல்லிவிட்டு ஃபலஸ்தீனம் சென்றார்கள்.

4) நான்காம் முறை நபி இப்றாஹீம் (அலை) மக்கா வந்தபோது தனது மகனை சந்தித்தார்கள். இஸ்மாயீல் (அலை) ஜம்ஜம் கிணற்றருகில் இருந்த ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து தனது அம்பைக் கூர்மைபடுத்திக் கொண்டிருந்தார்கள். தந்தையைப் பார்த்ததும் எழுந்து மரியாதை செய்து தங்களது அன்பைப் பரிமாறிக் கொண்டார்கள். இப்பயணத்தில்தான் இருவரும் இணைந்து கஅபத்துல்லாஹ்வைக் கட்டி, அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மக்களை ஹஜ்ஜுக்கு அழைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இரண்டாவது மனைவியின் மூலம் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுக்குப் பன்னிரண்டு ஆண் பிள்ளைகளை அல்லாஹ் வழங்கினான். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:

1) நாபித் (நபாயூத்), 2) கைதார், 3) அத்பாஈல் 4) மிபுஷாம், 5) மிஷ்மாஃ, 6) தூமா, 7) மீஷா, 8) ஹுதத் 9) தீமா, 10) யதூர், 11) நஃபீஸ், 12) கைதுமான்.

பிற்காலத்தில் இந்த பன்னிரண்டு பிள்ளைகள் வழியாகத்தான் பன்னிரண்டு கோத்திரங்கள் உருவாகின. இவர்கள் அனைவரும் பல காலங்கள் மக்காவில் வசித்தனர். யமன், சிரியா, மிஸ்ர் ஆகிய நாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தினர். சில காலங்கள் கழித்து இவர்களில் பலர் அரபிய தீபகற்பத்தின் மற்ற பகுதிகளிலும் அதன் வெளியிலும் குடியேறினர். நாளடைவில் நாபித், கைதார் குடும்பங்களைத் தவிர மற்றவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளே இல்லாமல் போய்விட்டது.

ஜாஸின் வடக்குப் பகுதியில் நாபித் என்பவன் பிள்ளைகள் நன்கு வளர்ச்சி பெற்று முன்னேறி ‘பத்ரா’ என்ற ஊரை தலைநகராகக் கொண்டு வலுமிக்க ஓர் அரசாங்கத்தை நிறுவினர். இந்நகரம் (உர்துன்) ஜோர்டானின் தெற்கே வரலாற்றுப் புகழ் வாய்ந்த பழங்கால நகரமாகும். இவர்களின் அரசாட்சிக்கு பணிந்தே அங்குள்ளோர் வாழ்ந்தனர். இவர்களை அப்போது வாழ்ந்த எவராலும் இவர்களை எதிர்க்கவோ, புறக்கணிக்கவோ முடியவில்லை. இறுதியாக ரோமர்கள் இவர்களின் அரசாங்கத்தை அழித்தனர். இந்த நாபித்தின் வமிசத்திற்கு ‘நிபித்தி வமிசம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. சிரியாவில் ஆட்சி செய்த கஸ்ஸான் வமிசத்து அரசர்களும் மதினாவில் வசித்த அவ்ஸ், கஸ்ரஜ் வமிசத்தினரும் இந்த நாபித் இப்னு இஸ்மாயீலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என வமிச ஆய்வாளர்களின் ஒரு கூட்டத்தினர் கூறுகின்றனர். இந்த வமிசத்தைச் சேர்ந்த பலர் அந்த ஊர்களில் இன்றும் வசிக்கின்றனர். இமாம் புகாரி (ரஹ்) தங்களது நூலில் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுடன் யமன் நாட்டு தொடர்பு (உறவு) என்று ஒரு பாடத்தை குறிப்பிட்டுள்ளார். அப்பாடத்தில் தலைப்புக்கு பொருத்தமான சில நபிமொழிகளை எழுதி, தனது கருத்துக்கு வலிமை சேர்த்துள்ளார்.

ஹதீஸ் கலை (நபிமொழி) வல்லுனர் இப்னு ஹஜரும் தனது விரிவுரையில், கஹ்தான் வமிசத்தினர் நாபித் இப்னு இஸ்மாயீலின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்ற கருத்தையே ஏற்றமானது என குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் மகன் கைதான் குடும்பத்தினர் பல காலங்கள் மக்காவில் வாழ்ந்தனர். அவரது சந்ததியில் அத்னானும் அவர் மகன் மஅதும் பேரும் புகழும் பெற்றவர்கள். இவர்களிலிருந்து அத்னானிய அரபியர்கள் தோன்றினர். இவர்களையடுத்து பிற்காலத்தில் இவரது சந்ததியில் தோன்றியவர்கள், அத்னான் வரை தங்களது மூதாதைகளின் பெயர்களை சரியாக மனனமிட்டு பாதுகாத்துக் கொண்டனர். நபி (ஸல்) அவர்களின் வமிச தலைமுறையில் இந்த அத்னான் என்பவர் 21-வது தலைமுறை பாட்டனாராவார்.

சில அறிவிப்புகளில் வந்துள்ளதாவது: நபி (ஸல்) அவர்கள் தங்களின் வமிச தலைமுறைகளை குறிப்பிடும்போது அத்னான் பெயர் வந்தவுடன் நிறுத்திக் கொண்டு, ”இதற்கு மேல் வமிச தலைமுறையை கூறியவர்கள் பொய்யுரைத்து விட்டனர்” என்று கூறுவார்கள்.

இவ்விடத்தில் மற்றொரு கருத்தும் குறிப்பிடத்தக்கது. அதாவது, சிலர் மேற்கூறப்பட்ட நபிமொழி பலவீனமானது என்பதால் அத்னானுக்கு மேலும் தலைமுறை பெயர்களை கூறலாம் என்கின்றனர். எனினும், அத்னானுக்கு மேல் இவ்வறிஞர்கள் கூறும் தலைமுறையில் பல மாறுபட்ட பெயர்களை கூறுகின்றனர். அக்கருத்துகளை ஒருங்கிணைக்க முடியாத அளவு அதில் வேறுபாடுகளும் உள்ளன.

”அத்னான் மற்றும் நபி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கிடையில் நாற்பது தலைமுறைகள் உள்ளன” என்று பிரபலமான வரலாற்று அறிஞர் இப்னு ஸஅது (ரஹ்) கூறுகிறார். இக்கால அறிஞர்களில் பெரும் ஆய்வாளராக விளங்கும் முஹம்மது சுலைமான் என்பவரும் இக்கருத்தையே சரிகாண்கிறார். மேலும், இமாம் தபரி மற்றும் மஸ்வூதி தங்களின் பல கருத்துக்களில் இதனையும் ஒன்றாக கூறியுள்ளார்கள்.

மஅதின் மகன் நஜார் என்பவர் மூலம் பல குடும்பங்கள் தோன்றின. (மஅதுக்கு ‘நஜார்’ என்ற ஒரு மகன் மட்டும்தான் இருந்தார் என்று சிலர் கூறியுள்ளனர்.)

நஜாருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் மூலம் பெரியவமிசங்கள் தோன்றின. 1) இயாத், 2) அன்மார், 3) ரபீஆ, 4) முழர்.

இக்கோத்திரங்களைப் பற்றியுள்ள விவரங்களின் வரைபடத்தை அடுத்த பக்கத்தில் பார்க்கவும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் இப்றாஹீமுடைய பிள்ளைகளில் இஸ்மாயீலைத் தேர்வு செய்தான். இஸ்மாயீலுடைய பிள்ளைகளில் ‘கினானா’ குடும்பத்தைத் தேர்வு செய்தான். கினானா குடும்பத்தில் குறைஷியர்களைத் தேர்வு செய்தான். குறைஷியர்களில் ஹாஷிம் குடும்பத்தைத் தேர்வு செய்தான். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: படைப்பினங்களில் (மனிதன், ஜின் என்ற இரு பிரிவில்) மிகச் சிறந்த பிரிவில் என்னைப் படைத்து அதில் (முஸ்லிம், காஃபிர்களென்று) இரு பிரிவுகளில் சிறந்த பிரிவில் என்னை ஆக்கினான். பிறகு கோத்திரங்களைத் தேர்வுசெய்து அதில் சிறந்த கோத்திரத்தில் என்னைப் படைத்தான். பிறகு குடும்பங்களைத் தேர்வுசெய்து, அதில் மிகச் சிறந்த குடும்பத்தில் என்னை ஆக்கினான். நான் அவர்களில் ஆன்மாவாலும் மிகச் சிறந்தவன். குடும்பத்தாலும் மிகச் சிறந்தவன். (ஸஹீஹ் முஸ்லிம்)

மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது: அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து அவற்றில் மிகச் சிறந்த பிரிவினரில் என்னை ஆக்கி வைத்தான். பிறகு அப்பிரிவை இரண்டாக ஆக்கி அவற்றில் மிகச் சிறந்த பிரிவில் என்னை ஆக்கினான். பிறகு அவர்களை கோத்திரங்களாக ஆக்கி அவற்றில் மிகச் சிறந்த கோத்திரத்தில் என்னை ஆக்கினான். பிறகு அவர்களைப் பல குடும்பங்களாக ஆக்கி அவற்றில் குடும்பத்தாலும் ஆன்மாவாலும் சிறந்தவர்களில் என்னை ஆக்கினான். (ஜாமிவுத் திர்மிதி)

அத்னான் சந்ததியினருடைய எண்ணிக்கை பல்கிப் பெருகியபோது அவர்கள் மழை வளம், பசுமை, செழிப்புமிக்க இடங்களைத்தேடி அரபு நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்றனர். அப்து கைஸ், பக்ரு இப்னு வாயில் மற்றும் தமீம் ஆகிய சந்ததியினர் பஹ்ரைனிலும், ஹனீஃபா இப்னு அலீ இப்னு பக்ர் குடும்பத்தினர் ‘யமாமா’ சென்று அங்குள்ள ‘ஹுஜ்ர்’ பகுதியிலும் குடியேறினர். (ஹுஜ்ர் என்பது யமாமாவின் ஒரு நகரமாகும்.) பக்ர் இப்னு வாயிலின் ஏனைய குடும்பங்கள் யமாமா, பஹ்ரைன், ஸைஃப் காளிமா, அதன் அருகாமையிலுள்ள கடற்பகுதி, இராக்கின் கிராமப்புறங்கள் ஆகிய இடங்களில் குடியேறினர்.

தங்லிப் குடும்பத்தவர்கள் ‘ஃபுராத்’ நதிக்கரையில் குடியேறினர். அவர்களில் ஒரு பிரிவினர் பக்ர் குடும்பத்தாருக்கு அருகில் வசித்தனர். பனூ தமீம் குடும்பத்தவர்கள் பஸராவிலும் அதன் கிராமப் பகுதிகளிலும் வசித்தனர்.

சுலைம் குடும்பத்தினர் மதீனாவுக்கு அருகாமையில் வசித்தனர். அவர்கள் வாதில் குராவிலிருந்து கைபர்வரை, மதீனாவின் கிழக்குப் பகுதி, அதன் இரு மலைப்பகுதிகள் மற்றும் ஹர்ரா வரை வசித்தனர்.

அஸத் குடும்பத்தினர் ‘தீமாஃ’ நகரத்தின் கிழக்குப் பகுதிலும் ‘கூஃபா’ நகரத்தின் மேற்குப் பகுதியிலும் வசித்தனர். அவர்களுக்கும் தீமாஃவுக்குமிடையே ‘தய்ம்’ கோத்திரத்தைச் சேர்ந்த புஹ்த்துர் குடும்பத்தவர்களின் குடியிருப்புகள் அமைந்திருந்தன. அவ்வூருக்கும் கூஃபாவுக்கு மிடையில் ஐந்து நாட்களுக்கு உரிய நடைதூரம் இருந்தது. திப்யான் குடும்பத்தவர்கள் தீமா முதல் ஹவ்ரான் நகரம் வரையிலும் கினானாவின் சந்ததியினர் ‘திஹாமா’ பகுதியிலும் வசித்தனர். மக்காவிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குறைஷி குடும்பத்தவர்கள் வசித்தனர். அவர்கள் ஒற்றுமை இன்றி பலவாறாகப் பிரிந்து வாழ்ந்தனர். குஸய்ம் இப்னு கிலாப் அவர்களை ஒருங்கிணைத்து குறைஷியருக்கென தனிப்பெரும் சிறப்புகளையும் உயர்வுகளையும் பெற்றுத் தந்தார்.

சுட்டி: ரஹீக் ஆடியோ